Translate Tamil to any languages.

வெள்ளி, 28 மே, 2021

எழுதுங்க, முடிவை வாசகர் சொல்லட்டும்

 

1, 
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்கள்
உள்ளத்தில் ஏற்பட்ட நோவை
உடலில் ஏற்பட்ட வலிகளை
எழுதும் போது மறக்காமல்
எதுகை, மோனை அமைய
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்களுக்கும்
கவிதைகள் எழுதத்தான் வருமே!
பலவாண்டுகள் பக்குவமாய் பழகி
பலரும் பார்க்கத்தான் காதலிப்பதாய்
காலம் கடத்திப் போட்டு
காலமானதும் அண்ணா என்றாளே!
எழுதுங்கள் இப்படித்தான்
எழுதுவது கவிதை ஆகலாம்!

2.
கவிதை என்பதும் பாடல் என்பதும்
வேறுபாடு உள்ளதாய்
எனக்குத் தெரியவில்லை.
"காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்! " என
பணத்துக்காய் உறவுகளென்று
எழுதி முடிப்பது கவிதை!
"பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்) "  என
மனித உள்ளத்தை உரித்துக் காட்டினால்
கவிதை என்றாலும் பாடல் என்கிறாங்க.
ஓ! இரண்டிலும்
இசை வேறுபாடு இருக்காம்
எழுதுங்க உறவுகளே!
நல்லது எல்லாம் - அவை
கவிதையா பாடலா
வாசகர் தீர்ப்புக் கூறட்டும்! 

3. 
காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்!
தேடிப் போகத் தான்
எனக்கு விருப்பம் இல்லை
பணம் உள்ளவர் கை தானே
அவர்களை இழுத்திருக்கும்!
என் கை நிறைய
ஒரு நாள் பணம் இருக்கலாம்
அந்த வேளை பார்த்து
என் பக்கம் அவர்கள் திரும்பலாம்!
பணம் பத்தும் செய்யும் என்பது
இந்தத் திருவிளையாடல் தானோ!!

4.
பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
 
குணம் இருந்தால் பிணம் என்பார்
பணம் இருந்தால் கடவுள் என்பார்
(குணம்)
 
பணம் எங்கும் பாயும் என்பதா
பணம் பத்தும் செய்யும் என்பதா
குணம் உள்ளவர் வேண்டாம் என்பதா
(பணம்)(குணம்)
 
பணம் உள்ளவரை தான் உறவா
குணம் உள்ளவரை தான் விறகா
நோய் வந்தபின் தான் உணர்வா
(பணம்)(குணம்)
 
மருந்து உண்ணப் பணம் வேண்டுமா
உடலைப் பேணப் பணம் போதுமா
உடல் நொந்த பின்னே தெரியுமா
(பணம்)(குணம்)
 
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்)(குணம்)
 
==========================================================
தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES)
https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html
 

திங்கள், 17 மே, 2021

தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES)

2016 இன் பின் தமிழுக்குப் புதுவரவாகத் தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES) பேசப்பட்டு வந்தாலும் தமிழ் வான் அவை 31/01/2021 அன்று நடாத்திய மெய்நிகர் (Zoom)  நிகழ்வில் கவியருவி சாரதா.கே.சந்தோஷ் அவர்களின் உரையைக் கேட்ட பின்னரே நானும் இவற்றைக் கற்றுக்கொண்டேன்.

 

நான்கு வரிக் கவிதை என்றதும் CLERIHEW (ஹிளரிக்ஹியு / மகிழ்வூட் பா) எனும் ஆங்கில வடிவக் கவிதை தான், என் நினைவிற்கு வந்தது. ஆயினும், தெலுங்கில் உலாவும் "நானிலு" வடிவக் கவிதையை ஒத்திருந்தாலும் இவை சற்று வேறுபட்டதென உரையாளர் விளக்கிய பின்னரே எனக்குத் தெளிவு ஏற்பட்டது. இதனைத் தெலுங்கில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்ய முயன்றவர்களில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் முதன்மை பெறுகின்றார்.

 

தங்கள் முன்னேற்றக் கருத்துகளை அல்லது தங்கள் உள்ளத்தில் பட்டுணர்ந்த கருத்துகளை நான்கு அடிகளில் (வரிகளில்) எட்டு அல்லது பன்னிரு சீர்களில் (சொல்களில்) எழுதும் கவிதை வடிவத்தை தன்முனைக் கவிதைகள் என உரையாளர் விளக்கினார். அதாவது எட்டுத் தொடங்கி பன்னிரு சொல்கள் வரக் கூடியதாக நான்கு வரிகளில் இக்கவிதையை  எழுதலாம் என்றார்.

 

முதலிரு அடிகளும் சொல்லும் கருப்பொருளுக்கு முரணாகவோ விளக்குவதாகவோ தொடர்புபடுத்தி அடுத்திரு அடிகளையும் அமைத்தல் இக்கவிதைக் கட்டமைப்பு என்றார். அடிக்கு (வரிக்கு) இரண்டு சீர் (சொல்) வீதம் நான்கு அடிகளில் (வரிகளில்) எட்டு சீர் (சொல்) வரக்கூடியதாகவோ அடிக்கு (வரிக்கு) மூன்று சீர் (சொல்) வீதம் நான்கு அடிகளில் (வரிகளில்) பன்னிரு சீர் (சொல்) வரக்கூடியதாகவோ அமைவது அழகாய் இருக்கும் என்றார்.

 

கூடியவரை கூட்டுச் சொல்களைப் (இரண்டு, மூன்று சொல் இணைந்த சொல்களைப்) பாவிக்காது எளிமையான சொல்களைக் (தனிச் சொல்களைக்) கையாள வேண்டுமாம். இக்கவிதைக்குத் தலைப்பு இடத் தேவை இல்லையாம். இக்கவிதையில் குறியீடுகள் பயன்படுத்தத் தேவை இல்லையாம்.

 

ஆயினும், கவிதையைப் படிப்பவர் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வு மிக்க வரிகளால் சொல்ல வேண்டிய கருத்தினை சிதைக்காமல் சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமாம். தேவைப்படும் போது தங்கள் கற்பனை ஆற்றலுக்கு (கவித் திறனிற்கு) ஏற்ப எதுகை, மோனை, உவமைகளைப் பாவித்து மூன்று காலங்களிலும் இக்கவிதையை எழுதலாமாம்.

 

வானமோ கறுத்தது

மழைக்கு அடையாளமாய்

ஏழையின் குடிசையில்

கூரையோ ஓட்டை

 

ஏழை வீட்டுக் குரல்கள்

காதைக் கிழித்து நுழைகிறது

மழை வந்தால் ஒழுகுமென

ஓட்டைக் கூரையைச் சீராக்கிறார்கள்

 

இவ்விரு எடுத்துக்காட்டும் கவியருவி சாரதா.கே.சந்தோஷ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து கற்றுக்கொண்டது.

 

காதல் பிழைத்தால்

சாதலை நாடுவது பிழையாம்

வாழ்க்கை பொன்னானது

வாழ்ந்து மகிழ்தலே சரியாம்

 

பணம் ஈட்டத் தானே

நாம் உழைக்கிறோம்.

மகிழ்வோடு வாழத் தானே

பணத்தைத் தேடுகிறோம்.

 

 

படிக்கப் படிக்க

அறிவு பெருகுமே

யாம் பெற்ற அறிவை

மாற்றாரும் பெற உதவலாமே

 

நேரம் எமக்காக மாறாது

படிக்கிற நேரத்தில படிக்கணுமே

செல்கின்ற இடங்களில்

கற்றோருக்குச் சிறப்பாமே

 

 

இந்நான்கு எடுத்துக்காட்டிலும் இரண்டு சீர் (சொல்) கொண்ட அடிகளும் (வரிகளும்) மூன்று சீர் (சொல்) கொண்ட அடிகளும் (வரிகளும்) மாறி மாறி வந்துள்ளன. எப்படியோ நான்கு அடிகளில் (வரிகளில்) எட்டுத் தொடக்கம் பன்னிரு சீர்களில் (சொல்களில்) கவிதை அமைந்தால் போதும். சொற் சிக்கனம் கவிதைக்கு அழகு என்பதை மறந்துவிட வேண்டாம்.

 

தெலுங்கு வடிவ நானிலு என்பதைத் தழுவி தமிழில் தன்முனைக் கவிதைகள் எனப் பெயரிட்டு எழுதப்படும் குறுங்கவிதை "இது தமிழ்க் கவிதை உலகில் புதியதோர் வடிவமைப்பு என்றும், கவிஞர்கள் எளிய சொற்களால் மக்கள் மனதில் பதியும்படியான கருத்துகளை, தங்களை முன்னிறுத்தி ஈடுபாடோடு எழுதப்படுபவை" என்று கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் நேர்காணல் ஒன்றில் கருத்துப் பகிர்ந்துள்ளார். (சான்று: https://sattappaarvai.blogspot.com/2019/11/blog-post_9.html)

 

இக்கவிதைக் கட்டமைப்பு, கற்பனை ஆற்றல் (கவித் திறன்) உள்ள எல்லோருக்கும் இலகுவாக இருக்குமென நம்புகின்றேன். இதனை எல்லோரும் கையாளப் பழகினால், தமிழ் மொழியில் இக்கவிதைக் கட்டமைப்பு  ஊடாகச் சிறந்த இலக்கியங்களைப் படைக்க முடியுமென நம்புகின்றேன். எனவே, இதனை எல்லோருக்கும் அறிமுகம் செய்வோம். இனி உலகெங்கும் "தன்முனைக் கவிதைகள்" உலாவட்டும்.

 

* மேலதீக அறிவினைப் பெறத் தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES)  முகநூல் குழுமத்தில் இணையுங்கள்.

https://www.facebook.com/groups/THANMUNAIKKAVITHAIGAL

 

சனி, 1 மே, 2021

கொஞ்சம் எண்ணிப் (சிந்தித்துப்) பாருங்க...

 


1

இணையந் தான்  வந்த பின்னே

உலகந் தான் ஊராகத் தான்

சுருங்கிப் போச்சாம் மாறிப் போச்சாம்

                     (இணையம்)

 

ஊருந் தான் கெட்டுப் போச்சு

நாடுந் தான் கெட்டுப் போச்சு

நம்மாளுந் தான் கெட்டுப் போனாங்க...

                      (ஊருந் தான்)

 

குழந்தைகளின் அழுகையை நிறுத்த

ஆராரோ ஆரிவரோ பாடி நிறுத்தாமல்

திறன்பேசியில் படங்காட்டி அழுகையை நிறுத்த

குழந்தைகளின் பார்வையே பின்நாளில் கெட்டுப்போச்சே

                      (இணையம்)

                      (ஊருந் தான்)

 

மணலில் எழுதிப் படித்தது தெரியுமா

புத்தகம் படித்து எழுதியது தெரியுமா

இணையத்தில் நல்லறிவைப் படிக்கப் போய்

இளசுகள் கெட்டறிவைக் கற்றுக் கெட்டுப்போறாங்க

                      (இணையம்)

                      (ஊருந் தான்)

 

சிலர் தொலைக்காட்சித்  தொடரில் மூழ்கவே

சிலர் இணையக் கலந்துரையாடலில் மூழ்கவே

ஊடலுமின்றிக் கூடலுமின்றி குடும்பங்கள் சீரழிய

நாளைய தலைமுறைக்கு நாமெங்கே போவது?

                       (இணையம்)

                       (ஊருந் தான்)

 

இணையம் அறியாமலும் இணையத்தில் நுழையவே

உலகை வாட்டி வதைக்கும் கொரோனாவே

தமிழர் பண்பாட்டை  நினைவு ஊட்டியதோ

உலகம் எங்கும் உலாவும் கொரோனாவே

                       (இணையம்)

                       (ஊருந் தான்)

 

2

வாழ்வில் பலரும் வந்துதான் போவார்

வாழ்வில் சிலதும் தந்துதான் போவார்

                        (வாழ்வில்)

 

யாரோ வருவார் ஏனோ போவார்

ஏதோ படிக்க வைத்துப் போவார்

                        (யாரோ) 

 

தெரிந்தவர் வருவார் தெரியாமல் போவார்

உள்ளம் நொந்து கொள்ளப் போவார்

அறிந்தவர் வருவார் சொல்லாமல் போவார்

உள்ளம் வெந்து கொள்ளப் போவார்

                        (வாழ்வில்)

                        (யாரோ) 

 

தெரியாதவர் வருவார் பழகியபின் போவார்

உள்ளம் வெந்து நோகப் போவார்

அறியாதவர் வருவார் அறிந்தபின் போவார்

உள்ளத்தில் வெறுப்பை விதைத்துப் போவார்

                        (வாழ்வில்)

                        (யாரோ) 

 

உறவுகளாய் வருவார் விறகுகளாய் போவார்

உள்ளத்தைப் புண்ணாக்கிப் பறந்து போவார்

உறவாகிட வருவார் உதவாமல் போவார்

பயன்மிகு சொத்தைப் பொறுக்கிப் போவார்

                        (வாழ்வில்)

                        (யாரோ) 

 

எட்டநின்று பழகினால் முட்டாமல் போவார்

உள்ளத்தைத் தொட்டுப் பார்க்காமல் போவார்

கட்டுப்பாடு போட்டுப்பழக உருகித்தான் போவார்

உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துப் போவார்

                        (வாழ்வில்)

                        (யாரோ)