Translate Tamil to any languages.

வியாழன், 31 டிசம்பர், 2020

நானறியா நாலறிவு

 


நாலறிவைக் கற்றிருந்தால் நல்வேலை நல்வருவாய்

நாலாள்கள் உன்னைச்சுற் றி.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நாலறிவைக் கற்றவராம் தானுலகைச் சுற்றுவராம்

நாலறிவு கற்காதார் வீண்.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நாலறிவைக் கற்றிருந்தால் தான்பார் நடுத்தெருவில்

நாலாள்கள் உன்னைமதிப் பார்.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நாலறிவை நானறியேன் நாடெங்கும் பேசுகிறார்               

நாலறிவாம் நானறியச் சொல்.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நாலறிவைக் கற்றிருந்தால் தான்

நல்ல நிலைக்கு உயரலாமென

நாலாள்கள் சொல்லித்தான் தெரிந்தாலும்

நானறியேன் அந்த நாலறிவை!

ஐம்புலனால் புரிகின்ற அறிவாம்

ஐந்தறிவாம் - ஆங்கே

உள்ளத்தால் உணருகின்ற அறிவாம்

ஆறாம் அறிவாம் - அப்பால்

படித்தறிவு, பட்டறிவு என்றுரைக்க

எட்டறிவைத் தான் - நானும்

எண்ணிப் பார்க்கிறேன் - அந்த

நாலறிவைத் தான் நானறியேன்!

ஒழுக்கமுடன் நன்றே படித்தல்

விருப்புடன் நல்ல தொழில் பார்த்தல்

நாலுபணம் தேடிவைத்துப் பேணுதல்

ஊருக்கு நல்லெடுத்துக் காட்டாய் வாழுதல்

என்றெல்லாம் மூதறிஞர் சொல்லி வைச்சது

நானறியாத அந்த நாலறிவு என்றறியேன்!


புதன், 23 டிசம்பர், 2020

உழைப்பில்லையேல் பிழைப்பில்லைக் காண்!


முற்சந்தி, நாற்சந்தி, ஐந்து சந்திகளில்

வேலை இல்லாமல் அலைகின்ற ஆண்களே!

நாலு காசு உழைக்கத் தான்

நல்ல வேலையில சேர்ந்தால் தான்

எந்தப் பெண்ணும் உனக்கிசைவாள் காண்!

நாலு காசு உழைத்துக் கொண்டிருந்தால்

நாளும் மகிழ்வாய் வாழலாம் ஆண்களே!

அன்பான, அறிவான, அழகான, பண்பான, பலமான குமரி ஒருத்திக்கு நானும் தாலி கட்டினேன். நான் தாலி கட்டின பிறகு, அவள் தானே என்னில்லத்தை ஆளும் இல்லாள். என்னைப் பெத்த அம்மையும் அப்பனும் "பிள்ளை உழைச்சுப் போட்டால் சமைச்சுப் போடு" என மருமகளுக்கு மதியரையும் வழங்கியிருந்தனர். எனக்கோ வேலை இல்லாமல் போச்சு; அந்த நேரம் பார்த்து உழைச்சுப் போட்டால் சமைச்சுப் போடுகிறேனென இல்லாளும் எனக்கு ஒத்துழையாமல் இருந்தாள்.

நல்லாய் உழைத்து வருவாய் பெருக்கினால்

இல்லாள் பிழைக்கத் துணையிருப்பாள் - இல்லையேல்

நல்லாய் உழைக்கத்தான் போ!

அந்த நேரம் பார்த்து வந்த மேலுள்ள 'ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா' கூட நாலு காசு ஈட்ட உதவவில்லை. அடுத்ததென்ன? வேலை தேடி நாலு காசு ஈட்டின பிறகு தானே இல்வாழ்வும் இனித்தது.

வேலையற்று இருக்கும் ஆண்களே!

புண்பட்ட என் கதை அறிந்தாவது

"உழைப்பாளியே ஆண்களின் அழகானவர்" என்று

பெண்கள் ஒத்துழைப்போடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

என் வாழ்வும் உனக்கு வழிகாட்டுமென

நானுரைத்தேன் நீ மகிழ்வாய் வாழவே!

வேலையற்ற இளையோரும் தாலி கட்டிய இல்லத்து அரசர்களும் "ஒழுங்காய் உழைத்துப் போடும் ஆண்கள்" என நாலு காசு உழைக்க முயலுங்கள். அப்ப தான் உங்கள் காதலியோ இல்லாளோ உங்களுக்கு ஒத்துழைப்பாள். உங்களைப் பார்த்தாவது நாளைய இளையோர் வேலையின்றித் தெருச் சுற்றாமல் உழைத்துப் பிழைத்து வாழட்டும்.