Translate Tamil to any languages.

புதன், 13 மே, 2026

காதல் என்பது பொய் என்கிறாங்க

 


காதல்
ஒரு பருவக் குழப்பம் என்கிறாங்க...
எவர் அழகானவரோ
எவர் பணக்காரரோ
என்றெல்லாம் பழகுவதும்
இவரை விட அவர் அழகு
இவரை விட அவர் பணக்காரர்
என்றெல்லாம் ஆளையாள் மாற்றுவதாலே!
காதல்
ஒரு சுவைக்கும் வழி என்கிறாங்க...
ஆண் பெண்ணைச் சுவைத்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
பெண் ஆணிடம் - பொன்,
பொருள், பணம் வாங்கி
வருவாய் ஈட்டி மகிழ்ந்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
இருபாலாரும்
ஆளையாள் ஏமாற்றிச் சுவைப்பதாலே!
காதல்
ஒரு உப்புக் கருவாடு என்கிறாங்க...
காதலிப்பதாகக் கூறி
ஊருக்குள்ள கேவலமாக உலாவுதால் 
ஊரவரே
காறித் துப்பிப் பழித்து நெளித்து
கேலியும் நையாண்டியும் செய்வது கூட
கருவாட்டு நாற்றம் போல பரவுவதாலே!
காதலுக்குத் தான்
கண் இல்லை என்கிறாங்க...
கிழவி குமரனையும் குமரி கிழவரையும்
தாம் காதலிப்பதாக ஊருக்குள் உலாவுவதாலே!
காதலிலும் கூட
நகைச்சுவை இருக்கு என்கிறாங்க...
கள்ளக் காதல் செய்வோருக்கு
நல்ல காதலர் கிடைக்குது...
நல்ல காதல் செய்வோருக்கு
நம்பிக்கையான ஒருவரும்
கண்ணில் தென்படவில்லையென
காதலர் கிடைக்காதவரின்
கண்ணீர் கதை அது!
உண்மைக் காதல் என்பது
வேலிக்குள் பொட்டு வைத்து
மூஞ்சியை நீட்டிக் கதைப்பதால்
உருவான நம்பிக்கையான உறவென்று
ஆச்சி, அப்புமார் சொல்லி வைச்சாங்க!

திங்கள், 13 ஏப்ரல், 2026

கடன் பற்றிய கருத்துகள்


எந்தக் கவிஞர் எழுதினாரோ
எனக்குத் தெரியவில்லை - அவை
உள்ளத்தைக் கொஞ்சம் உரசியது!

'உறவுக்கும் பகை கடன்!' என்று
ஒரு கடையில் அட்டை(தாள்) ஒன்று
தொங்கவிட்டிருப்பதைக் கண்டேன்.

'எங்கள் வாடிக்கையாளரே
எமக்குக் கடவுள் ஆகையால்
கடன் கொடுப்பதில்லை என்பதை
வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்துகிறோம்.' என
கடையொன்றில் அழகாய் எழுதி
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

'கான மயில் ஆட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து - எம்மிடம்
கடன் கேளாதீர் உறவுகளே!' என
கடை ஒன்றின் நுழைவாசலில்
எழுதப் பட்டிருந்ததை படித்தேன்.

அப்படி, இப்படி, உப்படி என்று
நானும் எழுதிப் பார்த்தேன்...

விற்பதும் வாங்குவதும்
கடனுக்கு இல்லைக் காண்பீர்
சிறந்த வணிகத்தில்
                    (துளிப்பா/ஹைக்கூ)

வாங்குவதும் விற்பதும்
வணிக வழக்கம் தான்
கடன் கொடுக்கல் வாங்கல்
வணிகத்திற்கு முரண்
                 (தன்முனைக் கவிதை)

பொருள்களை விற்றால் பணந்தான் தரவேணும்
நீதான் கடனை மற
        (இரு விகற்பக் குறள் வெண்பா)

வாங்கும் விற்கும் முறை தான்
வணிகம் என்று சொல்வார் படி
கடனை மட்டும் நாடா மல்தான்
நாளும் பழகிக் கொள்ள வேணும்
எப்பன் எண்ணிப் பாரும்
நன்றே நாளை விடியும் தானே!
                  (நேரிசை ஆசிரியப்பா)

உழைப்பே! பணம் ஈட்டுவதற்கே?
தாங்கள் கடன் கேட்டால் - நாம்
எப்படிப் பணம் ஈட்ட முடியும் காணும்!
கொஞ்சம் எண்ணிப் பாருங்கோவேன்!
                          (வசன கவிதை)

ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)


ஞாயிறு, 15 மார்ச், 2026

மருத்துவரை நாடுங்கள்


சுய(தன்) மருத்துவம் கூடாது.

மருந்து விற்பனை நிலையங்களில் நோயைச் சொல்லி மருந்து வாங்கக்கூடாது. என்றெல்லாம் பெரியோர் உங்களுக்குச் சொல்லித் தந்திருப்பர்.

சமூக ஊடகங்களில் மருந்துப் பொருள் விளம்பரம் அதிகம். அதனை நம்பி மருந்து வாங்கிப் பாவிக்கக்கூடாது.

தங்கள் நோய்க்கு மருந்தா?

விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோயா?

சிந்தித்துப் பாருங்கள்.

தங்கள் நோய்க்கு மருந்து தேவையாயின் மருத்துவரை நாடுங்கள்.

விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோய் வந்ததாகக் கருதினால் சாவு தான் வரும்.

விளம்பரதாரரோ மருந்துக் கடைக்காரரோ  தெருவோர வழிகாட்டியோ  தங்கள் உடலைப் பரிசோதித்து எந்த நோய்? எப்படி வந்தது? எந்த மருந்து, தங்கள் உடலுக்கு ஒத்துழைக்கும்? என்றெல்லாம் ஆய்வு செய்ய மாட்டார்களே! இந்தக் கேள்விகளுக்கு மருத்துவர் ஒருவராலேயே தீர்வு தரமுடியும்.

சிந்திக்க ஒரு மணித்துளி (நிமிடம்)!

மருத்துவரை அணுகித் தங்கள் நோயை விளங்கப்படுத்தி, மருத்துவ சோதனைகளைச் செய்து, மருத்துவர் கூறும் வழிகாட்டலின் படி மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதே நீண்ட ஆயுளுக்கு வழி! நானும் மருத்துவரை நாடி மாற்றார் நோயின்றி நீடூழி வாழ வழிகாட்டும் ஒருவர் என்பதனால் இதனைப் பதிவு செய்கிறேன்.

எனது கருத்தை ஏற்றுக்கொண்டால் இப்பதிவைப் பலருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

காசி.ஜீவலிங்கம் (யாழ்ப்பாவாணன்) +94703445441

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மறக்க முடியாதது ஒன்றுண்டு



எனக்கு உதவிய எவரையும்

என்னாலும் மறக்க முடியவில்லை...
மறக்க முடியாமைக்கு காரணம்
என் வாழ்வில்
நானடைந்த முன்னேற்றம் தான்!
நாம் உயர உயர ஏறினாலும்
ஏற உதவிய ஏணி போன்ற
மனிதக் கடவுளரை மறப்பது
முறையாகுமோ? - அவர்களுக்கு
என்னாலும் உதவ முடியாவிட்டாலும்
ஆண்டவா அவர்களுக்கு உதவு என்று
ஒவ்வொரு நாளும் கடவுளை வேண்டுகிறேன்!
"நீ பலனை எதிர்பாராது
பிறருக்கு உதவி செய் - நான்
உனக்கு உதவுவேன்." என
கருணை காட்டும் கடவுள் சொன்னதாக
மத வழிகாட்டலைப் பின்பற்றி
உதவும் நெஞ்சங்களைப் பணிகின்றேன்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேனிசைத் தேன்றல் தேவா, அனுருத் இன்றி எனது பாடல்

பாடல்: மாதகல் ஊரைப் பாடு

இணைப்பு: https://suno.com/s/esvIqMVPEKOWtBZd


பாடலாசிரியர்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)


பாடி, இசைத்தது:Suno(.com) AI Music App


தலைப்பு: மாதகல் ஊரைப் பாடு


எந்தன் ஊர் மாதகல் ஊர் என்பேன் 

சொந்த உறவுகள் நிறைந்த ஊர் என்பேன் 

(எந்தன்)


மாதகல் ஊரின் அழகும் சிறப்பு என்பேன் 

மாதகல் ஊரின் வளமும் சிறப்பு என்பேன் 

(மாதகல்)


சம்பில் துறை, மாத்துறை, கெவிமாதா கோவில் கரைக்கு 

கரையைத் தேடும் நுரை தள்ளும் அலை 

இரவில் தேறை, முரல் மீன் தரும் கடல் 

இந்தியக் கோடியாக்கரை தழுவும் மாதகல் கடல் 

மாதகல் ஊராருக்கு வாழ்வுதரும் கடல்வளமாம்

                              (எந்தன்) (மாதகல்)


வெளிப்புலம், கிழுவைநாட்டி மேற்குக் கரை

காடாப்புலம், உப்புத்தரவை கிழக்குக் கரை 

வவுணை, காஞ்சிபுரம் வடக்குக் கரை

பாணாகவெட்டி அம்மனுக்கு அப்பால் தெற்குக் கரை

வேளாண்மை விளைச்சல் தரும் நிலவளமாம்

                              (எந்தன்) (மாதகல்)


இந்துக் கோவில், கத்தோலிக்க ஆலையம் சூழ

எந்தக் குறையும் இன்றி ஒன்றுபட்டு வாழ

கூறுபோட்டுப் பிரியாது ஒன்றுபட்டு வாழத்தான் 

அன்பும் பணிவும் நிறைந்த ஊர் மக்கள் 

அறிவும் ஆற்றலும் நிறைந்த ஊர் மக்கள் 

உலகை வியக்க வைக்கும் மாதகல் ஊரைப்பார்

                              (எந்தன்) (மாதகல்)