Translate Tamil to any languages.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

சுவையான பாக்களை படித்தால்...


"பசுபதிவுகள்" என்ற
வலைப்பூ (Blog) ஆசிரியரும்
"கவிதை இயற்றிக் கலக்கு!" என்ற
நூலின் ஆசிரியரும்
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
தலைப்பில் ஓர் இனிய பா தந்து
எப்படிப் பா புனைகிறார் என
எமக்கு விரித்து உரைக்கிறார்
படித்துப் பாருங்களேன்!

"வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
 மண்டை முழுதும் தேடிடுவேன்;" என்றும்
"புனைவும் உணர்வும் இசைபாடும்;
 புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்றும்
பாவலர் பசுபதி கூறும் வழிகாட்டலை
பாப்புனைய விரும்புவோர் என்றும்
பாப்புனைகையிலே எண்ணிக்கொள்ளும்!

பாப்புனைய விரும்புவோர் - பலரது
சுவையான பாக்களை படித்தால்
பாப்புனைந்தவரின் கைவண்ணம் - அவர்
கையாளும் பாவண்ணம் எல்லாம்
உள்ளத்தில் இருத்திக் கொள்ளலாமே!
"கவிதை எனக்கோர் ஆனந்தம்!" என்ற
பாவலர் பசுபதியின் கவிதையை
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
படித்துச் சுவைக்கலாம் வாருங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/10/blog-post.html

முடிவு

அன்பாகப் பழகுவது
என்னோட இயல்பு
அதற்காக
என்னைப் பற்றி
அடி, நுனி அறியாமல்
முடிவு எடுக்கலாமோ?
சொல்லிவிடு என்கிறாய்
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?

வியாழன், 30 அக்டோபர், 2014

குளவிக் கூடும் மக்கள் குழுவும்

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தால்
உள்ள குளவிகள் எல்லாம்
மெல்லச் சூழல் எங்கும்
பறந்து பறந்து கொட்டுமே!

மக்கள் குழுவிற்குள் சொல்லெறிந்தால்
கூடிய மக்கள் எல்லோரும்
தேடித் தேடியே எங்கும்
செய்தீயாப் பரப்புவதைக் காண்பீரே!

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிய முன்னும்
மக்கள் குழுவிற்குள் சொல்லெறிய முன்னும்
நம்மவர் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்
எப்பவும் பின்விளைவைக் கொஞ்சம் படிக்கலாமே!

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?


பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.

அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...

காட்சி-1

முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!

வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!

முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!

வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!

முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?

வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!

முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?

வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!

முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!

வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!

காட்சி- 2

பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!

பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...

பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன்  ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!

பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!

பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?

பதிவர் - 04 : பட்டென்று வந்து
             சட்டென்று படித்து
             நறுக்கென்று கருத்திட
             வழி விடாமல் எவர் மீதும்
             பழி போடாதீர்கள்!

பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...
             பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி
             கட்டுப்பாடு ஏதுமின்றி
             கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்
             கருத்துப் (Comments) போட எவருமில்லையே!

பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!

பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!

பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.

பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...

பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...

பதிவர் - 05 : எவ்வளவுக்கு  எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு  அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!

மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments)  என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.

முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!

கல்வி கற்போம் கற்றதைப் பகிர்வோம்!


“The Root of the Education is Sour
The fruit of the Education is Sweet”
இப்படி என்றால்
எப்படி என்று தெரியுமா?
கல்வியின் தொடக்கம்
கொஞ்சம் புளிக்கும் தான்
கொஞ்சிக் கொஞ்சிக் கற்றால் தான்
கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள
கல்வியும் இனிக்கும் என்பதேயாம்!
இதெல்லாம்
நவராத்திரி நாள்களிலே தான்
கல்வியா? செல்வமா? வீரமா?
எது பெரிதென்று
நாம் போட்டி போடும் போதே
நாம் அறிவோமே!
அப்ப தானே
அள்ள அள்ள வற்றாத செல்வம்
கல்விச் செல்வம் என்றறிவோமே!
இதை வைச்சுத் தானே
எங்கட முன்னோர்கள்
"கற்றது கைப்பிடி மண்ணளவு
கல்லாதது உலகளவு" என்று
எடுத்துக்காட்டுக்குச் சொல்வார்களே!
எப்படி எப்படி என்கிறீர்களா?
நாம் எப்படித் தான்
எவ்வளவோ கற்று முடித்தாலும்
அவை
கைப்பிடிக்குள் அள்ளிய
மண்ணளவு என்று ஒப்பிட்டாலும்
இன்னும்
கற்க வேண்டியிருப்பது
எவ்வளவு என்று சொன்னால்
உருளும் உலகம் அளவு என்கிறாங்க!
என்னங்க
உலகளவு கற்க முடியாதுங்க
என்றால் சரியாகுமா?
முடியும் என்கிறேன் - முதலில்
கைப்பிடியளவு படிப்போம்…..
கற்றதைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தி
"யாம் பெற்ற கல்வி
இவ்வையகமும் பெறட்டும்" என
கற்றதைப் பிறரோடு பகிர்வோம்,,,
அப்ப தான்
எஞ்சியதைப் படிக்க வாய்ப்பு வருமே!
எடுத்ததிற்கு எல்லாம்
எடுத்துக்காட்டாக
எடுத்துக்காட்டுவதும் திருக்குறளே - அந்த
திருக்குறளையே எழுதிய திருவள்ளுவர் தான்
130 அதிகாரங்களில்
1330 திருக்குறள் எழுதி - அவற்றில்
உலகளவு கல்வியைத் தந்தாரே!
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என
ஔவையார் சொன்னபடி - அதாவது
இளமையில் கற்றவை
என்றும் மறக்க இயலாதது போல
உலகளவு கல்வியைக் கூறும்
திருக்குறளையும் கற்போம்!
"கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக" என்று
வள்ளுவரும் சொன்னாருங்க…
கற்பவை நிறைவாகக் கற்று
அதன் வழி செயற்படுவோம் என்பதே
வள்ளுவரின் வேண்டுதலும் ஆகுமே!
வாருங்கள் உறவுகளே…
ஒன்றாய்ச் சேருங்களேன்
நன்றாய்க் கல்வி கற்போமே
கற்றவை யாவும் பிறரறியப் பகிர்வோமே!

திங்கள், 27 அக்டோபர், 2014

எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?

நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.


  1.  எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
  2.  மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
  3.  மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
  4.  நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. மூன்று மணி நேரம் தான்
தம்பி, தங்கைகளே...
நல்ல செய்திகளை
உள்ளத்திலே பதியச் செய்ய
திரைப்படமே நன்று!
அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

  1.  அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
  2.  குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
  3.  பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
  4.  முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
  5.  தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

சனி, 25 அக்டோபர், 2014

தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!



வெளிநாட்டுப் பதிவர்களையும் அழைத்து  
தமிழகத்துப் பதிவர்களும் இணைந்து
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே 
தமிழ்ப் பதிவர் சந்திப்பு நடந்தேற 
துணைநிற்கும் எல்லோருக்கும் வாழ்த்து!

எழுத்தாலே இணைந்தோம்
அறிவாலே பழகினோம்
கருத்துப்பகிர்வாலே கட்டுண்டோம்
பதிவர் சந்திப்பாலே உறவைப் பலப்படுத்த 
மதுரைக்கு வருகை தரும்
தமிழ்ப் பதிவர்களுக்கு வாழ்த்து!

ஆளறிமுகம் அன்புப் பகிர்வு
கேளாயோ உள்ளத்து எண்ணம்
பாராயோ பதிவர் வெளியீடுகள்
பெருகுதே உறவுப் பாலமென
தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பயன்தர
தமிழ் எங்கும் சிறக்க வாழ்த்து!

கூகிளும் வேர்ட்பிரஸும்
தமிழ்மணமும் துணைநின்றாலும்
தமிழைப் பேண முனைப்புற்று எழுந்த
தமிழில் எழுத விருப்புற்றுக் குதித்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண
வலைப்பூ நடாத்தி வரும் பதிவர்கள் 
பதிவர் சந்திப்பில் மகிழ்வோடு வெற்றிகாண
ஈழத்தில் இருந்து - உங்கள்
யாழ்பாவாணன் வாழ்த்துகிறேன்!

கடவுள் அழுகின்றான்...!


அழகான உலகில்
நானும் நீங்களும்
கடவளின் வடிவமைப்பே!
நமக்கிடையே நிகழ்வதெல்லாம்
நாமே
வடிவமைத்தது என்பேன்!
உலகம் அழிவதற்கும்
நாம்
நம்மை அழிப்பதற்கும்
கடவுளின் திருவிளையாடல் அல்ல...
நமது செயற்பாடுகளே!
அழிகின்ற உலகையும்
அடிபட்டுச் சாகும் உயிர்களையும்
வானிலிருந்து பார்த்தவாறே
உலகையும் உயிர்களையும் படைத்த
கடவுள் அழுகின்றான்...!
படைப்பது
என் தொழில் என்றால்
அழிப்பதும் அழிவதும்
நம்மவர் தொழில் என்றா
கடவுள் அழுகின்றான்...!
நான் பிறந்தேன்
நான் வாழ்ந்தேன்
என்றில்லாமல்
நம்மைப் படைத்த
கடவுளைக் கூட
எப்பன் எண்ணிப் பார்த்தாலென்ன!

உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?

எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது. அப்படியாயின் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் புதிய பதிவர்களுக்குக் கூறுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டிய சில வழிகளைக் கீழே தருகின்றேன்.


  1. கை எழுத்துப் படிகளாக நண்பர்களுக்குக் கொடுப்பது.
  2. அச்சு இதழ்களில் வெளியிடுவது.
  3. மின் இதழ்களில் வெளியிடுவது.
  4. முகநூல்(Facebook), தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில் வெளியிடுவது.
  5. சொந்தமாக வலைப்பூக்கள் (blogs) நடாத்தி வெளியிடுவது.
  6. சொந்தமாகக் கருத்துக்களங்கள் (forums) நடாத்தி வெளியிடுவது.
  7. சொந்தமாக இணையத்தளம் (webs) நடாத்தி வெளியிடுவது.
  8. அச்சுப் பொத்தகமாக அல்லது மின் பொத்தகமாக வெளியிடுவது.


மேலுள்ள வழிகளில் எவ்வழியால் உங்கள் படைப்புக்களை அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வைக்கலாம்? உதவிக்கு உங்கள் நண்பர்களையும் இழுத்து வந்து புதிய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட முன்வாருங்கள்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு


"முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் - அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட் என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்" என
"தமிழாய் நிமிர்ந்திடு!.." என்ற பாவில்
(http://tamilnanbargal.com/node/38552)
நண்பர் இழவழுதி
"தமிழா ஒன்றுபடு" என நினைவூட்டுகிறாரே!

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
முன்னோர்கள் முன்மொழிந்தார்களே...
இது
தமிழக மக்களுக்காக எழுதப்பட்டதல்ல
உலகெங்கும் வாழும் தமிழருக்காக
எழுதப்பட்டது என்பேன்!
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
வாழ்ந்த தமிழர் - என்றோ
ஈழத்தமிழரும் அழிந்து விட்டால்
தமிழகத்தில் மட்டுமே இருக்கலாம்...
"தமிழாய் நிமிர்ந்திடு
தமிழனாய் வாழ்ந்திடு" என்று
நண்பர் இழவழுதி சொல்வதில்
தப்பில்லைக் காணும்!

தமிழரின் ஒற்றுமையின்மைக்கு
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருப்பினும்
ஈழத் தமிழரின் போர் வீழ்ச்சிக்கும்
ஒற்றுமையின்மையே ஆணிவேர்
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" போல
தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு
உலகத் தமிழரையும் ஒற்றுமைப்படுத்து
தமிழகத்தை மட்டுமல்ல
தமிழன் உலகையே ஆளலாம்
தமிழையே
உலகெங்கும் பரப்பிப் பேணலாம்
ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்து
தமிழ் மக்கள் இடையே
ஒற்றுமையை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?


தொலைக்காட்சி
ஒரு தொல்லைக்காட்சி அல்ல...
தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்போரும்
பிழை விட்டதில்லை...
பனை ஏறுபவன்
பனையில ஏறாவிட்டால்
தெருவில குடிகாரரைப் பார்க்க முடியாதே...
அது போலத் தான்
வணிக நோக்கிலான தயாரிப்பாளர்கள்
பார்ப்போர் விருப்பறியாத அறிவிப்பாளர்கள்
விளம்பரங்களால்
நிகழ்ச்சிகளுக்குப் பின்னூட்டம் கொடுப்போர்கள்
தொலைக்காட்சியில் இருக்கின்ற வரை
தொல்லைக்காட்சி தோன்ற இடமிருக்கிறதே!
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?
ஆமாம்!
கெட்டதைக் கலக்கும் தயாரிப்பாளர்கள்
பிறமொழி கலக்கும் அறிவிப்பாளர்கள்
நிகழ்ச்சியைக் குழப்பும் விளம்பரதாரர்கள்
இவற்றையும் கடந்து தொலைக்காட்சியில்
தமிழ் நிகழ்ச்சியைப் பார்த்தால்
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா? என்று
எண்ணத்தோன்றுகிறதே!

வியாழன், 23 அக்டோபர், 2014

எந்தப் பெயர் சொந்தப் பெயர்?

நல்ல பெயரெடுக்க நாளும் முயற்சிக்கிறேன்
கெட்ட பெயரல்லவா முட்டி மோதுகிறதே
"பெறுமதியானது நற்பெயரே!"

நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
தனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"

பெற்றவர் வைத்தது அடையாளப் பெயரே
நம்மவர் செயலால் கிடைப்பது தகுதிப் பெயரே
"ஆளை மதிப்பிட உதவுவதும் பெயரே!"

கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!


வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!

வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?


பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!

ஆயினும், எனது http://mhcd7.wordpress.com/ தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.

ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.

உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.

அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.

எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.

முன்நாளும் பின்நாளும்


இன்றெல்லாம்
ஆளுக்காள்
தூண்டிவிட்டும் கூட
ஆயிரம் பொய் சொல்லி
ஒரு திருமணம் மட்டுமல்ல
பல காதல் கூட
இடம்பெறுகிறதாமே!
எல்லோரும் சேர்ந்து
காதலிக்கவும் வைப்பார்கள்
மணமுடிக்கவும் வைப்பார்கள்
கடைசியில்
நானும் மனைவியும்
காதலித்து மணமுடித்த பின்
நாம் படும் துன்பங்களை எவரறிவார்?
காதலிக்க வைப்பதும்
மணமுடிக்க வைப்பதும்
சுகமே - ஆனால்
அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது
காதலித்தவரும்
மணமுடித்தவரும்
பின்நாளில் படப்போகும் துன்பங்களை!
மாற்றாரை நம்பி
காதலிக்கவும் மணமுடிக்கவும்
இறங்குவோரே - உங்கள்
பின்நாளை நினைவூட்டி
நீங்களாகவே
நம்பிக்கையானவர்களோடு
நம்பிக்கையுடன்
காதலிக்கலாம் மணமுடிக்கலாம்...
நம்பிக்கை தான்
காதலில் வெற்றியையும்
மகிழ்வான வாழ்வையும்
எமக்குத் தருகிறது என்பதை
நாம் அறிவோமா!
மணமுடிக்க முன் காதலித்தால்
சில வேளை தோல்வி தான்
மணமுடித்த பின் காதலித்தால்
எல்லா வேளையும்
மகிழ்ச்சி அதிகம் தான்
ஆனால் - அது
சாகும் வரை தொடர்ந்தால்
முதுமை கூட இளமை ஆகலாம்!

திங்கள், 20 அக்டோபர், 2014

சொல்லுக் கேட்பதாயில்லை...

படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சாலும்
பிள்ளைகள் சொல்லுக் கேட்பதாயில்லை...
பட்டுக் கெட்டு நொந்த பின்னே
அம்மா, அப்பா என்றழுகையில் தெரிகிறதே...
"பிறர் பேச்சுக்கும் பெறுமதி உண்டென்றே!"

நம்மாளுகளும் நம்மையாளும் கடவுளும்


வாழ்வை வழங்கிய கடவுள் பார்க்கிறான்
நம்மாளுகள் மகிழ்வாக வாழ்கிறாரா என்றுதான்...
கிடைத்த வாழ்வில் துயரைக் கண்டதும்
நம்மாளுகள் வாழ்வதைவிட சாகலாம் என்கிறார்களே!

வாழ்வை வழங்கிய கடவுளுக்குத் தெரியும்
துயரெனும் விலையைக் கொடுத்தே வாழணுமென்று...
துயருக்குப் பின்னும் மகிழ்வு உண்டென்று
நம்மாளுகளுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதே!

வாழ்க்கையென்பது சும்மா மகிழ்வு தருமென்றால்
படைப்புகள் இயங்காதெனக் கடவுளும் அறிவான்...
கடவுளின் எண்ணத்தை அறியாத நம்மாளுகள்
படைப்புகளைப் படைக்காதவரை படைப்பின் சுவையறிவரோ!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகள்

நம்ம பூனை நல்ல பூனை
சும்மா சொல்லக் கூடாது
உறியில கிடந்த பாலை
கண்ணை மூடிக் கொண்டு
களவாய்க் குடிக்குமே!
உறியால விழுந்த மூடி
ஒலி எழுப்பக் கேட்டு
எட்டிப் பார்த்த போது தான்
கண்டு பிடித்தேன் இந்த உண்மையை!
நல்ல நல்ல பிள்ளைகளைப் பார்
கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகளாய்
பெத்தவங்களுக்குப் புழுகி விடுறாங்க
ஆசிரியர்களுக்குக் கயிறு விடுறாங்க
இயமனுக்கே ஊறுகாய் போடுவாங்க
கடவுளுக்கே இருட்டடி போடுவாங்க
செய்வதெல்லாம் செய்துபோட்டு
மக்களாயம்(சமூகம்) காணவில்லையென
சுத்தமான ஆளுகளைப் போல
நடுவழியே நடை போடுறாங்களே!
பள்ளிக்கு ஒளிச்சவங்களை
தேர்வுப் பெறுபேற்றில் பார்க்கலாம்
உழைப்புக்கு ஒளிச்சவங்களை
தின்னக் குடிக்க வழியில்லாட்டிப் பார்க்கலாம்
கணவனுக்கோ மனைவிக்கோ ஒளிச்சவங்களை
மூன்றாமாள் முரண்டுபிடிக்கையில் பார்க்கலாம்
கடன்கொடுத்தோருக்கு ஒளிச்சவங்களை
சூழலுக்குள்ளே சுழலுகையில் பார்க்கலாம்
மாற்றான் கண்ணுக்குத் தெரியாதென
இத்தனை பூனைகளும்
இப்படித்தான் பால் குடிக்கின்றனவே!
காதல் என்னும் போர்வையில் கூடினாலும்
கலவி என்பதைச் சோதனை செய்தாலும்
மருத்துவருக்கு முன்னே மாட்டுப்படுவினமே...
புகைத்தலைச் செய்தாலும்
மக்கள் முன்றலில்
மணப்பதால் மாட்டுப்படுவினமே...
ஒளிச்சுத்தான் கள்ளுக் குடிச்சாலும்
ஊருக்கப்பால் கறுப்புவெள்ளை குடிச்சாலும்
ஆடையணிகள் அவிழ்ந்த நிலையில்
தெருவழியே விழுந்து கிடக்கையிலே
மக்கள் முன்னே மாட்டுப்படுவினமே...
எட்டி எட்டி எட்டடி பாய்ந்தாலும்
இப்படித்தான்
இத்தனை பூனைகளும் பால் குடிப்பதை
எப்படியோ
மக்களாய(சமூக)மும் கண்டுபிடிக்கிறதே!
நல்ல நல்ல பிள்ளைகளே
உங்க வீடும் நாடும்
உங்களைத் தான் நம்பியிருக்கே...
நீங்க மட்டும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் தெரியாமல்
நடிப்பதை விட்டுப் போட்டு
படிச்சுப் படிச்சு ஒழுக்கம் பேணுங்களேன்!

சனி, 18 அக்டோபர், 2014

படிப்பது பிள்ளைகளா பெற்றோரா?


மருத்துவராகவோ
சட்டவாளராகவோ
பொறியியலாளராகவோ வரும் வண்ணம்
பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுப்பது
பெற்றோரின் கோழைச் செயலே!
எவரது கல்வியிலும்
எவரும் தலையிடுவது அழகல்ல...
எந்தக் கல்வி இலகுவானதோ
அந்தக் கல்வியை
எவரும் தொடரலாமே!
ஆனாலும் பாருங்கோ
கல்வியை விரும்பியவருக்கே
கல்வியானது
இலகுவாயிருக்கும் கண்டியளோ!
பிள்ளைகள் விரும்பும் கல்விக்கு
பெற்றவர்கள் இசைந்தால் போதுமே
நாளைய வழித்தோன்றல்கள்
நல்ல அறிஞர்களாகவே மின்னுவரே!

வெள்ளி, 17 அக்டோபர், 2014

காட்டுகிறாள் என்றால் பாருங்களேன!



இவள் என்னடா
ஆங்கிலத்தில தொடங்கி
தமிழைக் கொன்று
ஆட்டம் போட்டுக் காட்டி
அடங்கி ஒதுங்கிப் போறாளே...
இல்லை இல்லை
இல்லாத இடுப்பைக் காட்டி
இளசுகளை இழுக்கப் பார்க்கிறாளோ...
தன்னைத் தாழ்த்தினால் பரவாயில்லை
தமிழைக் கொல்ல இடமளியேன்...
என் அருமைத் தமிழ் விரும்பிகளே
இவளது நடிப்புப் பரவாயில்லை
ஆனால்
படிப்புச் சரியில்லை...
யாழ்பாணக் கொத்துரொட்டி மட்டும்
இவள் காட்டவில்லை - தான்
யாழ்பாணப் பண்பாட்டையும்
கழட்டிப் போட்டாள் என்றும்
காட்டுகிறாள் என்றால் பாருங்களேன்!

வியாழன், 16 அக்டோபர், 2014

தெரு ஓரத்துச் செய்தி

வெட்டி வெட்டிப் போடுறாங்க பார்
அட்டி அட்டியாக ஏறுது பார்
நம்மவர் வீட்டு இலைகுழை!

பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!

சட்டி சட்டியாக ஊத்துறாங்க பார்
கட்டி கட்டியாக ஊருது பார்
நம்மவர் வீட்டுக் கழிவு!

(கழிவு: மீன், இறைச்சி கழுவிய நீர்)




மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_16.html

மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!


மதிப்பிற்குரிய வலைப்பதிவர்களே!

வலைப்பதிவர்களின் சிறந்த தளங்களைத் திரட்டிப் பேணுவதோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி ஆய்வுப் (ஆராய்ச்சிப்) பதிவுகளையும் திரட்டிப் பேணுவதே எனது நோக்கமாகும். இவற்றை எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் தளத்தில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யவும் எண்ணியுள்ளேன். மேலும், தேடுபொறிகளூடாகத் தேடும் வேளை நிரல் (List) படுத்தவும் ஒழுங்கு செய்கின்றேன். அதனால், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஓர் எள்ளு அளவேனும் முயற்சி எடுத்ததாக நான் நம்புகிறேன்!

இதனை நிறைவேற்றவே http://2tamil.tk/ என்ற தளத்தை வடிவமைக்கிறேன். இதன் ஒரு பகுதியாகவே http://2tamil.tk/ts4u இருக்கும். மேற்படி இரு இணைப்புகளையும் சொடுக்கிப் படித்த பின், எனது முயற்சிகளை மேம்படுத்த உதவும் மதியுரை (ஆலோசனை) தாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்


செவ்வாய், 14 அக்டோபர், 2014

பணம் பற்றிய பேச்சு!


எவர் வாயாலும்
பணம் பற்றிய பேச்சுத் தான்
கேட்கத் தான் முடிகிறதே!
காதலிப்பாயா என
தோழியிடம் கேட்டாலென்ன
இனிய இரவாகட்டுமென
மனைவியோடு படுக்கையை விரித்தாலென்ன
முதலில பணத்தை வையப்பா என
எட்ட விலகிறாங்களே!
பணம் பத்தும் செய்யுமாம்
குணம் செத்தாலும் நிலைக்குமாம்
ஆனால்,
நம்ம ஊரில நடப்பது என்ன?
பணத்தைப் பொத்திப் பொத்தி
வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் இல்லையே...
பணத்தைக் கிள்ளிக் கிள்ளி
ஊருக்கெல்லாம்
கொடுத்து வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் நிறைந்து இருக்குமே...
எப்படி இருப்பினும்
எவரும்
தனக்குப் பின்னே ஈகம் (தானம்) என்பதை
மறக்கவில்லைத் தானே!
கறுப்புப் பணம்
சிறை செல்லத் துணைக்கு வரும்
நீலப் பணம்
உயிர்கொல்லி (எயிட்ஸ்) தரத் துணைக்கு வரும்
பொய்ப் (போலிப்) பணம்
உறவுகளற்ற நிலைக்குத் துணைக்கு வரும்
உண்மைப் (மெய்ப்) பணம்
உறவுகள் நிறைந்த நிலைக்குத் துணைக்கு வரும்
என்றெல்லோ நம்ம ஊரில
பணம் பற்றிப் பேசுறாங்களே!


வெள்ளி, 10 அக்டோபர், 2014

எனது உள்ளம் நிறைந்த நன்றி!


எனது 46 ஆவது பிறந்த நாள் 07/10/2014 அன்று தான். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் எனது நன்றி.


ஓய்வு!

என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!

உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.


திங்கள், 6 அக்டோபர், 2014

எதை எழுதலாமென்று தான்...


எனது மடிக்கணினிக்கு
அடிக்கடி மூச்சுப் போகிறதே...
அதுதான் பாருங்கோ - அது
மின்னைக் (Current) குடிக்காமையால்
இயங்க மாட்டேன் என்கிறதே!
கணினி மருத்துவரிடம் (PC Technician) காட்டினால்
இப்ப நெருக்கடி என்றார்
அப்ப தான்
எதை எழுதலாமென்று தான்
எண்ணிப் பார்த்தேன்!
அடிக்கடி பழுதாகும்
மடிக்கணினிக்குப் பதிலாக
மாற்றுக் கணினி தேவை என்று
விளம்பரம் எழுதலாமோ
மடிக்கணினிக்கு மூச்சுப் போனதால்
வலைப்பூக்களில் பதிவிட
முடியவில்லையென எழுதலாமோ
இப்படியே
எத்தனை சாட்டுச் சொல்லலாமென
எண்ணிய போது தான்
"சாட்டு இல்லாமல் சாவில்லை" என்ற
முதுமொழியை
எழுதலாமென எண்ணினேன் - அப்படி
எழுதினாலும் பாருங்கோ - அதற்கான
விளக்கமென்ன என்று கேட்டால்
என்ன பதிலைச் சொல்லலாம் என்று
பதிலையே தேடிக் கொண்டிருந்தேன்!
ஆங்கொரு முதன்மைச் சாலையில்
தம்பி ஒருவனோ  தங்கை ஒருவளோ
உந்துருளி (Motor Bike) ஒன்றை வேண்டினார்
ஓடத் தயாரானார்... ஓடினார்...
மூறுக்கோ முறுக்கென
வலக் கைப்பிடியை முறுக்கினார்,,,
இடக் கைப்பக்கமாக வந்த
கன (பார) ஊர்தி மோதியதால்
மோதிய இடத்திலேயே
தம்பியோ  தங்கையோ மூச்சைவிட்டாரென
செய்தி ஒன்றைப் படித்தேன்!
உந்துருளி (Motor Bike) ஓடியவரை
கன (பார) ஊர்தி மோதி
உயிரைக் குடித்தது என்றோ
உந்துருளி (Motor Bike) ஓடுவதாக
மூச்சாகப் பறந்தவர்
மூச்சைவிட்டார் என்றோ
எழுத எண்ணிய வேளை தான்
சாவிற்குச் சாட்டு இவையென
பதில் கூறலாமென எழுதினேன்!


சனி, 4 அக்டோபர், 2014

காதலர் நாள் நினைவில்...


சாவு ஒறுப்புக் குற்றாவாளியாம்
வலன்ரைனை
சிறைக்குச் சென்று வந்து
சாப்பாடு கொடுத்தவளே
காதலித்தாலும்
வலன்ரைன் சாவடைந்த நாளே
காதலர் நாள் மாசி 14ஆம்!
மாசி 14ஆம் நாள்
உயரிய காதலையே நினைவூட்டும்
கீழ்த்தரக் காதலர்களை நினைவூட்டுமா?
'காதல்' என்பது
மூளையில் தூண்டப்பட்ட தூண்டி(ஓமோன்)யால்
உருவானதல்ல
உள்ளத்தில் விருப்புற்றதன் விளைவே!
அழகிற்காக, பாலியல் உணர்விற்காக, பணத்திற்காக போன்ற
எதற்காகவேனும் காதலித்தவர்
காலப்போக்கில் பிரிந்தாலும்
நல் எதிர்காலத்தை, நல வாழ்வை சிந்தித்தவர்
சாகும் வரை காதலிப்பதைப் பாரும்!
சாகும் வரை காதலித்து
வாழுவோம் என்ற முடிவோடு
காதலிப்பவர்கள் நினைவூட்ட
நல்ல நாள் மாசி 14 என்பேன்!
சாகும் வரை
காதலிக்கும் இணையர்களைக் காண
முடியாத போதும்
காதலர் எண்ணிக்கை அதிகம் தான்
ஆனால்,
எல்லாமே
பள்ளிக் காதல் படலை வரையுமா என
எண்ணத் தோன்றுகிறதே!

வெள்ளி, 3 அக்டோபர், 2014

பட்டுத் தெளிந்த பின்...

ஆளுக்காள் அறிவுரை சொன்னால்
இலவசமாக வழங்கக்கூடியது
இதுதானென்று
எவரும் எப்பனும் கேட்பதாயில்லை!
அது, இது, உது என
எத்தனையோ தவறுகள் செய்தமைக்கு
அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,
கண்ட இடத்துக் காவற்றுறையும் தான்
அடித்து நொருக்கினாலென்ன
நெருப்புக் கொள்ளியால சுட்டென்ன
நாளும் நம்மாளுகள்
தவறு செய்வதை நிறுத்தியதாயில்லை!
சின்னப் பிள்ளையாயிருக்கையிலே
நானும்
பொல்லாத அட்டாதுட்டிக் குழப்படிகாரன்
ஆனாலும்
என் அப்பா ஒரு நாளும் அடித்ததில்லை!
என் அம்மாவுக்கு வெறுப்பு வர
"பொடியனை அடிச்சுத் திருத்தாட்டி
பின்னுக்குக் கெட்டுப்போவான்" என
அப்பாவுக்குச் சொல்லி அடிக்கச் சொன்னாலும்
அம்மா கூட எனக்கு அடித்ததில்லை!
"பொடியனை அடிச்சுத் திருத்தேன்டா" என
ஊரார் சொன்னாலும் கூட
எல்லோருக்கும்
என் அப்பா சொல்லும் ஒரே பதில்;
சொல்லியும் திருந்தாதோர்
சுட்டும் திருந்தாதோர்
பட்டுத் தெளிந்த பின் தானே திருந்துவினம்!
தம்பி, தங்கைகளே
எல்லோருக்கும்
என் அப்பா சொன்ன அறிவுரை
எப்பன் உங்கட தலைக்கு ஏறிடுச்சா?
தலையில பதிச்சு வைக்காட்டி
பட்டுத் தெளிந்த பின்
கணக்கிலெடுக்க மறக்கமாட்டியளே!

வியாழன், 2 அக்டோபர், 2014

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!

புதன், 1 அக்டோபர், 2014

அழைப்பு விடுக்கின்றேன்!


எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!