Translate Tamil to any languages.

சனி, 8 ஜூன், 2013

எல்லாம் யாராலே?

ஆடிக் கடைசியில, முன் ஆவணியில நெல்லு விதைச்சோம்! ஐப்பசி வர முன்னரே களை பிடுங்கினோம். கார்த்திகை வந்ததும் நெல்லுக் கதிர் வந்திடுச்சு. மார்கழிக் கடைசியில அருவி வெட்டிப் புது நெல்லு வீட்டுக்கு வந்து சேரும்! அதைக் குத்தி அரிசியாக்கிக் கதிரவனுக்குப் பொங்கிப் படைப்பதே நம்ம விவசாயிகளின் கடமையாச்சு!

விவசாயிகள் துன்பப்பட்டு நெல்லு விதைச்சு, அருவி வெட்ட வானத்தில தொங்கிற கதிரவனுக்கு ஏன் அவங்க பொங்க வேணும்? இது நல்ல கேள்வி தான்!

மாசிப் பனி முசி்ப் பெய்யுமென நடுங்கிற கையோட கோடை தொடங்கிவிடும்! சித்திரையில வெயிலைப் பற்றி்ச் சொல்லவும் வேணுமா? வெட்கை தாங்க முடியாமல் உடுப்புகளைக் கழட்டிப் போட்டு இருக்க முனைவோம். நம்ம ஆடைக்குறைப்பில திரைப்பட நடிகைகள் கூடத் தோற்றுப் போயிடுவாங்கள்!

வெயிலால எங்களைச் சுட்டெரித்த கதிரவனுக்கு விவசாயிகள் பொங்க வேணுமா? அங்க தான் ஓர் உண்மை இருக்கிறது!
சுட்டெரிக்கும் வெயிலால கடல் நீர் ஆவியாகி வானத்தில சேமிக்கப்படுகிறது. வானத்தில சேமிக்கப்பட்ட அந்தக் கடல் நீர் தான் மாரியில மழையாகப் பொழிகிறது. அந்த மழையால தான் நெல்லு விளைகிறது.

அந்த மழை யாரால பொழிகிறது. வானத்துக் கதிரவனாலே தான். அப்ப நம்ம விவசாயிகள் கதிரவனுக்குப் பொங்கலாம் தானே!

அது சரி, மற்றவங்க ஏன் பொங்கிறாங்க?

உலக மக்கள் அனைவருக்கும் ஒளியும் இருளும் கதிரவனாலே தான் கிடைக்கிறது. அதனால், கதிரவனைக் கடவுளென வணங்குபவர்கள் எல்லோருமே பொங்குகின்றனர்.
என்ன, தைப்பொங்கலுக்குத் தயாரா?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!