Translate Tamil to any languages.

வியாழன், 31 டிசம்பர், 2015

என் முதல் மின்நூலில் புதிதாய் நுழைந்தவை

புதிய ஆண்டில் புதிய நல்ல எண்ணங்களுடன் தங்கள் புதிய பயணம் வெற்றி பெற எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
2014 sept இல் 'எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்' என்ற மின்நூலை 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' ஊடாக வெளியிட்டிருந்தேன். அது எனது முதல் முயற்சி. அதிலும் குறைகள் காணப்பட்டன. அக்குறைகளைச் சற்று நீக்கி எனது முதலாவது மின்நூலை மேம்படுத்தி உள்ளேன். அவ்வேளை சில புதிய எண்ணங்களை அம்மின்நூலில் நுழைத்திருந்தேன். அவற்றைக் கீழே காண்க.

வீட்டுக்கு வீடு

பணம் உள்ள வரை தான்
உறவுகள் ஒட்டி உறவாடும்!
---

செய் + தீ = செய்தி

காற்றோடு பரவும் தீயைப் போல மக்களிடையே பரவும் தகவல்.
---

நடைபேசி

எங்கேயும் எவரைப் பார்த்தாலும்
நடைபேசியும் கையுமாக நடைபோடுவர்
"விடைபெற்றது வேறுபாடு!"
---

விளங்குகிறதா?

ஆசிரியர்: நடுச் சென்ரர் என்றால் என்னவென்று விளங்குகிறதா?

மாணவர்: ஆங்கிலத்தில 'Center' தான்; தமிழில 'நடு' என்று விளங்காதா?
---

வேறுபாடு

உண்மை கனமானது; பறக்காது பரவும்
பொய் கனமற்றது; பறக்கும் பரவாது
---

என் அம்மா சொல்கிறார்!

பெண் பிள்ளை என்றாலும் அக்கம் பக்கம் அறியாதவாறு இருக்கணும்.
---

பார்வை பிழை

ஆனா: வரும் வாலைகளில் ஒல்லி எனக்கு; குண்டு உனக்கு.

ஆவன்னா: ஒல்லி தான்டா அம்மா; குண்டு தான்டா மகள்!

ஈனா: இன்றைய காளைகளுக்கு கண்ணில பிழையோ!
---

தங்கியிருத்தல்

பகலவன் இல்லையென்றால் நிலவவள் ஒளி வீசுவாளா!
---

முக்கிய தேவை

சட்டென்று முடிவு எடுப்பதை விட
பட்டென்று விளைவை எண்ணிப் பார்!
 ---

எனது முதலாவது மின்நூல் பற்றிய தகவலறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

விரைவில் எனது 'யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01' என்ற இரண்டாவது மின்நூலை வெளியிடவுள்ளேன்.


வெள்ளி, 25 டிசம்பர், 2015

2016 தைப்பொங்கல் நெருங்கப் போட்டியோ போட்டி!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி நடாத்துவதாக 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் அறிவித்திருக்கிறது. "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்" என்பது அப்போட்டியின் தலைப்பு. 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்றும் 'ஊற்று' குழுவினர் தெரிவித்துள்ளனர். பதிவர்கள் எல்லோரும் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன். அதற்குப் பின்னூக்கமாகப் பாப்புனைய விரும்பவைக்கலாம் என இப்பதிவைத் தர முயன்று பார்க்கிறேன்.

சரி! இப்போட்டியின் தலைப்புப் பற்றி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் மீட்புப் பணியில் பங்கெடுத்தவர்களின் செயலைக் குறித்து இத்தலைப்பை இட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். எல்லாம் தெரிந்த பின்னும் பா/கவிதை புனைந்து போட்டியில் பங்கெடுக்கப் பின்னடிப்பது நல்லதல்ல.

வெறுமனே தலைப்பைத் தந்திருந்தால் பா/கவிதை புனைவதென்பது சற்றுச் சிக்கல் தான். தலைப்பிற்கான சூழலைச் சொன்னால் சட்டென்று பா/கவிதை புனைய வந்திடுமே! ஆயினும் போட்டித் தலைப்பைத் தந்தும் போட்டித் தலைப்புப் பிறந்த சூழலையும் சுட்டி பா/கவிதை புனைய அழைக்கின்றேன். இனியாவது உங்களால் பா/கவிதை புனைய முடியாதா? எடுத்துக்காட்டுக்காக 'செருப்படி' என்ற தலைப்பில் பா/கவிதை புனைந்து பார்க்கலாம் வாங்க!

"கண்டேன் கண்ணகி ஒருத்தியை
கண்ணில் நுழைந்தவள் - என்
உள்ளத்தில் குந்தியிருக்க - அவளை
'காதலிக்கிறாயா' என்று கேட்க
'தான் பிள்ளைகுட்டிக்காரி' என்று
தருவாளே செருப்படி!" என்றவாறு
தலைப்பை மட்டும் கருத்தில் கொண்டோர் பா/கவிதை புனைய முயலலாம்.

"முத்துப்பல் சிரிப்பு அழகி
எந்தன் முன்னே நெருங்க
உந்தும் உள்ளத்து உணர்வால்
நெருங்கி வந்தவளை நோக்கி
'காதலிக்கிறாயா' என்று கேட்க
'தன் கணவனைக் காதலிப்பதாய்' கூறி
கன்னம் (சொத்தை) கிழிந்து செந்நீர் (குருதி/ இரத்தம்) வடிய
குதிக்கால் பாதணியால் கொடுத்தாளே
'எவளையும் விரும்பாதே!' எனச் செருப்படி!" என்றவாறு
பட்டறிவை (சூழலை/அனுபவத்தை) வைத்து பா/கவிதை புனைய முயலலாம்.

இந்த எடுத்துக்காட்டில் 'இப்படியும் நிகழலாம்' என முதலாவதும் 'இப்படி நிகழ்ந்தது' என இரண்டாவதிலும் வெளிக்கொணர முயன்றிருப்பதைக் காணலாம். அப்படியாயின் "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்" என்ற தலைப்பில் எப்படி பா/கவிதை புனைந்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் 2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அனுப்பவுள்ளீர்கள்?

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் சிக்கியோர் இப்போட்டித் தலைப்பிற்கு இலகுவாக பா/கவிதை புனைந்து போட்டிக்கு அனுப்ப முடியும்; ஏனையோருக்குச் சிக்கல் என்கிறீர்களா? அப்படி ஒருபோதும் இருக்காதே!

கருங்கல்லைத் துளைத்தேனும் அதற்கப்பால்
என்ன, எப்படி என்றவாறு
புனைவு (கற்பனை) செய்யும் ஆற்றல்
பாவலர்/கவிஞர் என்பவரின் உள்ளத்தில்
இயல்பாகத் தோன்றும் என்றால்
நம்மால் முடியாதென இருக்கலாமோ?
கண்ணால் கண்டால் புனைவு (கற்பனை) கிட்டாதே
கண்ணால் காணாததால் புனைவு (கற்பனை) கிட்டுமே
உண்மையில் பாப்புனைய விரும்பும்
உம்மாலும் பா/கவிதை புனைய முடியுமே!
உலகெங்கும் உடனுக்குடன் உறுமிய
ஊடகங்களின் தகவலை வைத்தே
ஒரு முறை உண்மை நிகழ்வை
உள்ளக் (மனக்) கண்ணால் பார்த்தே
உங்களைப் பாதிப்புக்கு உள்ளானவராக
எண்ணிக் கொண்டே - எதிரே
உதவிக்கு வந்த உண்மைக் கைகளை
அவர்கள் தந்த நம்பிக் கைகளை (செயல்களை/ மனிதாபிமானத்தை)
பாவாக/ கவிதையாக புனைய இயலுமே!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் எல்லோரும் பங்கெடுக்கலாம்; 'வாருங்கள்! வாருங்கள்!' என எல்லோரையும் அன்போடு அழைக்கின்றேன். கீழுள்ள இணைப்பையோ படத்தையோ சொடுக்கிப் போட்டி பற்றிய முழு விரிப்பையும் படித்த பின் போட்டியில் பங்கெடுக்கலாம் வாருங்கள்!
நீங்களும் உங்கள் நட்பு உறவுகளை இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள். ஆதலால், உறவுகளுக்காக உள (மன) நிறைவோடு உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) வெளிப்படுத்தலாமென்று கூறுங்கள்! கீழுள்ள நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் வலைப்பக்கங்களில் செயலியாக/விட்ஜட்ஸாக இட்டு, உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) ஆவணப்படுத்தச் சிறந்த படைப்பை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க அழைப்புக் கொடுத்து உதவுங்கள்.

<a href="http://ootru1.blogspot.com/2015/12/2016.html" target="_blank"> <img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF0dx_jmVjyoimoyqgiXhFVBVSuecy8ifWibaxUM6NJOAjSeKCwLKT3cVyw8GmgqLVf3Oquc7i1FBJTPtPleJ231BT1fEId03tNNUOUb4O_8NYbs5NrNV2Yc3FAwRsxc17GE_gWLHKkvA/s640/Untitled-1+copy.jpg" width="200" /> </a> உங்கள் தேவைக்கு ஏற்ப width="200" height="240" அளவினை மாற்றிக் கொள்ளலாம்.

புதன், 23 டிசம்பர், 2015

மலேசியப் படைப்பாளிகளை இலங்கைப் படைப்பாளிகள் வரவேற்றனர்.


மலேசியாவில் வாழும் இலக்கியப் படைப்பாளிகள் தம்மோடு உலகெங்கிலும் உள்ள தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் வாழும் நாடுகளிற்கு 30 - 40  வரையான படைப்பாளிகளுடன் பயணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் 36 மலேசியப் படைப்பாளிகளுடன் இலங்கைக்கு வந்ததாக அந்தக் குழுவின் தலைவர் திரு.பெ.இராசேந்திரன் ஜயா அவர்கள் இலங்கை திருகோணமலையில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்தார்.

இலங்கையில் திருகோணமலை, கிறின் வீதி, சன் சைன் நிறுவன (விடுதியில்) அரங்கில் (மண்டபத்தில்) 15/12/2015 செவ்வாய் மாலை நான்கு மணிக்கு இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகளை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைப் படைப்பாளிகள் மலேசியப் படைப்பாளிகளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மலேசியப் படைப்பாளிகள் குழுத் தலைவர் திரு.இராசேந்திரன் மற்றும் அவருடன் வருகை தந்த திருமதி.சுடர்மதி அம்மா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வை இலங்கைத் தடாகம் கலை இலக்கிய வட்டம் தலைமையேற்றுப் பொறுப்புடன் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் கனடா படைப்பாளி உலகம் அமைப்பும் தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைப்பும் இணைந்து படைப்பாளிகளுக்கு மதிப்பளிப்பு நிகழ்வையும் நடாத்தினர். இந்நிகழ்வில் நான், 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் உட்பட 40 இற்கு மேற்பட்ட இலங்கை மற்றும் மலேசிய மூத்த படைப்பாளிகள், இளைய படைப்பாளிகள் என மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வினைத் தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பாளரான கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அவர் மதிப்புரை நிகழ்த்தும் போது மலேசியப் படைப்பாளிகள் இலங்கை வருவதை உறுதிப்படுத்தியதோடு இந்நிகழ்விற்கான நினைவுப் பரிசில், சான்றிதழ்களை மலேசியாவில் தயாரித்து திரு.ரூபன் ('ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர்) அவர்கள் அனுப்பி வைத்ததாகவும் அவரது உதவிகளைத் தான் ஒரு போதும் மறக்க இயலாது என்றும் கூறினார். மேலும் மலேசிய எழுத்தாளர்களுக்கான இரவு விருந்தினைக் கனடா படைப்பாளி உலகம் அமைப்புத் தலைவர் திரு.ஜங்கரன் அவர்கள் பொறுப்பேற்றதாகவும் அவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வை ஒழுங்காக ஏற்பாடு செய்து சிறப்புற நிகழ்த்திய 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' என்ற அமைப்பின் மேலாளரான பெருமதிப்புக்குரிய கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் பல துறை ஆற்றல் மிக்க அறிஞர். முப்பது ஆண்டுகளாகத் 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' அமைப்பை நடாத்தி இலக்கியப் பணி ஆற்றியமையை மதிப்பளித்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஊடாக அதன் தலைவர் ரூபன் (தம்பிராசா தவரூபன்) மலேசியாவிலிருந்து அனுப்பி வைத்த 'தமிழ்மாமணி' நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கி, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டது.

இப்படியெல்லாம் இலங்கையில் நிகழ்ந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகளை வரவேற்கும் நிகழ்வைச் சுருக்கிச் சொல்லி முடிக்க முடியாது. இந்நிகழ்வினூடாக இலங்கை - மலேசியப் படைப்பாளிகள் கருத்துப் பரிமாறல், வரவேற்பு, விருந்தோம்பல் யாவும் இருசாராருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தப் பலப்படுத்த உதவுமென என நம்புவோம். அதே வேளை இவ்வாறான நல்லுறவின் ஊடாக உலகம் எங்கும் நற்றமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழர் பண்பாட்டைப் பேண முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தி!

நிகழ்வில் கலந்து கொண்டவர் என்ற வகையில் நிகழ்விற்கு வருகை தந்தவர்களின் பேச்சில் இருந்து பொறுக்கிய தகவலைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் பரிசில் வழங்கி உலகத் தமிழ் எழுத்தாளர்களை மதிப்பளிக்கிறது என அந்தக் குழுவின் தலைவர் திரு.பெ.இராசேந்திரன் ஜயா அவர்கள் சொன்னதும் அச்செயலை நிகழ்வில் கலந்து கொண்ட எல்லோரும் பாராட்டினர். உலகெங்கும் வாழும் தமிழர் எல்லோரும் அவர்களைப் பராட்டாமல் இருக்க முடியாது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் ஊடாக முப்பது ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றுவதோடு படைப்பாளிகளை மதிப்பளித்து ஊக்குவிக்கும் உயரிய பணியைச் செய்து வரும் கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்களை அறிஞர்கள் பலர் பாராட்டினர்.

கனடா படைப்பாளி உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்திய நோக்கமே ஈழத்துப் படைப்பாளிகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தவென அதன் தலைவர் திரு.ஜங்கரன் அவர்கள் தெரிவித்தார். அதற்காகத் தாம் உழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய வன்னியூர் செந்தூரன் அவர்கள் தனது செந்தணல் வெளியீட்டகம் ஊடாக ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை நூலுருவாக்க உதவுவதாகச் சொன்னார்.

வசதியற்ற படைப்பாளிகளுக்கு உதவுவதே தமது அடுத்த இலக்கென தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் தெரிவித்தார். அதற்குக் கனடா படைப்பாளி உலகம் உதவும் என்றும் தெரிவித்தார்.

ஈற்றில் இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகள் தம்மை; இலங்கைப் படைப்பாளிகள் சிறப்பாக வரவேற்று மதிப்பளித்தனர் எனப் பாராட்டினர். ஆக மொத்தத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தமிழை வாழ வைக்கும், தமிழை வாழ வைப்போரை ஊக்கப்படுத்தும். இவ்வாறான நிகழ்வுகள் உலகெங்கிலும் இடம்பெற வேண்டும் என்பதே எனது எண்ணம்.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

அன்று 'கவிமுரசு' இன்று 'கலைத்தீபம்' எனக்குக் கிடைத்ததே!

அன்று 'கவிமுரசு'

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக 402 கவிஞர்களின் "கவி விசை" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் எனது கவிதையும் இடம் பிடித்தது. அதற்காக 16/06/2013 அன்று அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் "திருக்குறளே தேசிய நூல்" என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்ட வேளை 'கவி விசை' ஆசிரியர்களுக்கு "கவிமுரசு" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர்.


அந்நாள் காசி.ஜீவலிங்கம்/யாழ்பாவாணன் ஆகிய எனக்கு அந்த "கவிமுரசு" பட்டயம் கிடைத்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஏனெனில், என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த முதல் மதிப்பளிப்பு "கவிமுரசு" என்பேன். அதனை வழங்கிய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தினருக்கு நன்றி.

இன்று 'கலைத்தீபம்'

உலகெங்கும் தமிழ் இலக்கிய உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் சுற்றுலாச் சென்று வரும் மலேசியப் படைப்பாளிகள் இலங்கை வந்திருந்த வேளை; 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' முயற்சியில் 15/12/2015 அன்று இலங்கை, திருகோணமலை நகர், கிறீன் வீதி, சண் சைன் நிறுவன (கொட்டல்) அரங்கில் (மண்டபத்தில்) இலக்கியச் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.

15/12/2015 அன்று 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' நடாத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பும் கனடா படைப்பாளி உலகம் அமைப்பும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து எனது இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி 'கலைத்தீபம்' என்ற விருதினை 15/12/2015 அன்று வழங்கி மதிப்பளித்து இருந்தனர். இதற்கு 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் அவர்களின் பங்களிப்பும் இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.



எனக்குக் 'கலைத்தீபம்' என்ற விருதினை வழங்கிய தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அமைப்பு, கனடா படைப்பாளி உலகம் அமைப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியோருக்கு நன்றி.

இந்நிலையில் எனது வலைப்பணிகளாக...
உளநல மதியுரையும் வழிகாட்டலும்
ஊடகத்துறை அறிவூட்டலும் படைப்பாளிகளை ஊக்குவித்தலும்
தொழில்நுட்பப் பகிர்வும் தமிழ் மென்பொருள் வெளியீடும்
உலகெங்கும் தூய தமிழ் பேண வழிகாட்டுதலும்
மேலும், நூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மின்நூல்களை இணையவழியில் திரட்டிப் பகிர்தல்
ஆகிய செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.


சின்னப்பொடியனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி மதிப்பளித்தோருக்கும் உதவிகள், ஒத்துழைப்புகள் வழங்கியோருக்கும் நன்றி கூறுவதோடு எனது வலைப்பணிகளைத் தொடரத் தங்கள் ஆதரவையும் நாடி நிற்கின்றேன்.

வியாழன், 10 டிசம்பர், 2015

வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?

ஈழத்திலும் மழை தான்
பொருண்மிய அழிவோடு போயிற்று!
ஆனால்
இந்தியத் தமிழகத்தில்
பொருண்மிய அழிவோடு மக்கள் உயிர்களையும்
இழக்க வேண்டியதாயிற்று!
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
பழைய கதை - ஆனால்
நின்ற மக்கள் வெள்ளத்தை
வந்த மழை வெள்ளம்
அள்ளிச் செல்லுமென்பது
(கடற்கோள்-சுனாமி போல)
2015 கார்த்திகை - மார்கழி கால
கடலூரில் தொட்டு சென்னை வரையான
தமிழக மக்களின் கதை!

எனது "கடவுளே! கண் திறந்து பாராயோ! http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html" என்ற பதிவை எழுதிய பின் தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகையில் முகம் கொடுக்கவுள்ள சிக்கல்களுக்கான ஆற்றுப்படுத்தலைப் பகிர எண்ணினேன். இவ்வெண்ணமே இப்பதிவை எழுதத் தூண்டிற்று. வெள்ளம் வடிய நோய்கள் பெருக வாய்ப்பு உண்டென்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது பற்றிய அறிஞர்களின் வழிகாட்டலைப் பொறுக்கி உங்களுடன் பகிருவதோடு எனது எண்ணங்களையும் முன்வைக்க விரும்புகின்றேன்.

"சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது காய்ச்சல், சரும நோய்கள் மற்றும் பேதி ஆகியவை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நகரின் மருத்துவமனைகளில் தோல் நோய், ஒவ்வாமை, வைரல் தொற்றுக் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு நோய்க்கூறுகளுடன் நிறைய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை எக்காரணம் கொண்டும் காய்ச்சாமல் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்." என்ற செய்தியை "http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-வெள்ள-பாதிப்பு-அதிகரித்து-வரும்-பேதி-காய்ச்சல்-சரும-நோய்கள்/article7961579.ece" என்ற தளத்தில் படிக்க முடிந்தது. இந்நிலை கடலூர் மாவட்டத்திலும் இருக்கு என்பதை எவரும் மறந்து விடுவதற்கில்லை.

நான், எனது கருத்தாக "துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளின் பிள்ளைகளாக வணங்குகின்றேன்." என்று தெரிவித்தாலும் "கடவுளைக் கண்டீர்களா? வாருங்கள் கடலூரிலும் சென்னையிலும் காணலாம்." என்று துயருற்ற மக்களைத் தோள் கொடுத்துக் காப்பாற்றும் தொண்டர்களைக் கடவுளாகவே பல அறிஞர்கள் காண்பிக்கின்றனர். ஆயினும், வெள்ளம் வடிய நோய்கள் பெருகும் வேளை மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பலர் பணம் வேண்டாமல் (இலவசமாக) மருத்துவ உதவிகள் வழங்க முன்வந்தமையைப் பாராட்டுகின்றேன்.

"சென்னை அப்பல்லோ மருத்துவமனை, மருந்துகளை இலவசமாகவும், டோர்டெலிவரி செய்வதாகவும் அறிவித்துள்ளது. 18605000101 என்ற எண்ணில் அழைத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஏராளமான மருத்துவர்கள் தங்களின் பெயர், மொபைல் எண் கொடுத்து இலவச மருத்துவ சேவை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்." என்றும் இருபத்தைந்திற்கு மேற்பட்ட மருத்துவர்களின் விபரத்தைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம். ஆயினும், கடலூர் மாவட்டத்திற்கு இவ்வாறு உதவுவோர் விரிப்பைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உறவுகளே! நோய் வருமுன் முற்காப்பு எடுப்பதும் நோய் வந்த பின் சுகப்படுத்தப் பாதுகாப்பு எடுப்பதும் நம்மவர் கடமை. அந்த வகையில் பெருவெள்ளம் பல கழிவுகளைக் கலக்கிக் கலந்து பரப்பும். அதனால், பல தொற்று நோய்கள் பரவ வாய்ப்புண்டு. அதிலும் எலிக் கழிவு நீர், ஏனைய கழிவு கலந்த பெருவெள்ளப் பெருக்கினால் எலிக் காய்ச்சல் தோன்றலாம். அது பற்றிய தகவலை எங்கள் விருப்புக்குரிய சிறந்த பதிவர்களான THILLAIAKATHU CHRONICLES தள அறிஞர்கள் வெளியிட்ட பதிவை மறக்காமல் படியுங்கள். "இது பயமுறுத்துவதற்கு அல்ல. ஒரு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக நல்ல நோக்கத்துடன் சொல்லப்படுவதே." எனக் கூறும் அவர்களது பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
எலிக் காய்ச்சல் பற்றிய மேலதிகத் தகவலைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.

"காய்ச்சல், தொற்று நோயைத் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) வினியோகம் செய்யப்பட்டது." என http://ns7.tv/ta/fever-infections-hospitals-prevent-government-distributed-chiretta-kacayam.html என்ற தளத்தில் கண்ணுற்றேன். ஆயினும் நிலவேம்பு (Chiretta) குடிநீர் (கசாயம்) பற்றிய தெளிவான பதிவை "நிலவேம்பு - மருத்துவப் பயன்கள்" என்ற தலைப்பில் அறிஞர் முத்துநிலவன் ஐயா பகிர்ந்துள்ளார். "மழை விட்டாலும் தூவானம் விடாது. அதுபோலவே வெள்ளம் வடிந்தாலும், நோய்கள் விடாது! எச்சரிக்கை அவசியம்..." எனத் தொடரும் அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மழை, வெள்ளப்பெருக்குக் காலங்களில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விரிப்பினை அறிஞர் ஒருவர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
இன்னொரு அறிஞர் Google Plus பக்கத்தில் படமொன்றின் மூலம் சிறந்த வழிகாட்டலைப் பகிர்ந்துள்ளார்.

2004 கடற்கோள் (சுனாமி) காலத்தில் உடல் நலம், உளநலம் பேணும் நோக்கில் ஆற்றுப்படுத்துதல் மேற்கொண்டமை நினைவிருக்கலாம். அதே ஆற்றுப்படுத்துதல் இப்போதும் தேவை தானே! "வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?" என்றால் வேண்டும் என்றே என் பதில் அமையும். அதாவது, ஒரு நாட்டின் முதுகெலும்பான மனித வள மேம்பாடு (Human Resource Development) பற்றிப் பேசுவதாயின் உள (மன) நோய்கள் அற்ற மனித வளத்தை ஆக்கத் தேவையான ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

பொருண்மிய இழப்பென்றால் எவராவது உதவி செய்து சரிப்படுத்தலாம். மனித உயிரிழப்பு என்றால் எப்படி ஈடு செய்வது? அதேபோல விருப்புக்குரிய உடைமைகளை இழந்தாலும் கூட, எங்காவது தேடிப் பிடித்து வேண்டிக்கொள்ளலாம். ஆனால், விருப்புக்குரிய மனித உறவுகளை இழந்தால் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? இக்கேள்விகளுக்குப் பதில் தரமுடியாதுள்ள வேளை, இவ்வாறு பாதிப்புற்ற உள்ளங்கள் எத்தனை துயரைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனை துயரையும் தாங்கிக்கொள்ள முடியாத வேளை, அவர்களது உள்ளம் உடைந்து போகலாம். எனவே அவரவர் உள்ளம் உடைந்து போகாமல் அதாவது உள்ளம் நொந்துவிடாமல், சிறப்பாகக் கூறின் உள்ளப் புண் ஏற்பட்டுவிடாமல் ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும்.


உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் அறிஞர்கள் அல்லது உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் நிறுவனங்கள் பொருண்மிய இழப்போடு உயிரிழப்பையும் சந்தித்த கடலூரில் தொட்டு சென்னை வரையான தமிழக மக்களை ஆற்றுப்படுத்த முன்வரவேண்டும். பொருண்மிய உதவிகளும் மருத்துவ உதவிகளும் எவ்வளவுக்கு முதன்மை பெறுகின்றதோ, அதற்கு நிகராக ஆற்றுப்படுத்துதல் தேவைப்படுகிறது. ஆற்றுப்படுத்துதல் மூலம் உளநலம் பேணுவதோடு உள (மன) நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவோ குறைகவோ முடியும். எனவே, உள (மன) நோய்கள் அற்ற மக்களாயம் (சமூகம் - Society) உருவாக நாம் எல்லோரும் பொருண்மிய உதவி, மருத்துவ வழிகாட்டல் வழங்குவதோடு நின்றுவிடாமல் துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்துதல் மூலம் இயல்பு வாழ்க்கையைத் தொடர உதவவேண்டும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

கடவுளே! கண் திறந்து பாராயோ!


மழை வந்து நனைத்துச் செல்ல
வானம் அழுது மழை விழுது என
பள்ளியில் படித்ததை நினைப்போமே!
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் ஆங்கே சேருமாம்
என்பதெல்லாம் - கடவுளே!
உன் திருவிளையாடல் தானே!
சென்னைக்குக் கொட்டிய மழைநீர்
கடலுக்கும் ஆங்கே சேராமால்
தடுப்பதெல்லாம் - கடவுளே!
உன் திருவிளையாடல் தானே!

ஊருக்குள்ளே மழையைக் கொட்டி
முட்டியோடும் வெள்ளம் கண்டு
ஊராளுகள் - அவ்வெள்ளத்தை
கடலுக்குள்ளே ஓட்டிவிடக் கற்றிட
அரையடி வெள்ளம் போதாதா கடவுளே!
"வெள்ளம் வருமுன் அணை போடு" என்றோ
"வேளாண்மைக்கு மிஞ்சிய வெள்ளம் கண்டு
ஓட்ட வேண்டும் கடலில் விழுந்தோட..." என்றோ
கடவுளே! - நீ... நீ... நீ...
சொல்லிக் கொடுக்க விரும்பி இருந்தால்
இழப்புகள் ஏதுமின்றியே உணர்த்தி இருக்கலாமே!

கடலூரில் தொட்டு சென்னை வரை
இடுப்புக்கு மேலே தலைக்கு மேலே
மழையைக் கொட்டி வெள்ளம் பெருக்கி
ஆங்காங்கே ஊர்கள் வெள்ளத்தில் மூழ்க
கடவுளே! - நீ... நீ... நீ...
வந்திங்கே வாழ்ந்து பார்த்தால் காண்பீர்
தமிழர் வாழ்வையே அழிக்கும் வெள்ளத்தையே!
ஈழவரின் தொப்புள்கொடி உறவுகளாம்
தமிழக மக்களின் வாழ்வைச் சீரழித்து
வேடிக்கை பார்க்கும் கடவுளே! - உன்
திருவிளையாடலுக்கு எல்லையே இல்லையா?

தமிழக மக்களின் வாழ்வைக் கொஞ்சம்
கடவுளே! கண் திறந்து பாராயோ! - நீ
படைத்த உயிர்களின் வாழ்வை மீட்டிட - உன்
திருவிளையாடலைத் தான் நிறுத்தாயோ!
இல்லையேல் - கடவுளே!
உன்னை நினைக்க எவரிருப்பார் இங்கே!
போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

குறிப்பு: 2015 கார்த்திகை - மார்கழி காலத்தில் கொட்டிய அடைமழையால் துயருறும் தமிழக உறவுகளை எண்ணிப் புனைந்த பதிவிது. தமிழக உறவுகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப ஈழத் தமிழருடன் உங்கள் யாழ்பாவாணனும் கடவுளை வேண்டி நிற்கின்றார்.


மார்கழி முதலாம் நாள்

உலக உயிர் கொல்லி நோய் (AIDS) நாளாக
மார்கழி முதலாம் நாளைச் சொல்லிச் சுட்டுறாங்க
"தவறான உறவை வெட்ட..."

தவறான உறவால் ஒட்டிக் கொள்ளும் நோயை
மறவாமல் வெட்டிக் கொள்ள உதவாத உறவு
"ஆகாத உறவின் ஆக்கம்!"

ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறினால்
ஒருவருக்கு ஒருவரால் தொற்றும் ஒரு தொல்லையே
"AIDS - உயிர் கொல்லி நோய்!"



வியாழன், 3 டிசம்பர், 2015

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்படி?

உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருந்தால், அதனை நீண்ட ஆயுளுடன் பேண முடியுமே! மின்னை மட்டுப்படுத்தி வழங்கும் பகுதியை (Charger) வெப்பமடையாமல் பேணுங்கள். மின்கலம் சேமிப்பு நிலை (Battery Charge Level) 100 இற்கு மேலோ 25 இற்குக் கீழோ போகாது பேணினால் மின்கலத்தை நீண்ட ஆயுளுடன் பேணலாம்.

மேற்காணும் பேணுகை ஒழுங்கமைப்பை முறையாகப் பேணுவது நன்மைக்கே! இதற்கு உதவியாகச் சாளரம் மின்நிலைத் தெரிவையோ (Windows Power Options) மின்கல நிலைக் கணிப்பான் (Battery Meter) செயலியையோ (Gadget) நீங்கள் பாவிக்கலாம். ஆயினும், நான் இப்போது எனது 'மடிக்கணினி மின்கல நிலை மற்றும் நினைவூட்டல் (Laptop Battery Status and Reminder)' என்ற செயலியைத் தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்.

கீழுள்ள மாதிரியைப் பாருங்கள்! இங்கு நினைவூட்டல் ஒலி (Alarm) இற்கு பதிலாகத் தகவலைக் காட்டும்.



இச்செயலியை உங்கள் தளத்தில் பயன்படுத்தக் கீழ்வரும் நிரலைப் (Code) பாவிக்கலாம்.

<iframe border="0" frameborder="0" height="320" marginheight="1" marginwidth="1" name="lbsr" src="http://www.yarlsoft.com/ads/App_Wdgts/yslbsr2015.htm" width="350"> Your browser does not support Iframes. </iframe><br />
எனது கணனி முகப்புச் (Desktop) செயலியில் (Application) நினைவூட்டல் ஒலி (Alarm) மற்றும் வசதிகள் அதிகம் உண்டு. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது செயலியைப் பதிவிறக்கலாம். இது சாளரம் (Windows) இயங்கு தளத்தில் இயங்கும். ஆயினும் டொட் நெற் தொழில் நுட்பம் 4 அல்லது பிந்திய பதிப்பு நிறுவியிருக்க (Install) வேண்டும்.

எனது செயலியைப் (Application) பதிவிறக்கிப் பயன்படுத்திய பின், அதன் நன்மை, தீமைகளை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். எனது செயலியைப் (Application) பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிஞர்களே! என்னூரில் தீபாவளி நாளன்று ஏஆர்டெல் வலையமைப்புப் பணி சரியாகக் கிட்டவில்லை. கடும்மழையால் கவனிக்க மறந்துவிட்டார்கள் போலும். அதனால். உரிய நேரத்தில் வாழ்த்துகளைப் பகிர முடியாமையால் துயருற்றேன். எல்லாமே கடும்மழையின் வஞ்சனை தான்.

சரி! தீபாவளி நாளுக்கு அடுத்த நாளாவது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர வலைப்பூப் பக்கம் நுழைந்தேன். எனது பிளக்கர் விருப்பத் தெரிவில் முந்நூறிற்குக் கிட்டவும் எனது வேர்ட்பிரஸ் விருப்பத் தெரிவில் இருநூறிற்குக் கிட்டவும் திரட்டி வைத்திருந்த வலைப்பூக்களில் வாழ்த்துகளைப் பகிர இறங்கினேன். அடக் கடவுளே! நான் 2015 தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து; பின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து; தீபாவளி வாழ்த்துகளைப் பகிரும் வரை 2014 ஆம் ஆண்டு பதிந்த இறுதிப் பதிவோடு பல வலைப்பூக்களைப் பார்த்தேன். அதன் விளைவே 'வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!' என்றொரு பதிவை தர முன்வந்தேன்.

எனது பார்வையில் இப்படிப் பல வலைப்பூக்களில் புதிய பதிவுகளைக் காணவில்லை. நான் விருப்பத் தெரிவில் திரட்டிய வலைப்பூக்கள் செயலிழந்தவையாக இருக்கலாம். அல்லது புதிய பதிவுகளைப் பதியாமல் வலைப்பதிவர்கள் ஒளிந்திருக்கலாம். வலைப்பதிவர்கள் ஒளிந்திருக்கப் பல காரணங்கள் இருக்கலாம். அதில், தங்கள் வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதால் உள்ளத்தில் தளர்வுநிலை ஏற்பட்டிருக்கலாம். அதனால், புதிய பதிவுகளைப் பதியாமல் ஒளிவது அழகல்ல.

எனக்கும் வலைப்பூ தொடங்கிய வேளை மட்டற்ற மகிழ்ச்சி தான். அடுத்தடுத்து ஆறு வலைப்பூக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் நடாத்தி வந்தேன். வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதை நானுணர, அறிஞர்கள் வழிகாட்டலின் படி தனி வலைப்பூவாக ஒன்றையே நடாத்த முனைந்தேன். மாதமொன்றில் ஒரிரு பதிவுகளைப் பதிந்தேனும் என் தனி வலைப்பூவைப் பேண முனைகின்றேன். ஆயினும், அறிஞர்களின் வலைப்பூக்களைத் தேடிச் சென்று கற்பதோடு அவர்களது பதிவுகளுக்கு என் கருத்துகளையும் பகிருகிறேன். என் உள்ளத்தை ஈர்த்த பதிவுகளை எனது வலைப்பூவில் பகிர்ந்தும் வருகிறேன். எப்படியோ என் தனி வலைப்பூவைப் பேணுவதில் எனக்கு ஒரளவு நிறைவு கிட்டுகிறது. மேலும் என் தனி வலைப்பூவிற்கான வாசகர் பெருகுவதைப் பார்த்தால், விரைவில் முன்னிலைக்கு வரலாம் பலராலும் பேசப்படலாம் என நம்புகின்றேன்.

தங்கள் வலைப்பூ முன்னிலைக்கு வராமல் பலராலும் பேசப்படாமல் இருப்பதால் உள்ளத்தில் தளர்வுநிலை ஏற்பட்டால் என்னைப் போன்று அறிஞர்கள் வழிகாட்டலின் படி முன்னேற முயல்வீர்கள் என நம்பி என் பட்டறிவைப் பகிர்ந்தேன். ஆயினும்,  பல முன்னோடி வலைப்பதிவர்களின் செயற்பாட்டை நாம் கற்றறிந்து முன்னேற முயற்சி செய்யலாமே! அப்படிச் சிலர் எப்படி முன்னேறுகிறார்கள் என்று தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

1. சிலர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
2. சிலர் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு ஒருவராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
3. சிலர் ஏழலில் (வாரத்தில்) ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
4. சிலர் 2 ஏழலில் (2 வாரத்தில்) ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
5. சிலர் மாதத்திற்கு ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.
6. சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு புதிய பதிவினைப் பகிருகின்றனர்.

எல்லோருமே (நான் உட்பட) Linkedin, Twitter. FaceBook, Google+ தளங்களில் பகிருவதோடு வலைப்பதிவுத் திரட்டிகளிலும் புதிய பதிவினை இணைக்கிறர்கள். அவர்களது வெற்றியின் கமுக்கம் (இரகசியம்) மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களுக்குச் சென்று தமது அடையாளத்தை அரங்கேற்றுவதேயாகும். அதாவது கருத்துரை, தாக்குரை, திறனாய்வு எனப் வழிகளில் மற்றைய அறிஞர்களின் வலைப்பூக்களில் தமது அடையாளத்தை அரங்கேற்ற முடியுமே. இவ்வாறு மற்றைய அறிஞர்களின் உள்ளத்தை ஈர்க்க முயன்று இருந்தால் தங்கள் வலைப்பூவிலும் மற்றைய அறிஞர்களின் வருகையைப் பெருக்கலாமென இறங்கி வென்றவர்களே அவர்கள்! அவர்களைப் போல நாமும் முன்னேற முயல்வோம்.

மின்னூடகங்களில் வலைப்பூவும் (Blog) முன்னிலையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! இதுவரை பன்னிரண்டாயிரம் தமிழ் வலைப்பூக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். வலைப்பூ நடாத்துவது என்பது நுட்பங்கள் தெரிந்தவருக்கு இலகு தான். ஆனால், மற்றைய வலைப்பூக்களில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாத வரை வெற்றி காண்பதென்பது இயலாத ஒன்றே! பதிவுலகில் வெற்றி பெறக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டலைப் படித்துத் திறம்பட வலைப்பூ (Blog) நடாத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முன்வாருங்கள்.

ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!


செவ்வாய், 10 நவம்பர், 2015

உள்ளங்களைச் சுட வேண்டாம்!

தைப்போங்கல், சித்திரைப் புத்தாண்டு, தீபாவாளி ஆகிய கொண்டாட்டங்களில் தீபாவாளி நாள் சிறப்பு மிக்கது. நல்வழியில் பயணிக்கும் நாளாக, பொன் நாளாக தீபாவாளியைக் கொண்டாடுவதால் மஞ்சள் பூசிப் புத்தாடை (கோடி) உடுத்துக் கோவில் வழிபாடு செய்து நல்லுறவுகளைப் பேணி மகிழும் நாளாக இருக்கிறது.

இவ்வாறான பொன்நாள்களில் உள்ளங்களைச் சுடும் சுடு சொல்களை அள்ளி வீசாமல் அன்பைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவிப்போம். கிடைத்ததைக் கொண்டு மகிழ்வோடு கொண்டாடுவோமென வாழ்த்துகளைத் தெரிவிப்போம். அவ்வாறே, உள்ளங்களைச் சுடும் செயல்களையும் செய்யாது இருப்போம். அதாவது, நமக்குப் புத்தாடை உடுத்திக்கொண்டு உதவுவதாகக் கூறி நாம் உடுத்தியதை அடுத்தவருக்கு வழங்காது இருப்போம். பிறர் உள்ளங்களைச் சுட வேண்டாமென்றே "உன்னைப் போல் உன் அயலானையும் விரும்பு (நேசி)" என்று முன்மொழிந்தவர்கள் எண்ணியிருக்கலாம்.


செய் / சொல்லு - அதுவும்
பிறர் உள்ளங்களைச் சுட்டுப் புண்ணாக்காமல்
நல்லதையே செய் / சொல்லு - அதுவும்
தீபாவாளி நாளில் தொடருங்கள்!


2010 இலிருந்து தமிழ்நண்பர்கள்.கொம், எனது பழைய வலைப்பூக்கள், எனது பழைய வலைத்தளங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் உறவுகள் எல்லோருக்கும் எனது தீபாவாளி நல்வாழ்த்துகள். எனது புதிய வலைப்பூவான யாழ்பாவாணன் வெளியீட்டகம் http://www.ypvnpubs.com/ மற்றும் எனது புதிய வலைத்தளமான யாழ் மென்பொருள் தீர்வுகள் http://yarlsoft.com/ ஆகிய பக்கங்களுக்கு வருகை தந்து ஒத்துழைக்கும் உள்ளங்களுக்கு நன்றி கூறுவதோடு எல்லோருக்கும் மீண்டும் எனது உள்ளம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

திங்கள், 2 நவம்பர், 2015

தமிழ் சோறு போடுமா?

தமிழ்நாடு, புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள் பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கலாமே எனச் சிலர் கருதி இருக்கலாம். "உலகெங்கும் தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பற்றிய தனி அடையாளத்தை நிலை நிறுத்திய நிகழ்வு. இதனை இனிவரும் வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வை விட இனிவரும் வலைப்பதிவர் சந்திப்புகள் சிறப்பாக நடாத்தப்பட வேண்டும். அதேவேளை, உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எண்ணங்களைப் பகிர வேண்டும்." என்பதே என் கருத்து, வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வில் பகிர்ந்த உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எண்ணங்களைப் பொறுக்கியே இப்பதிவை ஆக்கியுள்ளேன்.


முற்பகுதி

வலைப்பதிவர் சந்திப்பு
என்ற தளத்திலிருந்து
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்
என்ற பதிவிலிருந்து
11.10.2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை யூடியூப்பில் பார்வையிட கீழே உள்ள, யூடியூப் முகவரிகளைச் சொடுக்குங்கள்.

முதற் பகுதி ஒளிஒலி (வீடியோ) இனைப் பதிவிறக்கி விக்கிப்பீடியா கலைக்களஞ்சியதின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ரவிசங்கர் அவர்கள் புதுக்கோட்டையில் 11/10/2015 ஞாயிறு அன்று நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்விலே 'தமிழ் சோறு போடுமா?' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கமளித்த பகுதியை வெட்டி எடுத்து உங்கள் முன் வைக்கின்றேன். இதற்கு அனுமதி வழங்கிய வலைப்பதிவர் சந்திப்பு http://bloggersmeet2015.blogspot.com/ தள மேலாளர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அறிஞர் ரவிசங்கர் அவர்களின் கருத்துகள்
தமிழ்நாட்டு (தமிழக) மக்களுக்காகவோ
ஈழத்து (இலங்கை) மக்களுக்காகவோ
வலைப்பதிவர்களுக்கு மட்டுமோ
தெரிவித்ததாகக் கருதாது
உலகெங்கும் வாழும்
ஒவ்வொரு தமிழருக்கும் தெரிவித்ததாகக் கருதி
உலகெங்கும் நற்றமிழைப் பேண ஒன்றுபடுவோம்.


பிற்பகுதி

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வை 2015 ஐப்பசி பதினோராம் நாள் ஞாயிறு அன்று காலை ஈழத்து யாழ்ப்பாணம் மாதகலூரில் இருந்தவாறு எனது மடிக்கணியில் நேரலை ஊடாகக் கண்டுகளித்தேன். வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தனை சிறப்பாக ஏற்பாடு செய்த எல்லோருக்கும் பாராட்டுகள். நிகழ்வில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியதின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ரவிசங்கர் அவர்கள் 'தமிழ் சோறு போடுமா?' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கமளித்த கருத்துகள் என் உள்ளத்தில் வந்து குந்திவிட்டன. அதன் விளைவு தான் கீழ்வரும் பதிவு. அதற்காக அறிஞர் ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.


தமிழ் சோறு போடுமா


தமிழ் சோறு போடுமா என்றே
தமிழர் தான் பாடுறாங்க இன்றே
                            (தமிழ்)

வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று
வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று
ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று
ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே!
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                           (தமிழ்)

சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று
உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று
வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று
சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                           (தமிழ்)

பேருக்குத் தமிழனென்று எப்போதும் சொல்லிநின்று
ஊருக்குள் தமிழர் பண்பாட்டை உதறிநின்று
எவருக்குப் பிறமொழியில் செயற்பட முன்நின்று
சோறு போடுமா தமிழென்று குளறலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

நுட்பத் தெரிவுகளில் தமிழிருப்பது ஏனென்று
கிட்ட நெருங்காது ஆங்கிலத்தின் வழிநின்று
பிறரோடு நெருங்கினாலும் வேற்றுமொழி நாடிநின்று
சோறு போடுமா தமிழென்று முழங்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

பேச்சளவில் தான் தமிழனெனக் கூறிநின்று
எழுத்தளவில் தான் தாய்த்தமிழை மறவென்று
செயலளவில் தான் பண்பாட்டைத் துறவென்று
சோறு போடுமா தமிழென்று தூற்றலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

ஈன்ற தாயும் தமிழச்சி தானென்று
ஈன்ற பின்பேசப் பழக்கியது தமிழென்று
தமிழ்த் தாயவள் ஊட்டிய சோறின்று
சோறு போடுமா தமிழென்று கேட்குமா?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                             (தமிழ்)

தமிழா! உன்எழுத்தில் பிறமொழியை நீக்கிநின்று
தமிழா! உன்சொல்லில் நற்றமிழைச் சுட்டிநின்று
தமிழா! உன்பேச்சில் தேன்தமிழைக் கொட்டிநின்று
தமிழா! உன்செயலில் பண்பாட்டைக் காட்டிநின்று
வாழ்ந்து காட்டு; தாய்த்தமிழே சோறுபோடுமே!
நானும் தான் சொல்லுகிறேன் இங்கே!
                                             (தமிழ்)


"தமிழ் சோறு போடுமா?" என்றால் "தமிழ் சோறு போடும்" என்பது தான் பதில். அதெப்படி என்றால் அறிஞர் சுப.நற்குணன், மலேசியா அவர்களின் பதிவுகளில் அவர் காட்டும் வழிகாட்டல் வழியே நாம் பயணித்தால் கிட்டும்.

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)
தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)


முற்றும்