Translate Tamil to any languages.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

வறுமை

வறுமை என்பது
வாழ்க்கையை நடாத்த
ஏதுமின்றித் துயருறும் நிலையா?
வறுமை என்பது
கிடைக்க வேண்டியது
கிடைக்காமையால் ஏற்பட்டதா?
வறுமை என்பது
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா?
வறுமையை விரட்ட
முயலாமை இருந்ததா?
வறுமையைப் போக்க
வழிகள் கிட்டவில்லையா?
உடல்நலக் குறைவா
முடமான உடலா
தொழிலின்றி வறுமையை அணைக்க...
பாவலர்களே!
எங்கும் எதிலும் எப்போதும்
வறுமை இருப்பதாகப் பாடுவதை
நிறுத்துங்கள்...
வறுமையைப் போக்க
வழிகாட்டுங்கள்
வறுமையை விரட்டப் போராட
கற்றுக்கொடுங்கள்
வறுமை என்பது
மறுமையிலும் வாழ்வில் நெருங்க
இடமளிக்காமல் பாபுனையுங்களேன்!
பாவலர்களுக்கு வறுமையே
பாவன்மையை ஊட்டுமென்றால்
நம்மாளுகளை வறுமை நெருங்கினால்
நல்வாழ்வை அமைக்க
நெருங்கிய வறுமையும் வழிகாட்டுமே!
வறுமையால் சாவு
வறுமையால் பின்னடைவு
வறுமையால் மருத்துவராகவில்லை
வறுமையால் ஊரே ஒதுக்கியது
போதும் போதும் போதும்
வறுமை தந்த வெறுமையால்
இன்னும்
எத்தனையோ துயரச் செய்திகள்...
வறுமை தந்த துயரச் செய்திகளென
இனிமேலும்
எம் காதுக்கெட்டாமல் இருக்க
இனியொரு வழிசெய்வோம் வாருங்கள்!

வறுமை (http://tamilnanbargal.com/node/40668) என்ற கவிதைக்குப் பதிலாக எழுதியது.

பொய்யும் மெய்யும்

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!

செவ்வாய், 23 டிசம்பர், 2014

அடையாளம்

தேவை ஏற்பட்டால் மட்டுமே
நம்மாளுகள்
எதையாச்சும் எண்ணிப்பார்க்கிறார்கள்...
எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்...
உதவிகள் கிட்டும் வேளை
தேவைகள் ஏற்படாமல் போக
எண்ணிப்பார்க்க ஏதுமின்றி
கண்டுபிடிக்க ஏதுமின்றி
நம்மாளுகள் முட்டாளாகின்றனரே!
என்னைப் பொறுத்தவரையில்
கடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்...
கடவுள் எம்மைப் படைத்தது போல
நானும்
ஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட
உதவாதவர்களுக்கும் நன்றி கூறுவேன்...
ஏனெனில் - அது தான்
எனது அடையாளம் என்பேன்!

வெள்ளி, 19 டிசம்பர், 2014

மூடி வைக்க முடியுமா?

ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

காதலும் பூக்களைப் போலவே!


பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!
மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!
வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ!
மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலே காலம் கடந்து பிரிவதற்கே!
பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!
பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!

பூவிற்கு இத்தனை பலமா?

காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
 
காற்றிலே மிதந்து வரும் மணம்
ஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்
"பூக்கள்!"

வியாழன், 11 டிசம்பர், 2014

எப்பவும் நாங்கள்...

எப்பவும் நாங்கள்
எங்கட பக்கத்து நிலைமைகளை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் உள்ளத்தை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட விருப்பங்களைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் விருப்பங்களை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட தேவைகளைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் தேவைகளை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்களுக்கு உதவுவோரை அல்லது வருவாயை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் எதிர்பார்க்கும்
உதவுவோரையோ வருவாயையோ
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
இப்படி எல்லாம்
எண்ணிப் பார்க்கின்ற வேளை
உன்னைப் போல
உன் அயலானையும் விரும்பு (நேசி)
என்றன்றே பெரியோர் சொல்லி வைச்சதை
எப்பவும் நாங்கள்
எண்ணிப் பார்ப்பதில்லையே!

புதன், 10 டிசம்பர், 2014

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓர் ஏழலில் (வாரத்தில்) அவை தங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கித் தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் விரிப்பை அறிந்துகொள்ள முடியும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் கிடைத்ததும் அவை பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் 2015 தைப்பொங்கள் நாள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளோருக்கு ஊக்கம் தருமென நம்புகிறேன்.

2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டி விரிப்புக் கீழ்வரும் தளத்தில் விரைவில் வெளிவரும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/

2014 தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் தங்களுக்கும் தங்களைத் தெரிவுசெய்த நடுவர்களான பெரியோருக்கும் போட்டியை நடாத்திய ரூபன் குழுவினருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறான போட்டிகள் வலைப்பூக்களில் நல்ல தமிழைப் பேணவும் சிறந்த படைப்புகள் வெளிவரவும் உலகெங்கும் தமிழைப் பரப்பவும் எனப் பல நன்மைகளைத் தருமென நம்புகிறேன். எனவே 2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன்.

வியாழன், 4 டிசம்பர், 2014

என் இனிய உறவுகளே!


எனது வேலைப்பளு காரணமாக எனது வலைப்பூக்களில் பதிவுகள் இடவோ உறவுகளின் வலைப்பூக்களில் கருத்துப்பகிரவோ முடியவில்லை. 08/12/2014 திங்கள் தொடக்கம் வலைப்பூக்களில் வழமை போல் என்னைக் காணலாம்.

எல்லோரது ஒத்துழைப்புக்கும் எனது நன்றிகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

செவ்வாய், 25 நவம்பர், 2014

தீர்வு ஒன்று தேவை

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!
பிள்ளைகளின் விருப்பறியாது
பிள்ளைகள் எப்படியாது வாழுமென
பிள்ளைகள் கரை சேர்த்தால் போதுமென
திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள்
எப்பதான் பின்விளைவை உணருவார்களோ?
பிள்ளைகளுக்கு
மகிழ்வான வாழ்வமைத்துக் கொடுக்க
பெற்றோர்களுக்கு
கற்றுக்கொடுக்க முன்வாருங்களேன்!

திங்கள், 24 நவம்பர், 2014

காதலை விட நட்பே பெரிது...

நட்புக்குப் அகவை வேறுபாடில்லை.
காதலுக்கு ஒத்த அகவை வேண்டும்.
காதலை விட நட்பே எளிதில் மலரும்...

நட்புக்குப் பால் வேறுபாடில்லை.
காதலுக்கு எதிர்ப்பால் வேண்டும்.
காதலை விட நட்பே இலகுவானது...

நட்பு எல்லோருக்கும் பொதுவானது.
காதல் இருவருக்கு உரித்தானது.
காதலை விட நட்பே பெரிது...

சனி, 22 நவம்பர், 2014

ஓருயிரும் ஈருடலும்

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?

புதன், 19 நவம்பர், 2014

தெருப் பார்த்த பிள்ளையார்...

முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.

தாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா? பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.

அம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.

வேறுபாடு

தோள் கொடுப்பவன் தான் தோழன்
தோள் கொடுப்பவள் தான் தோழி
"ள, ழ வேறுபாடு"
 
தோள் கொடுக்காதவன் தான் நடிகன்
தோள் கொடுக்காதவள் தான் நடிகை
"ள, ட வேறுபாடு"
 

திங்கள், 17 நவம்பர், 2014

பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!

பாவலராவது என்பது
பிறக்கும் போதே வந்ததல்ல
எமது முயற்சியின் விளைவாய் மலர்ந்ததே!
அன்று பத்திரிகை, மூ.மேத்தாவின் நூல்கள்
இன்று வலைப்பூக்கள் என்றெல்லாம் படித்தே
எவராச்சும் எழுதிய பா/ கவிதை போல
பாப்புனைய முயற்சி செய்கிறேன் - எனக்கும்
பாவலராக விருப்பம் (ஆசை) இருப்பதால் தான்!
பிறப்பிலேயே பாவலர்/ கவிஞர் உருவானாரா
பிறந்த பின் வாழும் வேளை
பாவலர்/ கவிஞர் உருவாக்கப்பட்டாரா
என்றெல்லாம் அரங்குகள் தோறும்
பட்டிமன்றங்கள் நிகழ்ந்தாலும்
பாவலர்/ கவிஞர் பிறக்கவில்லை
சூழலால் உருவாக்கப்படுகின்றார் என்றே
என் உள்ளத்தில் மலர்ந்த முடிவு!

பாப்புனைய விரும்பும் உறவுகளே
எனது எண்ணங்களைப் பார்த்து
பாப்புனையும் திறனைப் பெருக்கியிருந்தாலும்
தீபாவளி (2014) நாளை முன்னிட்டு நடாத்திய
பாப்புனையும் திறன்காண் போட்டியில்
பங்கெடுத்த எல்லோருக்கும் வாழ்த்துகள்!
எண்ணங்களை வெளிப்படுத்தும் பா/ கவிதை
கண்ணால் படம் பார்த்ததும் - உங்கள்
உள்ளத்தில் தோன்றிய பா/ கவிதை என
இரண்டு பா/ கவிதை புனைந்த - உங்களுக்கு
பாப்புனைதலில் பட்டறிவு கிட்டியிருக்குமே!
போட்டிகளில் வெற்றி பெறமுன்
போட்டிகளில் பங்கெடுத்த முயற்சியே
பாவலராகக் கிடைத்த வெற்றி என்பேன்!

போட்டிகளில் பங்கெடுத்தவருக்குக் கொண்டாட்டம்
வெற்றியாளரைத் தெரிவு செய்வதில்
நடுவர்களுக்குத் தான் திண்டாட்டம் என்பேன்!
நண்பர் ரூபன் சுட்டிக் காட்டியது போல
ஐம்பத்திநான்கு பாப்புனையும் ஆற்றலாளர்களிடையே
பத்துப் பாப்புனையும் திறனாளர்களை
பாப்புனையும் நுட்பங்களை வைத்தே
நடுவர்களும் தெரிவு செய்திருப்பர் என்பேன்!
ஏனெனில்
போட்டியில் பங்கெடுத்த எல்லோருமே
பாப்புனைதலில் வென்றவர்களே என்பேன்!!
எப்படியிருப்பினும்
பாப்புனைந்து போட்டியில் வென்ற
பத்துப் பேரையும் வாழ்த்துங்கள் - அந்த
பத்துப் பேரினது பாக்கள் - நாம்
கற்றுக்கொள்ள வழிகாட்டும் என்பேன்!
பத்துப் பேரினது இருபது பாக்களைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்,,,
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html
பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!


சனி, 15 நவம்பர், 2014

மக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்


நம்ம காதலர்கள் சந்தித்தால் என்ன கதைப்பாங்க...

காதலி: சான்றிதழில் எழுதப்பட்டது பெற்றோர் இட்ட பெயர்!
       எங்கட நடத்தைகளை வைத்தே, மக்களாயம் (சமூகம்) கூப்பிடுதே!

காதலன்: எனக்குத் தெரியும்... நல்லதைச் சொல்வோரையும் நல்லதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) நல்லவரென்றே கூப்பிடுதே!

காதலி: அது போலத் தான்... கெட்டதைச் சொல்வோரையும் கெட்டதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) கெட்டவரென்றே கூப்பிடுதே!

காதலன்: உண்மை தான்! ஆனால், நண்பர்கள் பலர் இது பற்றி அறிந்திருக்கவில்லையே!

இவங்க இப்படி எல்லாம் நாடகம் ஆடுவாங்க என்று எனக்குத் தெரியாதே!

அழகும் பத்திரிகையும்


முதலாமாள்: பத்திரிகையை ஒருக்கால் தர மாட்டியளே!
 
இரண்டாமாள்: ஏன் காணும் உடனே தா என்கிறாய்?
 
முதலாமாள்: திரைப்படப் பகுதியில் அழகுப் பெண்களைப் பார்க்கத் தான்...
 
இரண்டாமாள்: அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!

வெள்ளி, 14 நவம்பர், 2014

நண்பர்களே! நண்பர்களே!

நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளலாமா?
தேர்வுகளிலும் போட்டிகளிலும்
படிப்பிலும் தொழிலும்
காதலிலும் வாழ்க்கையிலும்
வென்றவர்களுக்கு
கடவுள் வந்து உதவினாரா?
எம்மைப் படைத்த கடவுள் - ஒருபோதும்
எம்மை எட்டிப் பார்த்ததில்லையே!
எப்படி ஐயா
கண் முன்னே கண்ட எல்லோரும்
எதிலும் வெற்றி பெற முடிகிறது என்று
எண்ணிப் பார்ப்பதை விட
வெற்றி பெறத் தேவையானதை
எண்ணிப் பார்க்கலாமே!
விருப்பம் கொள்...
முயற்சி செய்...
பயற்சியைத் தொடரு...
"என்னால் முடியும்" என்று
தன்னம்பிக்கையுடன் இரு...
பிறரையோ பிறவற்றையோ
கணக்கில் எடுக்காது
உன் வழியை நீயே பார்...
கூப்பிடு தூரத்தில் தான் - உனக்காக
உன் வெற்றியே காத்திருக்கிறதே!
நம்பிக்கையைப் போர்க்கலனாக்கி
இவ்வுலகை வெல்லலாம்
இன்றே முன்னேறு...
வெற்றிகள் எல்லாம் - உன்
காலடியில் வந்து வீழுமே!
பிறரால் முடியுமென்றால்
என்னால் ஏன் முடியாதென
விடிய விடிய
உன்னையே நோவதை விட
உனக்குள்ளே
உறங்கிக்கொண்டிருக்கும்
புலமைகளைத் திறமைகளை
வெளியே கொண்டு வா - அவற்றை
வாங்கிக் கொள்ளத் தானே
இவ்வுலகமே காத்திருக்கின்றதே!
பறப்பதென்று - நீ
முடிவு செய்து விட்டால் - காற்றே
உனக்குச் சிறகாய் முளைக்க
உன் தன்னம்பிக்கையே
உனது வெற்றியின் இடத்துக்கே
உன்னைக் காவிச் செல்லுமே!
நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளாமல்
முன்னேறும் எண்ணங்களை
ஒழுங்குபடுத்துங்களேன்...
உங்களை வெல்லக் கடவுளும்
உங்களுக்குக் கிட்ட நெருங்காரே!

புதன், 12 நவம்பர், 2014

கெட்ட, கேடு கெட்ட


வயிற்றுப் பசி போக்க
உழைக்கின்றோம்...
உழைப்பில்லாத வேளை
வயிற்றுப் பசி போக்க
முடியாது அழுகின்றோம்...
அழுதால் பசி போக்கலாமா?

உழைத்தால் தான்
பசி போக்கலாம் என்றால்
களவு எடுத்தலும் பிச்சை எடுத்தலும்
பிறர் விருப்பைப் போக்க
தன் உடலைக் கூலிக்கு விடுவதும்
(விலைப் பெண், விலை ஆண்)
உழைப்பு ஆகுமா?

பசி போக்கப் பணம் வேண்டுமெனில்
தமது
உள உழைப்பையோ
உடல் உழைப்பையோ
செய்ய முயற்சிக்கலாமே...
ஆனால்
மாற்றாருக்குத் தீங்கிழைக்காத
உழைப்பைத் தெரிவு செய்தீர்களா?

நடுத் தெருவில்
நான் கூடப் பிச்சை எடுக்கையில்
"அடே எருமைக்கடா - அந்த
எருமை கூட சூடு தணிக்க
சேற்றுக் குளியலை நாடுதே - நீ
உன் வயிற்றுப் பசி போக்க
ஒழுங்கான தொழிலைப் பாரடா!" என்று
தெரு வழியே சென்ற நல்லவர்
ஒரு வேளை உணவும் தந்து
தொழில் ஒன்றை ஒழுங்கு செய்தும்
இனிப் பிச்சை எடுத்தால்
சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று
எச்சரித்து வழிகாட்டியுமிருந்தாரே!

வழிகாட்டிகள் சொல்லியும் கூட
எந்தப் பக்கம் பார்த்தாலும்
கெட்ட, கேடு கெட்ட
தொழில் செய்வோர் தான்
கண்ணுக்கு எட்டுகிறார்களே...
"என்னடாப்பா
தொழிலில் கூட...
கெட்ட, கேடு கெட்ட தொழில் என்று
ஒன்றுமில்லையே" என்று
என் மூக்குடைக்க வாராதீர்கள்...
நற்பெயரைத் தரும்
சூழல் எம்மைப் போற்றும்
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்
தொழிலே
கெட்ட, கேடு கெட்ட
தொழில் இல்லையென்று சொல்ல வந்தேன்!

செவ்வாய், 11 நவம்பர், 2014

உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

நம்ம காளைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற வாலைகளுக்கு வலை விரித்தால் எவளாவது சிக்குவாளா? (குறிப்பு: பெண்களே, ஆண்களுக்குக் கழுத்தை நீட்டும் முன் சிந்தியுங்கள்.) காளைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான பெண்
  2. அழகான பெண்
  3. கிராமத்து பெண்
  4. நகரத்து பெண்
  5. பணக்கார பெண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய பெண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள பெண்
  8. எந்த ஆணிடமும் தகாத உறவு வைக்காத பெண்.
  9. அவள் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


நம்ம வாலைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற காளைகளுக்கு வலை விரித்தால் எவனாவது சிக்குவானா? (குறிப்பு: ஆண்களே, பெண்களுக்குத் தாலி கட்டும் முன் சிந்தியுங்கள்.) வாலைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான ஆண்
  2. அழகான ஆண்
  3. கிராமத்து ஆண்
  4. நகரத்து ஆண்
  5. பணக்கார ஆண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய ஆண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள ஆண்
  8. எந்தப் பெண்ணிடமும் தகாத உறவு வைக்காத ஆண்.
  9. அவன் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


சமகாலச் சூழலில் நம்மாளுகள் பேசிக்கொண்ட விருப்பங்களைப் பொறுக்கித் தொகுத்து இரு பாலாரிடையேயும் உலாவும் எண்ணங்களை வெளிப்படுத்த முயன்று உள்ளேன். இத்தனை தெரிவுகளில் எத்தனை தெரிவுகளை காளையோ (ஆண்) வாலையோ (பெண்) விரும்புகின்றனர் என்பதை மணமாகாத இளசுகளைக் கேட்டால் புரிந்துகொள்ள இடமுண்டு. உங்கள் உள்ளத்தில் மாற்று எண்ணங்கள் இருப்பின் வெளிப்படுத்தலாம்.

திங்கள், 10 நவம்பர், 2014

யாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்!

அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின்
ஊமைக்கனவுகள் தளம் பார்த்தீர்களா?
யாப்புச் சூக்குமம் முதற் பகுதியில்
அசை, சீர் பற்றிய விரிப்புத் தான்...
அழகாய் ஐந்து குறளைத் தந்தார்
அசை, சீர் பிரித்து அலகிட்டால்
அடுத்த பதிவில் - உங்களை
வெண்பா எழுத வைத்துவிடுவேன் என்றாரே!
நானும் படி, படியென்று படித்த பின்
அடுத்த பதிவிற்குள் தலையை ஓட்டினேன்...
விதி கூறிச் சொற்களைக் கூறிடுதல்,
எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்,
அடி வரையறை தொட்டு அப்பால்
வெண்பா, இலக்கண நுட்பங்கள் கூறியே
புலவர் வெண்பா புனைய வைத்துவிடுகிறாரே!
வெண்பா புனைய வைத்த புலவர்
உண்மையில் தானெழுதிய தேர்வாக - எம்
கற்றலில் முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்தவே
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' என்றொரு
பதிவைப் பாரென ஈற்றில் பகிர்ந்தாரே!

பாபுனைய விரும்பும் உள்ளங்களே!
யாப்பறிந்து வெண்பாப் புனைய
ஊமைக்கனவுகள் பக்கம் வாருங்கள்...
யாப்புச் சூக்குமம் - 01 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
புகைவண்டியில் செல்லும் யாப்பிலக்கணம் படித்தேன்
அதுவென் உள்ளத்தில் ஊருதே என்றிருக்க
யாப்புச் சூக்குமம் - 02 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html
புகைவண்டியால இறங்கியதும் தொடங்கினாரே
வெண்பா இலக்கணம் இதுவென உரைத்தாரே!
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post_13.html
"தளை தவறினால் யாரும் - உங்கள்
தலையை எடுத்துவிடப் போவதில்லை.
தவறை இனம் காணப் பழகுங்கள்." என்ற
வழிகாட்டலைப் பட்டறிவோடு கலந்து
வெண்பாப் புனைகையில் கற்றுத்தேறென
முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்துகிறாரே!
யாப்புச் சூக்குமம்-III இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/12/iii.html
விருத்தத்தின் எலும்புக்கூடு என
விருத்தத்தின் கட்டமைப்பு
எப்படி இருக்குமெனப் பாருங்களென
ஆசிரியப்பாவை விளக்குகிறாரே!
யாப்புச் சூக்குமம் IV இல்
http://oomaikkanavugal.blogspot.com/2015/01/iv.html
விருத்தத் தூண்டில் என்ற தலைப்பின் கீழ்
"மரபுக் கவிதைகளில்
ஒரு பாடலின் சந்தம்
உங்களைக் கவருகிறது என்றால்
அதனை
இப்படிப் பிரித்துப் பார்த்துவிட்டீர்கள் என்றால்
அதன் வடிவம் உங்களுக்குப் புலப்பட்டுவிடும்.
பின்பு அந்த வடிவத்திற்கு
நீங்கள் உயிர் கொடுக்கலாம்." என வழிகாட்டி
யாப்புச் சூக்குமம் தொடரை முடித்து வைக்கின்றாரே!

அங்கே போய் - நன்றே
வெண்பா புனையக் கற்றபின்
பண்ணோடு பாபுனைந்து - நீங்களும்
செந்தமிழைப் புகழ்ந்து பாடுங்களேன்!

ஞாயிறு, 9 நவம்பர், 2014

கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!



நேற்று - நீ
என் அழகுத் தோழி!
முதலில்
ஓரடி உண்மையென
அடுத்து
மூன்றடியில் துளிப்பாவென (ஹைக்கூவென)
அதற்கடுத்து
ஐந்தடியில் குறும்பாவென (லிமரிக் என)
அடுத்தடுத்தும் பார்த்தேன்
அடி, அடியாக அடுக்கி
புதுப்பாவெனப் பல புனைந்து - உன்
பாப்புனையும் ஆற்றலை
கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!
ஈற்றில்
உன் பாக்களின் வாசகனானேன் - அதனால்
உன் பெயரைக் கேட்க - நீயோ
கவிதா (பாதா) என்கிறாய் - நானோ
உயிரெழுத்தோ மெய்யெழுத்தோ
ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவரே!
இன்று - நீ
என் அறிவுத் தோழி!
"பெயரைக் கேட்கையிலே - அவள்
கவிதா (பாதா) என்றாள் - நானோ
கவிதையோ பாவோ எழுத
முடியாமையை உணர்ந்தே - அவளை
மறந்து போய்விட்டேனே!" என்று
பாப்புனைய வைத்துவிட்டாயே!

வெள்ளி, 7 நவம்பர், 2014

எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?

படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
பொத்தகக் கடைகளிலே
செய்தித்தாள்கள்
நுழைவாயிலில் தூக்கில் தொங்கின...
அவ்வழியே
ஒரு கடையில் நுழைந்தேன்...
உள்ளே பல பொத்தகங்கள்
தூக்கில் தொங்கின...
"ஏன்
இவையெல்லாம்
தூக்கில் தொங்குகின்றன..." என்று
கடை உரிமையாளரிடம் கேட்டேன்...
"எவராவது
இவற்றை வேண்டுவார்களே
என்று தான்" என்றார்...
"வருவாய் நிறையக் கிட்டுதா?" என்றேன்...
"வாசிப்போர் எவருமின்மையால்
சோர்வு தான் நிறையக் கிட்டுகிறதே!" என்று
பதிலளித்த உரிமையாளர் முன்னே
"படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
எவருக்குமே வாசிக்கவே தெரியாதா?" என்று
நானோ
தலைச் சுற்றி விழுந்துவிட்டேன்!
வாசிப்பு
மனித அறிவைப் பெருக்கும் செயலே...
வாசிப்புப் பசிக்கு
பொத்தகங்களும் செய்தித்தாள்களுமே...
பள்ளிகளில் - இதெல்லாம்
ஒழுங்காகச் சொல்லிக் கொடுத்தால் தானே
பொத்தகக் கடைகளிலே வணிகம் நடக்கும்!
பொத்தகங்களையும் செய்தித்தாள்களையும்
வேண்டிச் சேர்த்தால்
நாலு பணம் வைப்பிலிட(சேமிக்க)
வாய்ப்பில்லையென
பெற்றதுகள் வேண்டிக் கொடுக்கவில்லையோ?
இந்தக் காலப் பிள்ளைகள்
இணையத்தில் படம் பார்க்கையிலே
வாசிப்பை மறந்து போயிட்டுதுகளோ?
யானை விலை ஒட்டக விலையென
அரசு
படிப்புப் பொருட்களுக்கு விலை ஏற்றியதாலோ?
இன்னும் நிறைய
எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதால்
என்னால்
"எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?" என்ற
பாவை(கவிதையை) புனைய இயலாமல்
இப்படியே நிறுத்திக் கொள்கின்றேன்!

புதன், 5 நவம்பர், 2014

ஆண்டவன் கணக்கில்...

வரவும் செலவும்
வருவாய்க் கணக்கில்
நட்பும் பிரிவும்
உறவுக் கணக்கில்
நல்லதும் கெட்டதும்
அறிவுக் கணக்கில்
தன்நலமும் பிறர்நலமும்
உணர்வுக் கணக்கில்
காதலும் தோல்வியும்
இளமைக் கணக்கில்
மகிழ்வும் துயரும்
வாழ்க்கைக் கணக்கில்
ஆயினும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் கணக்கில்...
எத்தனை கணக்கில்
எத்தனையைச் சேர்த்தாலும்
இறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!

அசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்!

அண்மையில் (04/11/2014)
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
"மரபு கவிதை எழுதுவதில்
மொழி ஆளுமை நிறைய வேண்டும்.
இலக்கணத்துக்காக வார்த்தைகளைத் தேடி எழுதுவதில்
தேவை இல்லாத வார்த்தைகள் இடம் பிடித்து
கவிதையின் அழகு கெடுவதைப் பார்க்கிறேன்." என்று
தன் எண்ணத்தைப் பகிர்ந்த
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
கருத்தைப் (Comments) படித்த வேளை - அவரது
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவின் இணைப்பு - அதில்
இருக்கக்கண்டு சொடுக்கிப் படித்தேன் - அதில்
பாப்புனைய விரும்புவோருக்குப் பயன்தரும்
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி இருப்பதாக
எண்ணியதன் விளைவு தான் - அவரது
பதிவைப் பகிர விரும்ப வைத்ததே!

யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரில்
(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12)
நான் பா நடையில் பதிவு செய்த
எழுத்து, அசை, சீர் பற்றிப் படித்தவர்களுக்கு - அதனை
நினைவூட்டிக்கொள்ள உதவுமென நம்பியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படி
அசை, சீர், தளைக்கான சுருக்குவழிகளை அறி என்று
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! - நான்
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரின்
எஞ்சிய பகுதிகளை விரைவில் தர
முயற்சி செய்துகொண்டு தானிருக்கிறேன்!

"எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" " என்று
எனது முன்னைய பதிவில் எழுதியதை
கொஞ்சம் மீட்டுப் பாருங்களேன்...
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" என்றால்
பாப்புனையும் ஆற்றல் இருந்தால் தான்
பாவும் உள்ளத்தில் கருவுறும் என்பேன்!

எடுப்பாக, மிடுக்காகச் செல்ல
ஆணென்றால் பட்டுவேட்டி
பெண்ணென்றால் பட்டுச்சேலை
மணிக்கணக்காக இருந்து உடுத்தினாலும்
உடுக்க ஓர் ஒழுங்கு இருப்பது போல
உள்ளத்தில் உரசிய உண்மையைக் கூட
வெளிப்படுத்த உதவும் ஓர் ஒழுங்கு தான்
பாப்புனையும் ஆற்றல் என்பேன்! - அந்த
ஆற்றலை வளர்த்துக் கொள்ள
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்!

யாப்பறிந்து பாப்புனையும் வேளை
நேரசை, நிரையசை அறிந்து சீராக்கி
சீராக்கும் வேளை அசைபிரித்து அடியாக்கி
அடியாக்கும் வேளை தளையறிந்து தொடையாக்கி
தொடையறிந்து பாவாக்கிச் செல்லும் வேளை
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி உதவுமே! - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படியுங்களேன்!

http://gmbat1649.blogspot.in/2011/08/blog-post_29.html

செவ்வாய், 4 நவம்பர், 2014

பாவலர் நா.முத்துநிலவன் வழிகாட்டுகின்றார்!


எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!"

பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன்
வெண்பாப் புனைவதில் வல்லவரெனத் தொடங்கி
எடுத்துக்காட்டாக
எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும் என்று தொட்டு
யாப்பிலக்கண வழு சுட்டியும் விளக்கியும்
"நமது மரபுப் பாவகைகள்
எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து,
அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்று
சொல்ல மாட்டேன்." என்ற பின்
"கொட்டிக் கிடக்கும் குவியலான
பாவகைத் தங்க வைரக் கட்டிகளை எடுத்து, அதில்
வகைவகையான புதுக்கவிதை ஆபரணங்களைச் செய்து
தமிழ்த்தாய்க்குச் சூட்டுங்கள் என்றுதான்
உரிமையோடு வேண்டுகிறேன்." என்றுரைக்கும்
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டல்
பாப்புனைய விரும்புவோருக்குக் கோடி பெறுமதி!

முதலில் அகத்தியர் தான்
தமிழ் இலக்கணம் வகுத்தார் என்பது
என் கருத்து என்றாலும் - உங்கள்
எண்ணப்படி முதலாம் இலக்கண நூலாம்
தொல்காப்பியத்தில் கூட பல இடங்களில்
தனக்கு முன்னோர் கூறியதில் இருந்தே
தான் படித்துத் தெளிந்ததை வைத்தே
எழுதியதாகத் தொல்காப்பியரும் சொன்னாரெனின்
நாமும் முன்னோர் நூல்களைப் படித்தே
பாக்களைப் புனைவோம் வாருங்கள்!

அதற்காகவே பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
படிக்க வேண்டிய தொகுப்புகள் பலவுள என்று
எடுத்துக்காட்டாகத் தொடுத்துமுள்ளார்...
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
படித்துப் பயன்பெற்றுப் பெரிய பாவலராக
வாழ்த்தி நிற்பது - உங்கள்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன்!

திங்கள், 3 நவம்பர், 2014

உலகமே அறிந்து கொள்...

அலைவரிசை(சனல்)-4 வெளியிட்டது
பொய் என்று
இலங்கை அரசு சொன்னாலும்
வன்னிப் போருக்குள் சிக்கித் தப்பிய
நான் சொல்வதில் பொய் இல்லையென
உலகமே அறிந்து கொள்!
புலிகளையும் பிரபாகரனையும்
கடலுக்குள் மூழ்கடிப்பதாகக் கூறி
பாதுகாப்புப் பகுதியென
அறிவிக்கப்பட்ட இடமென ஓடோடி ஒதுங்கிய
முள்ளிவாய்க்காலில் சாவடைந்த
மூன்றரை இலட்சம் ஈழத் தமிழரை
நினைவூட்டச் சொல்கிறேன்...
உலகமே அறிந்து கொள்!
முதலாம், இரண்டாம்
உலகப் போரில் கூட
இப்படி நிகழ்ந்திருக்காது...
"பதுங்குழிக்குள் வாங்கப்பா" என
"செத்தால் இருவரும் சாவோமப்பா" என
என் துணைவி அழைக்க
"ஐயோ என்ர கடவுளே" என
சாவின் பிடியிலிருந்து தப்பிக்க
ஓடி ஒளியப் போய்
சாவடைந்த ஈழத் தமிழரை
உலகமே நினைத்துப் பார்த்தாயா?
வானிலிருந்து, கடலிருந்து, தரையிலிருந்து
குண்டு மழை பொழிந்த
இலங்கைப் படைகளை
ஐ.நா. சபை
போர்க் குற்றவாளிகளாக்க முடியாமைக்கு
அலைவரிசை(சனல்)-4 ஒளிஒலிப் படங்கள்
சான்றாகக் காட்ட வலுவற்றதா?
பொக்கணை தொடங்கி
இரட்டை வாய்க்கால், முள்ளி வாய்க்கால் உட்பட
வட்டுவாகல் வரை
இலங்கை அரசால்
தடை செய்யப்பட்டது ஏன்?
குண்டு மழைக்குள் தப்பிய
நான் கண்டேன்...
கொத்து(கிளஸ்ரர்)க் குண்டு வீழ்ந்ததும்
(கிளஸ்ரர் குண்டு-ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டது)
வீழ்ந்த இடத்திலிருந்து
100 மீற்றர் சுற்றுவட்டத்து மக்களை
சாவடையச் செய்தும்
உடல்களைத் துண்டாடச் செய்தும்
தன் வேலையைக் காட்டியதே!
மக்களைச் சிதறி ஓடாமல் செய்ய
மூச்சுத் திணற வைக்கும்
புகைக்குண்டு வீ்ழ்ந்த பின்னே
எரி(பொஸ்பரஸ்) குண்டு வந்து வீழ
குண்டுகள் வீழ்ந்த இடத்து மக்கள்
சாவடையாமல்
தப்பிக்க இயலாமல் இருந்ததே!
இறந்தவர்களையா
நம்மாளுகள் விட்டுவிட்டு வந்தனர்...
தம்மைப் பெற்ற பெற்றோர்களை
தாம் பெத்த பிள்ளைகளை
(கைக்குழந்தைகள் உட்படத்தான்)
தம் துணைகளை, உறவுகளை
தமது சொத்துகளை எல்லாம்
இழந்து வட்டுவாகலில் ஏறியும்
(மெனிக் பாம்) அரச சிறைக் கூட்டில்
(கூரைத் தகடுகளால் அடைத்த அறை)
நினைத்து நினைத்து அழுதவர்கள்
இன்றும் அழுவதை
உலகமே சற்று எண்ணிப் பார்!
மே-18-2009 ஆம் நாள்
இத்தனையின் உச்சக்கட்டம்
அதனால், உலகத் தமிழினம்
இந்நாளில் - இவற்றை
ஒன்றிணைத்து மீட்டுப் பார்க்கையில்
உலகமே
உன் பதிலைச் சொல்வாயா...
இல்லையேல்
கண் மூடித் தூங்குவாயா...
எப்படியோ
நம்மாளுகள் நாள்தோறும்
இவற்றை நினைக்காமல் வாழ
முடியவில்லையே
உலகமே அறிந்து கொள்...!

சனி, 1 நவம்பர், 2014

என் பார்வையில் பிழையுண்டோ?


கதிரவன் கதிர்வீச்சில்
கண்ணைப் பறிக்கும் பனித்துளிகளில்
வானவில்லையே பார்க்கிறேன்!

வரண்டு போன நிலத்தில்
வானம் கொட்டிய மழைத்துளிகளில்
பயிர்களின் நிமிர்வைப் பார்க்கிறேன்!

முந்தைய நாள் மழையில்
வேலிப் பக்கமாய் வெண்குடைகளாய்
காளான் பூத்திருப்பதைப் பார்க்கிறேன்!

கடற்கரைப் பகுதியில்
பல நிறக் குடைகள் தலையாட்டுமங்கே
இருவர் ஒருவராகி உருள்வதைப் பார்க்கிறேன்!

நிமிர்ந்து நடைபோடும் ஆண்களில்
ஆடைகளில் அழகில்லைப் பாரும்
ஆனாலும், நழுவும் ஆடைகளைப் பார்க்கிறேன்!

இடைநெழிய நடைபோடும் பெண்களில்
காணும் ஆடைக் குறைப்பில்
கெட்டதுகள் வால்பிடிக்கப் பார்க்கிறேன்!

தெருவோர மதுக்கடைப் பக்கத்திலே
கூத்தாடும் ஆண்களுக்கு எதிர்ப்பக்கத்திலே
தள்ளாடும் பெண்களையும் பார்க்கிறேன்!

கட்டையனின் தேனீர்க்கடை முன்னே
தொங்கும் அட்டையிலே புகைத்தலுக்குத் தடையாம்
கடையின்பின் பெண்களும் புகைப்பதைப் பார்க்கிறேன்!

வழிநடுவே விபத்து நடந்த இடத்திலே
விழிபிதுங்க ஓருயிர் துடித்துக் கொண்டிருக்க
ஒருவரும் உதவாமல் பயணிப்பதைப் பார்க்கிறேன்!

நாளும் நாற்சந்தியில் கூடும்
நாலா பக்கத்தினரில் கருத்தாடல் இருந்தாலும்
ஒற்றுமையின்மை உடனிருக்கப் பார்க்கிறேன்!

எத்தனை எத்தனை இடங்களிலே
எத்தனை எத்தனை உண்மைகளை
பார்த்தாலுமென் பார்வையில் பிழையுண்டோ?

வெள்ளி, 31 அக்டோபர், 2014

சுவையான பாக்களை படித்தால்...


"பசுபதிவுகள்" என்ற
வலைப்பூ (Blog) ஆசிரியரும்
"கவிதை இயற்றிக் கலக்கு!" என்ற
நூலின் ஆசிரியரும்
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
தலைப்பில் ஓர் இனிய பா தந்து
எப்படிப் பா புனைகிறார் என
எமக்கு விரித்து உரைக்கிறார்
படித்துப் பாருங்களேன்!

"வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
 மண்டை முழுதும் தேடிடுவேன்;" என்றும்
"புனைவும் உணர்வும் இசைபாடும்;
 புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்றும்
பாவலர் பசுபதி கூறும் வழிகாட்டலை
பாப்புனைய விரும்புவோர் என்றும்
பாப்புனைகையிலே எண்ணிக்கொள்ளும்!

பாப்புனைய விரும்புவோர் - பலரது
சுவையான பாக்களை படித்தால்
பாப்புனைந்தவரின் கைவண்ணம் - அவர்
கையாளும் பாவண்ணம் எல்லாம்
உள்ளத்தில் இருத்திக் கொள்ளலாமே!
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
பாவலர் பசுபதியின் கவிதையை
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
படித்துச் சுவைக்கலாம் வாருங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/10/blog-post.html

முடிவு

அன்பாகப் பழகுவது
என்னோட இயல்பு
அதற்காக
என்னைப் பற்றி
அடி, நுனி அறியாமல்
முடிவு எடுக்கலாமோ?
சொல்லிவிடு என்கிறாய்
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?

வியாழன், 30 அக்டோபர், 2014

குளவிக் கூடும் மக்கள் குழுவும்

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தால்
உள்ள குளவிகள் எல்லாம்
மெல்லச் சூழல் எங்கும்
பறந்து பறந்து கொட்டுமே!

மக்கள் குழுவிற்குள் சொல்லெறிந்தால்
கூடிய மக்கள் எல்லோரும்
தேடித் தேடியே எங்கும்
செய்தீயாப் பரப்புவதைக் காண்பீரே!

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிய முன்னும்
மக்கள் குழுவிற்குள் சொல்லெறிய முன்னும்
நம்மவர் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்
எப்பவும் பின்விளைவைக் கொஞ்சம் படிக்கலாமே!

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?


பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.

அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...

காட்சி-1

முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!

வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!

முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!

வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!

முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?

வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!

முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?

வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!

முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!

வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!

காட்சி- 2

பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!

பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...

பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன்  ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!

பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!

பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?

பதிவர் - 04 : பட்டென்று வந்து
             சட்டென்று படித்து
             நறுக்கென்று கருத்திட
             வழி விடாமல் எவர் மீதும்
             பழி போடாதீர்கள்!

பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...
             பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி
             கட்டுப்பாடு ஏதுமின்றி
             கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்
             கருத்துப் (Comments) போட எவருமில்லையே!

பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!

பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!

பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.

பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...

பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...

பதிவர் - 05 : எவ்வளவுக்கு  எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு  அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!

மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments)  என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.

முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!

கல்வி கற்போம் கற்றதைப் பகிர்வோம்!


“The Root of the Education is Sour
The fruit of the Education is Sweet”
இப்படி என்றால்
எப்படி என்று தெரியுமா?
கல்வியின் தொடக்கம்
கொஞ்சம் புளிக்கும் தான்
கொஞ்சிக் கொஞ்சிக் கற்றால் தான்
கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள
கல்வியும் இனிக்கும் என்பதேயாம்!
இதெல்லாம்
நவராத்திரி நாள்களிலே தான்
கல்வியா? செல்வமா? வீரமா?
எது பெரிதென்று
நாம் போட்டி போடும் போதே
நாம் அறிவோமே!
அப்ப தானே
அள்ள அள்ள வற்றாத செல்வம்
கல்விச் செல்வம் என்றறிவோமே!
இதை வைச்சுத் தானே
எங்கட முன்னோர்கள்
"கற்றது கைப்பிடி மண்ணளவு
கல்லாதது உலகளவு" என்று
எடுத்துக்காட்டுக்குச் சொல்வார்களே!
எப்படி எப்படி என்கிறீர்களா?
நாம் எப்படித் தான்
எவ்வளவோ கற்று முடித்தாலும்
அவை
கைப்பிடிக்குள் அள்ளிய
மண்ணளவு என்று ஒப்பிட்டாலும்
இன்னும்
கற்க வேண்டியிருப்பது
எவ்வளவு என்று சொன்னால்
உருளும் உலகம் அளவு என்கிறாங்க!
என்னங்க
உலகளவு கற்க முடியாதுங்க
என்றால் சரியாகுமா?
முடியும் என்கிறேன் - முதலில்
கைப்பிடியளவு படிப்போம்…..
கற்றதைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தி
"யாம் பெற்ற கல்வி
இவ்வையகமும் பெறட்டும்" என
கற்றதைப் பிறரோடு பகிர்வோம்,,,
அப்ப தான்
எஞ்சியதைப் படிக்க வாய்ப்பு வருமே!
எடுத்ததிற்கு எல்லாம்
எடுத்துக்காட்டாக
எடுத்துக்காட்டுவதும் திருக்குறளே - அந்த
திருக்குறளையே எழுதிய திருவள்ளுவர் தான்
130 அதிகாரங்களில்
1330 திருக்குறள் எழுதி - அவற்றில்
உலகளவு கல்வியைத் தந்தாரே!
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என
ஔவையார் சொன்னபடி - அதாவது
இளமையில் கற்றவை
என்றும் மறக்க இயலாதது போல
உலகளவு கல்வியைக் கூறும்
திருக்குறளையும் கற்போம்!
"கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக" என்று
வள்ளுவரும் சொன்னாருங்க…
கற்பவை நிறைவாகக் கற்று
அதன் வழி செயற்படுவோம் என்பதே
வள்ளுவரின் வேண்டுதலும் ஆகுமே!
வாருங்கள் உறவுகளே…
ஒன்றாய்ச் சேருங்களேன்
நன்றாய்க் கல்வி கற்போமே
கற்றவை யாவும் பிறரறியப் பகிர்வோமே!

திங்கள், 27 அக்டோபர், 2014

எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?

நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.


  1.  எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
  2.  மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
  3.  மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
  4.  நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. மூன்று மணி நேரம் தான்
தம்பி, தங்கைகளே...
நல்ல செய்திகளை
உள்ளத்திலே பதியச் செய்ய
திரைப்படமே நன்று!
அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

  1.  அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
  2.  குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
  3.  பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
  4.  முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
  5.  தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

சனி, 25 அக்டோபர், 2014

தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!



வெளிநாட்டுப் பதிவர்களையும் அழைத்து  
தமிழகத்துப் பதிவர்களும் இணைந்து
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே 
தமிழ்ப் பதிவர் சந்திப்பு நடந்தேற 
துணைநிற்கும் எல்லோருக்கும் வாழ்த்து!

எழுத்தாலே இணைந்தோம்
அறிவாலே பழகினோம்
கருத்துப்பகிர்வாலே கட்டுண்டோம்
பதிவர் சந்திப்பாலே உறவைப் பலப்படுத்த 
மதுரைக்கு வருகை தரும்
தமிழ்ப் பதிவர்களுக்கு வாழ்த்து!

ஆளறிமுகம் அன்புப் பகிர்வு
கேளாயோ உள்ளத்து எண்ணம்
பாராயோ பதிவர் வெளியீடுகள்
பெருகுதே உறவுப் பாலமென
தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பயன்தர
தமிழ் எங்கும் சிறக்க வாழ்த்து!

கூகிளும் வேர்ட்பிரஸும்
தமிழ்மணமும் துணைநின்றாலும்
தமிழைப் பேண முனைப்புற்று எழுந்த
தமிழில் எழுத விருப்புற்றுக் குதித்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண
வலைப்பூ நடாத்தி வரும் பதிவர்கள் 
பதிவர் சந்திப்பில் மகிழ்வோடு வெற்றிகாண
ஈழத்தில் இருந்து - உங்கள்
யாழ்பாவாணன் வாழ்த்துகிறேன்!

கடவுள் அழுகின்றான்...!


அழகான உலகில்
நானும் நீங்களும்
கடவளின் வடிவமைப்பே!
நமக்கிடையே நிகழ்வதெல்லாம்
நாமே
வடிவமைத்தது என்பேன்!
உலகம் அழிவதற்கும்
நாம்
நம்மை அழிப்பதற்கும்
கடவுளின் திருவிளையாடல் அல்ல...
நமது செயற்பாடுகளே!
அழிகின்ற உலகையும்
அடிபட்டுச் சாகும் உயிர்களையும்
வானிலிருந்து பார்த்தவாறே
உலகையும் உயிர்களையும் படைத்த
கடவுள் அழுகின்றான்...!
படைப்பது
என் தொழில் என்றால்
அழிப்பதும் அழிவதும்
நம்மவர் தொழில் என்றா
கடவுள் அழுகின்றான்...!
நான் பிறந்தேன்
நான் வாழ்ந்தேன்
என்றில்லாமல்
நம்மைப் படைத்த
கடவுளைக் கூட
எப்பன் எண்ணிப் பார்த்தாலென்ன!

உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?

எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது. அப்படியாயின் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் புதிய பதிவர்களுக்குக் கூறுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டிய சில வழிகளைக் கீழே தருகின்றேன்.


  1. கை எழுத்துப் படிகளாக நண்பர்களுக்குக் கொடுப்பது.
  2. அச்சு இதழ்களில் வெளியிடுவது.
  3. மின் இதழ்களில் வெளியிடுவது.
  4. முகநூல்(Facebook), தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில் வெளியிடுவது.
  5. சொந்தமாக வலைப்பூக்கள் (blogs) நடாத்தி வெளியிடுவது.
  6. சொந்தமாகக் கருத்துக்களங்கள் (forums) நடாத்தி வெளியிடுவது.
  7. சொந்தமாக இணையத்தளம் (webs) நடாத்தி வெளியிடுவது.
  8. அச்சுப் பொத்தகமாக அல்லது மின் பொத்தகமாக வெளியிடுவது.


மேலுள்ள வழிகளில் எவ்வழியால் உங்கள் படைப்புக்களை அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வைக்கலாம்? உதவிக்கு உங்கள் நண்பர்களையும் இழுத்து வந்து புதிய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட முன்வாருங்கள்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு


"முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் - அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட் என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்" என
"தமிழாய் நிமிர்ந்திடு!.." என்ற பாவில்
(http://tamilnanbargal.com/node/38552)
நண்பர் இழவழுதி
"தமிழா ஒன்றுபடு" என நினைவூட்டுகிறாரே!

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
முன்னோர்கள் முன்மொழிந்தார்களே...
இது
தமிழக மக்களுக்காக எழுதப்பட்டதல்ல
உலகெங்கும் வாழும் தமிழருக்காக
எழுதப்பட்டது என்பேன்!
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
வாழ்ந்த தமிழர் - என்றோ
ஈழத்தமிழரும் அழிந்து விட்டால்
தமிழகத்தில் மட்டுமே இருக்கலாம்...
"தமிழாய் நிமிர்ந்திடு
தமிழனாய் வாழ்ந்திடு" என்று
நண்பர் இழவழுதி சொல்வதில்
தப்பில்லைக் காணும்!

தமிழரின் ஒற்றுமையின்மைக்கு
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருப்பினும்
ஈழத் தமிழரின் போர் வீழ்ச்சிக்கும்
ஒற்றுமையின்மையே ஆணிவேர்
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" போல
தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு
உலகத் தமிழரையும் ஒற்றுமைப்படுத்து
தமிழகத்தை மட்டுமல்ல
தமிழன் உலகையே ஆளலாம்
தமிழையே
உலகெங்கும் பரப்பிப் பேணலாம்
ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்து
தமிழ் மக்கள் இடையே
ஒற்றுமையை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?


தொலைக்காட்சி
ஒரு தொல்லைக்காட்சி அல்ல...
தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்போரும்
பிழை விட்டதில்லை...
பனை ஏறுபவன்
பனையில ஏறாவிட்டால்
தெருவில குடிகாரரைப் பார்க்க முடியாதே...
அது போலத் தான்
வணிக நோக்கிலான தயாரிப்பாளர்கள்
பார்ப்போர் விருப்பறியாத அறிவிப்பாளர்கள்
விளம்பரங்களால்
நிகழ்ச்சிகளுக்குப் பின்னூட்டம் கொடுப்போர்கள்
தொலைக்காட்சியில் இருக்கின்ற வரை
தொல்லைக்காட்சி தோன்ற இடமிருக்கிறதே!
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?
ஆமாம்!
கெட்டதைக் கலக்கும் தயாரிப்பாளர்கள்
பிறமொழி கலக்கும் அறிவிப்பாளர்கள்
நிகழ்ச்சியைக் குழப்பும் விளம்பரதாரர்கள்
இவற்றையும் கடந்து தொலைக்காட்சியில்
தமிழ் நிகழ்ச்சியைப் பார்த்தால்
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா? என்று
எண்ணத்தோன்றுகிறதே!

வியாழன், 23 அக்டோபர், 2014

எந்தப் பெயர் சொந்தப் பெயர்?

நல்ல பெயரெடுக்க நாளும் முயற்சிக்கிறேன்
கெட்ட பெயரல்லவா முட்டி மோதுகிறதே
"பெறுமதியானது நற்பெயரே!"

நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
தனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"

பெற்றவர் வைத்தது அடையாளப் பெயரே
நம்மவர் செயலால் கிடைப்பது தகுதிப் பெயரே
"ஆளை மதிப்பிட உதவுவதும் பெயரே!"

கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!


வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!

வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?


பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!

ஆயினும், எனது http://mhcd7.wordpress.com/ தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.

ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.

உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.

அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.

எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.

முன்நாளும் பின்நாளும்


இன்றெல்லாம்
ஆளுக்காள்
தூண்டிவிட்டும் கூட
ஆயிரம் பொய் சொல்லி
ஒரு திருமணம் மட்டுமல்ல
பல காதல் கூட
இடம்பெறுகிறதாமே!
எல்லோரும் சேர்ந்து
காதலிக்கவும் வைப்பார்கள்
மணமுடிக்கவும் வைப்பார்கள்
கடைசியில்
நானும் மனைவியும்
காதலித்து மணமுடித்த பின்
நாம் படும் துன்பங்களை எவரறிவார்?
காதலிக்க வைப்பதும்
மணமுடிக்க வைப்பதும்
சுகமே - ஆனால்
அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது
காதலித்தவரும்
மணமுடித்தவரும்
பின்நாளில் படப்போகும் துன்பங்களை!
மாற்றாரை நம்பி
காதலிக்கவும் மணமுடிக்கவும்
இறங்குவோரே - உங்கள்
பின்நாளை நினைவூட்டி
நீங்களாகவே
நம்பிக்கையானவர்களோடு
நம்பிக்கையுடன்
காதலிக்கலாம் மணமுடிக்கலாம்...
நம்பிக்கை தான்
காதலில் வெற்றியையும்
மகிழ்வான வாழ்வையும்
எமக்குத் தருகிறது என்பதை
நாம் அறிவோமா!
மணமுடிக்க முன் காதலித்தால்
சில வேளை தோல்வி தான்
மணமுடித்த பின் காதலித்தால்
எல்லா வேளையும்
மகிழ்ச்சி அதிகம் தான்
ஆனால் - அது
சாகும் வரை தொடர்ந்தால்
முதுமை கூட இளமை ஆகலாம்!

திங்கள், 20 அக்டோபர், 2014

சொல்லுக் கேட்பதாயில்லை...

படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சாலும்
பிள்ளைகள் சொல்லுக் கேட்பதாயில்லை...
பட்டுக் கெட்டு நொந்த பின்னே
அம்மா, அப்பா என்றழுகையில் தெரிகிறதே...
"பிறர் பேச்சுக்கும் பெறுமதி உண்டென்றே!"

நம்மாளுகளும் நம்மையாளும் கடவுளும்


வாழ்வை வழங்கிய கடவுள் பார்க்கிறான்
நம்மாளுகள் மகிழ்வாக வாழ்கிறாரா என்றுதான்...
கிடைத்த வாழ்வில் துயரைக் கண்டதும்
நம்மாளுகள் வாழ்வதைவிட சாகலாம் என்கிறார்களே!

வாழ்வை வழங்கிய கடவுளுக்குத் தெரியும்
துயரெனும் விலையைக் கொடுத்தே வாழணுமென்று...
துயருக்குப் பின்னும் மகிழ்வு உண்டென்று
நம்மாளுகளுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதே!

வாழ்க்கையென்பது சும்மா மகிழ்வு தருமென்றால்
படைப்புகள் இயங்காதெனக் கடவுளும் அறிவான்...
கடவுளின் எண்ணத்தை அறியாத நம்மாளுகள்
படைப்புகளைப் படைக்காதவரை படைப்பின் சுவையறிவரோ!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகள்

நம்ம பூனை நல்ல பூனை
சும்மா சொல்லக் கூடாது
உறியில கிடந்த பாலை
கண்ணை மூடிக் கொண்டு
களவாய்க் குடிக்குமே!
உறியால விழுந்த மூடி
ஒலி எழுப்பக் கேட்டு
எட்டிப் பார்த்த போது தான்
கண்டு பிடித்தேன் இந்த உண்மையை!
நல்ல நல்ல பிள்ளைகளைப் பார்
கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகளாய்
பெத்தவங்களுக்குப் புழுகி விடுறாங்க
ஆசிரியர்களுக்குக் கயிறு விடுறாங்க
இயமனுக்கே ஊறுகாய் போடுவாங்க
கடவுளுக்கே இருட்டடி போடுவாங்க
செய்வதெல்லாம் செய்துபோட்டு
மக்களாயம்(சமூகம்) காணவில்லையென
சுத்தமான ஆளுகளைப் போல
நடுவழியே நடை போடுறாங்களே!
பள்ளிக்கு ஒளிச்சவங்களை
தேர்வுப் பெறுபேற்றில் பார்க்கலாம்
உழைப்புக்கு ஒளிச்சவங்களை
தின்னக் குடிக்க வழியில்லாட்டிப் பார்க்கலாம்
கணவனுக்கோ மனைவிக்கோ ஒளிச்சவங்களை
மூன்றாமாள் முரண்டுபிடிக்கையில் பார்க்கலாம்
கடன்கொடுத்தோருக்கு ஒளிச்சவங்களை
சூழலுக்குள்ளே சுழலுகையில் பார்க்கலாம்
மாற்றான் கண்ணுக்குத் தெரியாதென
இத்தனை பூனைகளும்
இப்படித்தான் பால் குடிக்கின்றனவே!
காதல் என்னும் போர்வையில் கூடினாலும்
கலவி என்பதைச் சோதனை செய்தாலும்
மருத்துவருக்கு முன்னே மாட்டுப்படுவினமே...
புகைத்தலைச் செய்தாலும்
மக்கள் முன்றலில்
மணப்பதால் மாட்டுப்படுவினமே...
ஒளிச்சுத்தான் கள்ளுக் குடிச்சாலும்
ஊருக்கப்பால் கறுப்புவெள்ளை குடிச்சாலும்
ஆடையணிகள் அவிழ்ந்த நிலையில்
தெருவழியே விழுந்து கிடக்கையிலே
மக்கள் முன்னே மாட்டுப்படுவினமே...
எட்டி எட்டி எட்டடி பாய்ந்தாலும்
இப்படித்தான்
இத்தனை பூனைகளும் பால் குடிப்பதை
எப்படியோ
மக்களாய(சமூக)மும் கண்டுபிடிக்கிறதே!
நல்ல நல்ல பிள்ளைகளே
உங்க வீடும் நாடும்
உங்களைத் தான் நம்பியிருக்கே...
நீங்க மட்டும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் தெரியாமல்
நடிப்பதை விட்டுப் போட்டு
படிச்சுப் படிச்சு ஒழுக்கம் பேணுங்களேன்!

சனி, 18 அக்டோபர், 2014

படிப்பது பிள்ளைகளா பெற்றோரா?


மருத்துவராகவோ
சட்டவாளராகவோ
பொறியியலாளராகவோ வரும் வண்ணம்
பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுப்பது
பெற்றோரின் கோழைச் செயலே!
எவரது கல்வியிலும்
எவரும் தலையிடுவது அழகல்ல...
எந்தக் கல்வி இலகுவானதோ
அந்தக் கல்வியை
எவரும் தொடரலாமே!
ஆனாலும் பாருங்கோ
கல்வியை விரும்பியவருக்கே
கல்வியானது
இலகுவாயிருக்கும் கண்டியளோ!
பிள்ளைகள் விரும்பும் கல்விக்கு
பெற்றவர்கள் இசைந்தால் போதுமே
நாளைய வழித்தோன்றல்கள்
நல்ல அறிஞர்களாகவே மின்னுவரே!

வெள்ளி, 17 அக்டோபர், 2014

காட்டுகிறாள் என்றால் பாருங்களேன!



இவள் என்னடா
ஆங்கிலத்தில தொடங்கி
தமிழைக் கொன்று
ஆட்டம் போட்டுக் காட்டி
அடங்கி ஒதுங்கிப் போறாளே...
இல்லை இல்லை
இல்லாத இடுப்பைக் காட்டி
இளசுகளை இழுக்கப் பார்க்கிறாளோ...
தன்னைத் தாழ்த்தினால் பரவாயில்லை
தமிழைக் கொல்ல இடமளியேன்...
என் அருமைத் தமிழ் விரும்பிகளே
இவளது நடிப்புப் பரவாயில்லை
ஆனால்
படிப்புச் சரியில்லை...
யாழ்பாணக் கொத்துரொட்டி மட்டும்
இவள் காட்டவில்லை - தான்
யாழ்பாணப் பண்பாட்டையும்
கழட்டிப் போட்டாள் என்றும்
காட்டுகிறாள் என்றால் பாருங்களேன்!

வியாழன், 16 அக்டோபர், 2014

தெரு ஓரத்துச் செய்தி

வெட்டி வெட்டிப் போடுறாங்க பார்
அட்டி அட்டியாக ஏறுது பார்
நம்மவர் வீட்டு இலைகுழை!

பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!

சட்டி சட்டியாக ஊத்துறாங்க பார்
கட்டி கட்டியாக ஊருது பார்
நம்மவர் வீட்டுக் கழிவு!

(கழிவு: மீன், இறைச்சி கழுவிய நீர்)




மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_16.html

மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!


மதிப்பிற்குரிய வலைப்பதிவர்களே!

வலைப்பதிவர்களின் சிறந்த தளங்களைத் திரட்டிப் பேணுவதோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி ஆய்வுப் (ஆராய்ச்சிப்) பதிவுகளையும் திரட்டிப் பேணுவதே எனது நோக்கமாகும். இவற்றை எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் தளத்தில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யவும் எண்ணியுள்ளேன். மேலும், தேடுபொறிகளூடாகத் தேடும் வேளை நிரல் (List) படுத்தவும் ஒழுங்கு செய்கின்றேன். அதனால், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஓர் எள்ளு அளவேனும் முயற்சி எடுத்ததாக நான் நம்புகிறேன்!

இதனை நிறைவேற்றவே http://2tamil.tk/ என்ற தளத்தை வடிவமைக்கிறேன். இதன் ஒரு பகுதியாகவே http://2tamil.tk/ts4u இருக்கும். மேற்படி இரு இணைப்புகளையும் சொடுக்கிப் படித்த பின், எனது முயற்சிகளை மேம்படுத்த உதவும் மதியுரை (ஆலோசனை) தாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்


செவ்வாய், 14 அக்டோபர், 2014

பணம் பற்றிய பேச்சு!


எவர் வாயாலும்
பணம் பற்றிய பேச்சுத் தான்
கேட்கத் தான் முடிகிறதே!
காதலிப்பாயா என
தோழியிடம் கேட்டாலென்ன
இனிய இரவாகட்டுமென
மனைவியோடு படுக்கையை விரித்தாலென்ன
முதலில பணத்தை வையப்பா என
எட்ட விலகிறாங்களே!
பணம் பத்தும் செய்யுமாம்
குணம் செத்தாலும் நிலைக்குமாம்
ஆனால்,
நம்ம ஊரில நடப்பது என்ன?
பணத்தைப் பொத்திப் பொத்தி
வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் இல்லையே...
பணத்தைக் கிள்ளிக் கிள்ளி
ஊருக்கெல்லாம்
கொடுத்து வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் நிறைந்து இருக்குமே...
எப்படி இருப்பினும்
எவரும்
தனக்குப் பின்னே ஈகம் (தானம்) என்பதை
மறக்கவில்லைத் தானே!
கறுப்புப் பணம்
சிறை செல்லத் துணைக்கு வரும்
நீலப் பணம்
உயிர்கொல்லி (எயிட்ஸ்) தரத் துணைக்கு வரும்
பொய்ப் (போலிப்) பணம்
உறவுகளற்ற நிலைக்குத் துணைக்கு வரும்
உண்மைப் (மெய்ப்) பணம்
உறவுகள் நிறைந்த நிலைக்குத் துணைக்கு வரும்
என்றெல்லோ நம்ம ஊரில
பணம் பற்றிப் பேசுறாங்களே!


வெள்ளி, 10 அக்டோபர், 2014

எனது உள்ளம் நிறைந்த நன்றி!


எனது 46 ஆவது பிறந்த நாள் 07/10/2014 அன்று தான். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் எனது நன்றி.


ஓய்வு!

என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!

உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.


திங்கள், 6 அக்டோபர், 2014

எதை எழுதலாமென்று தான்...


எனது மடிக்கணினிக்கு
அடிக்கடி மூச்சுப் போகிறதே...
அதுதான் பாருங்கோ - அது
மின்னைக் (Current) குடிக்காமையால்
இயங்க மாட்டேன் என்கிறதே!
கணினி மருத்துவரிடம் (PC Technician) காட்டினால்
இப்ப நெருக்கடி என்றார்
அப்ப தான்
எதை எழுதலாமென்று தான்
எண்ணிப் பார்த்தேன்!
அடிக்கடி பழுதாகும்
மடிக்கணினிக்குப் பதிலாக
மாற்றுக் கணினி தேவை என்று
விளம்பரம் எழுதலாமோ
மடிக்கணினிக்கு மூச்சுப் போனதால்
வலைப்பூக்களில் பதிவிட
முடியவில்லையென எழுதலாமோ
இப்படியே
எத்தனை சாட்டுச் சொல்லலாமென
எண்ணிய போது தான்
"சாட்டு இல்லாமல் சாவில்லை" என்ற
முதுமொழியை
எழுதலாமென எண்ணினேன் - அப்படி
எழுதினாலும் பாருங்கோ - அதற்கான
விளக்கமென்ன என்று கேட்டால்
என்ன பதிலைச் சொல்லலாம் என்று
பதிலையே தேடிக் கொண்டிருந்தேன்!
ஆங்கொரு முதன்மைச் சாலையில்
தம்பி ஒருவனோ  தங்கை ஒருவளோ
உந்துருளி (Motor Bike) ஒன்றை வேண்டினார்
ஓடத் தயாரானார்... ஓடினார்...
மூறுக்கோ முறுக்கென
வலக் கைப்பிடியை முறுக்கினார்,,,
இடக் கைப்பக்கமாக வந்த
கன (பார) ஊர்தி மோதியதால்
மோதிய இடத்திலேயே
தம்பியோ  தங்கையோ மூச்சைவிட்டாரென
செய்தி ஒன்றைப் படித்தேன்!
உந்துருளி (Motor Bike) ஓடியவரை
கன (பார) ஊர்தி மோதி
உயிரைக் குடித்தது என்றோ
உந்துருளி (Motor Bike) ஓடுவதாக
மூச்சாகப் பறந்தவர்
மூச்சைவிட்டார் என்றோ
எழுத எண்ணிய வேளை தான்
சாவிற்குச் சாட்டு இவையென
பதில் கூறலாமென எழுதினேன்!


சனி, 4 அக்டோபர், 2014

காதலர் நாள் நினைவில்...


சாவு ஒறுப்புக் குற்றாவாளியாம்
வலன்ரைனை
சிறைக்குச் சென்று வந்து
சாப்பாடு கொடுத்தவளே
காதலித்தாலும்
வலன்ரைன் சாவடைந்த நாளே
காதலர் நாள் மாசி 14ஆம்!
மாசி 14ஆம் நாள்
உயரிய காதலையே நினைவூட்டும்
கீழ்த்தரக் காதலர்களை நினைவூட்டுமா?
'காதல்' என்பது
மூளையில் தூண்டப்பட்ட தூண்டி(ஓமோன்)யால்
உருவானதல்ல
உள்ளத்தில் விருப்புற்றதன் விளைவே!
அழகிற்காக, பாலியல் உணர்விற்காக, பணத்திற்காக போன்ற
எதற்காகவேனும் காதலித்தவர்
காலப்போக்கில் பிரிந்தாலும்
நல் எதிர்காலத்தை, நல வாழ்வை சிந்தித்தவர்
சாகும் வரை காதலிப்பதைப் பாரும்!
சாகும் வரை காதலித்து
வாழுவோம் என்ற முடிவோடு
காதலிப்பவர்கள் நினைவூட்ட
நல்ல நாள் மாசி 14 என்பேன்!
சாகும் வரை
காதலிக்கும் இணையர்களைக் காண
முடியாத போதும்
காதலர் எண்ணிக்கை அதிகம் தான்
ஆனால்,
எல்லாமே
பள்ளிக் காதல் படலை வரையுமா என
எண்ணத் தோன்றுகிறதே!

வெள்ளி, 3 அக்டோபர், 2014

பட்டுத் தெளிந்த பின்...

ஆளுக்காள் அறிவுரை சொன்னால்
இலவசமாக வழங்கக்கூடியது
இதுதானென்று
எவரும் எப்பனும் கேட்பதாயில்லை!
அது, இது, உது என
எத்தனையோ தவறுகள் செய்தமைக்கு
அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,
கண்ட இடத்துக் காவற்றுறையும் தான்
அடித்து நொருக்கினாலென்ன
நெருப்புக் கொள்ளியால சுட்டென்ன
நாளும் நம்மாளுகள்
தவறு செய்வதை நிறுத்தியதாயில்லை!
சின்னப் பிள்ளையாயிருக்கையிலே
நானும்
பொல்லாத அட்டாதுட்டிக் குழப்படிகாரன்
ஆனாலும்
என் அப்பா ஒரு நாளும் அடித்ததில்லை!
என் அம்மாவுக்கு வெறுப்பு வர
"பொடியனை அடிச்சுத் திருத்தாட்டி
பின்னுக்குக் கெட்டுப்போவான்" என
அப்பாவுக்குச் சொல்லி அடிக்கச் சொன்னாலும்
அம்மா கூட எனக்கு அடித்ததில்லை!
"பொடியனை அடிச்சுத் திருத்தேன்டா" என
ஊரார் சொன்னாலும் கூட
எல்லோருக்கும்
என் அப்பா சொல்லும் ஒரே பதில்;
சொல்லியும் திருந்தாதோர்
சுட்டும் திருந்தாதோர்
பட்டுத் தெளிந்த பின் தானே திருந்துவினம்!
தம்பி, தங்கைகளே
எல்லோருக்கும்
என் அப்பா சொன்ன அறிவுரை
எப்பன் உங்கட தலைக்கு ஏறிடுச்சா?
தலையில பதிச்சு வைக்காட்டி
பட்டுத் தெளிந்த பின்
கணக்கிலெடுக்க மறக்கமாட்டியளே!

வியாழன், 2 அக்டோபர், 2014

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!

புதன், 1 அக்டோபர், 2014

அழைப்பு விடுக்கின்றேன்!


எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பொழுது போக்கிற்காக...


ஒரே ஒரு கேள்வி தான். ஆறாள் கூறும் பதில்கள் வேறுவேறு தான். இவங்கட பேச்சே நல்ல நாடகமாச்சு...

முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

முதலாம் ஆள் : உங்கட நிலைப்பாடு என்னவாச்சு?

ஐந்தாம் ஆள் : நானும் ஒருத்தியைக் கேட்டேன். "Love" பண்ண (சந்திக்க) வரும் ஒவ்வொரு முறைக்கும் ஆயிரம் உரூபா கேட்கிறாளே!

ஆறாம் ஆள் : ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பெட்டையளைச் சுத்துற பொடியளாலே தான்,  பெட்டையளும் எடுப்புக் (லெவல்) காட்டுகினம்.

முதலாம் ஆள் : அட பொடியங்களே! பொழுது போக்கிற்காகப் பெட்டையளைச் சுத்துற வேலையை நிற்பாட்டிப் போட்டு; ஒழுங்காய் படிச்சா, நல்ல வருவாய் எடுத்தா எந்தப் பெட்டையும் உங்கட காலில விழுவாள்களே!

திங்கள், 29 செப்டம்பர், 2014

நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!


இப்பவெல்லாம்
பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல
இருந்த இடத்திலே இருந்துகொண்டே
எல்லாம்
நடைபேசியால நடத்திறாங்களே!
சும்மா சொல்லக் கூடாது
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காளான் போல
சிறுசுகளும்
கட்டையில போகவுள்ள
கிடு கிடு கிழங்களும்
அட அட ஆளுக்காள்
வேறுபாடின்றிக் கையிலே
காவுறாங்க நடைபேசி!
பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு
வாட்டி மருத்துவரிடம் சொல்ல
உங்க நடைபேசியால பேசட்டுமா
என்றெல்லோ
சிலரைக் கேட்டுப் பார்த்தேன்...
அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது
நானும்
மாற்றான் நடைபேசிக்கு அலையிறேன்
என்றாள் ஆச்சி...
நடைபேசியிலை
காசில்லை என்றான் காளை ஒருவன்...
நடைபேசியை இயக்க
மின்சக்தி(Charge) இல்லை என்றார் அப்பு...
உங்களுக்கு இல்லாத நடைபேசியா
இதோ தருகிறேன் என
எழுத்தெல்லாம் தேய்ந்த
பழசு ஒன்றை நீட்டினாள் புதுசு...
1234567899 என்று சொல்ல
டிக் டிக் எனத் தட்டியும்
தந்தாள் அந்த அழகி!
ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...
நடைபேசி எப்படி இருந்தாலென்ன
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
நடைபேசியாக இருந்தால்
சரி கிழவா என்று ஓடி மறைந்தாளே!

சனி, 27 செப்டம்பர், 2014

பாடல் எழுதலாம் வாங்க


பாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க
மெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க
                                                                               (பாட்டுக்)
சொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க
மெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க
                           (                                                   (சொல்லைப்)
                                                                               (பாட்டுக்)
அடிமோனை சீர்மோனை வந்திச்சா
அடியெதுகை சீரெதுகை வந்திச்சா
அடிதொடை அழகாய் வந்திச்சா
நெடில்குறில் நினைப்பில் வந்திச்சா
கோலமகள் பொருளாக வந்திச்சா
பாலநிறம் உவமையாக வந்திச்சா
அசைகூட்டிச் சீரமைக்க வந்திச்சா
இசைகூட்டிப் பாவெழுத வந்திச்சா
                                                                                (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
வேலவனே உனைப்பாட வந்தேன்
காலையிலே உனைநாடி வந்தேன்
வேளைக்குப் பதவியுயரப் போறேன்
நாளைக்குத் தேர்வெழுதப் போறேன்
இலகுவாய்த் தேர்வெழுத வரட்டும்
இலகுதாள் எனக்காய் வரட்டும்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
வேலாவா எனவெழுத வந்திச்சா
                                                                        (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
கண்டேன் அவளைக் கண்டேன்
கண்டேன் அவனைக் கண்டேன்
கண்டேன் அவர்களோடக் கண்டேன்
கண்டேன் காதலெனக் கண்டேன்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
கண்டேன் எனவெழுத வந்திச்சா
                                                                                 (பாட்டுக்)
                                                                         (சொல்லைப்)
என்னை மறந்து போவேன்
உன்னை மறந்து போவேனா?
உன்னை மறந்து போவேன்
உண்ண மறந்து போவேனா?
கண்னை மறந்து போவேன்
உறங்க மறந்து போவேனா?
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
மறந்து எனவெழுத வந்திச்சா
                                                                           (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
சின்ன இடை அழகைக் கண்டேனே
அன்ன நடை அழகைக் கண்டேனே
மெல்ல நடை நடந்து வந்தேனே
மெல்ல விலகக் கண்டு நொந்தேனே
செல்லமே உந்தன் இழுவை என்பேனே
எல்லாம் எந்தன் அகவை என்பேனே
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
காதல் வந்ததென எழுத வந்திச்சா
                                                                              (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
எழுத எண்ணினால் எழுத வருமே
அழுத கண்ணீரையும் எழுத வருமே
எழுத முயன்றால் எழுத வருமே
முழுதாய் வாழ்வையும் எழுத வருமே
இசையோடு எழுத வந்தால் வருமே
இசையோடு இசைத்துப் பாட வருமே
                                                                            (பாட்டுக்)
                                                                           (சொல்லைப்)


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

ஆண்களே பதில் சொல்லுங்களேன்!


அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)


வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து "எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்" என்ற தலைப்பில் மின்நூல் ஒன்றை வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e

எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://fliphtml5.com/homepage/insb

எனது மின்நூலின் PDF பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

எனது மின்நூலைப் படித்துச் சுவைத்தீர்களா? இது பற்றித் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பதிவர்களும் பதிவுகளும்

என்னைப் பாடச் சொன்னால்
என்னென்னமோ பாடுவேன்
ஆனால்,
என்னை எழுதச் சொன்னால்
என்னென்னமோ எழுதுவேன்
எப்படியோ
பாடினால் பொருள் இருக்காது
எழுதினால் தமிழ் இருக்காது
அதுக்குத் தானே
வலைப்பக்கங்கள் (Web Pages)
வலைப்பூக்கள் (Blogs)
கருத்துக்களங்கள் (Forums)
அப்படி எழுத உதவுகிறது என்பேன்!
ஆனாலும் கூட
அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
மின் ஊடகங்களில்
சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
எவரும் மறுப்பதற்கு இல்லையே!
அதனால் தான் பாருங்கோ
எடுத்துக்காட்டுக்கு
"நன்றி அஆ வலைப்பூ" என
அச்சு ஊடகங்கள்
சிறந்த பதிவர்களின் பதிவை
மீள்பதிவு செய்கின்றனவே!
ஆனாலும் பாருங்கோ
சில பதிவர்கள்
அச்சு ஊடகப் பதிவுகளை
மின் ஊடகங்களில் பதிகின்றனரே!

திங்கள், 22 செப்டம்பர், 2014

நாலுகாசு வைப்பிலிட்டு


கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே! அப்படியுமா...
இன்னும் இன்னும்
எத்தனையோ சொல்லி எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்...
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?

அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!

ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலறிமுகம்

தமிழ் நண்பர்கள்.கொம், முகநூல்(Facebook).கொம் ஆகிய தளங்களில் நண்பராக இணைந்து பல கருத்துக்களைப் பகிர்ந்த அறிமுகத்தில் நண்பர் ந.கோபிநாத்தின் உறவு மலர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக அவரது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" என்ற நூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலைப் படித்துச் சுவைத்துப் பெற்ற சில உண்மைகளை நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ந.கோபிநாத் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடலில் ஓடும் செந்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல் கலந்திருப்பதை அவரது படைப்புகளே சான்று பகருகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் பலர் பல நூல்களை வெளியிட்டு தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நண்பர் ந.கோபிநாத் தனது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலை வெளியிட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி உள்ளாரென நான் உணருகிறேன்.

உள்ளூர் படைப்பாளியோ புலம்பெயர் படைப்பாளியோ இலங்கைத் தமிழரைப் பற்றி எழுதுவதாயின் போரியல் இலக்கியம் அல்லது போர்க் கால இலக்கியம் சார்ந்தே இருக்கும். காரணம் ஐம்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்ந்தமை தான். போர் இடம்பெறும் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போரியல் இலக்கியம். போரினால் விளைந்த பாதிப்பினை வெளிக்காட்டுவது போர்க் கால இலக்கியம். அப்படியாயின் நண்பர் ந.கோபிநாத் எவ்வகை இலக்கியத்தை நூலாக்கினார் என்றால் இரண்டும் கலந்திருந்தாலும் போர்க் கால இலக்கியமே அதிகம் என்பேன்.

எழுதுகோல் ஏந்தியோர் எல்லோரும் எழுத்தாளர் ஆகவில்லையே! காரணம் எழுதும் வேளை தன் எண்ணங்களைக் கொட்டி விட்டால் போதுமென நினைத்திருக்கலாம். ஓர் எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கொட்டும் போது அளந்து தான் கொட்ட வேண்டும். எழுத்தாளர் எழுதுகோலைப் பிடித்ததும் தன் மொழியாளுமையைச் சரி பார்க்க வேண்டும்; பின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பட்டறிவை வளர்க்க வேண்டும்; பின் எழுதலாம்.

எழுத்தாளன் எழுதும் வேளை தனது பக்கக் கருத்துகளைத் தொகுத்துப் புனையக்கூடாது. வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் எளிய நடையில் எழுதுவதோடு, வாசகர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். அதாவது, வாசகர் களிப்படையவோ நிறைவடையவோ வேண்டும். நண்பர் ந.கோபிநாத்தின் படைப்புகளில் இவை வெற்றிகரமாகப் பேணப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வரி(வசன)க் கவிதை எழுதுபவர் கவிதை நடையைப் பேணத் தவறினால் உரைநடையாகிவிடும்; புதுக்கவிதை என்றெழுதப் போய் உணர்வுகள், ஓசை(ஒலி) என கவிதை வீச்சாகக் கருதி அடிகளை ஆக்கத் தவறினால் உரைநடை வரியை உடைத்து சொல்களை அடுக்கியது போல ஆகிவிடும்; யாப்பிலக்கண(மரபு)க் கவிதை எழுதப் போய் பாவிலக்கணத்தை இறுகப் பற்றினால் எவரும் படிக்க வாய்ப்பிருக்காது. பாவிலக்கணம் தெரியாதவர்களும் படிக்கும் வகையில் சீர்கள் அமையும் வண்ணம் அசை, தளை, அடி, தொடை பார்த்துப் புனைந்தால் மட்டுமே எவரும் மரபுக் கவிதைகளைப் படிக்க விரும்புவர்.

நண்பர் ந.கோபிநாத் கவிதை இலக்கணங்களை எளிமையாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் கையாண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை எதுவாயினும் வாசகர் விரும்பிப் படிக்கும் வகையில் 116 பக்கங்களில் 40 கவிதைகளைத் தந்துள்ளார். எல்லாம் பல வகைப் பாடுபொருளைக் கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழரின் துயரை வெளிப்படுத்தும் சிறந்த நூலாகும்.

முதலில் நூலை மேலோட்டமாகத் தட்டிப்பார்த்த போது பல பக்கங்கள் வெளியாக(Blank) இருந்தது. அதாவது, இடைச் செருகல்(Fillers) ஏதுமில்லை. (சிலர் வெளிகளை(Blank)ப் பார்த்து ஓரிரு வரிகளாயினும் சிறு கவிதைகளைத் திணித்து விடுவர்.) ஒவ்வொரு கவிதையும் தனிப் பக்கங்களில் சிறப்பாக அழகுற அச்சிடப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறந்த பாவலர்(கவிஞர்) பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்தால் நண்பர் ந.கோபிநாத் நல்ல பாவல(கவிஞ)ருக்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

இரண்டாவதாக நண்பர் ந.கோபிநாத்தின் நூலின் தகுதியைப் பார்க்க வேண்டியுள்ளது. விளம்பர(பிரச்சார) மணம் வீசாது திணிப்புகள்(Fillers) சேர்க்காது அளவாகவும் தெளிவாகவும் சொல்ல வந்த செய்தியை நல்ல தமிழில் வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த எண்ணங்களை, நல் வழிகாட்டலை புதிய அணுகுமுறையில் சொல்லப்பட்டுள்ளது. புதுக் கவிதைகளாகவோ மரபு சார்ந்த புதுக் கவிதைகளாகவோ வெண்பாவைப் போலவோ(சில வெண்பாவாக உள்ளன) வாசகர் படிக்க இலகுவாக அமைந்திருப்பது சிறந்த நூலுக்கான சான்றாகவே நான் கருதுகிறேன்.

காணாமல் போன மகன் - பக் 29
"நெஞ்சிலே புண்பட்டுச் செத்தாலும் முதுகில் புண்பட்டுச் சாகாதே" என்றொரு தாய் சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் விளக்கத்தை பத்திரிகை ஒன்றில் படித்தேன். "காணாமல் போன மகன்" என்ற கவிதையில் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் துரோகியிடம் வீரமுள்ள தமிழ்த் தாய் வேண்டுவதைப் பாரும். தன் மகனும் துரோகி என்றால் சாகட்டுமென ஒப்பாரி அல்லவா வைக்கிறாள்.
எங்கும் என்மகனை உன்வழியிற் கண்டியெண்டால்
இங்கு கதறுமெந்தன் ஈனநிலை சொல்லாதே,
சங்கு நெரித்து அவனைச் சாய்த்துவிடு! என்மகனும்
எங்கும் உனைப்போல இருப்பதிலும் சாவதுமேல்.
என்றவாறு புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை நண்பர் ந.கோபிநாத் வடித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குமரிகள்! - பக் 73
கவிஞரின் மக்களாய(சமூக)ப் பார்வையை கீழ்வரும் வரிகளில் காணலாம்.
மாதவி டாயெனில் பத்தியமாய் - பல
சாத்திரங்கள் - தமிழ்
சொன்னபடி - அவள்
காத்துக் கறுப்புக ளண்டிடாமல் - தனிக்
காவலிட்டு - வேப்பம்
வேலியிட்டு - நல்ல
உழுந்துடன் சீனட்டி நெல்லுடைத்து - கழி
அஞ்சுநாட்கள் - உண்டு
பூரித்தாளாம்!
இதென்னடாப்பா, நண்பர் ந.கோபிநாத் இப்படி மருத்துவ மதியுரை வழங்குகிறாரோ தன் பெண் குஞ்சை இப்படித் தான் வளர்க்கிறாரோ தன் சகோதரியைத் தன் தாய் இப்படித் தான் வளர்த்தாளோ என்று கேட்குமளவுக்கு குமரி வளர்ப்பை விவரிக்கிறார்.

தாய் திருப்பார்வதி அன்னை - பக் 80
தாய் திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்
ஊட்டினள் ஓர்துளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே!
பிரபாகரனை ஈன்ற தாயை இப்படிப் பாடும் போதே நல்ல தமிழைக் கையாளுகிறார். ஆணை 'ஒருவன்' என்பது போல பெண்ணை 'ஒருவள்' என்றழைக்கலாம் என பாவலர் பாரதிதாசன் 'பிழையின்றித் தமிழெழுத' என்ற நூலில் குறிபிட்டுள்ளார். அதனை 'தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்' என்ற அடியில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல இடங்களில் நண்பர் ந.கோபிநாத் நல்ல தமிழைக் கையாண்டிருக்கிறார். பிறமொழிச் சொல்களைக் கலக்காது நல்ல தமிழ் சொல்களை எல்லாக் கவிதைகளிலும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எஞ்சியிருக்கும் உணர்வுகள் - பக் 82
கவிதைக்கு ஓசை(ஒலி), இசை அதற்கேற்ப வந்தமையும் சொல்கள் தான் உயிர் ஊட்டுகிறது. இங்கும் அதனைக் காண முடிகிறது.
தட தட படையணி,
தட் தட் தட் தட் வெடியொலி,
சட சட அணிவகுப்பு,
அணி அணி!
பெண் அணி,
ஆண் அணி,
பெரும் அணி
அணி அணி!
ஈழத்தமிழ் போராளிகள் அணிவகுத்து நிற்பதை இவ்வாறு அழகாக இசைத்துக் காட்டுகிறார் நண்பர் ந.கோபிநாத் அவர்கள்.

காதலுக்கும் முன்னராய் - பக் 93
காதலென்ற உணர்வு உந்தப் பெற்றால் ஆணுக்குப் பெண்ணழகாகவும் பெண்ணுக்கு ஆணழகாகவும் பேச்சில் தேன் போன்று தித்திக்க அன்பாகப் பேசவும் வரும். ஆனால், முதலில் பேச்சைத் தொடுப்பது யார் என்ற சிக்கலும் வரும்.
அதிகாலைப் பேரழகி அன்னநடை போட்டு
குதிமேலாய் பாதணியிற் போவாள், மதிகிடந்து
முகம், முகப்பொலிவை முற்றாய் விழுங்கிவிடும்
பேசப் பலனிலாப் பார்வை.
(இங்கு 'மதிகிடந்து முகம்' என்பது `மதிகிடந்து மூசும்` என வரவேண்டும். நூல் பதிப்பில் தவறு நடந்துவிட்டதாக நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.)
ஒருவளைப் பார்த்த ஒருவனின் உள்ளம் எப்படியிருக்கிறது என்று கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார் இங்கே.

காதலாய்க் கருத்திலதாய் - பக் 102
பாவலன்(கவிஞர்) என்பான் தூரநோக்கோடு வழிகாட்டத் தவறக்கூடாது. இங்கே பாரும்:
எல்லார் குறைகளுக்கும் மேலிருந்து வார்க்குமந்த
வல்லான் முருகனுக்கும் வஞ்சகமோ? - இல்லாள்
இருக்க இரந்ததுதான் ரண்டகமோ? - நல்லாள்
ஒருத்தியெனைக் கொள்ளவினை நல்க.
என்றவாறு வழிகாட்டும் நண்பர் ந.கோபிநாத்தைப் பாராட்டலாம்.

தேனடையே தேனே! - பக் 107
"குவிந்த நெற்றிப்பொட்டில்
குற்றியிறங்கிய கூர்மூக்கில்
பிட்டியெடுத்த கன்னத்தில்
பிறையான கூர்நாடியில்
குப்பென் றுதிர்க்கும்
கடைவாய்ப் பற்சிரிப்பில்"
என்று தொடங்கும் கவிதையில் ஓராளின் முகவழகைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பற்சிரிப்போடு அந்தாளை அடையாளப்படுத்துமளவுக்கு அழகாகப் பாபுனைந்துள்ளார். கொஞ்சம் விட்டால் கம்பனையும் விஞ்சுவார் போலத் தெரிகிறது!

கண்ணீர் குளக்கட்டு - பக் 111
இது நண்பர் ந.கோபிநாத்தின் கடைசிப் பதிவு. இதில் உணர்வு வெளிப்பாடு அதிகம். இப்பதிவை முடிக்கையில் நாயின் நன்றியை அழகாகப் பதிவு செய்கிறார்.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் அவர்கள் ஓங்கி உதைத்த உதைப்பில் 'அவுக்' என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று உப்பிட்டு வளர்த்த நன்றியை கண்ணீராய் சொரிந்து கொண்டிருந்தது அது. குரைக்கவில்லை.
படையினரின் உதைப்பால் நாய் சுருண்டாலும் நன்றி மறக்கவில்லைப் பாரும். இவ்வாறு நண்பர் ந.கோபிநாத் அவர்களின் எல்லாப் பதிவுகளும் நன்றாக அமைந்திருக்கிறது.

நண்பர் ந.கோபிநாத் அவர்களின் நூலைப் படித்து விட்டு, குறை அல்லது நிறை சொல்லத் தகுதியற்றவன். ஆயினும், நான் படித்து உள்வாங்கிய அளவில் எனக்குக் கிடைத்த மகிழ்வையும் நிறைவையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதை இங்கு பதிவு செய்துள்ளேன். சிறந்த படைப்பாளியின் சிறந்த நூலைப் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காட்டி அதனை மெய்ப்பிக்க முனைந்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்து நூலாக்கிய நண்பர் ந.கோபிநாத் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டினால் போதாது, அவரது வெளியீட்டு முயற்சி வெற்றியளிக்க நம்மாளுகள் ஒத்துழைக்க வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களிடம் இன்னும் பல வெளியீடுகளை வெளிக்கொணரவைக்க; நாம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களே, உங்கள் பணி தொடரவேண்டும்; இன்னும் பல படைப்புகளை ஆக்கி வெளியிட எனது வாழ்த்துகள்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்


பாபுனையும் போது
இசை (ஓசைநயம்) கருதி
சொல் எடுத்தாள முனைவோம்...
என்னமோ
வாசிக்கையிலே
"பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!" என்று
அமைந்திருந்தால்
அழகான பா/கவிதை என்பீர்!
இசை (ஓசைநயம்) அமைய
பாபுனையும் போது - நம்
முயற்சி எப்படியோ
அப்படித்தானே
பா/கவிதை அமையும் என்பதை
நாமறிவோம் - அதை
பாவலர் ரமணி அவர்கள் - தங்கள்
பாவண்ணத்தில் அளந்து விட்டதை
பாபுனைய விரும்பும்
உங்கள் எண்ணத்தில் வெளிப்படுத்த
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
கொஞ்சம் படித்துத் தேறுங்களேன்!

" சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
http://yaathoramani.blogspot.com/2014/09/blog-post_16.html "

பாபுனைய விரும்பும் வேளை
நாம் தேடித் தேறிய
சொல்களின் கூட்டழகு
அடிகளின் நடையழகு
படிக்கையில் உணரும் இசையழகு
எல்லாம் தானே துணைக்கு வருவதால்
தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்
நல்ல பாவலனாக்கப் பணி செய்யுமே!

புதன், 17 செப்டம்பர், 2014

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்.... 
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/


வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்

இன்றைய நுட்பங்களில் வலைப்பூக்கள் சிறந்த ஊடகங்களாக மின்னுகின்றன. சிறந்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்கள் பலரது கைவண்ணங்களாலும் நாவண்ணங்களாலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. அது பலரைத் தமிழ்மணம் பேண ஊக்கமளிக்கிறது. அந்த வகையில் அடுத்தொரு முயற்சியாக வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள் பகிரப்படுவதனைக்  கருத்திற்கொள்ளலாம். இம்முயற்சி மேலும் வலைப்பதிவர்களின் செயற்றிறனைப் பெருக்கிக்கொள்ளப் பின்னூட்டியாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

இம்முயற்சியைத் தொடக்கிவைத்தவர்களுக்குக் காலில் வீழ்ந்து வணங்கி யாழ்பாவாணன் வெளியீட்டகம் நன்றி தெரிவிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளுக்கு யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும். உலகெங்கும் தமிழைப் பேண வலைப்பதிவர்களின் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கிறது. எனவே, வலைப்பதிவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு நாமும் மதிப்பளிப்பதையே விரும்புகின்றோம்.

உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் தம்பி ரூபன் அவர்களுக்குக் கீழ்வரும் அறிஞர்கள் விருது வழங்கி மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

அறிஞர் விஜயா அம்மா அவர்கள்

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

இவ்வாறு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணும் வலைப்பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேருக்கும் யாழ்பாவாணன் வெளியீட்டகம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

தம்பி ரூபன் அவர்கள் உங்கள் யாழ்பாவாணனுக்கும் தனது விருதுகளைப் பகிர்ந்துள்ளார். அவை பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும்  வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html