Translate Tamil to any languages.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்!



மனிதன் நாயைக் கடித்தானெனப் பேசப்படுவதான
நாட்டில வழமைக்கு மாறாக நிகழும் செயல்களை
செய்திகள் என்றெல்லோ தகவல் பரப்புவாங்க!
சில ஊடகங்களும் ஊரில சிலரும் தானே
உண்மைச் செய்திகளைப் போலப் பேசப்படுவதான
போலிச் செய்திகளைப் பரப்பி விடுவதால
குடும்பங்கள், ஊர்கள், நாடுகளென உலகிலே
பெரும் பெரும் பாதிப்புகளை விதைத்துவிடுகின்றன!
உறவுகள் முறிந்தால் சேர்த்து விடலாம் தான்...
பொருளிழப்புகள் வந்தாலும் தேடிக்கொள்ளலாமே...
உயிரிழப்புகள் நிகழ்ந்தால் எவரையும் மீட்கலாமோ?
உலகத்தில எத்தனையோ கண்டுபிடிக்கும் அறிவாளிகள்
உயிரிழந்த மனிதருக்கு உயிர்கொடுக்கக் கண்டுபிடிக்கல
உலகையே அழிக்கவல்ல போலிச் செய்திகளை
உண்மைச் செய்தியாகப் பரப்பிவிடக் கண்டுபிடித்தனரோ?
நானொரு பேயன் தெருவில விழுந்தவளைத் தூக்கிவிட
அழகான குமரியோட முட்டிமுனகியதைக் கண்டதாக
பழக்கமே இல்லாத பரதேசிமகள் அறியாமல் பரப்பிவிட
என்ர பெண்டிலோ என்னை நம்பாமல் வெட்டிவிட
கட்டையிலே வே(போ)கும்வரை தனிக்கட்டை ஆனேனே!
இலங்கையிலே என்ரநிலை இப்படியாகி இருக்கலாம்...
இந்தியாவிலே விழுந்தவளையும் தூக்கியவனையும் சேர்த்தே
வேற்றுச் சாதிக்காரன் கட்டியணைக்கவோ என்றெல்லோ
எரிபற்றெண்ணெய் (பெற்றோல்) ஊற்றியெரித்து இருப்பாங்களே!
காதலிப்பதற்கு நானொருசாதி அவளொருசாதி அவ்வளவே...
சாதிப்புரளியைக் கிளப்பிவிட்ட ஆங்கொரு கத்தரிவெருளியாலே
இலங்கையிலே ஊரைவிட்டு ஓடிமறைந்து வாழ்ந்தாலும் கூட
நானாண்சாதி பெண்சாதியவள் நாம் மனிதச்சாதி என்றாலும்
இந்தியாவிலே எம்மிருவரின் தலைகளையே அறுப்பாங்களே!
வீசும் காற்றில் கலந்துவிட்ட போலிச் செய்திகளாலே
எரியிற நெருப்பில நெய்யூற்றினால் போலவே
இனமோதலோ மதக்கலவரமோ ஊரிரண்டாகிப் போராகவோ
இலங்கையிலும் இந்தியாவிலும் அழிவது தமிழினமென்றதும்
என்நெஞ்சு வெடித்துப் பலதுண்டாகப் பிளக்கிறதே!
ஊரழிந்தென்ன உலகழிந்தென்ன கடவுளுமளிந்தென்ன
தமிழழிந்தென்ன தமிழரழிந்தென்ன யாருக்குத் தேட்டமென
பெருந்தீங்கினை விளைவிக்கும் போலிச்செய்தி பரப்பும்
ஊரவங்களாயினும் ஊடகங்களாயினும் உணரவேண்டுமே!
போலிச் செய்திகளை உள்வாங்கும் உறவுகளே...
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே
மூளைக்கு வேலைகொடுத்து நன்றெண்ணிப் பார்த்தே
நம்பிச் செயலாற்றினால் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே!

வாழ்க்கையில் தவறு விட்டால்...

படிக்கிற அகவையில்
படிக்காது விட்டால் தொழில் தேடேலாது...
நேர்வழிப் படிப்புச் சரிவராட்டி
தொழில்நுட்பப் படிப்பாயினும் கற்றால்
தொழில் வாய்ப்புக் கிட்டுமாமே...
தொழில்நுட்பப் படிப்பும் படிக்காட்டி
வேலை பழகுநராகவேனும் நுழையாட்டி
நாலுபணம் தேடத் தொழில் கிட்டாதே!
பழகிற பழக்கத்தில
கெட்டவை தொற்றிக் கொண்டால்
சூழலே எம்மை ஒதுக்கியே வைக்கலாம்...
பழகிற நட்பில
நல்லவரைத் தெரிவு செய்யாது போனால்
பாழாய் போகத் தான் நேரிடும்...
சேருகிற குழுக்களில
ஊரார் மதிக்கிற குழுவில சேராட்டி
ஊரோரமாக ஒதுங்க வேண்டி வருமே...
சேர்த்து வைக்கிறதில
நாலாள் செத்தவுடல் காவிச்செல்ல...
நாளைக்கும் வாழத் தேவையானதை
சேர்த்துவைக்கத் தவறிவிட்டால் செத்தமாதிரி!
தேவை கருதித் தான்
நட்புகள் நாடி வரலாம் தான்
தேவை கிட்டினால் போதுமென
நறுக்கிப் போட்டு நழுவலாம் தான்
நாம் தவறிவிட்டால் தப்பேலாதே!
காதலிக்க முயற்சி செய்தால் தான்
காதல் தோல்வி நெருங்கி வருமாம்...
காதலே உள்ளிருந்து வெளிப்பட்டால்
உள்ளங்கள் இடம்மாறிக் கலந்துவிட்டால்
தோல்வி கூடக் காதலை நெருங்காதாம்...
காதலுக்குக் குறுக்கே கொடுப்பனவை முன்வைத்தால்
காதல் முறிவு தான் கைக்கெட்டுமே!
திருமணம் என்றால் பாரும் - கணவன்
மனைவியைத் தெரிவு செய்வதில் தவறினால்
சுடலைக்குப் போக வழி அமைத்தாச்சாம்...
திருமணம் என்றால் பாரும் - மனைவி
கணவனைத் தெரிவு செய்வதில் தவறினால்
தாலிக் கொடிக்கு ஈடாகத் தூக்குக் கொடியாம்...
வாழ்க்கையிலே கணவனுக்கும் மனைவிக்கும்
புரிந்துணர்வு இல்லையேல் வீடே போர்க்களமாம்...
எந்தப் பக்கத்தால தலையை நீட்டினாலும்
எந்தன் மூளையை பாவித்து
பின்விளைவை எண்ணிப்பார்த்து
தூர நோக்கில தெரிவும் முடிவும்
வாழ்க்கையிலே எடுக்கத் தவறிவிட்டல்
எனக்குச் சாவு தான் பரிசு என்கிறாங்க!
அம்மாவும் இணங்கி அப்பாவும் நெருங்கி
என்னையும் பெத்து ஆளாக்கி விட
எப்படித் தான் வாழ்வதென
படைத்தவன் கூட சொல்லித் தரவில்லை...
சூழவுள்ளோரோ வாழ்க்கையில் தவறு விட்டால்
எனக்கே மீட்சி இல்லை என்கிறாங்க...
நீங்களே உங்கள் வாழ்வைச் சரிபாருங்களேன்!

காலம் காலமாகினாலும் கூட.....

காலம் கரைந்தாலும் - அதுவோ
வரலாற்றுப் பதிவைத் தானே
எழுதிவிட்டுச் செல்கிறதே!
நஞ்சு வைத்தவர்கள்
எவரென்று எமக்கு உணர்த்துவதே
கடந்த காலப் பதிவே!
நல்லவர்களை இனங்கண்டு
நல்லுறவைப் பேணத் தூண்டுவதும்
கடந்த காலப் பதிவே!
கெட்டதெல்லாம் நமக்குச் செய்தவர்கள்
நல்லதெல்லாம் நமக்குச் செய்வார்களென
உறவைப் பேண வந்து நெருங்கினாலும்
எட்ட விலகி நிற்க வழிகாட்டுவதும்
கடந்த காலம் பதிவே!
எதிர்காலம் நல்ல பயனைத் தர
நிகழ்காலத்தில் திட்டமிட்டு வாழ்ந்தவர்களுக்கே
காலம் காலமாகினாலும் கூட...
நல்லவை வந்து அமைகின்றதே!
எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காமலே
நிகழ்காலத்தில் தவறான வழிகளில் போய்
காலம் காலமாகிய பின்னரே
கடந்த காலப் பதிவுகளின் படி
தமது தவறுகளை எண்ணிப் பார்ப்பதில்
பயனேதும் இருக்க வாய்ப்பில்லையே!
காலம் கரைந்தாலும் - அதுவோ
வரலாற்றுப் பதிவை எழுதிச் செல்வதால்
காலம் காலமாகினாலும் கூட
நாம் விதைத்தவை தானே
நமக்கு அறுவடையாகக் கிட்டுதே!

எனக்குப் பிள்ளை பிறந்தால்...

நல்ல காலம் - எனக்கு
பிள்ளைகள் பிறக்காமல் போயிட்டுது!
தாலாட்டுப் பாடாமலே
தாயின் முலைக்காம்பை கடிக்காமலே
குழந்தையை நித்திரையாக்க
திறன்பேசிகள் வேண்டிக் கொடுக்க
பிச்சைக்காரன் என்னாலே முடியாதே!
கடவுளே! - எனக்கு
பிள்ளை கிடைக்க அருள் (வரம்) தந்தால்
திறன்பேசிகள் வேண்டிக் கொடுக்க
நாலு காசு கிடைக்க நல்ல தொழிலும் தா!
இனி எனக்கும் மனைவிக்கும்
இனிப் பிள்ளை பிறந்தாலும் கூட
ஏணைக்குள் குழைந்தையைப் போட்டு
இருண்ட கருவறைக்குள் கிடந்த மாதிரி
நித்திரையாக்காமல்
பாயில கிடத்தி திறன்பேசியை நீட்டி
குழந்தையின் அழுகையை நிறுத்தி விட
திறன்பேசி போன்ற தொழில் நுட்பம்
தீர்வாகுமா? தொல்லை தருமா?
இருண்ட கருவறைக்குள் இருந்து வந்த
குழந்தையைத் தான்
இருண்ட உலகிற்குள் தள்ளிவிடும் வழியா?
நானும் படிக்காதவன் தான்...
திறன்பேசியைக் கொடுத்து அழுகையை நிறுத்தாமல்
பாட்டன், பூட்டி கையாண்ட வழிகளை
மறக்காமல் சொல்லித் தாருங்கோ...
இனி எனக்கும் மனைவிக்கும்
கடவுள் அருளால் பிள்ளை கிடைத்தால்
நாங்களும் ஒளிமிகு உலகைக் காட்டி
எங்கள் பிள்ளைகளை வளர்க்க உதவுமே!

வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்


உலகத் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவரான சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களின் "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்ற நாற்பத்திரண்டு சிறுகதைகளின் தொகுப்பு நூல் 08/12/2018 அன்று ஜேர்மனியில் மிகவும் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. இவ்வறிமுக விழாவில் வலைப்பதிவர் கௌசி அவர்களின் உலகெங்கிலுமுள்ள வலையுலக நட்புறவுகள், அவரது வாசகர்கள் எனப் பலர் ஜேர்மனிக்கு வருகை தந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நூலாசிரியரின் இந்நூல் 17/06/2018 ஞாயிறன்று காலை 9 மணிக்கு இலங்கை, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் பங்கெடுத்தவர் என்ற வகையிலும் 2010 இலிருந்து வலையுலகை உலா வருவதனாலும் ஜேர்மனியில் இடம்பெறும் நூலறிமுக விழாவில் பங்கெடுக்கும் உலகெங்கிலுமுள்ள வலைப்பதிவர்கள் இந்நூலைப் பற்றியறிய உதவும் தகவலைப் பகிர விரும்புகின்றேன்.
--------------------------------- நூல் அறிமுகம் ----------------------------------

இலக்கிய வாசகர்களின் உள்ளங்களை இலக்கியப் படைப்பாளிகள் கொள்ளையடிப்பது என்பது இலகுவானதல்ல. வாசகர் விருப்பறிந்து, தமது திணிப்புகளைத் தூக்கியெறிந்து, வாசகர் சுவையறிந்து, தமது வசப்படுத்தும் எழுத்து நடையாலே தான் வாசகரைத் தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறாகத் தான் பல முன்னோடி எழுத்தாளர்கள், வாசகர்கள் தமது புனைகதை இலக்கியத்தை நாடவைக்க (தமது எழுத்தால் வாசகரைக் கட்டிப் போட) முயன்றுள்ளனர். இவ்வாறே (www.gowsy.com வலைப்பூ) சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்கள் தமக்கென வாசகர் அணியினைப் பேணி வருகின்றார்.

கையடக்கமாக அமைந்துள்ள இந்நூலின் அட்டை கறுப்பு நிறம். பின்னட்டையில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்கள் வழங்கிய நூலாசிரியரைப் பற்றிய குறிப்பும் முன்னட்டையில் "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்", நூலாசிரியர் பெயர், வெளியீடு: ஜேர்மனி தமிழ் கல்விச் சேவை ஆகியன வெள்ளை எழுத்துக்களால் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது. உள்ளே கண்ணிற்கு எரிச்சலை ஏற்படுத்தாத செம்மஞ்சள் (ஐவரி) தாளில் கறுப்பு எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்து வாசிக்கும் போது எழுத்து அளவு அரைப் புள்ளியாயினும் பெரிதாக்கி இருக்கலாமெனத் தோன்றுகிறது.

முன்னட்டையில் பக்கங்களைத் தட்டும் விளிம்பில் மட்டும் மங்கலான வெண்ணிறம் வெளிப்படுகிறது. அதேவேளை வெண்ணிறப் பூவொன்றும் விரிந்து காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நூலுக்குள்ளே நுழைந்தால் "வெள்ளை உடையணிந்த ஒருவரின் இளமைக்கால வாழ்வை வெளிக்கொணருவதோடு ஒளிமயமான வாழ்வுக்கு வழிகாட்டும் தகவல் ஒளிந்திருக்கு." என்பதை வாசித்தறியலாமெனத் தோன்றுகிறது. எப்படியிருப்பினும் நூலின் அட்டை வடிவமைப்பு, தெளிவான அச்சடிப்பு ஆகியவற்றை மேற்கொண்ட இலங்கை, யாழ்ப்பாணம் அன்ரா பிறின்டர்ஸ் குழுமத்தினருக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

"ஓர் ஐரோப்பிய வாழ்வியல் தரிசனம்" என்ற தலைப்பில் நூலாசிரியருக்குக் கற்பித்த பேராசிரியர் துரை மனோகரன் அவர்களின் எண்ணப்பதிவுகள் நூலின் முதலுரையாக அமைந்திருப்பதோடு நூலின் சிறப்புக்கு வலுச் சேர்க்கின்றது.

அடுத்து "ஒரு வாசகனின் வாக்குமூலம்" என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்கள் சிறுகதைகளை அழகுணர்வோடு அறிமுகம் செய்கின்றார். அதனால் வாசகர்கள் விரைவாகக் கதைகளைப் படிக்க நுழைந்து விடுவார்கள்.

அடுத்ததாக "சில நிமிடங்கள் நுழை வாயிலில் உங்களுடன்..." என்ற தலைப்பில் நூலாசிரியர் வாசகரை இடைமறிக்கிறார். "சமுதாயக் கண்கள் திறக்கப்பட வேண்டும். தான் வாழும் சூழலும் நலம் பெற வேண்டும்." எனத் தனது எழுத்தின் நோக்கை நூலாசிரியர் முன்வைக்கின்றார். இதனால் கதைகள் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம்.

நூலின் இறுதிப் பகுதியில் பக்கம் 223-224 இல் "கௌசியின் வரிகளை நேசித்தவர் வரிகள்" என்ற தலைப்பில் நூலாசிரியரின் வாசகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் இடம்பெறுகிறது. அவை நூலாசிரியரின் ஆற்றலை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுகோலாகத் தென்படுகிறது.

சரி! இனிக் கதைகளை வாசிக்கப் போகலாம் தான்... ஆயினும், கதைகள் எவ்வாறு அமைந்திருக்குமெனத் தெரிந்துகொள்வோம். கதாசிரியர் தான் சொல்வதாகவோ கதாசிரியர் தான் பார்த்ததை அப்படியே சொல்வதாகவோ கதாசிரியர் தான் ஒரு கதாபாத்திரமாக நின்று வெளிப்படுத்துவதாகவோ கதைகள் நகருவதைக் காணலாம். கதைகளின் முடிவில் அடைப்புக்குள் உண்மைக் கதை, உண்மை கலந்த கதை, யாவும் கற்பனை எனக் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதேவேளை கதையின் முடிவினை கதாசிரியர் தானே சொல்லி முடிப்பதாகவோ வாசகர்கள் தாமே கதையின் முடிவினை கண்டுபிடிக்க இடமளிப்பதாகவோ கதைகள் முடிவுக்கு வரலாம். இதன் அடிப்படையில் வாசகர்கள் கதைகளை வாசிக்கப் பழகினால் மகிழ்ச்சி அடையலாமெனக் கூறிக்கொண்டு நான்கு கதைகளைத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

"அப்பா என்னவானார்!" என்ற கதையே முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது.
"இஞ்ச பாருங்கோ இது நான் காசு கட்டி வாங்கின வோஸ் மெசின். இதில் என்ர பிள்ளைகள்ட உடுப்பும் என்ர உடுப்பும் தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள் இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க"
"அப்படியென்றா நானென்ன கையாலயா கழுவிறது"
என்றவாறு முதலாவது கதையே கணவன் - மனைவி சிக்கலில் தான் தொடங்குகிறது.

மேற்படி கதையில "பலமுறை தந்தையுடன் தொடர்புகொள்ள முடியாத பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிசாருக்கு அறிவித்தனர். வீட்டு இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிசார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத கதவினை திறந்தனர்." பிள்ளைகளது தந்தை அங்கே பிணமாகக் கிடந்ததாகக் கதை முடிவுக்கு வருகிறது.
இக்கதையில் புலம்பெயர் நாட்டில் நிகழும் குடும்பச் சிக்கலை நூலாசிரியர் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

"கவிதை பாடலாம்" என்றொரு கதை பக்கம் 44 - 50 இல் காணப்படுகிறது. "தாயின் நீண்ட விளக்கத்தில் தெளிவு பெற்ற மகளும் காலத்துக்கேற்பக் கவிபாடும் உத்தியில் தன்னை ஈடுபடுத்தும் முனைப்புடன் அகக்கண்ணைத் திறந்தாள். அவள் கற்ற இலக்கணமும் தாயின் கருத்தும் ஒருங்கிணைய கற்பனைக்கு மோட்டர் பூட்டினாள்." என்றவாறு தாயானவள் மகளுக்குக் கவிதை எழுதத் தூண்டுவதாகக் கதை நகருகிறது.

இக்கதை, கதை போலன்றி 'கவிதை எழுதக் கற்பித்தல்' பாடம் நடாத்துவதாக அமைந்திருக்குமென நீங்கள் நினைக்கலாம். அப்படியாயின் இந்நூலைப் பெற்று இக்கதையினை முழுமையாக வாசிக்கவும். இக்கதையினை வாசித்தவர்கள் சிறந்த கவிதையினை எழுதத் தேவையானவற்றை பொறுக்கிக்கொள்ள இந்நூல் உதவுமென நம்புகின்றேன்.

"மதிவதனி ஏன் மதி இழந்தாள்" என்றொரு கதை பக்கம் 149 - 152 இல் காணப்படுகிறது. "குடிக்கிறதுக்கு அளவு கணக்கில்லை. மனிசர நிம்மதியா இருக்க விடுறீங்களே. எப்பதான் இந்த பார்ட்டிகள் குறையப் போகுதோ" என்றவாறு மனைவி, தன் கணவனின் தொல்லை தாங்காது அலுத்துக் கொள்வதைக் கதையில் காணமுடிகிறது. மேலும், கணவன் மனைவிக்கு மதுவை ஊட்டிவிட்டார் என்றவாறு கதை நகருகிறது. மது போதையினால் ஏற்படும் விளைவினை நூலாசிரியர் இக்கதாபாத்திரங்களூடாகக் குடும்ப உணர்வோடு இயல்பாகப் படம்பிடித்து வெளிக்காட்டுகின்றார்.

நூலின் தலைப்பாகிய "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்றொரு கதை பக்கம் 201 - 206 இல் காணப்படுகிறது. "உனக்கு வயது 30. இப்படி எத்தனை காலம் வாழப் போகின்றாய். வாழ்க்கை ஒரு முறை தான். அதுவும் வாழத்தான்." என மதியுரை கூறுவதைப் பார்த்தால் கதையில் வரும் கதாநாயகியின் (மருத்துவத் தாதியின்) பருவம் கரைவதேன் என்பதை நீங்கள் வாசித்து அறியலாம். மேலும், "இப்பெல்லாம் யாரும் பெடியனைக் கண்டால் காதல் வர மாட்டன் என்கிறது." எனக் கதாநாயகி தெரிவிப்பதைப் பார்த்தால் பருவம் கரையக் காரணம் காதல் தானென எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் மறக்காமல் நூலை வேண்டிப் படித்தால், ஐயங்களும் ஊகங்களும் முடிவுக்கு வந்துவிடுமே!

"வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்" என்ற நூலை அறிமுகம் செய்வதாகக் கூறிக்கொண்டு நாற்பத்திரண்டு கதைகளையும் குறுக்கிச் சொல்ல இயலாது என்பதே உண்மை. பெரும்பாலான கதைக் கருப்பொருள், சமகாலத்தில் (2018 இல்) ஆங்காங்கே இடம்பெறும் உண்மை நிகழ்வுகளை மீட்டுப் பார்க்க உதவுகின்றது. இந்நூலில் வணிக நோக்கிலான கற்பனைக் (மசாலாக்) கதைகள் இல்லையென்றே சொல்லலாம். அருமையான சிறுகதைகளைக் கொண்ட இந்நூல் வாசகரின் உள்ளத்தில் நல்லதோர் இடத்தினைப் பிடிக்கும் என்பதே எனது கருத்து.
முற்றும்.