Translate Tamil to any languages.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எல்லோருக்கும் 
இனிய 
புத்தாண்டு வாழ்த்துகள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பிள்ளைக்கு அப்பன் யாரு...

பெண் மருத்துவர்: பிள்ளைக்கு அப்பன் யாரு? அவரை உம்மோட சேர்த்து வைக்கிறேன். கருக்கலைப்புச் செய்வது நல்லதல்ல.

பெண் நோயாளி: மாதவிலக்கு வந்து முழுகி ஓரிரு நாட்களில் கூடினால் பிள்ளை பிறக்காது என்று பலரோட கூடினேன். மாதவிலக்கு வராமையால் இஙகை வந்தேன். இங்க "பிள்ளைக்கு அப்பன் யாரு?" என்று கேட்டால் நான் எங்கே போவேன்!

பெண் மருத்துவர்: ஆண்கள் ஓடி ஒளிஞ்சால், பெண்கள் தானே சுமை தாங்கிகள்! இதை முதல்ல படிச்சிருக்கணும். நாளெண்ணிக் கூடி, தாலி கட்டிய கணவருக்குக் கேடு வைக்கலாமோ? கருக்கலைப்பு உடலுக்குக் கேடு என்று தெரியாதா?

பெண் நோயாளி: கெட்ட எண்ணம் தந்த பட்ட கேட்டை மறைக்கவாவது கருக்கலைப்புச் செய்து விடுங்க... யாரும் ஒரு இளிச்சவாயன் அகப்பட்டால், நான் தலையை நீட்டிப் போடுவேனே!

தெருக்கடை உணவு

உண்டது நாறின மீனோ செத்த கோழியோ
நேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்
இன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்
மருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே
"கடையுணவு தந்த கேடு!"

ஞாயிற்றை நாடும் பூ

காலையில கிழக்கைப் பார்த்த பூ
மாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன?
ஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ
ஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்
"மஞ்சள் சூரியகாந்தி!"

கள்ளுக் குடியை நிறுத்த...


மாலை நேரம் தெருவில நம்மாளுகள் கூடி நாட்டு நடப்புப் பேசுவாங்க... அப்படி ஒரு மாலைப் பொழுதில் இப்படி ஒரு உரையாடல்:

வெடியர் : நம்மாளுகள் கள்ளுக் குடிப்பதை நிறுத்த நல்ல வழியைக்
காட்டுவீர்களா?

குண்டர் : இதென்ன ஒரு சின்ன வேலை. குடிப்பவர்களைச்
சிறையில் அடைத்தால் போச்சே!

வெடியர் : இதெல்லாம் அரசுக்குப் பெரிய செலவைத் தருமே!
ஆகையால், செலவில்லாத வழியைக் கூறுங்களேன்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுப் பறிக்கும் சீவல்
தொழிலாளர்களுக்கு இலவசமாகக் கணினி படிப்பித்து, மாற்றுத்
தொழிலை வழங்கினால் போச்சு.

வெடியர் : அப்ப குடிகார ஆட்கள் என்ன செய்வினம்?

குண்டர் : தென்னை, பனை ஏறிக் கள்ளுக் குடித்த பின்னர் "தொம்"
என்று விழுவினம்.....

கள்ளுக் குடியென்ன, அற்ககோல் கலந்த தண்ணீர்க் குடியென்ன சூழல் மாற்றத்தாலேயே கட்டுப்படுத்த முடியும்.

சனி, 28 டிசம்பர், 2013

ஆட்சியால இறங்கியும்...

ஒருவர் : ஆட்சியால இறங்கியும் ஆட்கள் வெளிநாடு சுற்றுகினமாம்...

மற்றவர் : ஆட்சியால இறங்கினாலும் சுருட்டிய பணம் அவங்கட மடியிலிருந்து இறங்கி முடியலையே!

ஆட்சிகள் மாறியும்...

ஒருவர் : ஆட்சிகள் மாறியும் தெருவெளி ஏழைகளுக்கு முன்னேற்றம் இல்லையே!

மற்றவர் : இலவசங்களுக்காகவும் பணத்துக்காகவும் வாக்குப் போட்டால் இப்படித்தான்.....

கட்சித் தாவல் இல்லாமலே...

ஒருவர் : எல்லோரும் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மாறும் போது, நீங்க மட்டும் தொடர்ந்து எதிர்கட்சியில் இருப்பது சரியா?

மற்றவர் : சரிதான்! ஆளும் கட்சி எது வந்தாலும் எமக்குக் கையூட்டுத் தராவிடில்,  நாம் எதிர்ப்போமல்ல...

ஆங்கிலம் பேசினால் தான் மதிப்பாங்களோ?

முதலாமாள் : தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவது சரியா?

இரண்டாமாள் : பிழை தான்...

முதலாமாள் : அப்ப ஏன் அப்படிப் பேசிறியள்?

இரண்டாமாள் : அப்படிப் பேசாட்டிலும் மதிக்கமாட்டாங்களே!

முதலாமாள் : அது பிழையே...

இரண்டாமாள் : எப்படிச் சொல்லுவியள்?

முதலாமாள் : நீங்க மக்களுக்கு நல்லதைச் செய்யாட்டி மதிக்கமாட்டாங்களே! பிறகேன் ஐயா, பிழையான ஆங்கிலம்?

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

நான் பாவலன் (கவிஞன்) இல்லையே!


பாபுனைதல் அல்லது கவிதையாக்குதல் என்பது இலக்கியத்தில் முக்கிய பங்கெடுக்கின்றது. இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அப்படியாயின் யாப்பறிந்து பாபுனைய வருமுன் பா/கவிதை இலக்கியத்தில் எவரும் இறங்கலாமே!

எனது முயற்சிகளும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. எழுத வேண்டுமென்ற விருப்பமே என்னை எழுத வைத்தது. எழுதத் தொடங்கிய பின்னரே, இலக்கணம் அறிந்து எழுதினால் எழுத்தின் தரம் உயருமென நம்பி இலக்கணம் படித்தேன்.

பா/கவிதை என்றால் என்ன? எழுத்தின் மூலம் ஆக்கிய படைப்பு பா/கவிதை எனலாம். அது எப்படியிருக்கும்? வாசிக்கச் சுகமளிக்கும்; மீள மீள நினைவில் வரும்; விரைவாய் வாசகனைச் சென்றடையும். அப்படியாயின் எப்படிப் பாபுனைவது அல்லது கவிதையாக்குவது?

இன்றைய ஊடகங்களில் "காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!" என எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.
நீ
என்னை
காதலிக்கத் தொடங்கியதுமே
என்னுள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி
நீ
என்னைப் பிரிந்ததுமே
அதுவும்
என்னை விட்டு
தொலைதூரத்திற்கு ஓடிப் போய்விட்டதே!

என்று, ஆணோ பெண்ணோ இக்கவிதையை எழுதியிருக்கலாம். இதில் இருபாலாருக்கும் பொதுவான ஓர் உண்மை (பிரிவுத் துயர்) வெளிப்படுகிறது.

கையில காசிருக்கும் வரை
கைகுலுக்கினாயே...
கையறுநிலை வந்ததுமே
கைநழுவி விட்டாயே...
கை கனத்தால் தான்
கைகுலுக்குவாய் என்றால்
நானே
கைகழுவிவிடுகிறேனே!

என்று, பணத்திற்காகக் காதலென்றால் வேண்டாம் என ஆணொருவர் தன்நிலையைச் சொல்கிறார்.

கண்ணை
இமை காப்பது போல
என்னை
நீ காப்பாய் என்றாய்
நம்மி
உன்னை நானும் அணைத்தேன்
வெம்பி அழுகிறேன்
என் நீண்ட வயிற்றைக் கண்டு
நீயும்
எங்கேயோ ஓடி ஒளிந்ததாலே!

என்று, பெண்ணொருத்தி கருவுற்றதும் ஓடியொளியும் ஆண்களைச் சுட்டுவதோடு, பெண்ணின் துயரையும் பெண்ணொருவர் எழுதுகிறார்.

உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை அப்படியே அழகாக, ஒழுங்காக அடுக்கி வைத்தாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

உண்டது நாறின மீனோ செத்த கோழியோ
நேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்
இன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்
மருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே
"கடையுணவு தந்த கேடு!"

என்று, ஒருவர் கடைச் சாப்பாட்டால் தனக்கு வந்த கேட்டைச் சுவையாகச் சொல்கிறார்.

காலையில கிழக்கைப் பார்த்த பூ
மாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன?
ஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ
ஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்
"மஞ்சள் சூரியகாந்தி!"

என்று, ஒருவர் தான் கண்ட காட்சியை அப்படியே அழகாகச் சொல்கிறார்.

உள்ளத்தில் எழும் எண்ணங்களை, விருப்பங்களை எளிமையாக எடுத்துச் சொன்னாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

நான்
நாட்டுத் தலைவரானால்
(பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ)
ஏழைகள் இல்லா
நாட்டை ஆக்குவேனே!
ஆனால்,
வாக்குப் போடவேனும்
நான்
நாலாளுகளை அணைக்க மறந்திட்டேனே!

என்று, ஒருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நல்வருவாய் தரும் தொழிலில்
நானிருந்தால் பாரும்
ஏழைகளுக்கு வாழ்வளிப்பேனே!
ஆனால்,
பிச்சை எடுக்கும் என் நிலை
எப்ப தான் மாறுமோ
எனக்கும் புரியுதில்லையே!

என்று, இன்னொருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண நல்ல பாவலர்கள் (கவிஞர்கள்) தேவையென்றே இத்தளத்தை ஆக்கி அதற்கான பதிவுகளைத் தருகின்றேன். எனவே, பாபுனைய விரும்பும் எல்லோரும் யாப்பிலக்கணத்திற்கு அஞ்சி பாபுனையாமல் / கவிதையாக்காமல் இருக்கலாமோ? மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் பார்த்தேனும் பாபுனைய / கவிதையாக்க முயன்று பாருங்களேன்.

உண்மையில் நான் ஒன்றும் பாவலனோ (கவிஞனோ) இல்லைக் காணும்! மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் போன்ற பதிவுகளையும் மூ.மேத்தா அவர்களின் கவிதைகளையும் படித்துத் தான் பாபுனைய / கவிதையாக்க முனைந்தேன். பின்னர் தான் யாப்பறிந்து பாபுனைய முயன்றேன்.

முடியுமென நினைத்தாலே
முடிந்த மாதிரித்தான்
பாபுனைய முடியுமென நினைத்தாலே
பாபுனைந்த மாதிரித்தான்
முயன்று பாருங்களேன்!

சனி, 21 டிசம்பர், 2013

காதல் நாடகம்


(நிறுவனமொன்றில் முதலாளியின் அறையினுள்...)
பெண்ணின் தந்தை : வணக்கம் ஐயா!
என்னுடைய மகள்
மணமுடிக்க மறுக்கிறாளையா!

ஆணின் தாய் : வணக்கம் ஐயா!
என்னுடைய மகனும்
மணமுடிக்கப் பின்னிற்கின்றான் ஐயா!

முதலாளி : உங்கட பிள்ளைகளுக்க
காதல் நோய் பிடிச்சிடுச்சோ?

ஆணின் தாய் : எத்தனையோ பெண்கள்
வரிசையிலே முண்டியடிக்க
உந்தாளின்ர மகளை
என்ர மகன் விரும்புவானே!

பெண்ணின் தந்தை : எந்தவொரு ஆணையும்
நிமிர்ந்தும் பார்க்காத என்ர மகள்
உந்தாளின்ர மகனை விரும்புவாளே!

முதலாளி : உங்கட பிள்ளை வளர்ப்பு
எனக்கு வேண்டாம்...
நிறுவனத்துக்குள்ளே
காதல் பண்ண இயலாது...
உங்கட வீடுகளில
நீங்கள் எதையாச்சும்
பண்ணியிருக்கலாமே!

பெண்ணின் தந்தை : வெளியில எவரையும்
விரும்பியிருக்கிறாளோ என்று
பணியாளர்களுக்குள்ளே கேட்டால்
தெரிய வருமெனத் தங்களை நாடினேன்!

ஆணின் தாய் : நானும்
அப்படித்தான் பாருங்கோ
உங்களை நாடினேன்!

முதலாளி
(பெண்ணைக் கூப்பிட்டு) : ஏன் காணும்
மணமுடிக்க மாட்டேனென்று
சினுங்கிறியாமே!

பெண் : மணமுடித்தால்
இளமையும் அழகும்
கெட்டிடுமேயென அஞ்சி
காலம் தள்ளுகிறேன் ஐயா!

ஆணின் தாய்
(தனக்குள்ளே) : என்னையும் என் வீட்டையும்
நன்றாகப் பேணக் கூடியவள் போல...

முதலாளி
(ஆணைக் கூப்பிட்டு) : என்னடாப்பா
மணமுடிக்க மாட்டேனென்று
காலம் கடத்துறியாமே!

ஆண் : நாலு காசு
சேமிச்சு வைச்சுப்போட்டு
இறங்கலாமென்றுதான் ஐயா!

பெண்ணின் தந்தை
(தனக்குள்ளே) : கண்ணை இமை காப்பது போல
என்ர மகளையும்
பார்க்கக் கூடியவன் போல...

முதலாளி
(பெற்றவர்களைப் பார்த்து) :தங்கமான
பிள்ளைகளைப் பெத்துப்போட்டு
என்னையும்
விசாரிக்க வைச்சுப்போட்டு
நாடகமாடுறியளே!

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும் : ஐயா!
எங்களை மன்னிக்கவும்
இந்தக் காலப் பிள்ளைகள்
பணி செய்யுமிடங்களிலே
பலரோட பழகேக்க
யாரையேனும்
விரும்பியிருக்கலாமென
அஞ்சி வந்தோம்...

முதலாளி
(பெற்றவர்களைப் பார்த்து) : நடந்து முடிந்தது
உள்ளத்தை விட்டு அகலாதே...
அறியாமல் தெரியாமல்
பிள்ளைகளையும் விசாரிச்சாச்சு...
என் மீதும்
அவங்கள் ஐயப்படலாம்...
அதனால,
நானே
அவங்களோட பேசி
மணமுடிக்க வைக்கிறன்...

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும் : அவங்க விரும்பினால்
செய்து வையுங்கோ
ஐயா!

பெண்ணின் தந்தையும்
ஆணின் தாயும்
(தமக்குள்ளே) : எப்படியோ
திருமணம்
ஒப்பேறினால் போதுமே!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
நேரிலே கூப்பிட்டு) : 25 - 35 இற்குள்ளே
மணமுடித்தால் தான்
நலமான வாழ்வமையும்
28 இல கட்டினதால
இன்றைக்கு - எனக்கு
எட்டுப் பிள்ளைகளப்பா
பெற்றவர்கள் கிழடானால்
பயனில்லைப் பாரும்
மறுப்பின்றி
மணமுடிக்க "ஓம்" போடுங்கோ!

பெண் (தனக்குள்ளே) : ஊதுகுழல் ஊதியோ
கண்ணெதிரே கண்ணடித்தோ
குறுணிக் கல்லெறிந்தோ
தங்க நகை மின்ன
உந்துருளியை(motor bike) நிறுத்தியோ
உதையுருளியில்(bicycle) பின் தொடர்ந்தோ
திரைப்பட நடிகர்கள் போல
துரத்திப் பிடித்தோ
இன்னும் இன்னும்
எத்தனையோ வழிகளில்
முயற்சி எடுத்தேனும்
"என்னைக் காதலி" என்று
கேட்காத நண்பரே
ஒரே பணித்தளத்தில்
தூரத் தூரப் பணி செய்தும்
உணவுண்ணும் அரங்கில்
சந்திக்கின்ற போதும்
பழகிய அன்பும்
காட்டிய பண்பாடும்
"உன்னைக் காதலி" என்று
என்னைத் துாண்டுகிறதே!

ஆண் (தனக்குள்ளே) : அழகு நடை காட்டியோ
புதிய புதிய ஆடைகள் அணிந்து
அடிக்கடி ஆடியாடி வந்தோ
ஐயம்(doubt) கேட்பது போல
கதைத்துப் பேச நாடியோ
தாளில் ஏவுகணை(rocket) விட்டோ
ஈயும் மென் நாரால் (rubber band)
பூவரச இலைக் காம்பை
மடித்து எய்து விட்டோ
அடிக்கடி அருகே வந்து
மார்பில் கை வைத்துக் காட்டியோ
போகும் வழியில் போவது போல
சற்று இடுப்பாலே இடித்துப் போட்டு
"மன்னிக்கவும்" என்று சொல்லிப் போயோ
மதிய உணவை விட்டிட்டு
அப்படியே வந்துட்டேன் - அந்த
அன்னம் கடையில ஒரு பொதி
எடுத்துத் தாருமேனெனக் கெஞ்சியோ
இன்னும் இன்னும்
எத்தனையோ வழிகளில்
முயற்சி எடுத்தேனும்
என்னுள்ளத் தாழ்ப்பாளை
திறக்க முயற்சிக்காமல்
பண்பாகத் தூர நின்றே
இனிமையாகப் பேசுங்கிளியே
உன்னை ஏற்கத்தான்
உள்ளம் விரும்புகிறதே!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
பார்த்து) : ஊமையாகத் தரையைப் பார்த்து
கால் விரல்களை எண்ணுறியளோ...
ஓமோ இல்லையோ
உங்கட விருப்பத்தைக் கூறுங்களேன்?

ஆண் (பெண்ணைப்
பார்த்து) : உங்களுக்கு விருப்பம் என்றால்
எனக்கு ஓம்!

பெண் (ஆணைப்
பார்த்து) : உங்களுக்கு விருப்பம் என்றால்
எனக்கு ஓம்!

ஆணும் பெண்ணும்
(முதலாளியைப் பார்த்து) : பெற்றவர்களுக்கு விருப்பம் என்றால்
எங்களுக்கும் ஓம்!

முதலாளி
(ஆணையும் பெண்ணையும்
பார்த்து) : வருகிற மாதம் முதலாம் நாள்
என்னுடைய செலவிலே
உங்களுக்குத் திருமணம்!
ஆனால்,
காதலிக்காமல் திருமணமா?

ஆணும் பெண்ணும்
(முதலாளியைப் பார்த்து) : திருமணமாகிய பின் மலரும்
காதலே
மகிழ்வைத் தருமென
பாவரசர் கண்ணதாசன்
சொல்லி வைச்சிருக்கிறாரே!

(முதலாளி எல்லோருக்கும் கற்கண்டு வழங்கி மகிழவும்
முதலாளியின் அறையிலிருந்து எல்லோரும் வெளியேறினர்...)

ஏட்டிக்குப் போட்டி - 02

குருட்டு முத்தம் குடுத்துக் காட்டுறாள்
கிட்ட நெருங்கினால் கையைக் குலுக்கிறாள்
விடுதிக்கு வாங்க என்று இழுக்கிறாள்
உண்டு முடிய ஓடியே மறையிறாள்
"காளையவன் கடையிலே உழுந்தாட்டுறான்..."

ஏளையவள் எப்பன் அவனை நம்பினாள்
காளையவன் அவளிடம் காதல் செய்தான்
வாழ்நாள் துணையென அவளுமொத்து உழைத்தாள்
நாட்களோட அவளுடலும் குழந்தையைச் சுமக்கிறதே
"தேடினால் ஐந்து பிள்ளைக்கு அப்பனவன்..."

ஏட்டிக்குப் போட்டி - 01

ஏழடி மன்னன் காலடி வைத்தானங்கே
மூக்குமுட்ட நல்லாய்க் குடித்தும் இருப்பான்
வெளியே வந்ததும் வழிநடுவே வீழ்ந்தான்
உடைநழுவிக் குடிமணமும் காற்றோடு பறந்தன
"தமிழர் பண்பாடும் காற்றிலே..."

ஆறடி உயரம் சேற்று நிறமாள்
பூச்சுத் தண்ணீர் பூசியதால் நாறுமுடல்
அணிந்த ஆடையோ அரையும் குறையும்
கேட்டுப் பாரேன் தான் தமிழிச்சியாம்
"தமிழர் பண்பாடும் காற்றிலே..."

அரசே கேள் – 04

மகாத்மா காந்தித் தாத்தா
உள்நாட்டு உற்பத்திக்கு உயிரூட்டவே
உள்ளூர் கைத்தறி (கதராடை) ஆடை
அணிந்ததைப் பார்த்தாவது
ஆட்சிக்கு வரும் நம்மாளுகள்
வெளிநாட்டு
இறக்குமதிகளைக் குறைத்தலாவது
நம் நாட்டு
உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கலாமென
ஆச்சி, அப்பு சொல்லுறது சரியே!
மனித வளங்களை
முறையாகப் பயன்படுத்தாமையால்
மூளைசாலிகள் வெளியேறவோ
பொருண்மிய வளங்களைப் பேண
நம்மாளுகளை விடாமையால்
வெளிநாட்டார் உறிஞ்சிக் கொள்ளவோ
இடமளிக்கின்ற
ஒழுங்காக நாட்டை
ஆளமுடியாத முட்டாள்களால்
நாடும் நாட்டு மக்களும்
பிச்சைக்காரர்களாக மாறுவதாக
ஆச்சி, அப்பு சொல்லுவதை
நினைவூட்ட முனைகிறேன்!
ஓ! அரசே!
அ, ஆ அதற்கு மேலும் படித்த
பழம் தின்று கொட்டை போட்ட
பட்டறிவிலும் பெரிய
ஆச்சி, அப்பு சொற்படி
மனித வளங்கள்
நாட்டைப் பேணவும்
பொருண்மிய வளங்கள்
நாட்டு மக்கள் பயனீட்டவும்
இடமளிக்காமல்
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

அரசே கேள் - 03

படிச்ச தலைகள்
தெரு வழியே அலைவதேன்?
பெருந் தலைகள் சிலர்
சிலருக்கு வேலை வழங்குவதாலே!
குற்றவாளி தெரு வழியே அலைய
சுற்றவாளி சிறையில் வாடுவதேன்?
கையூட்டு வேண்டி
காவற்றுறையும் சட்டவாளர்களும்
உழைத்துப் பிழைப்பதனாலே!
எல்லோரும் குடும்பப் படமென
பொழுது போக்குக்காக
திரைப்படம் பார்க்கப் போனால்
படமாளிகைக்காரர்கள்
நீலப்படம் போட்டுக் காட்ட
தகாத உறவில் ஈடுபட்டதாக
இளசுகள்
காவற்றுறையில் பிடிபடுவதேன்?
படமாளிகைகளை
அரசு கண்காணிக்கத் தவறுவதாலே!
ஒரு கோடியில் விலைப் பெண்கள் அறை
மறு கோடியில் புகைத்தல், குடித்தல் அறை
எதிர் முன்னே கூத்தாடும் அறை
வெளியேறும் வழியில் தள்ளாடும்
நம்மாளுகளைப் பார்க்கக்கூடியதாக
குட்டித் தேனீர்க்கடை தொட்டு
5 நட்சத்திர விடுதிகள் வரை
அமைத்திருப்பதேன்?
வருவாயை நோக்காகக் கொண்டு
அரசு அனுமதி வழங்கியதாலே!
மதுக் கடைக்கும்
விலைப் பெண்கள் விடுதிக்கும்
சென்றவர்களுக்கு வாழ்வழிக்கவா
கன்னிப் பெண்கள் கருக் கலைக்கவா
போலி மருத்துவர்களும்
குட்டிக் குட்டி மருத்துவ நிலையங்களும்
தெரு வழியே மலிந்து கிடக்கிறது?
சாகத் துடிக்கும் மக்களைப் பாராமல்
வருவாயிலே குறியாயிருக்கும் அரசாலே!
ஓ! அரசே!
நாடு சீர்கெட்டு
நாட்டு மக்கள் சாக
உன் வருவாயைப் பார்த்து
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

அரசே கேள் - 02

அப்பா, அம்மா
இனிப்பு வேண்டித் தந்து
அழாமல் பள்ளிக்குப் போய்ப் படியென
முன்னர் முன்பள்ளிக்கு அனுப்பினர்!
வாய்க்குள் உமிந்த இனிப்பை
பக்கத்துத் தோழி பறித்து
தன் வாய்க்குள் போட்டு உமிய
எங்கள் படிப்பும் முன்னேறியது!
ஆளும் வளர அறிவும் வளர
முன்பள்ளியால
பெரிய பள்ளிகளுக்குப் போக
பல இடத்துப் பல நட்புகள்
ஒன்று சேர்ந்த போது தான்
ஒழுக்கச் சீர்கேடு என்றால்
என்னவென்று
கற்றுத்தேற முடிந்தது!
ஒருவன்
உடன் பறித்த ஆண் பனைக் கள்ளை
குளிர் நீர்க் குவளையில் கொண்டு வருவான்...
அடுத்தொருவன்
பொன்னிலைச் சுருட்டுகளுடன் வருவான்...
இன்னொருவன்
ஆடைகளைக் களைந்தவர்களின்(நிர்வாணிகளின்)
படங்களுடன் வருவான்...
வகுப்புக்கு ஆசிரியர் வராவிடில்
இவர்களின் நிகழ்வுகள் தொடரும்
இவர்களின் தொல்லை தாங்காமல்
சிலர்
பள்ளி மர நிழலின் கீழ்
படிக்கவோ காதலிக்கவோ முயல்வர்...
பள்ளிக்குப் போகேக்கையும்
வீட்டுக்குத் திரும்பேக்கையும்
இருபாலாரின் தொல்லைகள் ஏராளம்...
இவையெல்லாம்
பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கண்டிராத வகையில் நடந்தேறும்!
ஓ! அரசே!
புகைத்தல், குடிப் பொருள்,
ஆடைகளற்றவர் படங்கள் விற்பனைக்கும்
விலைப் பெண்கள் தெருவில் நடமாடவும்
அனுமதிப் பத்திரம் வழங்கினால்
மக்கள் சீர்கெட்டு உன்னை உதைக்க
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

அரசே கேள் - 01

அம்மாவின் வயிற்றை உதைத்து உதைத்து
ஒருவாறு
அம்மா பிறந்த மண்ணில் தவழ்ந்தேன்!
அன்பு எனும் தேன் கலந்து
அறிவு எனும் செந்நீர் கலந்து
பாலூட்டி வளர்த்த
அம்மாவின் கைகளை உதறித் தள்ளி
நடக்கத் தொடங்கியதும்
ஒழுக்கம் எனும் பாடம் புகட்டி
கைக்குள் அணைத்து அன்பு காட்டி
அப்பாவும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்!
அந்தப் பள்ளி, இந்தப் பள்ளி, எந்தப் பள்ளி
எதுவானாலும்
ஆசிரியர்கள் ஊட்டிய அறிவை
நாள்தோறும் மீட்டு மீட்டு
தேர்வு எழுதிச் சித்தியும் அடைந்தாச்சு!
சான்றிதழ்க் கட்டும் கையுமாக
நாடெங்கும் நடைபோட்டும்
வேலை எதுவும் கைக்கு எட்டவில்லையே!
ஓ! அரசே!
வேலையில்லாதோர் நாட்டில் மலிந்தால்
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

இந்திய தமிழக மக்களிடமிருந்து...

இலங்கை அரசு
புலிகளை அழிக்கப் போர் செய்தது...
ஆனால்,
தமிழ் மக்கள் மீது பற்றுக் காட்டவில்லை!
தொண்டு நிறுவனங்களின் உதவிதான்
தமிழ் மக்கள்
ஒரு வேளையாவது உணவுண்ண
வழிகாட்டியது!
உணவு சமைக்கும் போது
கை தேடும் பொருள்
உள்ள உறையில்(பையில்)
"இந்திய தமிழக மக்களிடமிருந்து..." என்று
எழுதப்பட்டிருந்தது!
போரில் பாதிப்புற்ற
ஒவ்வொரு
இலங்கைத் தமிழர் உள்ளங்களிலும்
இந்திய தமிழக மக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

இந்திய தமிழக சென்னையில்...

வானுயர
மாடிவீடுகள் எழும்புகிறது - அங்கு
வாழ்வோரின்
வாழ்க்கைத் தரமும் உயருகிறது - ஆனால்
தெருக்களில்
ஒன்றரையறைக் குடிசைகளும் இருக்கிறது - அங்கு
வாழ்வோரின் தரமுயர
உதவுவார் யாருமில்லையே!
கீழ்தட்டு மக்களுயர வழியே இல்லையா?

கத்திரியை விரட்ட

2011 சித்திரை உச்சந் தலை பிளக்கும் வெயில் காலத்தில நான் சென்னைக்குப் போயிருந்தேன். அப்பதான் ஈழத்தில 'காண்டாவனம்' என்று சொல்லப்படும் கடும் வெயிலை; இந்தியாவில, தமிழ்நாட்டில 'கத்திரி' வெயில் என்கிறாங்க என்று படித்தேன். உடனே இப்படி ஒரு காட்சி உரையாடலை எழுதினேன்.

வகுப்பறையில:
ஆசிரியர் : கத்திரியை விரட்ட என்ன செய்யலாம் பிள்ளைகளே?

மாணவன் : சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலை இருபக்கத்திலும் உள்ளது போல நிழல் தரும் மரங்களை நாட்டப் போராட வேண்டும்.

ஆசிரியர் : நாடெங்கிலுமா?

மாணவன் : உலகெங்கிலுமையா

தெருவெளியில:
மாணவி : 'கத்திரி' வெயில் என்கிறாங்க... தலையை பிளக்கும் வெயில் என்கிறாங்க... ஆனால், ஆண்கள் தான் அதிகம் தெருவில உலாவுறாங்களே...

மாணவன் : ஆண்களின் பார்வைக்கு மட்டும் பெண்களின் கண்களில் குளிர்மை தெரியுமாம். பெண்களைப் பார்த்தாலே 'கத்திரி' வெயில் சுடாதாம்.

மாணவி : 'கத்திரி' வெயில் சுடாதாமா? தெருவால போறதை மறந்து பெண்களைப் பார்த்து அடிபட்டுச் சாவது ஆண்களே!

உண்மையில, இப்படி நாடகம் போட்டுக் 'கத்திரி' வெயிலை விரட்ட முடியாதுங்க... முடிந்தால் மரநடுகை இயக்கம் தொடங்கலாமுங்க...

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.


நம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க: https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ 

நம்மாளுகள் பிறமொழிப் பழக்கத்திலிருந்து விடுபட்டுத் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வசதியாக ஆங்கில மொழிமூல மின்நூல்களைப் பதிவிறக்க: https://www.box.com/s/ih2aup1erqt3dvs70a07 

உங்கள் யாழ்பாவாணன் ஆக்கிய பதிவுகள் பல இணையப்பக்கங்களில் வெளிவந்துள்ளன. அவர் தற்போது ஐந்து வலைப்பூக்களை நடாத்துகிறார். எதிர்காலத்தில் அவர் வெளியிடவுள்ள தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க: https://www.box.com/s/exn2yefonnvoltly671v 

உங்கள் யாழ்பாவாணனும் கணினி சார் துறை வல்லுநராகையால், அவரது தெரிவில் திரட்டப்பட்ட கணினி சார் ஆங்கில மொழிமூல மின்நூல்களைப் பதிவிறக்க: http://sdrv.ms/1cBgSnf 

உங்கள் யாழ்பாவாணனின் தேடலில் அகப்பட்ட பல்வகை மின்நூல்களைப் பதிவிறக்க: http://sdrv.ms/1cBgLbn 

உறவுகளே! பயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வந்தால் போதாது; உங்கள் நண்பர்களுக்கும் இதனைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

திங்கள், 2 டிசம்பர், 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 03

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், வெண்பா இலக்கணம், வெண்பா வகை, அகவற்பா எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

எல்லாம் பொழுதுபோக்கிற்காக...


முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க கண்டவங்களோட கூடுறீங்க?

இரண்டாம் ஆள் : எல்லாம் பொழுதுபோக்கிற்காகத் தான்...

(சில மாதங்களின் பின்)

முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க மருந்துங் கையுமாக அலையிறியள்?

இரண்டாம் ஆள் : உயிர் கொல்லி (AIDS) நோய் உடலில ஒட்டியதாலே...

முதலாம் ஆள் : இப்ப பொழுதுபோக்கு எப்படி இருக்குங்க?

ஐயோ! என்னை மன்னிக்கவும்!


இலக்குவன் தன் வீட்டு வாசலடியில் நாளேடு படிக்கையில் தரகர் ஒருவர் வந்தார். இலக்குவனுக்கென்ன நல்ல உழைப்பு, நல்ல வருவாய், பிழைப்புக்குக் குறைவில்லை.

தரகர் : என்ன காணும் உங்கள் (ஜாதகக்) குறிப்பைத் தாருங்கோவேன்... நல்ல வசதியான இடமொன்று வந்திருக்கு. விட்டால் பறந்து போய்விடும்.

இலக்குவன் : கண்ணகியோ சீதையோ இஞ்ச வாங்கோவேன்...

கண்ணகியும் சீதையும் : என்னங்க இப்படி வேகமாய் கூப்பிடுறியள்...

இலக்குவன் : நல்ல இடமாம்... விட்டால் பறந்திடுமாம் என்று என்ர குறிப்பையெல்லோ தரகர் கேட்கிறாருங்கோ...

கண்ணகியும் சீதையும் : பெரியவரே கொஞ்சம் எழும்பும் காணும்!

தரகர் : என்னங்க உடனேயே எழும்பச் சொல்லிப்போட்டீங்க...

கண்ணகியும் சீதையும் : முன்னைப் பின்னை ஊருக்குள்ளே இவரைப்பற்றி அறிஞ்சனீரே?

தரகர் : ஆளுக்கென்ன குறை... மாதம் அறுபது ஆயிரங்கள் உழைக்கிறாராம்... வெற்றிலைப் பாக்கு, புகையிலை, குடிவெறி, காதல், கள்ளப் பெண்டிர் ஏதுமில்லாத் தங்கக்கட்டி!

கண்ணகியும் சீதையும் : எங்களைப் பற்றி அறிஞ்சீரோ?

தரகர் : எனக்குத் தெரியாமல் போச்சே... நீங்க யாருங்க...

கண்ணகியும் சீதையும் : உங்கட தங்கக்கட்டியைக் கேட்டிருக்கலாமே...

தரகர் : அதைத் தான் பிள்ளையள், நானும் மறந்திட்டேன்!

கண்ணகியும் சீதையும் : இனியாவது நினவில வைச்சிருங்கோ... நாங்க தான் இந்தத் தங்கக்கட்டியின்ர இரண்டு பெண்டாட்டிகள்... இவருக்கு மூன்றாம் பெண்டாட்டி வேணாமுங்க...

தரகர் : ஐயோ! என்னை மன்னிக்கவும்! இனிமேல் இந்தப் பக்கம் தலை காட்ட மாட்டேனுங்க...

"உதுக்குத் தான் பாருங்கோ, ஆளமறிந்து காலை வைக்கவேணும்" என்று சொல்லியபடி குதிக்கால் பிடரியில் பட தரகர் ஓட்டம் பிடிக்கிறார்.

கல்வி


கல்வி என்பது
சான்றுத் தாள்களின்
எண்ணிக்கையில் அல்ல...
கல்வி என்பது
பெயருக்கு முன்னோ பின்னோ போடும்
தகுதிகளின் (அடைமொழி, பட்டம்)
எண்ணிக்கையில் அல்ல...
கல்வி என்பது
குறித்த கல்வியைப் பெற்று
பயனடைந்தவர்களின் எண்ணிக்கையிலேயே
தங்கியிருப்பதை மறவாதீர்கள்!

கோட்பாடுகள் (தத்துவங்கள்)


தேவை வரும் போது தான்
மனிதன் தன் மூளைக்கே
வேலை கொடுக்கின்றான்!
பிரிவு வந்த பின்னர் தான்
மனிதன்
பிரிந்தவர் செய்த நன்மைகளைக் கூறி
அழுது துன்பப்படுகிறான்!
வயிறு கடிக்கையில் தான்
மனிதன்
தொழிலின் அருமை பற்றி
அறிந்து கொள்கின்றான்!
தொழிலைத் தேடும் போது தான்
மனிதன்
தான் கற்க மறந்ததை
நினைவூட்டிக் கற்கின்றான்!
ஊரார்
ஒதுக்கி விட்ட போது தான்
மனிதன்
தன் ஒழுக்கத்தை
கொஞ்சம் சரிபார்க்கின்றான்!
நீங்கள்
எப்படிப் போய் எங்கு வந்தாலும்
தவறு செய்த பின்னரோ
பாதிப்பு அடைந்த பின்னரோ
தானே தெளிவடைகின்றீர்கள்!
நீங்கள்
எதிர்பார்க்கும் வண்ணங்களில்
உங்கள் எண்ணங்களை
இப்படி இருந்தால்
எப்படி இருக்குமெனச் சரிபாருங்களேன்!
கோட்பாடுகள்(தத்துவங்கள்)
ஒரு போதும் பொய்ப்பதில்லையே!

சம்பள நாளன்று...


அழகான அந்த ஊரில் அறிஞர் வாசிகசாலை அருகே நாற்சந்தி. அச்சந்தியில் இளசுகள் கூடிக் கூத்தடிப்பாங்க... அவங்கள் போட்ட நாடகமிது.

ஒருவர் : உந்த வீடென்ன செத்த வீடோ?
                     அங்கே ஆட்களாயிருக்கே...

மற்றவர் : அவங்கட வீட்டிலையா...
                        இன்றைக்குச் சம்பள நாளெல்லோ...
                        கடன் கொடுத்தவங்க
                        காசு பறிக்க வந்து நிக்கிறாங்கோ...


மூன்றாமாள் : சம்பளம் எடுக்கிறதும் கடன்காரரைச் சமாளிக்கிறதும் மாதமாதம் வந்துவிடுமே...

நான்காமாள் : கடன்காரரும் சம்பள நாளும் இப்படித்தான்

இப்படித்தான் சந்திக்குச் சந்தி கூத்தடிப்பவங்க... தங்கட எதிர்காலத்தையும் சிந்தித்தால் கோடி நன்மைகள் கிட்டுமே!

புதன், 27 நவம்பர், 2013

அணுகுண்டுப் பேச்சாளர்

ஒருவர் : ஏனங்க அவரை அணுகுண்டுப் பேச்சாளர் என்கிறாங்க?

மற்றவர் : உனக்கு இதுகூடத் தெரியாதா?
"எல்லோருக்கும் வணக்கம்!
என்னை விட அடுத்தவர் சிறப்பாகப் பேசுவார்.
நன்றி கூறி விடை பெறுகின்றேன்." என்று பேசி முடிப்பதாலே...

அடிக்காமையால் படித்தேன்

சின்ன அகவையிலே
அம்மா தந்த அன்பால
தவறுகள் பல செய்திருப்பேன்...
பெரிய பொடியன் - எப்பனும்
சொல்லுக் கேக்கிறானில்லை என்று
அப்பாவிடம் முறையிடுவார்...
ஆனால்,
அடித்திருக்க மாட்டார்!
சொல்லியும் திருந்தாதோர்
நெருப்புக் கொள்ளியால
சுட்டும் திருந்தாதோர்
ஒரு நேரம்
பட்டுக் கெட்டுத் திருந்துவினம் என்று
சொன்னாலும் கூட
அடித்திருக்க மாட்டார்!
பட்டப்படிப்புப் படிகாட்டிலும்
உயர்தரம் வரை படித்தாச்சென
உழைப்பைத் தேடினால்
தகுதி காணாதென
வேலை கொள்வோர் தட்டிக்கழித்தனர்!
அம்மா அன்பாகச் சொல்லியும்
அப்பா அறிவாகச் சொல்லியும்
நான் மட்டும்
காதில போடாததால
வேலையும் கிடைக்காமையால
என் வயிற்றில் அடி விழுந்தது!
வயிற்றுப் பாட்டுக்கு
உழைக்க வேண்டுமெனக் கருதியே
அம்மா, அப்பா
எனக்கு அடிக்காமையே
என் வயிற்றில் அடி விழ
நானே
கணினி நுட்பம் படித்தே
உழைத்துப் பிழைக்கின்றேன்!



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): "வாழ்க்கைப் பாடத்தை அனுபவமே கற்றுத்தருகிறது" என்ற தங்கள் அனுபவக் கருத்து அருமை.

என் பதில்: நன்றிகள்!
நண்பர் சரவணமுத்து: அருமை!

என் பதில்: நன்றி.
நண்பர் மாலதி: நல்ல கருத்து.
என் பதில்: நன்றி
நண்பர் புலவர் சா.இராமாநுசம்:
தானாகக் கனிந்தால் தான் பழம் இனிக்கும்
தாங்களும் அப்படித் தான்
தேனான கருத்தையே நன்கே முடிவில்
தெரிவித்து உள்ளீர் இங்கே
என் பதில்:
"தானாகக் கனிந்தால் தான்
பழம் இனிக்கும்" என்பதை
ஏற்றுக் கொள்கின்றேன்!
பழம் தரும் மரத்துக்கு
நீர் ஊற்றுமாப் போல
நம்ம பிஞ்சுகளுக்கும்
பெற்றவர்கள் வழிகாட்ட வேண்டுமே!
பிஞ்சுகளும் அஞ்சாமல்
முயற்சி எடுக்க வேண்டுமே!

ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...

மாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே!

ஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...


குறிப்பு:- 2011 வைகாசி மாதம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில்
"சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளார்." என்ற செய்தியைப் படித்த பின் "ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது?" என்று சிந்தித்த போது இப்பதிவை எழுத முடிந்தது.

ஊருக்கு மதியுரை உனக்கில்லையடி


ஓர் ஊரில சிறந்த சைவ சமயப் பேச்சாளர் இருந்தார். "அவருடைய
பேச்சை நேரில பார்த்துப் பேசும் போது கேட்க வேண்டும்" என்பது
அவரது மனைவிக்கு நெடுநாள் விருப்பம். அவளது வீட்டில் இருந்து
சற்றுத் தூரத்தில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அங்கு தான்,
இன்று தனது கணவன் பேசப் போகிறாரென அறிந்த அவள், களவாகப் போய் தனது விருப்பத்தை நிறைவேற்ற முனைந்தாள்.

கொடி மரத்துக்கான வழிபாடு(பூசை) முடியத்தான், பிள்ளையார் கோவிலில சமயப் பேச்சுத் தொடங்கும். ஒலிபெருக்கியில் சொல்லப்படுவதை கேட்டுக் கொண்டே சோறு சமைத்து முடித்தாள். வழிபாடு முடியப் போவதை உணர்ந்து, கறிகளைப் பிறகு வந்து வைக்கலாமென முடிவு எடுத்துக் கோயிலுக்குப் புறப்பட்டாள். சிறிது நேரத்தில் பேச்சாளரின் சமயப் பேச்சுத் தொடங்கியது.

"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை" யில தொடங்கி "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என முடித்து
கோவிலுக்கு வருவோர் நோன்பு(விரதம்) இருந்து பிள்ளையாரை
வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென்றார். முடியாதோர்
சைவ உணவை மட்டும் உண்ணுங்கள். முட்டை, மீன், இறைச்சி
உண்பவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டாம். பச்சை இலை,
காய் கறி சமைத்து உண்பதோடு, இறைவழிபாட்டையும் மேற்கொண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்றார். சைவமாக இருந்து
கொண்டு பிள்ளையாரை வழிபாட்டால் நன்மைகள் உண்டெனப்
பேச்சைத் தொடர்ந்தார்.

பேச்சாளரின் மனைவி போதுமென வீடு திரும்பி மைசூர் பருப்பு,
உருளைக் கிழங்கு, கத்தரி, வெண்டி என நாலு கறிகளும் வாழைக்காய், பப்படம் பொரியலும் வைத்து முடியப் பேச்சாளரும்
வீடு வந்து சேர்ந்தார். சரி, சரி சாப்பாட்டைப் போடுமெனக் கணவன்
குந்தவும் பெரிய தலை வாழையிலையைப் போட்டு சோறு,
கறிகளை வைத்து முடித்தாள். பருப்புக்கு மேலே இதயம் நல்லெண்ணை விடும் போது தான் "ஏனடி கோழிக் கறி வைக்கேல்லை" என்றார் பேச்சாளர்.

உங்கட பேச்சைப் பார்க்கணும் கேட்கணும் என்று இன்றைக்குப்
பிள்ளையார் கோவிலில வந்து ஒளிந்திருந்து பார்த்துக் கேட்டேன்.
அங்கே தானே "நோன்பிருங்கள், இல்லாட்டிச் சைவமாயிருங்கள்
அப்ப தான் பிள்ளையார் அருள் தருவார்" என்று சொன்னியள்.
அதனால வந்த உடனேயே "பிடித்து வைத்திருந்த கோழியைத்
திறந்து விட்டிட்டு" பதினாறு நாள் பிள்ளையார் கோவில் திருவிழா
முடியக் காய்ச்சலாமென, சைவக் கறி, சோறு வைத்தேன். இதில்
"என்ன பிழையிருக்கு?" என்றாள் பேச்சாளரின் மனைவி.

"ஊருக்கு மதியுரை(உபதேசம், ஆலோசனை) உனக்கில்லையடி! வீட்டில சொன்னதைச் செய்ய வேண்டியது தானேடி" என்று முழங்கினார் பேச்சாளர். "உங்களைப் போல பேச்சாளர்கள் இப்படி நடந்தால், உங்கட பேச்சைக் கேட்டவர்கள் என்ன செய்வார்கள்" என்றும் "உன்னைத் திருத்திக் கொள், மக்களாயம்(சமூகம்) தானாகவே திருந்தும்" என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதையும் கூறி "வாய்ப் பேச்சை நிறுத்திப் போட்டுச் சாப்பிடடா, இல்லாட்டி வேற பெண்டாட்டியைப் பாரடா" என்று பேச்சாளரின் மனைவியும் உறைப்பாகத் திட்டித் தீர்க்கவும் அங்கு அமைதி நிலவியது.
(எல்லாம் புனைவு - யாவும் கற்பனை)

எங்கேயங்கோ ஓடுறியள்...?

ஒருவர் : துள்ளித் துள்ளி எங்கேயங்கோ ஓடுறியள்?

மற்றவர் : கால் கோதிக்க, தலை வெடிக்க வெயிலுக்கு அஞ்சி நிழலை நாடி போகேக்க எவனோ ஒருவன் பின்னால கத்துறான்டா...

மரம் : மரங்களைத் தறிக்காமல் இருந்திருந்தால், இப்படியொரு நிலைமை உங்களுக்கு வருமே?



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:

"மரம் வெட்டிகளுக்கு இது
ஒரு மரண வெட்டு!" என்று புலவர் இராமாநுசம் அவர்கள் கருத்துக் கூறினார்.

"வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
போட்டு உடைத்து விட்டியளே..." என்று நான் பதில் கூறினேன்.

"வீதியை (ரோடை) அகலப்படுத்தும் போது இரு பக்கத்திலும் இருக்கும் நன்கு வளர்ந்த மரங்களை தகுந்த உபகரண‌ங்களுடன் பெயர்த்து எடுத்து வேறிடத்தில் நட்டுப் பத்து வருடங்கள் வரை பாதுகாக்க முடியும் என்று கேள்விபட்டிருக்கிறேன். நம் நாட்டில் ஏன் அது போலச் செய்வதில்லை?" என்று நண்பர் ஸுகிரி அவர்கள் கருத்துக் கூறினார்.

"நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையானது. ஆயினும், இவற்றுடன் தொடர்புடையவர்கள் இதில் அக்கறை காட்ட வேண்டும்." என்று நான் பதில் கூறினேன்.

நகைச்சுவையான வழக்குகள்

இலங்கையில் ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் சட்டவாளர் பலராலும்
அறியப்பட்ட ஒருவராவார். இவரின் திறமையை அறிந்து பிரிட்டிஸ்
மகாராணி கூட தனது வழக்குக் பேச அழைத்திருந்தாராம் என்றால்
இவரது புலமையை எப்படி நான் மதிப்பிடுவேன். இவர்
வழக்காடுவதில் புலி வீரன். இவர் எடுத்தாளும் எந்த வழக்கும்
தோற்றதில்லையாம்.
இலங்கை அரசு ஒருமுறை தீப்பெட்டிகளின் விலையை "ஒரு
யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என உயர்த்தியிருந்தது. ஒரு நாள்
ஒரு வணிகர் ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதைக்
கண்ட காவற்றுறை, அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்
தாக்கல் செய்திருந்து. உடனடியாகக் குறித்த வணிகர்
ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது சிக்கலை
விளக்கினார்.
வழக்கை ஆய்வு செய்யும் நாளன்று, ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள்
"ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது சதம்" என்பது அரச சட்டம், அரச
சட்டத்தை மீறி ஒரு தீப்பெட்டியை ஒரு உரூபாவுக்கு விற்றதாகக்
காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததில் தவறு
இருப்பதாகச் சுட்டிக்காட்டித் தனது கருத்தை வெளியிட்டார். நீதிபதி
அவர்களே! குற்றம் சுமத்தப்பட்ட வணிகர் விற்ற தீப்பெட்டியில்
இரண்டு யானைகள் இருப்பதால், "ஒரு யானைத் தீப்பெட்டி ஐம்பது
சதம்" படி இரண்டு யானைகள் உள்ள ஒரு தீப்பெட்டியை ஒரு
உரூபாவுக்கு விற்றதில் தவறில்லை என வழக்காட, நீதிபதியும்
வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
ஒரு பெண்ணின் கற்பை அழித்ததாக ஒருவரைக் காவற்றுறை
பிடித்துச் சிறையிலடைத்த பின்னர், அவருக்கு எதிராக நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்திருந்து. சிறைப்பட்டவரின் உறவினர்
உடனடியாக ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களை அணுகி, தனது
சிக்கலை விளக்கினார். அவரும் "நீதிமன்றிற்கு வாரும் ஆளை
வெளியில எடுத்து விடுகிறேன்" என்று சொல்லி உறவினரை
அனுப்பி வைத்தார்.
வழக்கு நாளும் வந்தது. வழக்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. நீதிபதியும் குற்றவாளி தொடர்பான சட்டவாளரை விளக்கமளிக்குமாறு அழைத்தார். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் எழுந்து, நீதிபதி அவர்களே! வழக்குத் தொடர்பான முதலாமாளிடம் கேள்விகளைக் கேட்க அனுமதி தருமாறு கேட்டார். நீதிபதியும் அனுமதி வழங்கினார்.
"உமது கற்பை அழிக்கக் குற்றவாளி முயன்ற போது; நீர் தடுத்தீரா?
எதிர்த்தீரா? உமது கற்பைக் காக்கப் போராடினீரா? அப்படியானால்,
போராடியதிற்குச் சான்றாகப் புண்கள் அல்லது அடையாளங்கள்
ஏதுமுண்டா?" என்று ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கேட்ட போது
முதலாமாள் நிறைவான பதில் தராமையால் "ஊசியை ஆட்டிக்
கொண்டு நூலைக் கோர்க்க முடியாதது" போல முதலாமாளும்
குற்றவாளியும் விரும்பியோ இணங்கியோ கூடியிருக்க வேண்டும்.
ஆகையால், என் பக்கத்தாள் குற்றவாளியல்ல எனச்
சான்றுப்படுத்த(நிரூபிக்க) நீதிபதியும் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இதில் என்ன நகைச்சுவை என்றால், நான் பிறக்க முன்னரே
இவ்விரு வழக்குகளும் நடந்தனவாம். சிறந்த வழக்குக் கருத்து
மோதல்களுக்கு எடுத்துக் காட்டாக பெரியவர்கள் சிலர் சொன்னதை,
நான் காதில போட்ட அளவுக்குத் தொகுத்துத் தந்துள்ளேன்.

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நகைச்சுவையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டிய இந்த வழக்காளர் குற்றத்திற்கு ஆதரவாக வாதாடியிருக்கிறாரே!

என் பதில்: உங்கள் கருத்து மிகவும் சரி. குறித்த வழக்காளர்/சட்டவாளர் தனது திறமையால் பல குற்றவாளிகளைக் காப்பாற்றியது தவறு தான். இவரது வழக்காடும் திறனை நினைவூட்டலாம்.

சட்டம் படிக்கின்றவர்கள் இவரைப் போன்றவர்களின் வழக்காடும் திறனைப் பொறுக்கித் தமது புலமையைப் பெருக்கலாமென நினைக்கின்றேன்.

நகைச்சுவைக் கதை

உச்சந்தலை வெடிக்க
தலைக்கு மேலே கதிரவன் இருக்க
சிறுகுடல் பெருங்குடலை
பிடுங்கித் தின்னுமளவுக்கு
நம்மாளுகளுக்கு பசி!
செல்லும் வழியெல்லாம்
சாப்பாட்டுக்கடையைத் தேடியவர்களுக்கு
ஆங்கோர் கடை அகப்பட
நுழைந்து சாப்பிட அமர்ந்தாச்சு!
கட்டணத்தைக் கட்டிப்போட்டு
விரும்பிய சாப்பாட்டை
வேண்டிச் சாப்பிடலாமென
பணியாளர் சொல்லவும்
ஆளுக்காள் பணமில்லையென
கையை விரித்து
தலையைச் சொறிந்துகொண்டு
கடையை விட்டு
வெளியேறத்தான் முடிந்தது!
சாப்பிட்டு முடியப் பணம் கட்டுற
சாப்பாட்டுக்கடையைத் தேடி
கண்டுபிடித்துச் சாப்பிட்டுமாச்சு!
ஆளுக்காள்
பணம் செலுத்துவதற்குப் போட்ட
நாடகம் எப்படி இருந்திருக்கும்?
அந்த ஐயா
என்ர கணக்கைச் செலுத்துவாரென
பெரியவர் ஒருவரைக் காட்டிப்போட்டு
முன்பக்கமாக ஒருவர்
விவேக்கைப் போல தப்பினார்!
ஒண்டுக்கு
ஒருக்கால் போட்டு வாறனென
பின்பக்கமாக ஒருவர்
வடிவேலுவைப் போல தப்பினார்!
சந்தானம் போல ஒருவர்
"அண்ணே!
கண்ணிலே என்ன மீசை!" என
நுழைவு வழியால
வந்தவரிடம் கேட்டுத் தப்பியோட...
"என்ர பணத்தை
பிடுங்கிக் கொண்டு போறனுங்க" என
செந்திலைப் போல ஒருவர்
ஒப்பாரி வைத்துத் தப்பிக்க
முயன்ற வேளை
காவலாளி ஊதுகுழலை ஊத
படையினர் சுற்றிவளைத்து
எல்லோரையும் பிடித்த போதுதான்
படையினரின் கடையென்று அறிந்து
நம்மாளுகளும் முளிக்கின்றனர்!

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:
நண்பர் வினோத் (கன்னியாகுமரி): நண்பர்கள் இருந்தால் கவலையில்லை. எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம்

என் பதில்: உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால், கை நிரம்பப் பணம் இருக்க வேண்டுமே!

நண்பர் ஸுகிரி: அப்புறம் அவர்களுக்கு என்ன மாதிரி தண்டனை கிடைத்தது? அரிசில கல்லை பொறுக்கினாங்களா, இல்லை ரவைல வண்ட எடுத்தாங்களா?

என் பதில்: அடுத்து அவர்களுக்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. அதனைப் பார்க்க நான் அங்கு இல்லையே!

நண்பர் சரவணமுத்து: என்ன தண்டனை கிடைத்தால் என்ன? சாப்பாடு தான் சாப்பிட்டு முடிச்சாச்சுலப்பா!!!!!!!

என் பதில்: பணமிருந்தால் கடைப் பக்கம் போகலாமென இக்கதை சொல்லுகிறது.

நண்பர் விஷ்வம்: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

என் பதில்:
உண்மை! ஆனால், பணமில்லாமல் சாப்பாட்டுக் கடைக்குள் நுழைந்தால்.....

சேமிப்பில் ஏதுமில்லை என்றால்...


சிறுகச் சிறுக
உழைத்ததெல்லாம்
பணமாக வைப்பிலிடாமல்
நிலமாக வேண்டி விட்டதால்...
வைப்பகங்கள்(வங்கிகள்)
சோர்வுற்று மூடப்பட்டாலும்
திருடர்களால் திருட்டுப் போகாமலும்
எனது பணம் நிலமாக மின்னுகிறது!
வட்டி வரும் குட்டி போடுமென
வைப்பகங்களில்
பணத்தைப் போட்டவர்கள்
கரைத்துப் போட்டு
வெறும் கையோடு வாடுகின்றனர்!
சேமிப்பு என்பது
கரையும் முதலீடாக இருக்கவே கூடாது...
பணம் குட்டி போட்டாலும்
நிலம் குட்டி போடாது...
சேமிப்பின் அளவைப் பொறுத்தே
முதுமை நெருங்கிய வேளை
தோள் கொடுக்க வருவோரை
எண்ணிப் பார்க்கலாம்!
சேமிப்பில் ஏதுமில்லை என்றால்
உயிர் பிரிந்த உடலைக் கூட
சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல
எண்ணிப் பாரும் எவர் வருவார்?

சுழியோடினால் தான் கிடைக்கும்

வாழ்க்கை என்பது
வழுக்கி விழுத்தும் சேற்றில்
நடப்பது போலத் தான்...
வாழ்க்கை என்பது
கரடு முரடான வழியில்
புரண்டு உருண்டு
பயணிப்பது போலத் தான்...
வாழ்க்கை என்பது
உறவும் வரும் பிரிவும் வரும்
நிலையாக எவரும் வராத
உறவுகளோடு தான்...
வாழ்க்கை என்பது
கற்று முடிந்ததும் வாழ்வதல்ல
வாழ்ந்து கொண்டே
கற்றுக் கொள்வது தான்...
வாழ்க்கை என்பது
முடிவே இல்லாத
கரையைத் தொட முடியாத
துன்பக் கடல் தான் - அதில்
சுழியோடித்தான்
மகிழ்ச்சி எனும் தேனை
அள்ளிப் பருக முடியும்!

சாப்பாடு போடுறாங்கோ

ஒருவர் : அவங்கட வீட்டில நாய்களைப் போல ஆட்களும் அடிபடுறாங்களே...

மற்றவர் : அந்த வீட்டு ஆச்சி, தனது 170 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதாலே சாப்பாடு(அன்ன தானம்) போடுறாங்கோ... எங்கையும் நம்மாளுகள் உப்பிடித் தானுங்கோ...

ஞாயிறு, 17 நவம்பர், 2013

பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாவலனுக்கு (கவிஞனுக்கு) பழிப்பும் நெழிப்பும் கேலியும் நையாண்டியும் நகைச்சுவையும் என எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்பதான் வாசகர் மகிழ்வடையத்தக்க பாபுனையலாம்.

புகழ்வது போல இகழலும் இகழ்வது போலப் புகழலும் தமிழில் பாபுனையும் போது கையாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக ஓரிரு வரிகள்:
"சிறிலங்காப் படையில் சேருவோம் வாருங்கள்!
அழகான தமிழ்ப் பெண்களைக் கெடுக்கலாம்...
ஆயிரம் தமிழர் வீடுடைத்துத் திருடலாம்...
இலட்சம் கோடி பொன்பணம் பொறுக்கலாம்...
யாழ்போய் போராடினால் அத்தனையும் ஈட்டலாம்...
வாருங்கள் சிறிலங்காப் படையில் சேருவோம்!" என்றவாறு அமைய

ஈழத்து யாழ்பாணத்துப் பாவலர் பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் 1990களில் கவியரங்கொன்றில் பாடிய கவிதையை நான் மறந்தாலும் எனது வரிகளில் அவரது பாபுனை திறனைச் சொல்ல முனைகிறேன்; தவறிருந்தால் என்னை அடித்து நொருக்குங்கள் (ஒறுப்புத் தரலாம்).

ஈழத்தில் போர் இடம்பெற்ற காலத்தில் சிங்களத் தலைவர்கள் எனது வரிகளில் குறிப்பிட்டவாறே ஆள்திரட்டினர். அப்படியாயின் சிங்களவருக்குப் புகழ் சேர்க்கும் வரிகள். அப்படிப் புகழ்ந்து பாடித் தமிழர் படும் துயரை வெளிப்படுத்தல்; சிங்களப் படையை இகழ்வதாகவே முடியும். இவ்வாறு சிங்களப் படையைப் புகழ்வதாகப் பாடி இகழ்ந்து, தமிழர் துயரை வெளிப்படுத்திய சா.வே.பஞ்சாட்சரம் அவர்களின் பா (கவிதை) கிடைத்தால் பிறிதொரு பதிவில் தருவேன்.

இனி "பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?" என்ற கதைக்கு வருவோம். பாரதியைப் பற்றிய கதை ஒன்றைச் செய்தி ஏடு ஒன்றில் படித்தேன். அதனைச் சுருக்கிச் சொல்கிறேன்.

எட்டையபுர அரசவையில் புலவர்கள் எல்லோரும் குழுமித் தங்கள் கவித்திறத்தை அரங்கேற்றும் பொன்னந்திப் போழ்து நிகழ்வில், அரசவைத் தலைமைப் புலவரான காந்திமதி நாதர் (அவரது அகவை 16 - 17 தானாம்) பாரதியை இகழ (அவமானப்படுத்த) எண்ணியிருந்தார். அதற்கு அவர் "பாரதி சின்னப் பயல்!” என்று ஈற்றடி அமையும் வண்ணம் ஐந்து மணித்துளிகளில் பாடலியற்றிவிட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சி 1895லிருந்து 1898க்குள் நடந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது பாரதிக்குப் 13 முதல் 16 அகவைக்குள். அப்படியாயின் புலவர் காந்திமதி நாதருக்கு பாரதி இளையவர் தான். புலைமையை அரங்கேற்றும் அந்நிகழ்வில் பாரதி கையாண்ட நுட்பத்தைப் பாருங்களேன்.

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

"தான் இளையவன் என்ற இறுமாப்பில், தன்னை இகழ்ந்து கேலி செய்ய முறையற்ற இருண்ட உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்" என மேற்படி பாரதி கேலி பண்ணிப் பாடினார். அதைக் கேட்ட புலவர் காந்திமதி நாதரோ தலையைக் கீழே போட்டார். எப்படியோ புலவர் காந்திமதி நாதரின் தலைக்குனிவைப் போக்க பாரதி இன்னொரு பாடலையும் பாடினாராம்.

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்." என்ற வெண்பாவில்

அகவையில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதரின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்துப் புகழ்ந்து பாடினார்.

முடிவாக முதற் பாடலில் தன்னை ஒரு சிறந்த பாவலன் (கவிஞன்) என்றும் இரண்டாம் பாடலில் தன்னை ஒரு சிறந்த மனிதன் என்றும் பாரதி நிருபித்துக் காட்டியுமுள்ளான். இப்படி நம்மாளுகளில் எத்தனை பேருள்ளனர்.

பாபுனைய விரும்பும் உறவுகளே! பாரதியைப் போல கேலி பண்ணுவீரா?  பார் + அதி = (ர் + அ = ர) பாரதி என்ற சொல்லாட்சியைப் பார்த்தீரா? மேலும் பாவலனுக்குக் (கவிஞனுக்குக்) கேலி பண்ணத் தெரிந்தால் போதாது, தமிழில் இலக்கண திறமையும் வேண்டும். பாபுனைய விரும்புங்கள்; அதேவேளை பாபுனையத் தேவையான தமிழிலிலக்கணத் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

சனி, 16 நவம்பர், 2013

ஒரு வரிச் செய்தி

என்ன தான் இருந்தாலும் மலிந்தால் அங்காடிக்கு (சந்தைக்கு) வருமே!

அன்புக்காக...

பணம் இருக்கும் வரை தொடருவோரை, கையில பணமில்லை என்றதும் காணக்கிடையாதே! என்னன்பை நம்பிய உறவுகளே இன்னும் தொடர்பில் உள்ளனர்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

நல்ல திரைப்படம்



இலக்கியமொன்றில்
விலக்கிவைக்க முடியாதது
திரைப்படமே!
வாழும் நாம்
வாழ்நாளில் பார்க்கும்
கதையாகட்டும்...
வாழ்ந்தவர் பலர்
வாழ்வதாகக் காட்டும்
கதையாகட்டும்...
மூன்று மணி நேரம்
ஒன்றிப் பார்க்கக் கூடியதே
நல்ல திரைப்படம்!
காட்சிகளால் (Scene) அழகூட்டுவதோ
நகைச்சுவையால் (Jokes) கதை நகர்த்துவதோ
பாடல், ஆடல்களால் நேரம் கடத்துவதோ
நல்ல திரைப்படமல்ல...
பல்சுவை கொண்ட கதையாக
இயல்பான வாழ்வை
நேரில் பார்த்த நிறைவாக
அழுகை, சிரிப்பு, எழுச்சி என
உள்ளத்தில் மாற்றம் தரவல்ல
பொழுதுபோக்குக் கலையே
நல்ல திரைப்படம்!

பழகுவதும் பிரிவதும்

பழகு முன் பல ஐயங்கள்...
பழகிய பின் பல விருப்பங்கள்...
இறுக்கமான நெஞ்சையும்
நறுக்காக இழகவைத்தே
நெருங்கிப் பழகிய பின்
நெருக்கமின்றி விலகுதல் பிரிவா?
ஓ! உறவே!
ஒரு முறை எண்ணிப்பார்...
பழகுவதை விடப் பிரிவது சுகமா?
என் நிலையில்
பழகுவதும் பிரிவதும் முறையல்ல...
ஓ! உறவே!
பிரிவது சுகம் என்றால்
என்னோடு பழகாதே!
ஏனென்றால் - நான்
பிரிவைச் சுமக்க விரும்பவில்லை!

பீரங்கிப் பேச்சாளர்

ஒருவர் : ஏனங்க அவரைப் பீரங்கிப் பேச்சாளர் என்கிறாங்க?

மற்றவர் : உனக்கு இதுகூடத் தெரியாதா?
                    ஆள் (அலறினால்) மேடையில் பேசத் தொடங்கினால் அரங்கிற்கு வந்தவர்கள் ஓட்டம் பிடிப்பினம்...
அது தான்...

பழம் தின்று கொட்டை போட்டவர்கள்

"நாம் கற்றது
கைப்பிடி மண்ணளவு
கற்க வேண்டியது
உலகளவு" ஆக இருக்கையில்
நாளுக்கு நாள்
நாம் எத்தனையோ
கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறதே!
"பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பென்று" என்ற
பாடல் வரிகளை நினைவுபடுத்தி
எதற்கும் முகம் கொடுத்துப் பழக
நாமே தான்
முயற்சி எடுக்கணுமே!
பழம் தின்று
கொட்டை போட்டவர்களைப் பார்த்தாவது
நேற்றைக்கு முந்திய நாள்
பெய்த மழையைக் கண்டு
நேற்று முளைத்த காளான்கள்
இன்று தங்களைச் சரிபார்க்கலாமே!
படித்தறிவு என்பது படவரைபு போல
பட்டறிவு என்பது
ஒருமுறை உண்மையை
நேரில் கண்ட தெளிவு!
படித்தவர்களை அணைப்பது போல
பட்டறிவாளர்களையும்
அணைத்துச் சென்றால் தானே
வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்!

குறிப்பு:- நேற்று முளைத்த காளான்கள் - பிஞ்சுகள் (படித்தறிவு, பட்டறிவில் சிறியோர்); பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - பழங்கள் (படித்தறிவு, பட்டறிவில் பெரியோர்) எனப் பொருட்படுத்துக.

வருவாய் (சீதனம்) கொடுத்தால் தானா காதல் வரும்...

ஓராள் நடிப்பது தனியாள் நாடகம். அப்ப, இரண்டாள் நடிப்பது ஈராள் நாடகமோ? என்னவோ, இரண்டாள் சேர்ந்து இப்படி நடிக்கிறாங்க...

கந்தன் : இஞ்சாருங்கோ... நீங்கள் திருமணம் (கலியாணம்) செய்யவில்லையா?

கணபதி : இல்லை. காதலித்த பத்தில ஒன்றேனும் வருவாய் (சீதனம்) தரவில்லை... அதனால முடியல...

கந்தன் : திருமணம் (கலியாணம்) செய்யாமல் எப்படித்தான் காலம் தள்ளப் போகிறியோ தெரியவில்லையே!

கணபதி : துயரப்படாதீங்க... இன்னும் இருபதைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேனே...

கந்தன் : அதில, ஒன்றாவது வருவாய் (சீதனம்) தருமென நம்புகிறாயா?

கணபதி : எவராச்சும் வருவாய் (சீதனம்) தரமுடியாவிடின் திருமணம் (கலியாணம்) செய்யமாட்டேனே!

ஈராள் நாடகம் எப்படி? இந்தக் காலத்துப் பொடியள் இப்படித்தான். பொடிச்சிகளே! கொஞ்சம் ஏமாறாமல் தப்பிக்கலாமே!

திங்கள், 11 நவம்பர், 2013

வீட்டுக்கு வீடு வாசற்படி

நம்ம வீட்டுக் கதைகளை மூடிக்கொண்டு
நாங்க அடுத்தவர் வீட்டுக் கதைகளைப் பேசுறம்
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

மாற்றான் வீட்டுப் பிள்ளையில பிழை என்கிறம்
எங்க வீட்டுப் பிள்ளை என்ன தங்கமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."

நம்ம வீட்டு வரவைப் பார்க்கிறம்
அடுத்தவர் வீட்டுச் செலவை மதிக்கிறோமா?
"வீட்டுக்கு வீடு வாசற்படி.."


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த போது:

"வீட்டுக்கு வீடு வாசற்படி தான் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கேட்டது
நம்ம பையன் குறும்பு பண்ணா அவன் சுட்டிப்பையன்
அடுத்த வீட்டு பையன் குறும்பு பண்ணா அவன் தறுதல
நம்ம பெண் அதிகம் பேசினால் அவள் கலகலப்பானவள்
அடுத்த வீட்டு பெண் அதிகம் பேசினால் அவள் வாயாடி
நாம் தப்பு பண்ணா மறைக்கப்பார்ப்போம்
அடுத்தவர் தப்பு பண்ணா குத்திக்காட்டுவோம்" என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் சுட்டிக்காட்டினார்.

"நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வு வந்தால் வீட்டுக்கு வீடு இப்படி நிகழாது!" என்று நானும் பதிலளித்தேன்.

பணமீட்ட

ஒருவர் : பணமீட்ட என்ன வழி பண்ணலாம்?

மற்றவர் : மாற்றார் பணத்தைக் களவாடலாமே!

மூன்றாமாள் : பிடிபட்டால் என்ன செய்வாய்?

நான்காமாள் : 'களவும் கற்று மற' ந்தாச்சு என்போம்!



தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:

"மூன்றாமாள் ?
நான்காமாள் ?
இப்போதெல்லாம் இத்தொழிலிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. என்பதை பத்திரிகையில் பல பெண்கள் களவு, மோசடியில் பிடிபடுவதை வைத்துத் தெரிந்துகொள்ள முடிகிறது." என்று நண்பர்
வினோத் (கன்னியாகுமரி) தெரிவித்திருந்தார்.

"ஆண், பெண் சமவலு இத்தொழிலிலும் தான்... பல நாட் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவானே!" என்று நானும் பதிலளித்தேன்

வெற்றி பற்றி

முடியாததற்கு முழுக்குப் போடு
முடிந்ததற்கு முயற்சி எடு
"வெற்றியுனை நாடும்"

போட்டியில் உன்னை முந்துவோரும்
போட்டியில் உன்னைத் துரத்துவோரும்
"உனது வெற்றியின் பின்னூட்டிகள்"

கள நிலையும் முயற்ச்சி எடுத்தலும்
ஒன்றையொன்று சார்ந்து இருக்கும்
"இரண்டும் வெற்றியின் தளம்"

வேலையில்லாமல் பிச்சை எடுக்கையில்...

ஒருவர் : என்னங்க... அந்தக் குண்டுமாமாவிட்ட ஒருவருமே பிச்சை கேட்க மாட்டேங்கிறாங்க...

மற்றவர் : நாள் முழுக்க வீட்டில வேலையைச் செய்ய வைச்சிட்டு, அதற்கீடாக நாட்கூலியை வழங்குவதாலே...

மூன்றாமவர் : குண்டுமாமா போல எல்லோரும் இருந்து விட்டால் பிச்சைக்காரரை ஒழித்துவிடலாம் போலிருக்கே...

நெருக்கடியும் நண்பர்களும்

வணக்கம் நண்பர்களே!

எனக்கும் 
கொஞ்ச நண்பர்கள் இருந்தாங்க...
கொஞ்ச நாளாய் 
என்னிடம் காசில்லை என்றதும்
என் நிழல் போல நின்றவர்கள்
எனக்குக் கிட்ட நில்லாமலே
எப்படியோ ஓடி மறைந்திட்டாங்களே!

நண்பர்களே!
நண்பன் பற்றி - உங்கள்
உள்ளம் திறந்து சொல்லுங்களேன்!
கள்ளம் இல்லா நண்பன் என்றால்
நெருக்கடி நிலை (ஆபத்து) வந்தால்
கைகுலுக்க நெருங்குவானே!
நெருக்கடி நிலையைக் (ஆபத்தைக்) கண்டால்
நம்மைக் காணாதவர் போல
ஓட்டம் பிடிப்பவர் எல்லோரும்
நண்பரென நான் கண்டறியேன்!


வெள்ளி, 8 நவம்பர், 2013

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

உவர் யாழ்பாவாணன் "நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?" என்று கேட்க வந்திட்டார் என்று... நீங்கள் துள்ளுவது எனக்குத் தெரியும். பெரும்பாலானோருக்குப் பா (கவிதை) என்றால் முழு நெல்லிப் புளி போல... உண்மையிலே, எனது வாழ்க்கைத் துணைகூட ரமணிச்சந்திரனின் பொத்தகமென்றால் சமைக்கவும் மாட்டாள்; தூங்கவும் மாட்டாள்; கதையிலே மூழ்கி விடுவாள். வாசகரிடையே பாவைப் (கவிதையைப்) பிடிக்காதவர்களும் (அதாவது, கதை விரும்பிகளும்) இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்றைய இளசுகளுக்கு மூ.மேத்தாவின் புதுப்பா (புதுக்கவிதை) நூல்கள் ஏற்படுத்திய மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு புதுப்பாவையே (புதுக்கவிதையையே) விரும்புகின்றனர். இத்தனைக்கும் மூ.மேத்தா ஒரு தமிழ் பேராசிரியர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதத் தெரிந்த மூ.மேத்தா இளசுகளின் உள்ளத்தைக் கொள்ளையிட புதுப்பா (புதுக்கவிதை) எழுதினாரோ எனக்குத் தெரியாது.

புதுப்பா (புதுக்கவிதை) எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சட்டுப் புட்டென்று படிக்கச் (வாசிக்கச்) சுகமளிக்கும். இலக்கண வேலிகள் இதற்கில்லை. ஆயினும் உணர்வு வீச்சு, மூச்சான அடி எனச் சில இலக்கண எல்லைகள் இருக்கும். புதுப்பா (புதுக்கவிதை) இலகுவானது என்றாற் போல, உவன் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் கிறுக்குவது போல சிலர் கிறுக்கலாம். பாடலாசிரியர் வைரமுத்து போன்று இறுக்கமான புதுப்பா (புதுக்கவிதை) புனைவோர் பலருண்டு. வாசகரிடையே மூ.மேத்தா, வைரமுத்து போன்று எழுதுவோரின் தரமான புதுப்பாவை (புதுக்கவிதையை) விரும்புவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கோட்பாட்டுப் (தத்துவப்) பாட்டென்றால் பாவரசர் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். அவருடையை பாட்டு இலக்கணப் பா (மரபுக்கவிதை) சார்ந்தது. அவர் இலக்கணப் பா (மரபுக்கவிதை) எழுதினால் தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருமந்திரம், திருப்புகள் மட்டுமல்ல ஔவை, வள்ளுவர், கம்பர் போன்றோர் பாடிய பாக்களில் இருந்து பொறுக்கிய முத்துக்களையும் சேர்த்துப் புனைந்த பாவலர். இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்றால்; இலக்கண வேலிக்குள்ளேயே நின்று எழுதினால் சுவையிருக்காது என்பதனை உணர்ந்தே பாவரசர் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ எனக்குத் தெரியாது.

இலக்கணப் பா (மரபுக்கவிதை) என்பது பலாப்பழம் போல... பலாப்பழத் தோலை அகற்றி; நாரை அகற்றிச் சுளையெடுத்துச் சுவைப்பது போல; இலக்கணப் போர்வையிலிருந்து இலக்கணப் பாவின் (மரபுக்கவிதையின்) பொருளறிந்தால் சுவையிருக்கும். இலக்கணப் பா (மரபுக்கவிதை) வைரம் போல... வைரம் பட்டை தீட்டப் பளிச்சிடுவது போல... இலக்கணப் பாவில் (மரபுக்கவிதையில்) உள்ள இலக்கணப் போர்வையை உரிக்க உரிக்க சுவையிருக்குமாம். இந்த நுட்பத்தை அறிந்தவர்கள் இலக்கணப் பா (மரபுக்கவிதை) மீது தான் நாட்டம் கொள்கின்றனர்.

இலக்கிய விரும்பிகள் (வாசகர்கள்), இலக்கியப் படைப்பாளிகள் இலக்கியத்துறையில் பல பிரிவுகளில் நாட்டம் கொண்டாலும் சிறப்பாக ஒன்றையே விரும்புவர். நீங்கள் புதுப்பாவையா (புதுக்கவிதையையா) அல்லது இலக்கணப் பாவையா (மரபுக் கவிதையையா) அல்லது பாக்களில் (கவிதைகளில்) விருப்பமில்லையா என்பதனை கீழ்வரும் கருத்துக்கணிப்பூடாகத் தெரிவியுங்கள் பார்ப்போம். இக்கருத்துக் கணிப்புப் பாபுனைய விரும்புவோருக்கு ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன்.

நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?

வாக்குப் போட்டாச்சா? உங்கள் விருப்புக்கான விளக்கத்தையும் சொல்லுங்க... அப்ப தான், உங்கட பேச்சை நம்பி; நம்மாளுகள் எழுதுகோல் ஏந்தி உலகெங்கும் தமிழ் பரப்ப முன்வருவாங்க!

வியாழன், 7 நவம்பர், 2013

கத்திக்கு வேலை

வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது, பயணித்த ஊர்தி எப்பனும் நகரவேயில்லை. "வேலைக்கு நேரம் போகப் போகுதே" என்று ஆளுக்காள் ஒரே கூப்பாடு. ஓட்டுநரையும் நடத்துநரையும் பார்த்து "ஊர்தி ஏன் நகரவேயில்லை" என்று கேட்ட போது "கொஞ்சம் இறங்கிப் பாருங்களேன்" என்றனர். சொன்ன உடனேயே சிலர் "என்ன நடக்கிறது" என்று பார்க்கத் துள்ளிக் குதித்து இறங்கினர்.
தெருவின் இருமருங்கிலும் விடுப்புப் பார்ப்போர் ஏராளம். சீனவெடி கொழுத்திக் கொண்டு சிலர் முதல் நிரையில் நகர்ந்தனர். இடையிடையே சிலர் "தலைக்கு மேலே வெடிக்கும்" வாணவெடிகளையும் கொழுத்திச் சென்றனர். "நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சுத் துணிவிருந்தால்" என்ற பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க "டங்கு டக்கு" எனத் தவிலடிக்க இரண்டாவதாக நகருவது கண்ணன் மேளதாளக் குழுவினர் என்றனர். "தா தெய், தாம் தகிட தோம்" என்ற தாளக்கட்டுக்கு அமைவாய் கண்ணகி நாட்டியப் பெண்கள் குழு நிலமதிர ஆட்டம் போட்டவாறு மூன்றாவதாய் நகர்ந்தனர்.
கடைசியாகக் கதாநாயகர்களுக்கு உயர்ந்த நிலையில் மதிப்பளிக்கப்பட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அதுவும் உழவு இயந்திரப் பெட்டியில் கட்டிலைப் போட்டு அதற்கு மேலே அவர்களை நிற்க வைத்திருந்தனர். அவர்களது கழுத்துக்கு ஐம்பது பவுண் தங்கப் பதக்கம் சங்கிலி தேடாக் கயிறு மொத்தத்தில போட்டு இருந்தனர். போதாக்குறைக்கு நீண்ட மலர் மாலையும் அணிவித்து இருந்தனர். ஊர்ப் பெரியவர் வந்து போக்குவரவுக்கு இடையூறு விளைவிக்காமல் ஊர்வலத்தை ஓர் ஓரமாக ஒதுக்கினார்.
ஓட்டுநரும் நடத்துநரும் "ஆட்டுக் கடா ஊர்வலம் பார்த்தது போதும் ஊர்தியில் வந்தேறுங்கோ" என அழைத்தனர். ஊர்தி நகர, நகர ஆட்டைப் பார்த்த நம்மாளுகள் ஓடி, ஓடி வந்து தொற்றி ஏறினர். ஊர்திக்குள்ள நம்மாளுகள் ஏறினால் மிச்சம் சொல்லவும் வேண்டுமா?
"தளபதி போலத் தாடி வைத்த, செவி மடிந்து தொங்க, மான் கொம்பு போல நீண்ட கொம்பு வைத்த, எவ்வளவு பெரிய, உயரமான ஆட்டுக் கடாவை இவ்வளவு மதிப்பளித்துக் கொண்டு செல்கிறாங்களே" என்று ஆளுக்காள் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தீர்க்கத் தொடங்கினர்.
ஊர்க் கோடியிலுள்ள ஒரு கோவிலில, ஆண்டுக் கணக்கில இப்படி வளர்த்த ஆட்டுக் கடாக்களை, இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டு போய்ச் சேர்த்து, கோவில் வாசலில வைத்து ஆட்டைக் கிடத்திப் போட்டு, கத்திக்கு வேலை கொடுப்பாங்கள். இதற்காக மாதக் கணக்கில கத்தியைத் தீட்டீ வைத்திருப்பாங்கள். அதாவது ஒரே வெட்டில, தலை வேறு முண்டம் வேறாக வெட்டியதும் பாயும் குருதியை(இரத்தத்தை) கடவுளின்(சிலையின் முகத்துக்கு) பக்கமாகத் தெறிக்கக் கூடியதாக வடிவமைத்துச் செய்வாங்கள்.
தங்கள் உறவுகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக, குறித்த கடவுளுக்கு குருதிச் சாவு(இரத்தப் பலி) கொடுக்க வேண்டுமென்பது சிலரது நம்பிக்கை. இதன்படிக்கு, இவ்வாறு ஆடு, கோழி வெட்டும் நிகழ்வை 'வேள்வி' என்று அழைப்பாங்கள். வேள்விக்குக் கழுத்தைக் கொடுக்க இருக்கின்ற ஆட்டுக் கடாவுக்கும் சேவற் கோழிக்கும் இவ்வளவு மதிப்பா? என்றெல்லாம் அறியாத, தெரியாத பலர் ஐயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, ஊர்தியும் நிறுத்தப்பட, நானும் இறங்கி விட்டேன்.
ஊர்தியில் பக்கத்து இருக்கையில் இருந்த அகவை(வயது) எண்பது மதிக்கூடிய ஒருவர் "கோவிலில வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னேலாது. ஆனால், வீட்டுப் பக்கமாக வெட்டினால் ஆட்டுக் குருதி(இரத்தம்) வறுத்துத் தின்னலாம்" என்று துயரப்பட்டது நினைவுக்கு வந்தது. இப்பேற்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தான் சரி.
அறிவியலில் முன்னேற்றமடைந்த இருபத்தியோராம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் தங்கள் புத்தியைத் தீட்டி வேள்விகளை நிறுத்தாவிடில் கடவுளுக்குக் குருதிப் படையலென ஆடு, கோழி வெட்டுறது தொடருமென எண்ணியவாறு எனது செயலகத்திற்கு நுழைந்து என் பணியைத் தொடரப் பிந்திப் போச்சு.
(எல்லாம் புனைவு/ யாவும் கற்பனை)

ஞாயிறு, 3 நவம்பர், 2013

யாழ்பாவாணனின் மின்நூல்கள் பற்றி...

உங்கள் யாழ்பாவாணன் 1987 இலிருந்து எழுதுகோல் ஏந்தியவர். யாழ்பாவாணனின் முதல் பதிவின் தலைப்பு "திலீபனின் மூன்றாமாண்டு நினைவு"; முதலடி "உலகமே ஒருகணம் சிலிர்த்தது"; முதன்முதல் 25/09/1990 இல் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்தது. வீரகேசரி பத்திரிகை, அறிவுக்கதிர் சஞ்சிகை போன்றவற்றிலும் அரங்குகளிலும் யாழ்பாவாணனின் பதிவுகள் வெளியாகியது. ஈழப்போர் காரணமாக 20/05/2009 இற்கு முந்திய பதிவுகள் கையில் இல்லாவிடினும் 20/05/2009 இற்குப் பின் வலைப்பூக்களில் வெளியான பதிவுகளைத் தொகுத்து மின்நூல்களாக 2014 இலிலிருந்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிட இருக்கின்றது.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

சுகமாகப் பா (கவிதை) புனைய

இலக்கியம் தோன்றிய பின் இலக்கணம் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் இலக்கியம் படைக்க இலக்கணம் தேவையற்ற ஒன்று என எண்ணிவிட முடியாது. அதாவது, எந்தவொரு இலக்கியத்தைப் படைக்க முயன்றாலும் அதன் வடிவம் குறித்தவொரு இலக்கணத்தை ஒட்டியே காணப்படுகிறது. தமிழ் இன்னும் வாழுகிறது என்றால், அதில் காணப்படும் இலக்கண வரையறை தான் காரணம் என்பேன்.

இலக்கண வரையறை அல்லது சொல்லாட்சி (தூய தமிழ் சொல், அசைசீரால் அமைந்த சொல், தனியசையாலோ தனியெழுத்தாலோ ஆன சொல்) அல்லது குறியீட்டுப் பாவனை என ஏதாச்சும் நம்மாளுகள் தெரிந்து வைத்துப் பாபுனையலாம். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டு தரப்புக் கவிதைகளை வாசித்து மகிழ (இரசிக்க) ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல. எல்லாவற்றுக்கும் பாட்டு இலக்கணம் தான் காரணம். வாசகரும் வாசித்து மகிழ (இரசிக்க) பாட்டு இலக்கணம் சற்றுத் தெரிந்திருந்தால் நன்மை தருமே!

புதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே! முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே!

எடுத்துக்காட்டாக மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டையும் எடுத்துக்கொள்வோம். மரபுக்கவிதை என்றால் இலக்கணம் வேண்டுமென என எண்ணி, இலக்கணம் ஏதுமில்லாத புதுக்கவிதையை எவரும் எழுதிவிடலாமென எழுத முன்வரக்கூடாது. புதுக்கவிதைக்கும் இலக்கணம் உண்டென்பதை மறந்துவிடாதீர்கள்.

எவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று? வரிக்(வசன)கவிதைக்கும் இலக்கணம் உண்டே!

உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை!
எ-கா:
ஆவென்று அலறியவள்
"அம்" எனக் குழந்தை அழுகை கேட்க
அடங்கினாள் ஈன்ற தாய்!

உணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை!
எ-கா:
மகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.
குழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.

இவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம்  இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன். அதாவது அசை, சீர், அலகிடுதல், அடி, தொடை, பாவினம் போன்ற அறிவு தெரிந்திருந்தால் நன்று.

இதனடிப்படையிலேயே யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்ற தொடரை எழுதி வருகின்றேன். மேலும் "பாபுனையத் தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் இவ்வலைப்பூப் பட்டி(Menu)யில் அடிப்படை இலக்கணத் தெளிவைத் தரக்கூடிய நூலொன்றை இணைத்துள்ளேன். (படிக்க: http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html) அதேவேளை விசாகப்பெருமாளின் யாப்பிலக்கணம் நூலைப் பகுதி பகுதியாகப் பதிவு(Posting) செய்கிறேன். இதேநோக்கில் இன்னும் பல அறிஞர்களின் நூலை இவ்வலைப்பூவில் இணைக்க எண்ணியுள்ளேன்.

எனது மின்நூல் களஞ்சியத்திலும் சுகமாகப் பா (கவிதை) புனைய "பாட்டு இலக்கணம்" என்ற பகுதியில் (Folder இல்) பல நூல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இவ்விணைப்பைச் http://wp.me/PTOfc-58 சொடுக்கி "தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்." என்ற இணைப்பைச் சொடுக்கி அத்தனை நூல்களையும் பதிவிறக்கிப் படிக்கலாமே.

முடிவாகச் சொல்வதாயின் இன்றைய வாசகருக்காக படைப்பாளிகள் இலக்கணமின்றிய இலக்கியங்களை ஆக்கினாலோ அதனை வாசகர் ஏற்றுக்கொண்டாலோ தமிழ் அழிவது உறுதி. எனவே படைப்பாளிகள் இலக்கண வரையறையைக் கடைப்பிடித்தே இலக்கியம் எழுத வேண்டும். வாசகரும் அடிப்படை இலக்கண வரையறைகளைத் தெரிந்துகொண்டு நல்ல, இறுக்கமான, தரமான இலக்கியங்கள் மலரப் படைப்பாளிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே தமிழை அழியாது பேணமுடியும்.

புதிதாகப் பாபுனைய விரும்பும் எல்லோரும் சுகமாகப் பா (கவிதை) புனையத் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் படைப்புகள் இலக்கண வரையறையுடன் உயர்தரமாக இருப்பின் பேரறிஞர்களின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புண்டு. எளிமையாக இருப்பின் வாசகர் எண்ணிக்கை பெருகுமென நம்பினால்; அவ்வாறாக எழுதப்படும் இலக்கியங்கள் விரைவில் மறைந்துவிடும் அல்லது மக்கள் மத்தியில் நிலைத்திருக்காது என்பதை மறக்கவேண்டாம்.

காலும் கழிந்தால் முழுமையாக...

நாற்சந்தியில் சிலர் கூடி வாய்காட்டுவது வழக்கம். அப்படிச் சிலர் நடித்த நாடகம் இது.


ஒரு மாலைப் பொழுது... ஒன்று சேர்ந்த நண்பர்கள் நாற்சந்தியால போன அரைகுறை ஆடை அணிந்த குமரியைக் கண்டிட்டாங்க... உடனே நண்பர்கள் வாய்காட்ட வெளிக்கிட்டிட்டாங்க...

முதலாமாள்: ஆள் பாதி ஆடை பாதி என்றால் என்னங்க...

இரண்டாமாள்: விளம்பர நடிகைகள் கால் பங்கு
ஆடையோட முக்கால் பங்கு உடலைக் காட்டுறாங்களே...

மூன்றாமாள்: காலும் கழிந்தால் முழுமையாகத்
தெரியும். ஆனால், அதுகளைப் பார்க்காதீங்க...

முதலாமாள்:
அட முழு முட்டாளுகளே!
அறிவைப் பாவிப்பது அரைப் பங்கடா...
மிடுக்கான ஆடை அணிவது அரைப் பங்கடா...
அப்ப தானடா,
அரையும் அரையும் முழுமையடா!

இரண்டாமாள்: உது நேர் முகத் தேர்வுக்குத் தானடா...

மூன்றாமாள்: வாழ்க்கையிலும் பாவித்துப் பாரேன், உலகம் உன் காலடியில் வீழும்!

ஈற்றில் சரி! சரி! இருள் இறங்கிற நேரம் வந்தாச்சு... என எல்லோரும் வீட்டுக்குப் புறப்படலாமெனக் கலைந்து சென்றனர். 

பள்ளிக்கு வெட்டியதால் தொழிலுக்கு அலைகின்றேன்...


பள்ளிக்குப் போனால் படிப்பெல்லோ
பள்ளிக்கு ஒளித்தால்
செய்தி என்னவாயிருக்கும்?
பிள்ளைகளைக் கேட்டால்
பெற்றவர்களுக்கு
உண்மை சொல்லுங்களோ?
படிப்புக் கொஞ்சம் புளிக்கலாம்...
ஆசிரியர் அடிக்கலாமென அஞ்சலாம்...
கெட்ட நட்புடன் சுற்றலாம்...
காதல் நோயால் அலையலாம்...
உண்மையில்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்...
பதின்ம அகவை
அப்படி, இப்படி இழுக்கலாம்...
தேர்வெழுத அஞ்சி
நானும் சி்ன்ன அகவையில்
பள்ளிக்குப் போவதை வெட்டியதால்
இன்றைக்கு - நானும்
தொழில் தேடி அலைகின்றேன்...
பள்ளிக்கு ஒளித்து
தேர்வுப் புள்ளியில் முட்டை
வாங்க விரும்புவோரே
என் நிலைமை உங்களுக்கும் வர வேண்டாம்!
என்றாலும்
"கற்றோர்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு" என்பதை
உங்கள் காதுகளில் போட்டுடைக்கின்றேன்!

உண்மையை உணர்ந்து

சித்திரையாள் வருகின்றாள்...
இத்தரையில் நல்லன கிடைக்குமா?
வேற்றுமையை விரட்டியே
ஒற்றுமையை வழங்குவாளா?
சமனிலையைப் பேணி
அமைதியைப் பேண உதவுவாளா?
இதற்கெல்லாம்
சித்திரையாள் பணியமாட்டாள்
இவற்றையெல்லாம்
தரைவாழ் மக்களே
தாங்களாகவே செய்யட்டுமென
வானிலிருந்து கையைவிரிப்பாளா?
எதற்கும் நாமே
சித்திரைப் புத்தாண்டிலிருந்தே
உண்மையை உணர்ந்து
நல்லனவெல்லாம் செய்வோம்!

சாவுக்குப் போர் வேண்டாம்!

நல்ல தமிழைப் பேணி
தமிழர் வாழ வேண்டும்...
நல்லபடி தமிழர் வாழ்ந்தால்
உலகின் நாலா பக்கமும்
ஏன் எட்டுத் திக்குமே
நற்றமிழ் பேண இடமுண்டு...
இப்படி எத்தனையோ
எண்ணங்களைச் சுமந்து போராடும்
தோழர்களே! தோழிகளே!
தமிழர் சாவடைந்த பின்னர்
தமிழருக்கு நன்மை கிடைத்து
என்ன பயன்?
வழக்கற்றுப் போகும் உலக மொழிகளில்
தமிழும் உள்ளடங்கக் கூடாதென
தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழுமென
போராடிப் பெற்ற அறுவடையை
பயனீட்ட வாழ்ந்து கொண்டு
போராட முயற்சி எடுப்போமே!

உறவுகள்

அன்புத் தோழர்களே... தோழிகளே...
தேவைகளைத் தேடி
நாங்கள்
அங்காடியில் மட்டும் ஒன்றுகூடவில்லையே
மக்களாயத்தையும்
நாடிய வண்ணமே வாழ்கின்றோம்!
வழங்குவோரும் வாங்குவோரும்
ஒன்றுகூடினால் வணிகம் மட்டுமல்ல
நல்லுறவும் மலருமே!
ஒன்றையும் கொடுத்துப் பெறாமலே
நல்லுறவாய் இருக்குறோம் என்றால்
பொய் தானே!
நம்மை அறியாமலே
நாங்களே
அன்பை, அறிவை, மதிப்பை மட்டுமல்ல
கற்போடு பழகி, பண்பாட்டைப் பேணி, உதவிகள் செய்து
அடுத்தவர் உள்ளத்தை உரசுவதனாலேயே
உறவுகள் ஆகின்றோம் என்பது
மெய் தானே!

தேர்தல் காலங்களில்...

கரும்பு தின்னக் கூலியா வேணும்!
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேணும்!
உண்மையை ஏற்றுக் கொள்ள வேணும்!
ஒன்றை மட்டும் அறிய வேணும்!
"வாக்குகளை விற்காது இருக்கணும்!"

சிலருக்குத் தான்


நித்திரை வந்தால் பாய் வேண்டாம்
பசி வந்தால் கறி வேண்டாம்
சிலருக்குத் தான்...
தலையிடியும் காய்ச்சலும்
தனக்கு வந்த பின்னர்
சொன்னவர்களின் உண்மை இது!

கடன் பற்றிய துளிப்பாக்கள்(ஹைக்கூக்கள்)

வாங்கேக்க இனிப்பது கொடுக்கேக்க புளிக்கிறது
மகிழ்வாய் வேண்டிக் கொடுக்கேலாட்டிச் சாகிறது
"கடன்காரன் கேட்கையில்..."

கடன் வேண்டிக் களியாட்டம் போடலாம்
கடன்காரன் நெருக்கினால் தான் திண்டாட்டம்
"உறவுக்குப் பகை கடன்!"


கை வளம்(கை விஷேடம்)

ஒருவர் : புத்தாண்டு காலத்தில் என்ன ஓய்வில்லாத வேலை?

மற்றவர்: இன்றைக்கு உழைத்தால் கோடி பணம் ஈட்டலாம்!

முதலாமாள்: ஏப்படி? எப்படி?

இரண்டாமாள்: கை வளம் நேரம் பார்த்து வீட்டுக்கு வீடு கையேந்தப் போவதாலே...

கை வளம்(கை விஷேடம்)


சிலரது கையால் சிறு தொகைப் பணம் வேண்டி காசுப் பெட்டிக்குள் வைத்த பின்னர், வணிகமோ கொடுக்கல் வாங்கலோ எல்லோரும் செய்வது வழக்கம். இதற்குப் புத்தாண்டு பிறந்த பின்னர் சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இச் சிறப்பு நேரத்தில் பணமுதலைகள், ஏழை முகங்கள் பாராது தங்கள் விருப்புக்குரிய உள்ளங்களிடம் பலர் கையேந்தி நிற்பர். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம்(கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது.

வழுக்கை

பிஞ்சு : வழுக்கை வலுப்பட சாவு நெருங்குது போல...

முத்தல்: எல்லாம் பொய்யே!

பிஞ்சு : எப்படி?

முத்தல்: சேற்றிலே வழுக்கையிலே விழுந்தால் எழும்ப முடியாத சுள்ளிகள், நீங்கள் தானே!

காலம்

தெருவில தண்டற் சோறு எடுக்கையிலே
"பணம் இல்லாட்டி
பிணத்தைக் கூட நாயும் தேடாது" என்பதை
நேற்றுப் பட்டறிந்தேன்.
இன்று
நல்வாய்ப்புப் பரிசாக
என் கைக்கு 500 இலட்சங்கள்!
உறவுகளின்றித் தெருவில கிடக்கையில
காறித் துப்பியவர்களும்
ஒதுக்கி வைத்தவர்களும்
கழித்து விட்டவர்களும்
பரிசோ கைக்கெட்ட முன்னர்
என் வீட்டுக்குப் படை திரண்டுவிட்டனர்!
ஊர் நாய்கள் என் தெருவில் குரைக்க
நாடறிந்த செய்தி இது!

வியாழன், 17 அக்டோபர், 2013

இணைய உலகில் உலாவர இணைவோம்


உலக வலம் இலகுவாயிற்று
இணைய வலம் உலகமாயிற்று
Chareles Babbage, Von Newmann
கணினியின் இரு கண்களாயினரோ
ARPANET, NSFNET இரு சாராரும்
இணையத்தின் பெற்றோராயினரோ
Internet - 2 தோன்றிவிட்டதாமே!
ஓ! இணையத்தின் (Internet - 2) வாரிசுவாகவோ!
எனது பெற்றோருக்கு
கண்ணுக்கெட்டாத கணினியில்
எனது பிள்ளைகள்
இணையமென்று கண்ணைக் கெடுக்குதுகள்...
அடடே! Filter Glass இருக்குத்தானே!
அது உங்க நினைப்பு!
பெத்தவங்க நினைப்பெல்லாம்
பிள்ளைகள் Internet Cafe இல் என்றுதானே!
காலமிப்படி ஓடிக்கொண்டிருக்க
எம்மை நாமே மூடிக்கொள்ளலாமோ?
காலம் கடந்தேனும் கணினியைக் கற்போம்
இணையத்தில் இனியதை இனங்காண்போம்
காசோடு நேரம் விரையமென்றா
முடங்கிக் கொள்கிறீர்கள்?
உங்கள் கவலையை விட்டுவிடுங்கள்
இதோ Internet - 2!
இணைய வலம் கண்ணுக்கெட்டியதும்
நுனி விரலில் உலகம் உருளுமே!

குறிப்பு:- 2000 ஆண்டின் பின் இணையம் மேம்படுத்தப்படுகிறது என்ற செய்தி அறிந்ததும் எழுதியது. இப்பதிவு 2004 இல் ஈழத்து வன்னியில் இருந்து வெளியான அறிவுக்கதிர் சஞ்சிகையில் வெளிவந்தது.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

எனது எழுதுகோல்


எழுதுகோல் ஒன்று எனக்கிருந்தது
அதன் விலை
ஒரே ஒரு சதம் தான்!
அந்த எழுதுகோல்
எனது உற்ற நண்பர் - அது
இலக்கியங்களை எழுத உதவுதே!
எழுதுகோல் ஒன்றைக் கண்டதும்
என் உள்ளத்தில் எழுந்த
உண்மையைப் பகிர முடிந்ததே!
என் உயிர் இருக்கும் வரை
எழுதுவேன்...
எழுதும் வேளையில்...
எழுதுகோல்கள் நினைவுக்கு வருமே!


சனி, 5 அக்டோபர், 2013

நம்மாளுகளைப் பார்த்து ஒழியும் கடவுள்...


பள்ளியில் கற்றது
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
நம்மாளுகள் சொல்வது
"அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்"
கண் கண்ட சான்றுகள்
"பிள்ளைகள் தம் பெற்றோரை
முதியோர் இல்லங்களில் ஒப்படைத்தல்"
அடிக்கடி நினைவில் தோன்றுவது
"காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது"
"முதுமையிலும் இளமை" இல்லத்தில்
பிள்ளைகள் தம் பெற்றோரை ஒப்படைக்கையிலே
"எங்களை - இங்கு
தள்ளி விட்ட குற்றத்திற்கு
உங்கட பிள்ளைகள்
உங்களுக்கு ஒறுப்புத் தந்தனரோ" என
பழம் பழசுகள் சொல்லிச் சிரித்தனர்!
இந்நிகழ்வுகளையோ
இந்நிலைமைகளையோ
பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
எல்லோரையும் படைத்த ஆண்டவரே
மறைந்து நின்று பார்க்கிறார் போலும்!

செய்தியும் விளம்பரமும்


ஈருளி (மிதிவண்டி/ bicyle) ஓட்டிகளை
தெருவெங்கும் காண்பது அரிது
ஏனென்று எண்ணிப்பார்க்கையிலே
விரைவாக வேலைக்குப் போகவே
உந்துருளி (Motorbike) ஓட்டக்காரர் மலிவு
ஆனால்,
அரசுக்குத் தான் வருவாய்
அப்படியிருப்பினும்
விபத்துகளில் சிக்கியோர் சாவு!



உந்துருளி (Discovery) ஒன்றிற்கான
தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றிலே
"இது ஓடாது; பறக்கும்" என
உறைப்பான வரியிலே (Dead Line) சொல்லி
நமக்கு விருப்பேற்றி
உந்துருளியை வேண்டு வேண்டென
விளம்பரம் செய்யக் கண்டேன்!

வருவாய்க்காகக் கத்திய
விளம்பரதாரர் பேச்சை நம்பி வேண்டிய
உந்துருளியை ஓடும் போது
"இது ஓடாதே; பறக்கிறதே" என
நம்மாளுகளும் ஓடுவதனாலேயே
மோதல்களும் (Accident) சாவுகளும் (Die)
நாட்டிலே மலிந்து போயிற்றே!



முதன்நிலைச் செய்தி ஏடு ஒன்றிலே
முற்பக்கச் செய்தீயாக
"பல்சர் (Pulsar) பறந்தது; உயிர் பிரிந்தது" என
போட்ட தலைப்பின் கீழே
"ஒருவர் சாவு - அடுத்தவர்
நிலைமை கவலைக்கிடம்" என
போடப்பட்டிருந்த செய்தியே
நாட்டு நடப்பாயிற்றே!


வியாழன், 26 செப்டம்பர், 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 02

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதியில் தளை, அடி, தொடை பற்றி விளக்கப்படுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

ஒளி காட்டும் வழி

விடிகாலை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து
அரப்பு, எலுமிச்சை அவித்துத் தோய்ந்து
மஞ்சள் அப்பிக் கோடி(புத்தாடை) உடுத்துத் தொடங்கிய
தீபாவளியைப் பற்றி எவருக்கு என்ன தெரியும்?
தீபம் + ஆவளி(வரிசை) = தீபாவளி என்றால்
வரிசையாகத் தீபம்(ஒளி) ஏற்றல் என்றாலும்
நம்முள்ளத்து இருள் அகலவே
இறையருள் கிடைக்கக் கொண்டாடும் நாளே!
அடடே! கொஞ்சம் எண்ணிப்பாரு...
தீபத் திருநாளில் இறையருள் கிடைக்குமா?
கிடைக்குமடா கிடைக்கும் நம்பு - நீ
உனது கெட்ட செயலில் ஒன்றையாவது
தீபாவளியன்று உன்னிலிருந்து அகற்றினாலே!
எண்ணைக் குளியலோட சனியன் போயிற்றா?
இல்லையென்றே வெடி கொழுத்துகிறாய்...
வெடி வெடித்துச் சிதறுவது போல
உள்ளத்தில் வேரூன்றிய கெட்ட எண்ணங்களை
எட்ட விரட்டினால் சனியன் ஓடிடுமே!
இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் சமய வழக்காகவும்
ஏனையோர் பண்பாட்டு வழக்காகவும் தானாம்
நன்நாளெனத் தீபாவளியைக் கொண்டாடுகிறாங்களே!
தீபாவளியில் தீபம்(ஒளி) ஏற்றிப் பயனில்லை
ஒளி காட்டும் வழியென எண்ணி - அன்று
என்றும் நல்லவராக வாழ்வோமென உறுதியெடு!

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வெண்நீரும் செந்நீரும் போல...

சங்க இலக்கியத்தில் காதல் தான் அதிகம் பாடு பொருளாகக் காணப்படுகிறது. சும்மா சொல்லக் கூடாது; இப்பவும் அதிகம் காதலைப் பற்றித் தான் எழுதுறாங்க... ஆனால், அன்று இலக்கணக்(மரபுக்) கவிதை இன்று புதுக்கவிதை.

பாடல் உருவாகக் காரணம் மழை தானாம்... வழியாலே போன, வந்த காளையும் வாலையும் பெய்த மழைக்கு ஆங்கே ஒதுங்கினராம்... பெய்த மழையும் சற்று நேரம் கழித்துத் தான் ஓய்ந்ததாம்... அந்தச் சற்று நேரத்திற்குள்ளே காளையும் வாலையும் என்ன தான் எண்ணியிருப்பாங்க... மழை ஓய்ந்ததும் இருவரும் விலகிச் செல்கையில் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. (சங்ககாலத்து இலக்கியத்தில் பெரும்பாலான பாடல்களில் தலைவன் அல்லது தலைவி கூறுவதாகவே அமைந்து இருக்கும்.)

சங்ககாலத்து இலக்கியப் பாடல்:

             யாயும் ஞாயும் யாராகியரோ
             எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
             யானும் நீயும் எவ்வழி அறிதும்
             செம்புலப் பெயல்நீர் போல
             அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
                                (குறுந்தொகை: 40 ஆவது பாடல்)

சங்ககாலத்து இலக்கியப் பாடலுக்கான விளக்கம்:

‘என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லாதவர்கள். நானும் நீயும் முன் பின் தெரிந்தவர்களா? இல்லை. இப்படி எந்த வழியிலும் உறவே அற்ற நம் இருவரது மனமும் செம்மண்ணில் விழுந்த மழை நீர் எப்படித் தன்நிறம் மாறிச் சிவந்த நிறமுடையதாக மாறுகிறதோ, செம்மண்ணும் எப்படி மழை நீருடன் கலந்து குழைந்து சேறாகி விடுகிறதோ அதுபோல நம் மனங்கள் ஒன்றோடு ஒன்று காதல் என்ற உணர்வால் கலந்தனவே’ என்று தலைவன் தலைவியிடம் பேசும் இப்பாடல், உலகத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி எல்லா மக்களிடமும் காணக்கூடிய ஒரு பொது உணர்வான ஆண், பெண் காதல் பற்றிப் பேசுகிறது.. (இவ்விளக்கம் http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051442.htm தளத்தில் காணப்படுகிறது.)

எங்கிருந்தோ வந்த காளையும் நடைபோட, எங்கிருந்தோ வந்த வாலையும் நடைபோட, பெய்த மழை இருவரையும் ஒதுங்க வைச்சிருக்கு. ஒதுங்கிய இடத்தில ஆளையாள் பார்க்காமலே, தாம் வந்த வழியை எண்ணிப் பார்த்திருக்காங்க... இன்றைய வசதிகளற்ற மண் வழி(வீதி); சிவப்புக் (செம்மை) கலந்த மண் வழி(வீதி); வெண்மையான மழைநீர் கொட்டி, வழியில்(வீதியில்) தெறித்து மண் கரைய வெண்நீரும் (மழைநீர்) செந்நீராக (மண்ணும் மழைநீரும் கலந்த) மாறியதைப் பார்த்திருக்காங்க... வழியை(வீதியை) பார்த்துக்கொண்டே தம் உள்ளத்தில் ஆளையாள் எண்ணிப் பார்த்திருப்பாங்க... என்றவாறு பாபுனைந்த பாவலரின் பார்வை அமைந்திருக்கிறது.

அறியாதவர் தெரியாதவர் சந்தித்தால் ஒருவரை ஒருவர் அறிய முனைவர். அதுவும் எதிர்ப்பாலார் சந்தித்தால் ஒருவரை ஒருவர் எண்ணிக்கொள்ள அதிகம் (முக்கியமாகக் காதல்) இருக்கலாம். சந்தித்தவர்கள் பிரியும் போது சிறு உளமாற்றம் இருக்கத்தானே செய்யும். இந்தச் சங்ககாலத்து இலக்கியப் பாடலைப் புனைந்தவர் இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு மழைக்கு ஒதுங்கிய வேளை வெண்நீரும் செந்நீரும் போல ஒருவர் உள்ளத்தில் ஒருவர் கலந்துவிட்டதாகக் காதல் அரும்பிவிட்டதாகப் பாடிமுடிக்கிறார். இப்பாவைப் புனைந்தவர் யாரென்று அறியப்படாமையால்; அவரை, "செம்புலப் பெயல்நீரார்" என்று அவர் கையாண்ட உவமையினையே காரணப் பெயராகக் கொண்டு பதிவு செய்திருக்கிறார்கள் போலும்.

பாப்புனைய முனைவோருக்கு செம்புலப் பெயல்நீரார் பாடல் நல்லறிவைப் புகட்டும் என நம்புகிறேன். அவரது பாடலமைந்த சூழலும் பாட்டில் வெளிப்படுத்திய கருத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். மழையால் நிகழ்ந்த சூழல் மாற்றத்தையும் மழைக்கு ஒதுங்கியவர்களின் உள்ளத்து மாற்றத்தையும் உவமித்துப் பாபுனைந்த திறத்தைப் படித்துச் சிறந்த பாக்களை நாம் புனைய முயல்வோம்.

சொந்தம் பந்தம் தெரியாது போனாலும்
எந்தன் பார்வை உந்தன் அழகிலே
முந்திப் பிந்தி அறியாது போனாலும்
இந்தக் கணம் உன்னில் விழுந்தேனே
"வந்த மழைக்கு வந்தொதுங்கியே!"

இப்படி ஒரு குறும்பா நான் புனைந்தால், அழகிலே விழுந்தாகப் பொருள் கொள்ளலாம். அப்படியாயின் சூழலை மறந்து கீழ்த்தரமான எண்ணத்தில் எழுதியதாகக் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே எதுகை, மோனை அமைந்தால் போதாது உவமை, ஒப்பீடு, உயர்ந்த எண்ணம் எல்லாமே பாப்புனைய முனைவோர் தெரிந்திருக்க வேணடுமே!

பிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.
(தொடரும்)

ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போச்சு

வெட்டை வெளி வழியின் இரண்டு ஓரங்களிலும் கறுப்பும் சிவப்புமாக கண்ணைப் பறிக்கும் ஈச்சம் பழமும் காயும் நிறைந்த பற்றை. வாலையொருத்தி அவ்வழியே நடைபோட காற்றோடு மழை வந்து
அவளை மோதியது. குடையை விரித்த வாலை கூப்பிடு தூரம் போயிருப்பாள். நனையாமல் வீடு போக வழியின்றி, ஆங்கொருகாளை தலை நனையாமல் பனை வடலியோலையை வளைத்துப் பிடித்த வண்ணம் நின்றான். நேர்கோட்டில் காற்பெருவிரலை வைத்தவண்ணம் நடைபோட்ட வாலையோ அவனைக் காணவில்லை.

சுறுக்காய் என்னைக் கொஞ்சம் பாருங்களேன்!
நறுக்காய் பகைக்காமல் எனக்கு உதவுங்களேன்!
உன் குடை விரிப்பின் விளிம்புக்குள்ளே
என் தலையைக் கொஞ்சம் நுழைக்கட்டுமா?

காளையின் குரலொன்று காதைக் கிழித்துக்கொண்டு வரும் பக்கம் வாலையும் திரும்பினாள். அவளும் அப்பாவி என்ன தான் செய்வாள். தன் தம்பியோ அண்ணனோ இப்படி நனைந்தால் எப்படியிருக்கும் என
நினைத்தாள்.

எப்படி என்னை எடைபோட்டியோ நானறியேன்
இப்படி நீ பனை வடலிக்குள்ளே ஒதுங்கலாமோ?
எப்ப தான் இந்த மழை ஓயுமோ தெரியேல்லை
இப்படி வாவேன் நீயும் என் குடைக்குள்ளே!

ஏதுமறியாக் காளையின் உள்ளத்திலும் எப்பன் பயம் பொத்திக்கொண்டு வந்தது. வாலையின் அப்பனோ அண்ணனோ தம்பியோ கண்டால், "வாலைக்குத் தொல்லை கொடுத்ததாய்" அடிப்பாங்களென அஞ்சினாலும் மழைக்காகக் குடைக்குள் நுழைந்தேனென்று சொல்லலாமென எப்பன் துணிந்தான்.

உன் முகம் காண மழை வந்து மோதியதோ
என் நிலை கண்டு நீயும் கடவுளாய் வந்தாயோ
உன் உரிமை கிடைத்த பின்னும் ஒதுங்கலாமோ
என் தலைக்குக் குடைபிடிக்கும் உனக்கு நன்றி!

இருவேறு எண்ணங்களைச் சுமந்து கொண்டு தெருவழியே நடைபோட்ட இருவரும் சாட்டுக்கு மழை வந்ததால் தான் ஒரே குடையில் செல்ல
வேண்டியதாயிற்று. பயந்து பயந்து நடைபோட இருவரும் சிறிது தூரம் சென்றாயிற்று.

நரம்பு இல்லாத நாக்கால நன்றியா
நெருங்கி வந்த பின்னால நானார்
வெட்டிப் பேச்சு வேண்டாம் - என்னையே
கூட்டிப் கொண்டு போவேன் உன்னோடு!

அட கடவுளே! இப்படியும் கேட்பாளென நான் நம்பவில்லையே! வீட்டுக்குக் கிட்ட நெருங்க இப்படிக் காதுக்குள்ளே குண்டு வைக்கிறாளே எனக் காளையும் சிந்தித்தான்.

காட்டில கண்டதால குடைக்குள்ளே வந்ததால
மாட்டும் எண்ணத்தில இப்படியும் கேட்கலாமோ
ஏட்டில எழுதினபடி வருவாள் ஒருத்தி
விட்டிட்டுது மழை என்னையும் விட்டுவிடு!

தன்னோடு முட்டாமல், உரசாமல், தடிமன் வராமல் தலையை மட்டும் குடைக்குள் ஓட்டிக் கொண்டு வந்தவனின் ஒழுக்கம் நன்றென்றுணர்ந்த வாலையும் அவனை விட்டபாடில்லை.

கண்ணாடி நிற மழை நீரும்
கால் பட்ட செம்மண்ணும்
சாணுயரத் துள்ளிப் பாயுது செந்நீராய்...
எண்ணிப் பார்த்தும் எட்டிப் போகலாமோ?

வீட்டில கிழங்கள் எனக்குப் பெண் பார்க்கிறது இவளுக்கு எங்கே தெரியப்போகிறது. கண்ட இடத்தில கண்டவளைக் கைப்பிடிப்பது நல்லதும் இல்லை. எல்லாவற்றையும் நினைத்துக் காளையும் குழம்பிப் போகிறான்.

வழியிலே வந்தோம் விழிகளில் நுழைந்தோம்
மழைநீரும் வந்தே செம்மண்ணில் கலந்தாச்சு
உண்மையில் நானும் என்முன்னே நீயும்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகிப் போச்சு!

குழம்பிய காளையைப் பார்த்து, இதற்கு மேலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் ஏட்டில எழுதினவள் நானென்றால் எப்போ ஒரு நாள் இணைவோம். "எல்லாவற்றுக்கும் முன் எங்கள் உள்ளங்கள் கலந்தாச்சே!" என்று காளையிடம் வாலை விடைபெற்றாள். காளையின் உள்ளத்திலும் வாலை நுழைந்ததான உணர்விருக்க "குடையும் மழைநீரும்
செம்மண்ணும் செந்நீரும்" என்றும் உங்களை நினைவூட்டுமென காளையும் விடைபெற்றான்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)
--------------------------------------------------------------------------------------------
குறிப்பு:தமிழ் நண்பர்களே! இக்கதையின் சுருக்கம் ஓர் சங்க இலக்கியப் பாடலில் இருக்கு. அப்பாடலைக் கீழே தருகின்றேன்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

நம்ம வீட்டுப் பாட்டுக் கேட்குதா?


'கா' 'கா' எனக் கரையும் காகமே
'கூ' 'கூ' எனக் கூவிடும் குயிலே
நம்ம வீடு என்னவாய்க் கிடக்கு!
                     ('கா' 'கா')

கூரைக்குக் கூரை பறக்கும் காகமே
வேலிக்கு வேலி தாவிடும் குயிலே
நம்ம வீடு என்னவாய்க் கிடக்கு!
                     (கூரைக்குக் கூரை)

நான் படும் பாட்டைப் பாரும்
நாலு காசு வீட்டுக்கு அனுப்பவே
அரசார் சுரண்டும் வரிகளைப் பாரும்
நாடறிய நம்மவர் வயிற்றை எரிக்கவே
                       ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

உண்டு வளர்ந்தேன் படித்து நிமிர்ந்தேன்
அகவைக்கு வர அவளையும் கட்டினேன்
ஆண்டுக்கு ஒன்றாய் ஆறைப் பெற்றேன்
எட்டும் வாழ முட்டுப் படுறேன்
                        ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

நம்ம வீட்டில இல்லாளும் நலமா
நம்ம பிள்ளை குட்டியும் நலமா
நேற்றைய காற்றுக்குக் கூரையும் பறந்திச்சா
நேற்றைய மழைக்கு வீட்டில வெள்ளமா
                         ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

காற்றும் மழையும் இன்றும் வாட்டுதாம்
இல்லாளும் கேட்டால் சொல்ல மாட்டாளாம்
நம்ம பிள்ளைகளும் பசியாலே அழுவாங்களாம்
நம்ம ஆண்டவரும் நம்மவருக்கு உதவாராம்
                        ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

வானத்தைப் பார்த்தால் ஓய்ந்த பாடில்லை
வீட்டை நினைத்தால் உள்ளத்தில் ஓய்வில்லை
வேலைக்குச் சென்றால் அமைதி எனக்கில்லை
வீட்டிற்குப் போனாலே மகிழ்வுக்குக் குறைவில்லை
                        ('கா' 'கா')
                      (கூரைக்குக் கூரை)

பணித்தளத்தில் இருந்து பணியாள் ஒருவர் பாடியதாக எழுதியது.

வள்ளுவரின் அறிவு

ஒன்றே முக்கால் அடி வெண்பாவில்
இன்றே படிக்க வேண்டிய எல்லாம்
சொல்லி வைச்ச வள்ளுவரின் அறிவை
சொல்லிச் சொல்லிப் படித்தால் பாரும்
"பேரறிஞராவது நம்மாளே!"

 நம்மாளுகளே நாளுக்கு நாள் நாடுவது
நம்மட வாழ்வுக்கு வேண்டிய அறிவையா
அம்மா, அப்பாவை மதிக்காம விளையாடிட்டு
சும்மா வேலை இல்லாமல் இருக்கையிலே
"படிப்பது வள்ளுவரின் குறளே!"

 குறளே அமைந்தது ஈரடிகளால் தான்
நாற்சீரும் முச்சீருமாய் நறுக்கெனத் தான்
நாம படிக்கப்பழக வாழவெனத் தான்
நமக்கெனப் பாடிய 1330 குறளில் தான்
"பல்துறை அறிவு மின்னுமே!"

 மின்னல் வேகத்தில் புரியாது போனாலும்
கற்றதும் முச்சுவையைக் கண்டு கொள்வாய்
 எழுதுவோர் எல்லோரும் எடுத்துக் காட்டுக்காய்
எடுத்துக் காட்டுவது வள்ளுவரின் குறளையே
"திருக்குறள் என்றும் வழிகாட்டுமே!"

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...

ஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு, கைகள் நிரம்ப அடுக்கி இருப்பினம்.

 அவ்வீட்டு அழகு மயில் தெருவழியே ஆடிவர, ஆங்கொருவன் "என்னைக் காதலிப்பாயா?" என விருப்பம் கேட்டான். அதையறிந்த எதிர் வீட்டான்,'விருப்பம் கேட்டவன்' கெட்டவன் என்றும் தன்னை விரும்பென்றும் அவள் வீட்டை நாடிக் கேட்டான். ஊரெங்கும் இந்தக் கதை பரவ, "எங்கட பிள்ளைக்கு உங்கட மகளைச் செய்து வையுங்கோ" எனச் சில பழசுகள் அவ்வீட்டாரைக் கேட்டனர்.

 அடுத்தடுத்து இரண்டு மூன்று நாள் தொடரந்து நள்ளிரவில் கள்ளர் அவ்வீட்டுப் பக்கம் படையெடுத்தனர். ஒரு நாள் கள்ளர் வீடுடைத்துத் திருடியும் அவ்வீட்டார் சோர்வின்றி இருந்தனர். ஒரு நாள் அவ்வீட்டு அழகு மயிலைக் கடத்தவும் சிலர் முயன்றனர். ஊர் ஒன்று கூடியதால் அம்முயற்சியும் தோல்வியுற்றது.

 உண்மையான வீட்டு உரிமையாளர் ஊருக்கு வந்து சேர்ந்ததும், புதிதாய் வந்திருந்த குடும்பத்தை வெளியேற்றினார். புதுக் குடும்பமோ ஊரின் ஒரு கோடியில் ஓலைக் குடில் ஒன்றில் ஒதுங்கினர்.

 இவர்களுக்கும் இந்நிலை வந்து சேருமோ என ஊரார் ஆய்வு செய்த வேளை அவர்களது உண்மை கசிந்தது. வேற்றூருகளுக்குச் சென்று பிச்சை எடுத்துக்கொண்டு வந்து குடும்பம் நடத்தியவர்கள் என்றும் போட்டிருந்தது எல்லாம் போலித் தங்கம் என்றும் ஊரறிந்தது.

 காதல், திருமண விருப்பம் கேட்டோருக்கும் பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்ய இருந்தோருக்கும் உண்மை தெரிய வரத் 'தலைக்குனிவு' தான் கைக்கெட்டியது.

சும்மா... சும்மா... சும்மா...

விடிகாலை எழுந்து எல்லா வீட்டுப் பணிகளையும் முடித்துக் கொண்டு வெள்ளை தன் செயலகத்துக்குச் சென்றான். செல்லும் வழியில் அவனுடன் பணியாற்றும் அழகியும் இணைய இருவருமாகச் சென்றனர். வழி நடுவே சந்தித்த சிவப்பியும் கறுவலும் மோதிக்கொள்ள அவர்களைச் சுற்றி மக்கள் குழுமினர்.

சிவப்பி : எத்தனை நாளாக உன் பதிலைக் கேட்கக் காத்திருப்பது. இன்றாவது சொல்லேன்... என்னை நீ விரும்புகிறாயா?

கறுவல் : எவர் மீதும் நான் வெறுப்புக் கொண்டதில்லையே!

சிவப்பி : வெளிப்படையாகத் தான் கேட்கிறேன்... என்னை நீ மணமுடிக்க மாட்டாயா?

கறுவல் : மணமுடித்து மனைவியை இழந்தவனிடம் கேட்கின்ற கேள்வியா? அதுவும் என் கரிமூஞ்சியைப் பார்த்துக் கேட்பதா? சும்மா எத்தனையோ அழகான சிவலைகள் இருக்கிறாங்கள்... அவங்களில நல்ல ஆளைப் பார்த்து மணமுடிக்கலாமே!

சிவப்பி : சும்மா கோடிக் கணக்கில ஆட்கள் இருக்கலாம்... சும்மா எவனையும் மணமுடிக்கலாமே! சும்மா நீங்களும் தனியாளாக எத்தனை நாளாக இருக்கப் போறியள்?

கறுவல் : சும்மா இருக்கிற ஆள் நானில்லைப் பாரும்!

சிவப்பி : அப்ப என்ன தான் பண்ணிக் கிழிக்கிறியள்?

கறுவல் : எண்பதில அம்மா, நூறில அப்பா இருவரையும் பார்த்துப் பேணுகிறேன். போதாக்குறைக்கு ஆறு மாதக் கைக்குழந்தை, அதையும் நான் தான் பார்த்துப் பேணுகிறேன்.

சிவப்பி : உதுக்கெல்லாம் உங்களிடம் இருக்கிற பொறுப்புணர்வைப் பார்த்துக் கேட்டுத் தெரிந்த பிறகு தான் கெஞ்சுகிறேன். உங்கட பணிகளை நானும் சேர்ந்து செய்வேன். அப்ப நாமிருவரும் மகிழ்வாய் இருக்கலாம். என்னை மணமுடிக்க விரும்புங்களேன்.

சிவப்பி அழுதழுது கெஞ்சியதைப் பார்த்த மணமாகாத மங்கை ஒருத்தி, கண் கலங்கியபடி ஆண்களைப் பெண்கள் இவ்வாறு கெஞ்சக் கூடாதென சிவப்பியின் முகத்தைத் தனது கைக்குட்டையால் துடைத்தவாறு அவளது உள்ளத்தைத் தேற்றினாள்.

"இஞ்ச வா தம்பி, உன்ர அடி, நுனி தெரிந்த பிள்ளையால தான் உங்கட குடும்பத்தை நல்லாய்ப் பேணமுடியும். நீ தேடினால் உவளைப் போல ஒருத்தி கூடக் கிட்ட வராள். கெஞ்சிற பெண்ணை விஞ்சி, கட்டையிலே போகும் வரை தனிக்கட்டையாய் தானிருப்பாய்." என்று எதிரே நின்ற கடுக்கன் போட்ட பழுத்த கிழவன் செய்த மூளைச் சலவையால கறுவலின் உள்ளம் சற்று இளகியது. தானும் தன் கைக்குட்டையால் சிவப்பியின் முகத்தைத் துடைத்த பின் கைப்பிடியாய் கூட்டிச் சென்றான்.

வாழ்க்கையிலே இப்படியான இணையர்கள் சேருவது அருமையென அவரவர் கலைந்து சென்றனர். செயலகத்திற்கு நடைபோடத் தொடங்கிய வெள்ளை, அழகியைத் தேடினான். மார்புச் சட்டை நனைய அழகி ஒரு கோடியில் அழுதவண்ணம் ஒதுங்கி நின்றாள். "வழி வழியே சும்மா சும்மா ஆளுக்காள் மோதுவாங்கள். உதுக்கெல்லாம் கண்ணீர் வடித்தால் நாங்கள் எப்படி முன்னேறுகிறது." என்று அருகிலிருந்த பத்மினி புடவை மாளிகையில் மேற்சட்டை ஒன்றை வெள்ளை வாங்கிக் கொடுத்தான். அதனை வேண்டிய அழகியும் எதிர் வீட்டில் சென்று மாற்றி உடுத்தி வந்தாள்.

வெள்ளையும் அழகியும் கதைத்துக் கொண்டு பணி செய்யுமிடத்தை நெருங்கிவிட்டனர். கதையோடு கதையாக " தன் கணவர் முதலிரவை முடித்துக் கொண்டு பணிக்குச் சென்ற முதல் நாளே கனவூர்திச் சில்லுக்குள் சிக்கிச் சாவடைந்ததையும் தான் நான்கு மாதம் நீண்ட வயிற்றைச் சுமப்பதையும்" கண் கலங்கியபடி அழகியும் சொல்லி முடித்தாள்.

"சும்மா சும்மா புழுகாதையும்" என வெள்ளை வயிற்றிலே கையை வைத்துப் பார்த்தான். முகத்தோடு முகம் பார்த்துக் கதைத்து வந்த வெள்ளைக்கு, அந்நேரம் தான் அழகியின் வயிற்று வீக்கம் தெரிந்தது. "சும்மா சும்மா அழுது புழுங்கி உள்ளத்தைப் புண்ணாக்காதையும் நீங்கள் விரும்பினால் வயிற்றிலே வளரும் குழந்தைக்கு நானே அப்பாவாகிறேன்" என்று வெள்ளை அழகியை அணைத்துக் கொண்டான்.

"என்னை ஆற்றுப்படுத்தச் சும்மா வெடிக்காதையும்" என்றாள் அழகி. "சும்மா இல்லை, உண்மையாகத் தான்" என்று வெள்ளை அவளைக் கொஞ்சினான். அப்ப தான் அழகியின் நெஞ்சு குளிர்ந்தது. "செயலகம் வந்து விட்டது" என அழகி அவனது கைகளை விலக்கினாள். செயலகப் படலையைத் திறந்து இருவரும் மகிழ்வோடு அன்றைய நாள் பணியைத் தொடங்கினர்.
(எல்லாம் புனைவு / யாவும் கற்பனை)

நல்லாப் படிச்சவர்!

ஓர் ஊரில
ஓராள்
"நான் எவ்வளவோ படிச்சனான்" என்று
அடிக்கடி சொல்வாராம்!
ஒரு நாள்
ஊரின் ஒதுக்குப் புறத்தே வாழ்ந்த
ஓராளுக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்பளிப்புக் கிடைச்சதாம்!
அங்குமிங்கும் எங்கும்
ஒரே கொந்தளிப்பு
பணம், படிப்பு என்று
மின்னியோர் இருக்க
மூலைக்குள்ளே முடங்கியவருக்கு
மதிப்பளிப்பா என்றாம்!
"எவ்வளவோ படிச்சனான்" என்றவருக்கு
மதிப்பளிக்காமல்
ஓர் ஓரமாய் இருந்தவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்று
மதிப்பளிப்பது பிழையென்று
ஊருக்குள்ளே ஓரு குழப்பமாம்!
எவ்வளவோ படிச்சதுக்கு
கட்டுக் கட்டாய்ச் சான்றிதழ்கள்
இருந்தும் கூட
நாலஞ்சைப் படிச்சவருக்கு
"நல்லாப் படிச்சவர்" என்ற தகுதியாம்!
குழம்பிப் போன ஊருக்குள்ளே
எரியிற நெருப்பில
நெய் ஊற்றினால் போல
கல்வி என்பது
பணத்தாள்களின் எண்ணிக்கையில்
சான்றிதழ்களின் எண்ணிக்கையில்
இல்லையாம் என
ஆங்கொருவர் வாயைப் பிளந்தாரம்!
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." என்றால்
"பிழையின்றிக் கற்று,
பின்
கல்வி தந்த அறிவின் வழி
செல்லல் வேண்டும்." என்று
வள்ளுவரும் சொன்னாராம்!
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியம்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் சொன்னாராம்!
அடி தடிக்கு ஏற்பாடாக முன்னே
மதிப்பளித்தோர் வந்தனராங்கே...
கல்வி என்பது கற்றவரிடமிருந்து
பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் என்ற
நோக்கில் என்றனராம்!
எல்லோரும்
தலையைச் சொறிந்து கொண்டு
ஊரோரமாய் அந்தப் பக்கம்
"நல்லாப் படிச்சவர்" என்ற
மதிப்புப் பெற்றவர் செய்ததைக் கேட்க
பணக்காரர், படித்தவர் பலரை ஆக்கிய
வழிகாட்டியும் ஆசிரியரும் அவரே என
மதிப்பளித்தோர் பதிலளித்தனராம்!

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்


சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை,
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் 03/01/2014 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடாத்தவுள்ளது, உலகெங்கும் தமிழ் பரவ, உங்கள் பாவண்ணத்தையும் வெளிப்படுத்த முன் வாருங்கள். இந்நிகழ்வு பற்றிய எல்லாத் தகவல்களையும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
http://tamilkavinjarsangam.yolasite.com/75hours-kaviarankam.php

"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்" யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர்கள் "திருக்குறளே தேசிய நூல்" என்பதை
மையப்படுத்தி மாநாடு ஒன்றினை 2013 ஜுன் 16-ம் திகதி அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் சிறப்பாக நடாத்தி இருந்தைமை யாவரும் அறிந்ததே! அன்றைய நாள் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பு நூலினையும் வெளியிட்டுள்ளனரே! அந்நூலில் இடம் பெற்ற எனது கவிதையினைக் கீழே பார்வையிடலாம்.

திருக்குறளே தேசிய நூல்

நாற்சீரும் முற்சீருமாய் ஈற்றில் தனிச்சீருமாய்
ஏற்றதொரு அறிவை ஊட்டிவிடவே
ஒன்றே முக்காலடி வெண்பாப் பாடிய
இன்றே நினைப்பாய் வள்ளுவரை!

வள்ளுவர் பாடிய 1330 குறளில்
கிள்ளிக் கிள்ளிப் படித்துச் சுவைக்க
அள்ள அள்ள வற்றாத அறிவுக்கடல்
மெள்ள முப்பாலில் ஊற்று எடுக்குமே!

எடுத்த எடுப்பிலே அகரந் தொட்டு
கொடுத்த அறம் (தர்மம்), பொருள், இன்பம் (காமம்) என
நம்மாளுகளின் வாழ்வை விளக்கும் வழிகாட்டல்
எந்நாளும் நமக்குத் திருக்குறளே நன்நூல்!

நன்நூலாம் திருக்குறள் சுட்டும் முப்பாலில்
நன்றே பாயிரம், இல்லறம், துறவறமாக
அறத்துப்பாலில் ஊழியலும் இணைத்து நான்காக
சிறப்பாகத் திருக்குறளின் முதற்பால் இனிக்குமே!

இனிக்கும் திருக்குறளில் பொருட்பாலைப் பாரும்
தனித்தனியே அரசியல், அமைச்சியல், அங்கவியல்
அடுத்துவரும் காமத்துப்பாலைக் கற்றுக் கொண்டால்
தொடுத்தார் களவியல், கற்பியலென வள்ளுவர்!

வள்ளுவர் பாடிய 133 பத்தில் (அதிகாரத்தில்)
கிள்ளியெடுக்க எல்லாத்துறை அறிவும் இருக்கே
எண்ணிப்பாரும் குறள்வெண்பா கூறிடும் முழுவறிவை
எண்ணிக்கொள்ளும் திருக்குறளே நம்தேசிய நூலென்று!

மேலும், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் என் கவிதையும் இடம்பெற்றது. (சான்று: http://www.ypvnpubs.com/2013/02/blog-post_21.html) "திருக்குறளே தேசிய நூல்" என்ற மாநாட்டில் மேலே குறிப்பிட்ட 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவி முரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர். அம்மதிப்பு உங்கள் யாழ்பாவாணனுக்கும் கிடைத்தது என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பாதணி (செருப்பு)


(மேலுள்ள படத்தைப் பார்த்ததும் எழுதியது)

”பாதணி” என்று
தலைப்பிட்ட போது தான்
சடையப்ப வள்ளல் வளர்த்த
வான்மீகியின் இராமாயணத்தை
கற்பனை அலை வீசும் கடலாக
இராமனின் பாதணியை வைத்து
பரதன் அண்ணன்
அயோத்தியை ஆண்ட கதையை
சுந்தரத் தமிழில்
காவியமாய்ப் பாடி முடித்த
கம்பரை மீட்டுப் பார்த்தே
கா(பனை)வோலைக் கால்களை
வெட்டிப் பாதணி போட்டவர்களும்
குளிர்பானக் குடுவையை (போத்தலை)
தட்டையாக்கிப் பாதணி போட்டவர்களும்
நினைவில் வர - அவை
நம்ம ஈழ மண்ணில் நிகழ்ந்த
போரினால் ஏற்பட்ட வடுவாக
மறக்க முடியவில்லைக் காணும்
எனது அருமை உறவுகளே!
புதுப் பாதணி கடிக்கும் என்பது
நாம் படித்த பழமொழி
கடிக்கும் பாதணி உடனே
கல்லும் முள்ளும் குத்தும்
கால்களுடன் நடைபோட்ட
ஈழத்து உறவுகளை
எம்மொழியில் படித்தேனும்
உலகம் கண்டும் உதவவில்லையே!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 01


அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன். இப்பகுதியில் அசை, சீர் பற்றிய கேள்விகளும் விளக்கங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அடுத்த பகுதி அடுத்த பதிவில் தர விரும்புகிறேன்.


இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

சான்றுகள்

நம்மாளுகள்
வாழ்கையின் கண்ணாடி!
நம் கலைஞர்கள்
மக்களாய(சமூக)த்தின் கண்ணாடி!
எமது காலம்
வரலாற்றுக் கண்ணாடி!
எந்த ஆண்டவனே வந்தாலும்
இந்த உண்மையை மாற்ற இயலாது!
பொய்கள்
காற்றிலே பறந்தாலும்
காற்றைக் கிழித்துக் கொண்டு
நாங்களே
உண்மைகளை நாடுகிறோம்!
ஆமாம், உண்மைகள்
அவ்வளவு கனமானவை!
வாழ்கையின் சான்றாக
"தாய்மையே வாய்மை" என்று
ஒரு வரிப்பாவில் கூறுவது பொய்யா?
ஓ! மனிதா!
ஒதுங்கித் தனித்து நின்று
ஒழிந்து - நீ
எதைச் செய்தாலும்
எப்போதும் ஊரறியச் சான்றுகள்
எண்ணிலடங்காமல் இருக்கே!

எதற்கு எதை மாற்றுவது?


தந்தையோ தன்னைப் போல
மருத்துவராக வாவென்று...
தாயோ தன்னைப் போல
பொறியியலாளராக வாவென்று...
பிள்ளையோ தனக்கு இலகுவானது
மருத்துவமும் பொறியியலும் கலந்த
உயிரித் தொழில்நுட்பம் தானென்று...
முக்கோண உச்சிகளாக
மூவரும் முரண்டு பிடிக்கையில்
எவரது உள்ளத்தில் எதை மாற்றுவது?
உலகெங்கும்
அறிவியல் வானைத் தொட
ஊரெங்கும்
மெய்யறிவு முகட்டைத் தொட
வீட்டில் பிள்ளைகள்
திரைப்பட நடிகர்கள் காட்டும் வழியில
தாங்களே பயணப்பட
எவர் போக்கில் எதை மாற்றுவது?
பெற்றவர்கள் தங்கட போக்கில
பிள்ளைகள் தங்கட போக்கில
ஊடகங்கள் தங்கட போக்கில
பள்ளிகளின் ஒழுக்கம் கிடப்பில
ஆசிரியர்கள் தங்கட நடப்பில
சிறார்கள் தாம் விரும்பிய வழியில
ஊரோ உருப்பட முடியல
நாடோ பின்னோக்கிய நடையில
நாட்டு வளம் குறுகும் நிலையில
மக்கள் வளம் தேயும் நேரத்தில
எல்லாம் அரசுப் பதவிகளில
உள்ளவர் கைகளில உருளுவதால
நாமும் ஊரும் நாடும் முன்னேற
எங்கே எதை மாற்றுவது?
நாட்டுக்கு நாடு போரோய
நாடுகளுக்கு உள்ளே போர் வெடிக்க
போராலே துண்டுகளாக நாடுகள் உடைய
நெடுநாள் ஆட்சிக்காரர் இறங்கியோட
உயிரிழப்பும் போர் முரசும் ஓயாத
எங்கட உலகில் அமைதியைப் பேண
எப்படி எதை மாற்றுவது?
வீட்டுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகிற்கு
எங்கும் எதிலும் எப்போதும்
ஒரே கோட்பாடு நடைமுறைக்கு வர
எல்லாம் மாறும் என்றாலும்
எதற்கு எதை மாற்றுவது?

தற்கொடைச் சாவுக்கு மாற்றுவழி தேடுவோம்


உலகையே அழவைத்த
நேற்றைய
முத்துக்குமாருவைப் போல
இன்றைய
பொறியியலாளர் கிருஸ்ணமூர்த்தியும்
உலகின் முகத்தைத் திருப்ப
கண்ணீர் கதை எழுதிவிட்டார்!
"இளைஞர்களே போராடுங்கள்.
ஆனால், தயவு செய்து
உங்களின் உயிர்களை
ஈகம் (தியாகம்) செய்ய வேண்டமென
ஈழத்து யாழ் தினக்குரலில்
வைகோ கூறியிருப்பதாகப் படித்தேன்!
தன்னை ஒறுத்துச் சாவடைதலால்
உண்மையை உணர்த்தலாம்...
ஆனால்,
வெளிப்பட்ட உண்மையால் கிடைத்த
விளைச்சலைப் பயன்படுத்த
தமிழர் இல்லையெனில்
எவருக்கு நன்மை?
போராட வேண்டமென
உங்களைத் தடுக்க
எனக்கோ எள்ளளவும் உரிமையில்லை...
எப்படியிருப்பினும்
தற்கொடைச் சாவை நிறுத்தி
மாற்று வழிகளில் போராடுவதையே
பலரும் விரும்புகின்றனர்!
ஒரு தமிழன் அல்லது ஒரு தமிழிச்சி
இவ்வுலகில் வாழும் வரை
முத்துக்குமாரு, கிருஸ்ணமூர்த்தி போன்ற
தொப்புள் கொடி உறவுகள்
எல்லோரையும்
நினைவூட்டிய வண்ணமே வாழ்வர்!

எதிர்த்தான் வீழ்ந்தான்

நீண்ட நாள் எதிரி
என்னை
பிடித்துச் சிறையிலடைக்க வழியின்றி
தன்னைத் தானே அழித்த கதை
உங்களுக்குத் தெரியுமா?
மூளையைப் பாவிக்காத முட்டாள் எதிரி
எனக்கு வேண்டியதை
எவரும் வழங்காமல் செய்தும்
உறவுகளாக எவரையும்
இணைய விடாமல் தடுத்தும்
எதற்கும்
தன் காலில் விழவைத்தால்
பிடித்துச் சிறையிலடைக்கலாமென
எதிர்த்தான் வீழ்ந்தான்!
ஒர் உறவை முறிப்பதனால்
புதிதாய் எந்த உறவும்
முளைப்பதில்லை
புதிதாய் இணைந்த உறவால்
பழைய உறவுகள்
முறிவதைப் பார்க்கிறோம்
எதிரிக்கு எட்டுமா - இந்த
உண்மை!
"ஆயிரம் நண்பர்களை
வைத்துக்கொள்
ஒர் எதிரியை ஏனும்
உருவாக்கி விடாதே" என்றுரைத்த
பாவரசர் கண்ணதாசனின் வழிகாட்டலின் படி
இயன்றவரை
கைக்கெட்டியதைக் கையாண்டதால்
நானோ
எதிரியின் பிடியில் சிக்கவில்லை!