Translate Tamil to any languages.

சனி, 22 ஜூன், 2013

பொய்யான காதலர் நாள்

இளையவர்களைப் படையில் சேர்ப்பதைத் தடுக்கவே, 'வலன்ரைன்' என்னும் கத்தோலிக்க மதகுரு இளம் இணையர்களுக்கு மணமுடித்து வைத்துள்ளார். இதனாலேயே அவரைச் சிறையில் அடைத்தனர். சாகும் வரை அவருக்குச் சிறை வாழ்க்கை தான்...

அவர் சிறையில் சாவடைந்த நாளே FEB 14. இந்நாள் உலகிற்கு நல்லதைச் செய்தவரை நினைவூட்டும் துக்க நாளே! இந்நாளைக் "காதலர் நாள்" என்று ஏற்க முடியாதே! அப்படியானால், இந்நாள் பொய்யான காதலர் நாளே!

மதகுரு எப்படிக் காதலித்திருப்பார்? சிறைக்குப் போய் மதகுருவுக்கு உணவு கொடுத்த பெண் மதகுருவைக் காதலித்திருப்பாரா? இந்தக் காதலை எப்படி நம்புவது? காதலுக்கு எந்த வித தொடர்பும் இல்லாத FEB 14 ஐ திருமண நாளென்று கூறலாமே!

இது வரலாறு சுட்டும் உண்மையாதலால், காதலர்களே என் மீது சீறிப் பாய வேண்டாம். மாற்றுக் கருத்து இருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சலில் பணம் பறிப்பு

இணையப் பயனாளர்களே மின்னஞ்சலில் பணம் பறிப்போரிடம் ஏமாறாதீர்கள். Microsoft Email Lottery, அமெரிக்க Green Card Lottery எனத் தலைப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி, அதனைப் பெறுவதற்கு எம்மை அணுகவும் என்றெழுதியிருப்பார்கள். அதற்கான செலவாக 1000-2000 $அனுப்புமாறு கேட்டிருப்பார்கள்.

இது போலியென்று கண்டுபிடிக்க முடியாதவாறு இருக்கும். இதனை நம்பிப் பணம் செலுத்தியோர் ஏமாறினர். என் மனைவி பணம் தராததால் நான் செலுத்தவில்லை. அதனால் நட்டமின்றித் தப்பிவிட்டேன்.

இது பற்றிய உண்மையறிய Microsoft, Green Card Lottery Department ஐ அணுகியபோது "போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்" என்கிறார்கள். இவ்வாறான அல்லது இது போன்ற மின்னஞ்சல்களை நம்பி ஏமாறாதீர்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் வேலை தொடரத்தான் செய்யும்.


தமிழ்நண்பர்கள் தளத்தில் இப்பதிவு இடம் பெற்ற போது...

நண்பர் வினோத் தெரிவித்த கருத்து:
மிகப்பெரிய கூட்டமே இதன் பின்னால் இருப்பதாக செய்தி வந்துள்ளது. ஆசைப்பட்டவர்கள் நிறைய பேர் பணத்தை இழந்துள்ளார்கள்

நண்பர் குமரன் தெரிவித்த கருத்து:
உண்மைதான்....எச்சரிக்கையாக இருக்கவும்.

எனது பதில்: வாசகர்கள் ஏமாறாமல் இருந்தால் எமக்குப் போதும்.

வெள்ளி, 21 ஜூன், 2013

கால் நாள் படுத்தும் பாடு

மாசி 29 இல் பிறந்தவர்களுக்கு
நான்காண்டுக்கு ஒரு முறை தான்
பிறந்த நாள் வருவதால்
வாழ்த்துத் தெரிவிக்கும் போது
முட்டாளாவது நாங்களே!
மாசி 28 இல் வாழ்த்துத் தெரிவிக்க
நாளைக்கு என்றாள்...
பங்குனி 1 இல் வாழ்த்துத் தெரிவிக்க
நேற்றே முடிஞ்சு போச்சு என்றாள்...
எப்படி என்றேன்?
காலமாகும் கால் நாளை
நாட்காட்டியில் பார்க்கலாமா
பெரியப்பா என்கிறாள் - என்
பெறாமகள்...!

உன்னை நீ அறி

நானே எனக்குக் கடவுள்
நானே எனக்குப் படைப்போன் (பிரம்மா)
நானே எனக்கு நீதிபதி
என்னுடையது என்பதெல்லாம்
என்னாலே என்னில் தான்
என்று
இனி மெல்ல முன்னேறி
வாழ்ந்து காட்டு - அது
சூழ உள்ளவர்களையும்
வெற்றி நடை போட்டு
வாழ வழி காட்டுமே!

பா புனையப் படிக்க வேண்டுமா? - 02


பா புனைய (கவிதை எழுத)
நாம் படிக்கவும் வேண்டுமா?
உண்ணான நல்ல கேள்வி தான்!
பா புனையப் படிக்க வேண்டாமப்பா...
பா புனைய முயன்று பாருங்களேன்!
முயன்றோம்...
இலக்கணம் குறுக்கே வந்து நிற்குதே!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய இலக்கணம் குறுக்கே வரலாமா?
உள்ளத்தில் உள்ளதை
இயல்பாக எடுத்துச் செல்லுங்களேன்...
அது கூட நல்ல பா தான்!

குறிப்பு: இக்கவிதை சிறு மாற்றங்களுடன் ஏற்கனவே இவ்வலைப்பூவில் "பா புனையப் படிக்க வேண்டுமா? - 01 (http://paapunaya.blogspot.com/2013/03/blog-post_13.html)" எனப் பதிவு செய்திருந்தேன். நண்பர்களின் கருத்திற்காக இதனையும் பதிவு செய்கிறேன்.

தமிழ்நண்பர்கள் தளத்தில் இப்பதிவு இடம் பெற்ற போது...
நண்பர் வினோத் தெரிவித்த கருத்து:
இலக்கணம் குறுக்க வந்து நிற்குதோ!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய இலக்கணம் குறுக்க வரலாமா?
இது நல்ல பதிலாகும் கேள்வி.

எனது பதில்:
"சட்டிக்குள் சோளம்
துள்ளித் துள்ளிப் பொரியுமாப் போல
வான் வெளியில் வெள்ளிகள்" எனப் பாடும்
கடலை விற்கும் பாட்டிக்கு
யாப்பிலக்கணம் தெரியாதே!
சோளப்பொரி, வானத்து வெள்ளி
எப்படியிருக்கிறது ஒப்பீடு?
நம்மாளுகளும்
இப்படிப் பா புனையலாமே!

நண்பர் சுஷ்ரூவா தெரிவித்த கருத்து:
இலக்கணம் குறுக்க வந்தாலும்
இலக்கியம் முன்பு வந்தாலும்
நினைப்பதை எழுதிப் பழகினால்
இலக்கணம் அதன் வழி பகரும்
தண்டிக்க எண்ணும் காலமல்ல
பழகட்டும் புலமையென முழங்கட்டும்!

எனது பதில்:
பா புனைய முனைவோரை
எவராலும்
தண்டிக்கவோ தடுக்கவோ முடியாதே!
பா புனைய முனைவோரை
தூண்டும் செயலாகவே
"பா புனையப் படிக்கத் தேவையில்லை" என்கிறேன்!
"பணம் இருக்கும் வரை தான்
மணந்து நாடும் உறவுகள்..." என
யாப்பிலக்கணம் அறியாத ஏழை
எடுத்தாளும் ஒழுங்கைப் பார்த்தேனும்
நம்மாளுகள் பா புனையலாமே!

நண்பர் கார்த்திக்2011 தெரிவித்த கருத்து:
சித்திரம் செந்தமிழ் இரண்டும் கை பழக்கம்

எனது பதில்:
சித்திரமும் கை பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
நம்மாளுகள்
பா புனைய இரண்டையும் பழகி
வழக்கப்படுத்த வேணுமே!


பா புனைய எது வேண்டும்?

பா புனையலாமென இருக்கையில் குந்தினேன்...
பா புனையும் வண்ணம்
எந்த எண்ணமும் தோன்றவில்லை...
"
பாட்டு வரும் கேட்டு வராது" என
நினைத்தேன் - அதுவே
என் பாவிற்கு முதலடியாயிற்று!
இரண்டாம் அடியைத் தேடினேன்...
நாட்டார் பாடல்கள்
கேட்டுக் கேட்டே செவிவழி வந்ததை
நினைவிற்கொள்ள
அடுத்த வரிகளும் வந்தமைந்தன!
பாட்டை ஏட்டில் எழுத
முட்டி மோதும் இலக்கண இடையூறுகள்
குறுக்கே வந்து நிற்குமென அஞ்ச
நான்காம் அடியும் வந்து சேர்ந்தது!
"
கொட்டிக் குவியும் எண்ணங்களால்
கட்டி எழுப்பலாம் பா" என்று
முடிவுக்கு வந்தாலும்
தலைப்பு தலையைப் பிய்த்தது!
ஒரு வழியாகப் 'பா புனைய...' என
தலைப்பிட்ட என் 'பா'வை
தொடர்ந்து படித்துப் பாருங்களேன்!
பாட்டு வரும் கேட்டு வராதென
நினைத்த வேளை
நாட்டார் பாடல்கள்
கேட்டுக் கேட்டே செவிவழி வந்ததென
நினைவில் உறுத்தியது!
பாட்டை ஏட்டில் எழுத
முட்டி மோதும் இலக்கண இடையூறுகள்
குறுக்கே வந்து நிற்க
கொட்டிக் குவியும் எண்ணங்களால்
கட்டி எழுப்பலாம் பா!

சனி, 8 ஜூன், 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-010

பா புனையப் போகுமுன்
அசைக்கு முன் எழுத்தெனப் பார்க்கையில்
எழுத்துகளாலான
சொல்கள் புணருவதைப் பார்க்கையில்
இயல்புப் புணர்ச்சி,
தோன்றல், திரிதல், கெடுதல் என
விகாரப் புணர்ச்சி (பொது)
படித்த பின் பார்ப்பது
செய்யுள் விகாரம் ஆயிற்றே!
செய்யுளுக்கே உரித்தான
செய்யுள் விகாரத்தில்
வலித்தல், மெலித்தல், நீட்டல்,
குறுக்கல், விரித்தல், தொகுத்தல்,
முதற்குறை, இடைக்குறை,
கடைக்குறை என வரும்
ஒன்பது கூறுகள் இருப்பதைப் பாரும்!
ஒரு செய்யுளுக்கு
ஒன்பது விகாரமா என்று
சற்றுத் தளர வேண்டாம்
இவை தான்
பாவலர்க்கு வழிகாட்டும்
யாப்பில் தவறின்றியே
பாபுனைய உதவும் வழிகாட்டிகளே!
பாவலர்க்கு உதவ
யாப்பு இலக்கணமா என்று
கலங்க வேண்டாம் உறவுகளே
மரபுக் கவிதை/ பாப்புப் பா என்றால்
வாசிக்க விளங்காமை
பொருளறிய முடியாமை
போன்ற நிலைகளைப் போக்க
வாசகருக்கும் பக்கத்துணை
நான் கூறும்
செய்யுள் விகாரம் ஒன்பதுமே!
மெல்லினத்தை வல்லினமாக்கும்
வலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கம்பரின் பா வரிகளைப் பாரும்...
"அரக்கரோர் அழிவு செய்து
     கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல
     மனுநெறி கூறிற் றுண்டோ?"
இவ்வீர் அடிகளிலே
முதலடியில் வரும் எதுகைக்கு
('அரக்கர்' என்றமைந்த)
அடுத்தடியில் வரும் எதுகையை
சரி செய்யும் நோக்கிலே
மெல்லின மெய்யை
வல்லின மெய்யாக மாற்றியே
(இயல்பில் 'குரங்கு' என்பதை
எதுகைக்காக 'குரக்கு' என மாற்றியே)
வலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
வலித்தலின் மறுதலையே
மெலித்தலாம் என்க...
வல்லினத்தை மெல்லினமாக்கும்
மெலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கீழ்வரும் அடிகளைப் பாரும்...
"தண்டையின் இனக்கிளி கடிவோள்
பண்டையள் அல்லள் மானோக்கினளே!"
இவ்வீர் அடிகளிலே
இரண்டாம் அடி எதுகை
'பண்டையள்' என்னும் சீருக்காக
முதலடியில் வரும் எதுகை
'தட்டையின்' என்னும் சீரை
'தண்டையின்' என மாற்றியே
('ட்', 'ண்' ஆக
வல்லின மெய்யை
மெல்லின மெய்யாக மாற்றியே)
மெலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
குறிலை நெடிலாக்கும்
நீட்டல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவின் இறுதிச் சீராக
ஓரசைச் சீர் வரலாமே தவிர
இடையில் வரக் கூடாது"
என்பதற்கிணங்கவே
வள்ளுவனார் தன் குறளில்
'நிழல்' என்ற ஓரசைச் சீரை
'நீழல்' என்ற ஓரசைச் சீராக
மாற்றிவிட்டார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
ஒரு சீரின் முதல் எழுத்தாகவுள்ள
குறில் எழுத்தை நெடில் எழுத்தாக
மாற்றி அமைத்துப் பா புனைதலை
நீட்டல் விகாரம் எனலாமே!
நெடிலைக் குறிலாக்கும்
குறுக்கல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"ஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேன் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவிற்கான தளையில்
மா முன் நிரை அமைதல் வேண்டும்"
அதற்கேற்பப் பாரும்
'ஒருநாள்' முன் 'ஏழுநாள்போற்' வரின்
மா முன் நேர் அமையுமென அஞ்சி
'எழுநாள்போற்' எனவாக்கி
நெடில் 'ஏ' ஐக் குறில் 'எ' ஆக்கி
வள்ளுவனார்
யாப்பைச் சரி செய்தார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
நெடில் எழுத்தைக் குறில் எழுத்தாக்குவதே
குறுக்கல் விகாரம் எனலாமே!
குறும் சொல்லை நீட்டும்
விரித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?"
இங்கே
முதலடி மூன்றாம் சீர்
'கொல்' என அமைந்ததால்
வெண்பாவின் ஈற்றுச் சீராக வரவேண்டிய
தனி அசைச் சொல்லை
யாப்பைக் கருத்திற் கொண்டே
'கொல்லோ' என வள்ளவர் மாற்றினாரோ...
'குடும்பத்தைக்' என்ற சீரின் முன்னே
மாச் சீரை வரவழைத்து
மா முன் நிரை அமையுமாறு
'கொல்' ஐ 'கொல்லோ' எனவாக்கி
சொல் ஒன்றை விரித்து எழுதுவதே
விரித்தல் விகாரம் என்போம்!
நெடும் சொல்லைக் குறுக்கும்
தொகுத்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியார் தோள்தோயா தார்."
இங்கே
முதலாம் அடி முதற் சீர்
'நலத்துக்குரியார்' என்றமைய
இருந்திருக்க வேண்டுமே...
அப்படி அமையாமைக்கு
வெண்பாச்சீர் ஆக அமையாது
பூச் சீராக இருந்தமையே...
இலக்கணப் பிழை நிகழாமல்
'நலக்குரியார்' எனக் காய்ச்சீர் அமைய
(நலம்+அத்து+கு+உரியார்)
வள்ளுவனார் முதற் சீரமைத்து
'காய் முன் நேர்' என்றமைய
பா புனைந்திருக்கும் ஒழுங்கே
(நீண்ட சொல்லைச் சுருக்கித் தொகுத்தல்)
தொகுத்தல் விகாரம் என்போம்!
சொல்லின் முதலெழுத்தைக் குறைக்கும்
முதற் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி" எனும்
செய்யுளடியைப் பாரும்...
இலக்கணத் தவறு நிகழாமலே
முதற் சீராக வர வேண்டிய
"தாமரையிதழ்" இலே
முதலெழுத்தை நீக்கியமையே
சொல்லின் முதல் எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
முதற்குறை விகாரம் என்போமே!
சொல்லின் இடையெழுத்தைக் குறைக்கும்
இடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"என்னனைக் கிலங்கு மார்பம்" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"என்னன்னைக்கு" இலே
இடையிலே 'ன்' ஐ நீக்கியமையே
சொல்லின் இடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
இடைக்குறை விகாரம் என்போமே!
சொல்லின் கடையெழுத்தைக் குறைக்கும்
கடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"கள்ளுக்கில் காமத்திற் குண்டு" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"கள்ளுக்கில்லை" இலே
கடைசியிலே 'லை' ஐ நீக்கியமையே
சொல்லின் கடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
கடைக்குறை விகாரம் என்போமே!
யாப்பிலக்கணத்தின் முதற் பகுதியான
எழுத்தைப் பார்த்தோம்...
எழுத்தோடு தொடர்புடைய
இலக்கணத்தைச் சற்றுப் பார்த்தோம்...
சொல்களைப் பார்த்தோம்...
சொல்கள் புணருவதைப் பார்த்தோம்...
இலக்கண(மரபு)ப் பா புனைய
துணைக்கு வந்து நிற்கும்
செய்யுள் விகாரத்துடன்
எழுத்தை முடித்துக் கொண்டு
யாப்பில் அடுத்து வரும்
"அசை" என்ற பகுதியை
அடுத்த பகுதியில் பார்ப்போம்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/05/009.html

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள் என்று சொல்லிப் பண்டிகைக் காலங்களில் வாருவார்கள், உண்பார்கள், குடிப்பார்கள், போவார்கள். துன்பம் வந்த வேளை தேடினால் ஆட்களைக் காணக் கிடையாது.

எல்லாம் யாராலே?

ஆடிக் கடைசியில, முன் ஆவணியில நெல்லு விதைச்சோம்! ஐப்பசி வர முன்னரே களை பிடுங்கினோம். கார்த்திகை வந்ததும் நெல்லுக் கதிர் வந்திடுச்சு. மார்கழிக் கடைசியில அருவி வெட்டிப் புது நெல்லு வீட்டுக்கு வந்து சேரும்! அதைக் குத்தி அரிசியாக்கிக் கதிரவனுக்குப் பொங்கிப் படைப்பதே நம்ம விவசாயிகளின் கடமையாச்சு!

விவசாயிகள் துன்பப்பட்டு நெல்லு விதைச்சு, அருவி வெட்ட வானத்தில தொங்கிற கதிரவனுக்கு ஏன் அவங்க பொங்க வேணும்? இது நல்ல கேள்வி தான்!

மாசிப் பனி முசி்ப் பெய்யுமென நடுங்கிற கையோட கோடை தொடங்கிவிடும்! சித்திரையில வெயிலைப் பற்றி்ச் சொல்லவும் வேணுமா? வெட்கை தாங்க முடியாமல் உடுப்புகளைக் கழட்டிப் போட்டு இருக்க முனைவோம். நம்ம ஆடைக்குறைப்பில திரைப்பட நடிகைகள் கூடத் தோற்றுப் போயிடுவாங்கள்!

வெயிலால எங்களைச் சுட்டெரித்த கதிரவனுக்கு விவசாயிகள் பொங்க வேணுமா? அங்க தான் ஓர் உண்மை இருக்கிறது!
சுட்டெரிக்கும் வெயிலால கடல் நீர் ஆவியாகி வானத்தில சேமிக்கப்படுகிறது. வானத்தில சேமிக்கப்பட்ட அந்தக் கடல் நீர் தான் மாரியில மழையாகப் பொழிகிறது. அந்த மழையால தான் நெல்லு விளைகிறது.

அந்த மழை யாரால பொழிகிறது. வானத்துக் கதிரவனாலே தான். அப்ப நம்ம விவசாயிகள் கதிரவனுக்குப் பொங்கலாம் தானே!

அது சரி, மற்றவங்க ஏன் பொங்கிறாங்க?

உலக மக்கள் அனைவருக்கும் ஒளியும் இருளும் கதிரவனாலே தான் கிடைக்கிறது. அதனால், கதிரவனைக் கடவுளென வணங்குபவர்கள் எல்லோருமே பொங்குகின்றனர்.
என்ன, தைப்பொங்கலுக்குத் தயாரா?

பொங்கல் எப்படி?

ஓருவர் : நம்ம 2011 தைப்பொங்கல் எப்படி?

மற்றவர் : செய்கூலி ஏறாமல் பொருட்கள் விலையேறுவதால் பொங்கலரிசி வேண்டப் பணமில்லையப்பா?

மூன்றாமாள் : நம்ம பிள்ளையார் கோவிலில பொங்குவாங்கள், அந்தக் கதிரவனை நினைத்து விழுங்கவாவது வாவேன்!

பாட்டு

கெட்டு நொந்தவர்கள்
பட்டுத் தெளிந்ததைச் சொன்னால்
"பாட்டு..."

மருந்தாகும் சிரிப்பு

முதலாமாள் :-
பெண் பிள்ளை சிரித்தால் போச்சு
புகையிலை விரித்தால் போச்சு

இரண்டாமாள் :-
நல்லதுக்கு இல்லை...

முதலாமாள் :- அதெப்படி?

இரண்டாமாள் :-
முதலாவதில் குணம் (மானம்) கெட்டுப் போயிடும்.
இரண்டாவதில் மணம் கெட்டுப் போயிடும்.

முதலாமாள் :-
நகைச்சுவையாகச் சொன்னாலே சிரிப்பு வருகிறதே!

இரண்டாமாள் :-
எண்ணி எண்ணிச் சிரித்தால்
நல்ல மருந்தாகுமே!

மூன்றாமாள் :-
அட போங்கடா...
வாய் விட்டுச் சிரித்தால்

நோய் விட்டுப் போகுமடா!

வெள்ளி, 7 ஜூன், 2013

வாழ்த்துக்கள்


கிறிஸ்மஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

பணிவாகத் தெரிவிப்பதில்
எவ்வளவு மகிழ்வு உண்டாகிறதோ
அவ்வளவு மகிழ்வு ஊற்றெடுப்பதற்கு
இந்நாட்களில் இருந்தாவது
புகைத்தல், மது, விலைமாது பக்கம்
நாடாமல் இருப்பது நலமே!
பலம் என்னவென்றால்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல
நல்லொழுக்கம் உள்ளவர்களாக
நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக
வாழ்ந்து காட்டுவதேயாகும்! 

கவிதை எழுதத் தூண்டிய சூழல்


பேரூந்தில் ஏறின பின்னர்
கிழக்கு மேற்குப் பார்ப்பதில்லை
வடக்கும் தெற்கும் தெரிவதில்லை
இருக்கை இருந்தால் போதுமென
முண்டியடித்து
முன்னே ஏறிய பின்னர்
ஆளுக்காள்
முணுமுணுக்கத் தான் தெரியுமே!
இடப் பக்க இருக்கை
குளு குளு காற்றடிக்க
வெயில் பிடிக்காத இடமாச்சே
முணுமுணுத்தார் ஒருவர்...
இருக்கை என இருக்க வந்தாச்சு
வெயிலென்ன காற்றென்ன
முகம் வாட்டும்
வெயில் பக்கமாய் இருந்தவர்
அழுவாரப்போல முணுமுணுத்தார்...
உள்ளே போங்கோ உள்ளே போங்கோ என
நடத்துநரும்
ஆட்களை அடுக்கி ஏற்றினாரே!
ஓட்டுநரும்
பேரூந்தை உருட்டி நகர்த்தினார்
முன், இடம், வலம் என
பேரூந்தும் நகர
பேரூந்துக்குள்ளே மீண்டும்
முணுமுணுப்பு வலுத்தது...
வெயில் பக்கமாய் இருந்தவருக்கு
சில்லெனக் குளிர் காற்றும்
நல்ல நிழல் காய
மகிழ்ந்து முணுமுணுக்க...
நிழலும் காற்றும் சுகமாயிருக்க
மகிழ்ந்தவருக்கு
முகத்திலடிக்கும் வெயில் காற்று
துன்பம் தருவதாய் முணுமுணுக்க...
நடுவே நசிபவர்கள்
இவ்வளவு தூரம் வந்தாச்சு
இன்னும் எவரும்
இறங்குவதாயில்லை என
அலுத்துக்கொள்ள பேரூந்தும் நகர்ந்ததே!
சிறிது தூரம் பேரூந்து நகரவே
பெரும் மாற்றங்களைக் காணும்
நம்மாளுகளே
இருக்கை இருந்தால் போதுமென
முன்னேறுகையில்
பின்னே வரும் துயரை
நினைக்க மறப்பது சரியா?
ஒரு வெயில் ஒரு காற்று
நான்கு பக்கங்கள்
இவை ஆறும் தெரியாதா உமக்கு?
பேரூந்துக்குள்ளே
முணுமுணுக்க முன்னே
முன்னேற்பாடாய் இருந்தவர்
(துன்பம் களித்தவர் மகிழ்வடைய)
நலமாகப் பயணம் செய்கிறாரே!
இதைப் பார்த்த எனக்கு
"பட்டபின்னே அறிவதை விட
படமுன்னே அறிவதே
அறிவு!" என்றும்
"தேவை ஏற்படாத வரை
இப்படியும்
நிகழுமென உணராத வரை
பின்விளைவை அறியாத வரை
சிந்திக்காத நம்மாளுகள்;
வெயில் சுட்ட போதும்
காற்றின் இசை கேட்ட போதும்
'பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பு என்று' என
பாடிக்கொண்டே சிந்திக்கிறார்களே!" என்றும்
பல கவிதைகள் எழுதத் தோன்றிற்று!