Translate Tamil to any languages.

வெள்ளி, 21 ஜூன், 2013

பா புனையப் படிக்க வேண்டுமா? - 02


பா புனைய (கவிதை எழுத)
நாம் படிக்கவும் வேண்டுமா?
உண்ணான நல்ல கேள்வி தான்!
பா புனையப் படிக்க வேண்டாமப்பா...
பா புனைய முயன்று பாருங்களேன்!
முயன்றோம்...
இலக்கணம் குறுக்கே வந்து நிற்குதே!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய இலக்கணம் குறுக்கே வரலாமா?
உள்ளத்தில் உள்ளதை
இயல்பாக எடுத்துச் செல்லுங்களேன்...
அது கூட நல்ல பா தான்!

குறிப்பு: இக்கவிதை சிறு மாற்றங்களுடன் ஏற்கனவே இவ்வலைப்பூவில் "பா புனையப் படிக்க வேண்டுமா? - 01 (http://paapunaya.blogspot.com/2013/03/blog-post_13.html)" எனப் பதிவு செய்திருந்தேன். நண்பர்களின் கருத்திற்காக இதனையும் பதிவு செய்கிறேன்.

தமிழ்நண்பர்கள் தளத்தில் இப்பதிவு இடம் பெற்ற போது...
நண்பர் வினோத் தெரிவித்த கருத்து:
இலக்கணம் குறுக்க வந்து நிற்குதோ!
இலக்கணம் வருமுன்
இலக்கியம் தோன்றியதென்றால்
பா புனைய இலக்கணம் குறுக்க வரலாமா?
இது நல்ல பதிலாகும் கேள்வி.

எனது பதில்:
"சட்டிக்குள் சோளம்
துள்ளித் துள்ளிப் பொரியுமாப் போல
வான் வெளியில் வெள்ளிகள்" எனப் பாடும்
கடலை விற்கும் பாட்டிக்கு
யாப்பிலக்கணம் தெரியாதே!
சோளப்பொரி, வானத்து வெள்ளி
எப்படியிருக்கிறது ஒப்பீடு?
நம்மாளுகளும்
இப்படிப் பா புனையலாமே!

நண்பர் சுஷ்ரூவா தெரிவித்த கருத்து:
இலக்கணம் குறுக்க வந்தாலும்
இலக்கியம் முன்பு வந்தாலும்
நினைப்பதை எழுதிப் பழகினால்
இலக்கணம் அதன் வழி பகரும்
தண்டிக்க எண்ணும் காலமல்ல
பழகட்டும் புலமையென முழங்கட்டும்!

எனது பதில்:
பா புனைய முனைவோரை
எவராலும்
தண்டிக்கவோ தடுக்கவோ முடியாதே!
பா புனைய முனைவோரை
தூண்டும் செயலாகவே
"பா புனையப் படிக்கத் தேவையில்லை" என்கிறேன்!
"பணம் இருக்கும் வரை தான்
மணந்து நாடும் உறவுகள்..." என
யாப்பிலக்கணம் அறியாத ஏழை
எடுத்தாளும் ஒழுங்கைப் பார்த்தேனும்
நம்மாளுகள் பா புனையலாமே!

நண்பர் கார்த்திக்2011 தெரிவித்த கருத்து:
சித்திரம் செந்தமிழ் இரண்டும் கை பழக்கம்

எனது பதில்:
சித்திரமும் கை பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
நம்மாளுகள்
பா புனைய இரண்டையும் பழகி
வழக்கப்படுத்த வேணுமே!


2 கருத்துகள் :

  1. உங்களின் விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு படைப்பாளிக்கு எழுதத் தெரிந்தால் மட்டும் போதாது, வாசகருக்குத் தெளிவான விளக்கமும் தரத் தெரிந்திருக்கவும் வேண்டுமே!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!