Translate Tamil to any languages.

புதன், 24 மே, 2023

வேலைக்குப் போவாள் (கடுகுக் கதை)

 



வானம் செம்மஞ்சள் நிறமாக, ஊரும் வெயில் தணிந்ததாக, எரிந்து கொண்டு கடலில் விழுகிற மாதிரிச் சூரியனும் வானில் மின்னக் குத்து மதிப்பாக ஐந்து மணியைத் தாண்டி இருக்கும் அழகான மாலைப் பொழுது. 


முதன்மைச் சாலை வழியே எதிரெதிரே உயிரனும் பொன்னியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர். தெரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டு ஏதோ பேச முற்படுகின்றனர். 


'உனக்கு என்ன வேலை கிடைச்சாச்சு கொண்டாட்டம் நடத்தி போட்டீர். தெருவாலே போன என்னையும் தங்களுடைய வீட்டுக்கு இழுத்துப் போட்டீர். உமக்கு வேலை கிடைச்ச கொண்டாட்டத்தில எனக்கு அதிகம் வரவேற்பு கிடைக்கேல... என்றாலும் வீட்டுக்காரருக்கு என்னையும் நல்ல படிச்ச பிள்ளை என்று காட்டிப்போட்டீர்.' என்றவாறு பொன்னி தன் பேச்சைத் தொடுத்தாள்.


'நேர்காணலுக்குப் போகேக்க என்னைக் கண்டதால் தான் நீ விசாரித்தாய் என்று அறிந்தேன். நேர்காணல் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வரை நீ காத்திருப்பாய் என்று எதிர்பார்க்கவே இல்லை நேர்காணலில் தெரிவு செய்யப்பட்டேன் என்றதும் என்னை இறுகப்பற்றினாய். என் மீது ஏதோ அக்கறை உனக்கு இருப்பதை உணர்ந்தேன். அதனால் தெருவில் நின்று கதைத்தால் ஊராக்கள் நாலும் கதைப்பினம். அதுதான் வீட்டுக்கு வா என்று அழைத்திருந்தேன். என்னவோ உன் திறமையால வீட்டாரின் உள்ளத்தை கொள்ளை அடித்து விட்டாய்!' எனத் தன் எண்ணத்தை உயிரன் பகிர்ந்தான். 


'இப்பவும் தெருவில் தான் நிற்கிறோம், இதில நின்றால் ஊராக்கள் நாலும் கதைக்காதுகள் பத்துப் பதினைந்து எனப் போட்டுக் கதைப்பினம். அடுத்த தெருவில் தான் என்னுடைய வீடு. ஒரு மணித்துளி நேரம் என் வீட்டுக்கு வந்து போகலாமே! வாங்க! வாங்க! என் வீட்டையும் பார்த்ததாக முடியும்.' என்று பொன்னி அழைத்துச் சென்றாள். 


பெட்டை நாய்க்குப் பின்னால போற பொடியன் நாய் போல பொன்னிக்குப் பின்னாலே உயிரன் போய்க் கொண்டிருப்பதை வானம் பார்த்துக் கொண்டிருந்தது.


வாவ் வாவ் எனப் பொன்னி வீட்டு நாய்கள் குரைத்தது. யார் யார் என வீட்டில் உள்ளவர்கள் படலை வரைக்கும் வந்து விட்டனர். 


உந்தச் சைவப் பள்ளிக்கூடத்தில என்னோட படித்த நண்பர் ஒருவர் எங்கட வீட்டைப் பார்க்க வருகிறார். வழியில கண்டால் போல நான் தான் கூட்டிக்கொண்டு வாரேன். நிலைமையைச் சொல்லிப் போட்டு உயிரனை வீட்டிற்கு உள்ளே பொன்னி அழைத்துச் சென்றாள். 


'வாங்கோ தம்பி! ஏதோ நல்ல வேலை கிடைச்சிட்டுதாம். பொன்னி சொல்லித் தான் அறிந்தோம். இப்ப மகிழ்ச்சி தானே!' என்று பொன்னியின் தாய் மங்கம்மா, தகப்பன் மணிராஜ் உயிரனை வாழ்த்தி வரவேற்றனர். 


'வேலையில எதற்கும் முகம் கொடுத்து வேலை செய்தால் தான், நிரந்தரமாக வேலை செய்து பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற்று முன்னேற முடியும்' என மணிராஜ் உயிரனுக்கு வழிகாட்ட, மங்கம்மா பால்த் தேனீர் போட்டுக் கொண்டு வந்து உயிரனுக்கு நீட்டினார். 


'உங்களுக்குச் சரியான வரவேற்புத் தான்.' என்று உயிரனை பார்த்துப் பொன்னி புன்னகைத்தாள். நாங்கள் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. அதனால், எங்கட வீடும் ஒரு சின்ன வீடு தான். வீட்டு நிலைமையைப் பொன்னி விளக்கினாள். 


'நீயும் படிச்ச நீ தானே! நல்ல வேலைக்கு விண்ணப்பித்து வேலை கிடைத்ததும் தந்தி அடிக்கவும்.' என்று உயிரன் தன் விருப்பத்தினை வெளியிட்டுத் தான் வீட்டுக்குப் புறப்பட எழும்பினான்.


'எங்கட பிள்ளையும் வேலைக்கு விண்ணப்பம் போட்டபடி தான் இருக்கிறாள். இவளுக்கேற்ற வேலை கிடைக்க வேண்டுமே!' என்று தாய் மங்கம்மா தன் பிள்ளையை உயர்த்திப் பேசினார். 


'இந்தக் காலத்தில என்னத்தைப் படிச்சாலும் நல்ல வேலையில நல்ல வருவாய் பெறுகிற ஆளாக இருக்க வேண்டும்' என்று தந்தை மணிராஜ் உம் தன் பக்கத்துக்குச் சொல்லி முடித்தார். 


படிப்பில கெட்டிகாரப் பிள்ளை. படிச்சு முன்னேற ஊக்கம் தருகிற பிள்ளை. நேர்காணலுக்கு போகேக்கையும் வேலை கிடைச்சால் தான் தன்னைப் பார்க்கலாமென்று எச்சரித்தும் அனுப்பிவைத்தாள். அப்படியான நல்ல பிள்ளை கேட்டதற்காக உங்களுடைய வீட்டையும் வந்தேன் என்று உயிரன் தன் நிலையை விளக்கினான். 


'சரி! பிள்ளைக்கு வேலை கிடைத்ததும் சொல்லுங்கோ! அப்ப உங்கட வீட்டை வருவேன். இப்ப நான் வீட்டுக்கு போகிறேன்' என்று உயிரன் தன் வீடு நோக்கிப் புறப்பட்டான். 


'உன்னைப் போல தம்பி, எங்கட பிள்ளைக்கும் வேலை கிடைத்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்.' என பொன்னியின் தாய், தந்தை உயிரனை வழியனுப்பி வைத்தனர். 


'இனி வேலையில தான் இருப்பியள். என்னோட கதைக்கக் கூட நேரம் இருக்குமோ தெரியாது.' என்று பொன்னி உயிரனின் கையைப் பிடித்துக் கேட்டாள். 


'கதைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் கதைக்கத் தானே வேண்டும். இதில் என்ன சிக்கல் இருக்கு' என உயிரன் கையை விடுவித்துக் கொள்கிறான். 


'முதல்ல நீ ஒழுங்காக வேலையில் சேர், பிறகு தான் நீ உயர்ந்த நிலைக்கு வருவாய். அப்பதான் நானும் பெரிய இடத்துப் பிள்ளையெனக் கதைக்க முடியும். சரி! என்னுடன் கதைப்பதற்காகத் தானும் நீ நல்ல வேலையில சேரத் தானே வேண்டும்.' என உயிரன் பொன்னியின் கையைக் குலுக்கினான். 


'நானும் முயற்சி செய்கிறேன். எங்கேயும் வெற்றிடமிருந்தால் மறக்காமல் எனக்கு நினைவூட்டும்' என்று அவளும் அவனது கையை இறுகப் பற்றுகிறாள். 


'மீண்டும் சந்திப்போம்' என இருவரும் கையை விலக்கிக் கொண்டு பிரிகின்றனர். 


(யாவும் கற்பனை)


ஞாயிறு, 21 மே, 2023

நேர்காணல் (கடுகுக் கதை)


 காலை விடிந்தது. பகலவன் வீட்டை குடைந்து ஒளி தந்தான். ராசம்மா தேநீர் போட்டு பிள்ளைகளுக்கு கொடுத்தாள். ராசையா தனது வேலைகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் 


மூத்தவன் உயிரன் தனது படிப்பில் கவனம் செலுத்தி தன் படிப்பைத் தொடருகிறான். மற்றவர்களை 'கொண்ணன் எழும்பிப் படிக்கிறான். நீங்களும் எழும்பிப் படியுங்கோ' என்று  ராசம்மா  எழுப்புகிறார். 


'ஏழரை மணியாப் போச்சு. அவரவர் வேலைக்கு போக ஆயத்தம் செய்யுங்கோ.' என ராசையா நினைவூட்டினார். 'சாப்பாடு தயார், குளிச்சா வந்து சாப்பிடுங்கோ' என ராசம்மாவும் அறிவிப்புச் செய்தாள். 


உயிரனும் தனது கடமைகளை முடித்துக் கொண்டு, தெருவுக்கு இறங்கினான். ஏதோ ஒரு நேர்காணல் என்று புறப்பட்டுக் கொண்டிருந்தான். வழியில கறுத்தப் பூனை குறுக்கால போனது. அவன் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் பயணிக்கிறான். வழியில 'இந்த மூஞ்சிக்கு, உனக்கும் ஒரு வேலையோடா' எனச் சிலர் நையாண்டி பண்ணினர். அதனையும் கடந்து பயணிக்கிறான். பொன்னி என்ற ஒருத்தி 'நல்ல சம்பளத்தோட வேலை கிடைக்காட்டி, இந்த மூஞ்சியைப் பார்க்காதே' என்று எச்சரிக்கிறார் இவற்றையெல்லாம் தலையில் போட்டபடி உயிரனும் நேர்காணலுக்குப் பயணிக்கிறான்.


'உறுதியான எண்ணத்துடன் எந்தப் பயணம் மேற்கொண்டாலும் எப்போதும் பின்னடைவுக்கு இடம் இருக்காது' என்று பலர் தங்கள் புத்தகங்கள் எழுதி இருந்ததை உயிரன் படித்திருந்தான். அதனால் அவன் தனது குறிக்கோளிலிருந்து விலகாமல் தனது பயணத்தைத் தொடருகிறான். 


குறித்த நேர்காணல் இடத்துக்கு உயிரன் சென்று, தனக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கிறான். தனக்கான அழைப்பு வந்ததும் நேர்காணலில் தலையைக் காட்டுகிறான். நேர்காணல் செய்பவரோ படித்தது; படித்ததை வைத்துப் பயிற்சி பெற்றது; பிற இடங்களில் பணி செய்தது என்று பல கேள்விக் கணைகளைத் தொடுத்தார். கடைசியாக 'எனது நிறுவனத்தை ஏன் தெரிவு செய்தாய்' என்றும் கேள்வியை முன்வைக்கின்றார். 


நேர்காணல் செய்தவருக்கு உயிரனின் பதில்கள் திருப்தி அளித்தாலும் மாற்றாரை நேர்காணல் செய்வதற்காக 'வெளியில் போய் இரும்' என்று பணிக்கின்றார். நேர்காணலுக்கு வந்த அனைவரும் நேர்காணல் செய்து முடித்து உயிரனுடன் வெளியே காத்திருக்கின்றனர். 'யார் யாரைத் தெரிவு செய்தாச்சு' என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒரு மணித்துளி, இரண்டு மணித்துளி என நேரம் கடக்கிறது. 'யாரை தூக்கப் போறாங்களோ எல்லாரையும் கலைக்கப் போறாங்களோ' என்று அவரவர் பேசிக் கொள்கின்றனர். 


நேர்காணல் செய்தவர் எல்லோரும் பார்க்கக் கூடியவாறு வெளியே வந்து நின்று ஒரு நிறுவனம் 'தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற அறிவும் செயற்றிறனும் மிக்க ஆளைத் தேடுவது வழக்கம். அதன்படிக்குப் பத்துப் பேர் தேவைப்படுமிடத்தில் இந்த நேர்காணலில் ஐந்து பேரைத் தான் தெரிவு செய்யக் கூடியதாக இருந்தது.' எனத் தனது அறிவிப்பை வழங்கத் தொடங்கினார். அதன்படிக்கு, அந்த ஐந்து பேரில் உயிரனும் தேர்வு செய்யப்படுகிறார். 


புதிய சூழலில் புதிய சந்திப்பில் புதியவர்களை அறிமுகமாக்கிக் கொள்வதால் பல நட்புகளைத் தோற்றுவிக்கலாம். பல நல்ல அறிஞர்களும் நண்பராகக் கிடைக்கலாம். அந்த வகையில் உயிரனும் பலருடன் தன்னை அறிமுகம் செய்து, பலரையும் தனது பக்கம் உள்வாங்கிக் கொள்கிறான். அதன்படிக்குப் பலரும் அன்றிலிருந்து உயிரனுடன் நண்பர்கள் ஆகின்றனர். 


குறித்த இடத்தில் இருந்து எல்லோரும் கலையும் போது உயிரனும் வீட்டுக்குச் செல்கிறான். செல்லும் வழியில் மீண்டும் பொன்னி வந்து நின்று மறித்து 'நேர்காணல் எப்படி இருக்கு, நீ தெரிவு செய்யப்பட்டாயா' என்று கேட்கின்றாள். 'தன்னில் இவ்வளவு அக்கறை இவளுக்கு ஏன் என்பதை அவன் அந்த நேரம் அலசிக்கொள்ள விரும்பவில்லை' எல்லாம் வெற்றி, அடுத்த மாதம் முதலாம் நாள் வேலை என்று சொல்லிவிட்டான். 


அந்தத் தெருவால பலர் பயணிக்கின்ற அந்த வேளை கூட, அவள் அவனை இறுக அணைத்து; 'எனக்கு வாழ்வு கிடைத்துவிட்டது' என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள். அதன் பின்னர் தான், அவள் தன் மீது பற்று வைத்திருக்கிறாள் என்பதை உயிரனால் உணர முடிந்தது. சரி! சரி! தெருவில வீண் பேச்சு எதற்கு, 'வீட்டுக்கு வா போவோம்' என்று அழைக்கின்றான். அவளும் அவனது நிழல் போலத் தொடர்ந்தாள்.


வீட்டுக்கு சென்ற உயிரனுடன் அழையா விருந்தாளியாக பொன்னியும் வந்து சேர்ந்தாள். ராசம்மாவும் ராசையாவும் 'யார் இந்த பிள்ளை' என்று கேட்காமல் 'உனக்கு வேலை கிடைத்து விட்டதா' என்று கேட்கின்றனர். 'ஆம்! கிடைத்துவிட்டது, ஐம்பதினாயிரம் சம்பளம்' என்றான். அவனைத் தாயும் தகப்பனும் கட்டி அணைத்துக் கொண்டனர். 'தலைப் பிள்ளை தலை நிமிர்ந்து விட்டான்' என்று அவர்களும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.


அப்ப தான் உயிரனின் சகோதரர்கள் 'அண்ணாவுக்கு வாழ்த்துகள்' என்று கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது தான் 'யாரந்தப் புது ஆள்' என்று வினவினர். வழியில் என்னைப் பார்த்துப் பலர் பழித்தும் நெழித்தும் கொண்டிருக்கும் போது, சைவப் பள்ளிக்கூடத்தில படித்த இவள் மட்டும் வாழ்த்துத் தெரிவித்தாள். 'நான் தெரிவு செய்யப்பட்டதை அறிந்து கொள்ள' நேர்காணல் முடியும் வரை தெருவில காத்திருந்திருந்தாள். 'வேலை கிடைச்சிட்டுது' என்றதும் மகிழ்ச்சியடைந்தாள். 'வீட்டுக்கு வா, வீட்டில வந்து கதைக்கலாம்' எனக் கூட்டிக் கொண்டு வந்தனான் என விளக்கினான்.. அந்த வீட்டில் உயிரனுக்கு வேலை கிடைத்த கொண்டாட்டம் தொடர்கின்றது.

                                              (யாவும் கற்பனை)