எந்தக் கவிஞர் எழுதினாரோ
எனக்குத் தெரியவில்லை - அவை
உள்ளத்தைக் கொஞ்சம் உரசியது!
'உறவுக்கும் பகை கடன்!' என்று
ஒரு கடையில் அட்டை(தாள்) ஒன்று
தொங்கவிட்டிருப்பதைக் கண்டேன்.
'எங்கள் வாடிக்கையாளரே
எமக்குக் கடவுள் ஆகையால்
கடன் கொடுப்பதில்லை என்பதை
வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்துகிறோம்.' என
கடையொன்றில் அழகாய் எழுதி
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
'கான மயில் ஆட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து - எம்மிடம்
கடன் கேளாதீர் உறவுகளே!' என
கடை ஒன்றின் நுழைவாசலில்
எழுதப் பட்டிருந்ததை படித்தேன்.
அப்படி, இப்படி, உப்படி என்று
நானும் எழுதிப் பார்த்தேன்...
விற்பதும் வாங்குவதும்
கடனுக்கு இல்லைக் காண்பீர்
சிறந்த வணிகத்தில்
(துளிப்பா/ஹைக்கூ)
வாங்குவதும் விற்பதும்
வணிக வழக்கம் தான்
கடன் கொடுக்கல் வாங்கல்
வணிகத்திற்கு முரண்
(தன்முனைக் கவிதை)
பொருள்களை விற்றால் பணந்தான் தரவேணும்
நீதான் கடனை மற
(இரு விகற்பக் குறள் வெண்பா)
வாங்கும் விற்கும் முறை தான்
வணிகம் என்று சொல்வார் படி
கடனை மட்டும் நாடா மல்தான்
நாளும் பழகிக் கொள்ள வேணும்
எப்பன் எண்ணிப் பாரும்
நன்றே நாளை விடியும் தானே!
(நேரிசை ஆசிரியப்பா)
உழைப்பே! பணம் ஈட்டுவதற்கே?
தாங்கள் கடன் கேட்டால் - நாம்
எப்படிப் பணம் ஈட்ட முடியும் காணும்!
கொஞ்சம் எண்ணிப் பாருங்கோவேன்!
(வசன கவிதை)
ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)



