Translate Tamil to any languages.

சனி, 31 மே, 2014

ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க!

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என எடுத்துக்கொண்டாலும் அவை தமிழுக்கோ படைப்புக்களுக்கோ முதன்மை நிலைமையைக் காட்டாமல் விளம்பரங்களையே முதன்மைப்படுத்துகின்றன. அதுவும் நமது பண்பாட்டைச் சீரழிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதால் நாளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கின்றன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்குவதில்லை. வெளியிடப்படும் படைப்புகளுக்கு இடையே விளம்பரங்களைப் புகுத்தி விடுவார்கள். சிறந்த படைப்புகள் கிடைக்காமல் வெளியாகிய பொத்தகங்களிலிருந்து பகுதி பகுதியாகப் பொறுக்கிச் சில ஏடுகள் வெளியிடுகின்றன. மொத்தத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் என்று சொன்னாலும் பிறமொழிக் கலப்போ ஆங்கில உள்ளீடோ தான் மலிந்திருக்கும்.

இனி மின் ஊடகங்கள் என்றதும் தொலைக்காட்சி, வானொலி, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், மின்நூல்கள், திரைப்படங்கள், ஒளியும் ஒலியும், இசைத்திரட்டு எனப் பல உள்ளடக்கலாம். இவை எதிலும் தமிழை முதன்படுத்தும் செயலைக் காணமுடியாதே. பிறமொழி விளம்பரங்களே அடிக்கடி இவற்றில் தலையை நீட்டுகின்றது. வானொளி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலப் பெயரிலேயே இருக்கிறது.

சிமான் இயக்கி மாதவன் நடித்த “வாழ்த்துகள்” படத்தில் தமிழ் சொல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களுமே தமிழ்நாட்டு அரசின் வரிவிலக்கிற்காகத் தமிழ் தலைப்பை இட்டாலும் தமிழை முதன்மைப்படுத்தாத, தமிழ் பண்பாட்டைப் பொருட்படுத்தாத ஊடகமாகவே வெளிவருகின்றன.

வலைப்பூக்கள், வலைத்தளங்களிலும் பிறமொழிக் கலப்பு, ஆங்கில மொழித் தலைப்பு எனத் தமிழுக்கு முதன்மையளிப்பது மிகக்குறைவு. தமிழுக்கு முதன்மை இடமளித்துப் பல பதிவர்கள் வலைப்பூ நடத்தினாலும் வலைப்பூ வழங்குநர்களின் விளம்பரங்கள் குறுக்கே நிற்குமே! எப்படி இருப்பினும் தமிழ் வலைப்பூக்களில் பிறமொழிப் பதிவுகளை உள்ளடக்காமல் இருப்பது நன்று. பிறமொழி வெளியீட்டுக்குப் பிறமொழியில் வலைப்பூ நடாத்தலாம். மொழியைப் பண்பாட்டைப் பேணச் செறிவான சிறந்த அறிவுரைகளைக் கருத்துக்களைச் சொல்லச் சிலர் வலைப்பூ நடத்தினாலும் பொழுதுபோக்கிற்காகப் பயன்தரா வலைப்பூக்களையும் பலர் நடாத்துகின்றனரே.

மேலோட்டமாகப் பொதுவாகச் சில கருத்துக்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் விரிவாக இங்கு அலச விரும்பவில்லை. ஆயினும் ஊடகங்கள் தாய் மொழியைப் பேணுவதோடு, பண்பாட்டைப் பேணுவதோடு, மக்களாய (சமூக) மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நாடு, இன, மத வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் நல்வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கவும் முன்நிற்க வேண்டுமே!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க. உங்கள் வலைப்பூக்களில் கீழ்வரும் தலைப்புக்களில் பதிவுகளை இட்டு ஊடகங்களுக்கு படிப்பிக்கப் பாருங்களேன்.

1. தமிழ் ஊடகமாயின் தம் பெயரைத் தமிழில் வைக்கலாமே!
2. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சித் தலைப்பையோ பதிவுத்தலைப்பையோ தமிழில் வைக்கலாமே!
3. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ தமிழில் வெளிப்படுத்தலாமே!
4. தமிழ் ஊடகமாயின் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தலாமே!
5. தமிழ் ஊடகமாயின் தமிழின் தொன்மை, சிறப்பு என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பிறமொழிகளில் தமிழைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
6. தமிழ் ஊடகமாயின் பழந் தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
7. தமிழ் ஊடகமாயின் உலக இலக்கியங்களை பிறமொழி, பிறநாட்டுச் சிறப்புகளை செந்தமிழில் வெளியிடலாமே!

என் உள்ளத்தில் தோன்றிய ஏழு எண்ணங்களைப் பகிர்ந்தேன். உங்களுக்குத் தெரிந்த எண்ணங்களையும் பகிருங்கள். அப்ப தான் வணிக நோக்கில் மூழ்கியிருக்கும் ஊடகங்களைத் தட்டி எழுப்பலாம்.

பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை


தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில்
09/2011 காலப்பகுதியில்
சரவணன் என்னும் நண்பரின் பதிவில்...
இதோ அவரது பதிவு:

” காதலி “
***************
கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!

சரவணன் என்னும் நண்பருக்கு எதிராக எதனையும் குறிப்பிட்டிருந்தால் என்னைச் சுட்டுக் கொல்லவும்.

இதோ என் தாக்குரையும் திறனாய்வும்:

"கல்லாதவனையும்
கவிஞனாக்கும்
ஆசிரியை!" என்னும்
துளிப்பா(ஹைக்கூ) தரும் பொருள்
எல்லோரும் வழமையாகப் பாடும்
பாடுபொருளே!
இத்துளிப்பாவை

” காதலன் “
***************
கல்லாதவளையும்
கவிஞையாக்கும்
ஆசிரியன்!

இப்படியும் எழுதலாமே!

எழுதும் போது
இப்படியும் அமையலாம் என
இரண்டு பக்கத்தையும்
பார்த்து எழுதாவிட்டால்
உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே...
அதேவேளை
உங்களுடைய கவிதை
முழுமையடையாமல் போகிறதே!

கவிதை தரமானது
ஆனால்
காதலன் கூற்றே!
அப்படியாயின்
காதலியின் கூற்றையும் கூறி
பாவலன்(கவிஞன்) கருத்தாக
உங்கள்
முடிவையும் சொல்லி வைக்கலாமே!
எடுத்துக்காட்டாக:

"என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவளே...
என்னைப் பாவலர்(கவிஞர்) ஆக்கியதும் அவனே...
காதலாகியோர் சொல்லும் கதை!" என்று
எழுத்தை ஆள முற்பட்டால்
உங்கள்
தனித்துவம் புலப்படுமே!

காதலிக்கையிலோ
காதலித்துத் தோல்வி உற்றதாலோ
வறுமைப்பட்டதாலோ
துன்பப்பட்டதாலோ
துயரப்பட்டதாலோ
ஏன்
மகிழ்வுற்றதாலோ
கவிதை வரலாம் தானே!
அது தான் பாருங்கோ
தான் உள்வாங்கியதை
தான் உணர்ந்ததை
வெளிப்படுத்த நினைக்கும்
எவருக்கும்
கவிதை தானாகவே ஊற்றெடுக்கும்!

"பாவலன்(கவிஞன்) பிறப்பதில்லை - அவன்
சூழலால் உருவாக்கப்படுகிறான்!" என்பதை
உள்ளத்தில் இருத்தி
உங்களுக்குள்ளும்
பா(கவிதை) எழுத வருமென
எழுதுகோல் ஏந்துங்கள்!

தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்களின் கருத்து:

"உங்களுடையதைப் படித்த ஒருவர்
நீங்கள்
சேர்த்துக் கொள்ளத் தவறியதை
தனது கவிதையாக
எழுத வாய்ப்பு இருக்கிறதே..."
இது யோசிக்க வைக்கிறது.

அதற்கு
என் பதில் இப்படி இருந்தது:

முழுமையான படைப்பே
தரமானதாயின்
இரண்டு பக்கங்களையும்
பொருட்படுத்த வேண்டுமென்றேன்...
அவரவர்
பதிவுகளை ஆக்கும் போது
வந்த கற்பனையை
அப்படியே எழுதினாலும்
எழுதிய பதிவை
வாசிப்பவர் எண்ணங்களில்
என்ன தோன்றும் என்பதை
கருத்திற் கொள்கிறோமே!
பதிவை வாசித்த
மற்றைய படைப்பாளிகள்
ஆணொருவர்
பெண் குறித்துப் பாடியதைப் பார்த்து
பெண்ணொருவர்
ஆண் குறித்துப் பாடியது போல
எழுத வாய்ப்பிருக்கிறது என்பதையே
சுட்டிக் காட்டினேன்!
இதனால் பாருங்கோ
சிறந்த படைப்புகளை
படைப்பாளிகள் எழுதுவார்கள் என
நான் நம்புகின்றேன்!

கன்னியின் நிலை காண்பீரே!


ஆளும் பெரியவளாக மாறியும்
அறிவும் பெரிதாக மாறாமலும்
எவரையும் ஈர்க்கும் அழகு
எவரொருவர் பின்னோட உதவ
"ஓடியவள் செய்தி பாழாம்!"

வயசுக் கோளாறு வந்திச்சா
வயிற்றுப் பையோ நிரம்பிச்சா
பருவக் கோளாறு பத்திச்சா
அறிவுப் பையோ வத்திச்சா
"மணமுடிக்க முன் கருவுற..."

அகவை வந்த பின்னே
ஆணோடு பழகப் போய்
பெண்ணவள் மதியிழக்கப் பாரும்
வயிற்றினில் மூன்றாமாள் கருவுற
"ஈற்றினில் சாவை ஏற்றாளே!"

இடம்பெயர்ந்த நிலையில்...


இந்த நிலை எப்ப மாறுமோ - எங்கள்
சொந்த நிலை எப்ப உயருமோ - இறைவா
உந்தன் உள்ளம் உருகாதோ - நாளைக்கு
எந்தன் பிள்ளை குட்டிகள் வாழுமோ?!

வெள்ளி, 30 மே, 2014

கைக்குக் கைமாறும் பணமே - 01


இந்திய-தமிழகமருகே
ஈரேழு தீவுகளாம்
ஈழமென்ற பெயராம் - அங்கே
யாழ் வாசிக்கும் பாணன்
யாழொலி எழுப்பி இசைகாட்டி
அரசனிடம் பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணத்தில்
வேளாண்மைக்கு பெயர் போன
ஆற்றங்கரை ஊரிலே
ஐங்கரன் என்பான் பிறந்தான்!

ஆண்டவன் படைத்த
ஐங்கரனுக்கு ஏற்ற துணையாள்
அங்கிங்கு எங்கிருப்பாளோ
பொங்கியெழும் வீரன்
ஐங்கரனுக்கு
அகவை வந்தாச்சென அறிவாளோ
காளையிவன்
வாலையை எண்ணும் அகவையிலும்
வருவாயும் அறுவடையுமாய்
பணம் பண்ணுகிறான் பாரும்!

வள்ளியும் வெள்ளியும்
அப்பனும் ஆத்தாளுமாக
சுப்பனும் சுந்தரியும்
தம்பியும் தங்கையுமாக
அன்னக்கிளியும் அப்புச்சாமியும்
அண்டையும் அயலுமாக
கிழக்கால பிள்ளையார் கோவிலும்
மேற்கால முருகன் கோவிலும்
வடக்கால நெற்செய்கையும்
தெற்கால வெங்காய விளைச்சலும்
மாரி, கோடை மாறாத
வேலையும் வருவாயுமாய்
ஐங்கரனும் மின்னுகிறான்!
--தொடரும்--

இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?



இலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்டிக்கொண்டு "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற கேள்விக்குப் பதிலைத் தேடுவோம்.

ஈரேழு தீவுகளைக் கொண்டமையால் தான் ஈழம் என்ற தமிழிலக்கியப் பெயர் இலங்கைக்கு வந்தது. "இல்" என்ற வேர்த் தமிழ்ச் சொல்லில் இருந்தே இலங்கை என்ற பெயரும் ஈழத்திற்குக் கிடைத்தது. இதில் எந்த அரசியலும் இல்லை. இலக்கியப் பெயராலமைந்த தமிழரின் நாடு என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராமாயணம் வால்மீகி அவர்களால் பிறமொழியில் எழுதப்பட்டது. அதனைத் தமிழில் அழகாக மொழிபெயர்த்தது கம்பன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது கம்பனின் பாபுனையும் ஆற்றலுக்குச் சான்றாகும். அதில் இலங்கை முழுவதும் தமிழரின் நாடென்றும் இலங்கை அரசன்
இராவணன் எனும் தமிழனென்றே கூறப்படுகிறது.

தமிழரசன் இராவணன் ஆண்ட தமிழரின் நாடாம் இலங்கை மண்ணில் பௌத்தம், சிங்களம், சிங்களவர் எப்படிக் குடியமர முடிந்தது?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், சித்தார்த்தனின் (புத்தரின்) வழிகாட்டல் வலுவானதும் சிறப்பானதும் எனக் கருதி (இன்றும் இதே நோக்கில் உலகெங்கும் பலர் புத்தரைப் பின்பற்றுகின்றனர்.) தமிழரும் இந்தியாவில் பின்பற்றத் தொடங்கினர். இந்தியாவில் புத்தரைப் பின்பற்றிய தமிழர் இலங்கைக்கும் கொண்டு சென்று பரப்பினர். இப்படித்தான் இலங்கையில் பௌத்தம் காலூன்றியது. இதன் அடிப்படையில் தமிழ்ப் பௌத்தத் துறவிகளே பௌத்ததை இலங்கையில் வளர்த்தெடுத்தனர்.

இந்தியாவில் சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், ஆரியப் புரட்சி ஒன்று இடம் பெற்றது. அதன் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர். மேலும், தமிழர் பல்வேறு காரணங்களுக்காகச் சிங்களவராயினராம்.

இதற்கு மேலே நான் எதையும் கூறி நீட்ட விரும்பவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்.



வியாழன், 29 மே, 2014

போக்கு வரவு ஒழுங்குகள்



கேகேநகரில் ராஜமன்னார் வீதியும் முனுசாமி வீதியும் சந்திக்கின்ற இடத்தில் குப்பை போடப்படும் மூலைப் பக்கமாக ஓட்டுநர் தேர்வு நடக்கின்ற இடமும் இருக்கிறது. அந்தச் சந்தியில ஓடுகிற ஊர்திகளின் வேகத்தைப் பார்த்தியளோ? அதைவிட நம்மாளுகளின் கவனமின்மையையும் காணமுடியுமே!

இன்னும் சொல்லப்போனால் இவற்றைக் கண்காணிக்க பொறுப்பு வாய்ந்த எவரும் அங்கு நிற்பதில்லை. இலகுவாகப் போக்கு வரவு ஒழுங்குகள் மீறப்பட இடமிருக்கிறது. இதற்கு மேலேயும் சொல்லப்போனால் அந்த இடத்தில நடைபோடும் நம்மாளுகள் அக்கம், பக்கம் பாராமல் குறுக்கும் நெடுக்குமாக வீதியைக் கடக்க முனைவது நல்லதல்ல.

இந்த நிலை விபத்துகளை ஏற்படுத்தலாம் என்பதை நினைத்தால், என்னாலே தாங்கமுடியேல்லையே... நம்மாளுகள் எப்ப தான் இதனைப் பற்றி, அது தான் விபத்துகளை பற்றி சிந்திப்பபார்கள். அரசு, எப்ப தான் பொது மக்கள் உயிரிழப்பையும் விபத்துகளைத் தடுப்பது பற்றியும் சிந்தித்து நல்ல முடிவு எடுக்குமோ தெரியேல்லையே...

பொதுமக்களாகிய நாம், நமது உயிர் பெறுமதியானது. அதனைப் பேணுவது நமது கடமை என்றுணர்ந்து போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும், பள்ளிக்கூடங்களில் போக்கு வரவு ஒழுங்கு முறைகளைக் கற்பிக்கப் பாடவேளை ஒதுக்க வேண்டும். மாணவர்கள், மாணவிகள் ஊடாக இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்வது இலகு.

பொதுப் பணி நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாம் இணைந்து மக்களுக்குப் போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுமாறு வழிகாட்டலாமே. போக்கு வரவு ஒழுங்கு முறைகளைப் பின்பற்றாதோர் அல்லது மீறுவோர் மீது காவற்றுறை கடும் நடவடிக்கை எடுக்கலாமே.

எல்லாவற்றையும் விட போக்கு வரவுப் பிரிவினர் அல்லது அரசு ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து சிறப்புத் தகுதி உடையோருக்கே அதனை வழங்க வேண்டும். விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான என் உள்ளத்தில் தோன்றிய சில எண்ணங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

காஞ்சிபுரம் ஓரிக்கையூர் செங்கொடியே!


காஞ்சிபுரம் ஓரிக்கையூர் செங்கொடியே!
மூன்றுயிரைத் தூக்கிலிடாதே என்று
உன்னுயிரை முடிக்க
எப்படியம்மா துணிவு வந்தது?
அம்மா! தாயே!
உன்னிழப்பு எங்களை வருத்தலாம்
ஒருபோதும்
பதவிக்காரரின் உள்ளத்தில் மாற்றம் தராதே!
தன்னை ஒறுத்தல்(அகிம்சை)
மகாத்மா காந்தியொடு பறந்து போனபின்
சாவுக்கும் பெறுமதி இழந்து போயிற்று!
சாவாலே செய்தியைத்தான் பரப்பலாம்
தீர்வைப் பெறமுடியாதே...
வாழ்ந்து கொண்டு
அன்னா ஹசாராவைப் போல
வென்று காட்டலாமே!
இன்றைய தமிழருக்குத் தேவை
உயிரிழப்பல்ல...
தமிழரெனத் தலைநிமிர்ந்து வாழ
தமிழை அழியாமல் பேண
உயிர்களைப் படைத்துப் பெருக்குவதே!
செங்கொடியின் சாவொடு
தமிழினமே சாவை நிறுத்து!
ஒருவரது உயிரிழப்பை விட
உலகெங்கும் தமிழர்
தெருவில் இறங்கி முழங்குவதே
சரியான வழி...
அந்த நாள் எந்த நாளோ
அதுவே
செங்கொடிக்கு நாம் செய்யும் அஞ்சலி!

புதன், 28 மே, 2014

பாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...

1961 இல் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியிட்ட "வாய்மொழி இலக்கியம்" என்ற பொத்தகத்தில் இருந்து "என் செய்வாய் பெண் பனையே" என்ற தலைப்பில் நாட்டார் பாடலொன்றைப் படித்துச் சுவைத்தேன். அதாவது, கள்ளுக் குடித்தவர் வெறியேறியதும் கதைத்துக்கொள்ள ஆளின்றி பெண் பனையோடு பேச்சுத் தொடுப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. அதற்குப் பெண் பனை  பதிலளிப்பதாக பனையின் சிறப்பைப் பகிருவதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அதனைப் படிக்கு முன் மேற்காணும் கதைக்கு ஏற்பப் பாப்புனைய முயற்சி செய்வோமா!
வெறியேறிய கள்ளுக் குடித்தவர் இப்படிப் பெண் பனையைக் கேட்பதாக எண்ணிப் பாருங்கள். இவ்வாறு உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

பெண் பனையே! பெண் பனையே!
கள்ளுக் குடித்தேன் நானே...
குடிச்ச புளிச்சல் கள்ளு
உன்னாலே என்னதான் பண்ணுவாய் என்றே
என்னாலே உன்னைக் கேட்க வைக்குதே!

பெண் பனைக்கு வாயிருந்தால் கள்ளுக் குடித்தவரை எப்படியெல்லாம் கேட்டிருக்கும். பனை சார்பாகக் கீழே இருப்பது எனது கைவண்ணம். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்; தோன்றும் உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.

சீவல் தொழிலாளி வெட்டி வீழ்த்திய
பச்சையோலைப் பக்கம் தள்ளாடி வந்தால்
கருக்குகள் உன் காலறுக்குமே!
வீசும் காற்றோடு மோத இயலாத
காவடியாடும் காவோலை விழுந்தால்
விழுந்த வீச்சிலே உன் கழுத்தறுக்குமே!
என் அடிப்பகுதில் இருந்து - நீ
என் உச்சிப்பகுதியை அண்ணாந்து பார்த்தால்
வானத்து ஞாயிற்று வெயில் எறிக்க
உன் கண்ணைத் தாக்க - நீயும்
பிடரியில் அடிவிழ வீழ்வாய் என்பேனே!

உங்கள் யாழ்பாவாணன் ஒரு சின்னப் பொடியன் ஆகையால் அவரது எண்ணம் பெரிதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை. பாபுனைய விரும்பும் எல்லோரும் இவ்வாறு முயற்சி எடுக்கலாம் தானே. நீங்கள் முயற்சி எடுத்ததையும் கீழே தரப்படும் நாட்டார் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
வாய்மொழி இலக்கியம்
உண்மையில் நாட்டுப் பாடல்கள் தூய தமிழிலேயே உள்ளன. அதேவேளை இசை, இலக்கணம், எளிமையான சொல்லாட்சி எனப் பல இருப்பதால் தான் அவை இன்றும் வாழ்கின்றன. உங்கள் முயற்சியையும் மேற்காணும் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒவ்வொருவர் எண்ணமும் வேறுபடுவது இயல்பு. எனவே, பலரது படைப்புகளை ஒப்பு நோக்குவதன் மூலம் ஒவ்வொருவரது எண்ணம், எழுத்து, நடை, பாபுனையும் ஆற்றல் ஆகியவற்றை அறிய முடியுமே! மேலே தரப்பட்ட பாடல் உள்ள பொத்தகத்தைப் பதிவிறக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தேடுக.

https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

செவ்வாய், 27 மே, 2014

தமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி

வலைப்பதிவுலகில் முன்னணித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின் வலைப்பூக்களை இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றி.

கால இடைவேளை வழங்குவது தளங்களின் பேணுகை பற்றி அறிவதற்காக இருக்கலாம். இம்முறை நீண்ட இடைவேளை இருந்தமையால் பலருக்கு உள்ளத் தாக்கம் இருந்தமையை மறக்க இயலாது. தமிழ்மணம்.நெற் தன் பணியில் தவறு செய்யாது விரைவில் வலைப்பூக்களை இணைத்து பதிவர் உள்ளங்களை நிறைவு செய்யுமென பலர் தங்கள் வலைப்பூக்களில் தெரிவித்தமையை இக்கணம்  நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணம்.நெற் பக்கம் எத்தனை சிக்கல் இருந்திச்சோ நானறியேன். தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின்னும் வலைப்பூக்களை இணைத்துத் தனது பணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழ்மணம்.நெற் இன் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் என்றும் ஒத்துழைப்பார்கள். தமிழ்மணம்.நெற் மேலும் சிறந்த திரட்டியாக வெற்றி நடைபோட வாழ்த்துகள்.

சாப்பிட மட்டும் மறப்பியளே!


பள்ளிக்கூடத்தில ஆசிரியர், மாணவர் கேள்வி நேரத்தில நடக்கிற நாடகமிது.

ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?

மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...

ஆசிரியர் : அவர் வரமாட்டாரடா...

மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 3 : ஒன்றே முக்காலடி வெண்பா தானே எழுதினார்...

ஆசிரியர் : சரி! அது தான்டா எத்தனை?

மாணவர் - 4 : எண்ணிக்கொள்ள முடியவில்லையே!

ஆசிரியர் : திருக்குறள் பொத்தகத்தை விரித்தாலெல்லோ எண்ணலாம்...

மாணவர் - 4 : படிச்சேன், மறந்திட்டேன் ஐயா!

ஆசிரியர் : சாப்பிட மட்டும் மறப்பியளே!

மாணவர்கள் : வயிறு கடிக்கையில பசிக்குமையா...

ஆசிரியர் : அப்ப, அடி போட்டால் படிப்பை மறக்க மாட்டியளே

மாணவர்கள் : (அமைதியாக இருந்தனர்)

ஆசிரியர் : இப்ப சொல்லுறன்... வள்ளுவர் 1330 திருக்குறள் எழுதினார்! நாளைக்குக் கேட்கையிலே சொல்லாவிடில் நெருப்படி தான் போடுவேன்.

மாணவர்கள் : நாளையான் நேரவிரிப்பில் நாலடியார் ஐயா!

ஆசிரியர் : அடுத்த நாள் கேட்டிட்டு அடிப்பேன்டா...

புரிதல் வேண்டும்

நினைக்கிற நினைப்பில
கிடக்கிற பழசுகள்
உள்ளத்தைப் புண்படுத்துமே தவிர
இனிதாக எதனையும்
உன்னில் ஏற்படுத்தாதே!
படிக்கிற படிப்பில
பார்க்கின்ற பார்வையிலே
நுகருகிற அறிவில
புரிகிற உணர்வில
உன்னிலே தெளிவு வந்திடுமே!
பின்விளைவைக் கற்றிடு
பக்கவிளைவைக் அறிந்திடு
நேர்விளைவில் கண்டிருப்பாய்
பகுத்தறிவு இதுதானென்று!
உலகமே உனக்கொரு தூசு
பின்னைப் பொன்னெனப் பகுத்தறி
முன்னைக் கொஞ்சமாயினும் மறந்திடு
இன்றே தென்படும் உனது வெற்றி!

திங்கள், 26 மே, 2014

அள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா?

இன்றைய உலகில் இணையத் தளங்களைப் பயன்படுத்தாத எவருமே இல்லை என்றே சொல்லலாம். அதேவேளை பயனாளர்களை ஏமாற்றும் இணையத் தளங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இப்படியான சூழ்நிலையில் பயனாளர்களுக்கு பணம் தருவதாகக் கூறிப் பல இணையத் தளங்கள் விளம்பரம் செய்கின்றன. அவர்களின் செயற்பாட்டை affiliated program என்கிறார்கள். அதற்கு நாம் ஒர் இணையத் தளம் நடாத்த வேண்டுமாம். அத்தளத்தில் அவர்களது நிகழ்நிரலை (program)ச் சேர்க்க வேண்டுமாம். அதன்படிக்கு அவர்களது இணைப்பைச் சொடுக்கினால் (click); புதிய வருகையாளர் எண்ணிக்கைக்கும் புதிய கணக்கைத் திறப்போர் எண்ணிக்கைக்கும் பணம் டொலரில் வழங்கப்படும் என (google adsence, google adword உட்பட ) பல இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.

நம்மாளுகள் அதிகம் இலவச இணையத் தளங்களைப் பயன்படுத்துவதால், அவற்றில் எல்லாம் இதற்கு உடன் படுவதில்லை. சில இணையத் தளங்கள் தமது தளத்தில் கணக்கைத் திறந்து வணிகம் செய்தால் தரகுப் பணம் தருவதாகக் கூறி, பதிவுக் கட்டணமாக 10-100 டொலர்கள் கறக்கிறார்கள். இப்படியான பல இணைய வணிக முறைகள் காணப்படுகின்றன. வருவாய் கிட்டுமென நம்பி, ஓய்வு நேர மேலதீக வருவாயெனப் பலர் இவ் இணைய வணிக முறைகளில் இறங்கலாம்.

நம்மாளுகள் பணத்தைக் கொட்டிப் பிச்சை எடுக்காமல் வருவாய் ஈட்டக்கூடிய இணைய வணிகம் பற்றி, இணையத்தள நுட்பவியலாளர்களே கொஞ்சம் உதவுங்களேன். சிறந்த இலவச இணையத் தள வழங்குனர்கள் (free web servers) மற்றும் பணம் வழங்கும் இணையத் தளங்கள் (affiliated program providers) விரிப்பைத் தருவதோடு, எவ்வாறு இதன்படிக்கு இணையத்திலிருந்து வருவாய் ஈட்டலாம் என்பதை விளக்குவீர்களா? இதனால், நம்மாளுகள் பிச்சை எடுக்கத்தான் முடியும் வருவாய் ஈட்ட இயலதென விளக்குவீர்களா?

என் துயரக் கதையைக் கேளுங்களேன். http://cashperclicks.tk என்ற தளத்தில் பல பணம் தரும் விளம்பரங்களை தொகுத்துப் போட்டேன். ஐம்பது டொடலர் பணம் திரண்டுவிட்டது. ஆனால், அதனை வேண்டியெடுக்க கண்டறியாத சர்வே செயற்பாட்டை நிறைவேற்றணுமாம். முக்கி முக்கிப் பார்த்தேன் முடியவில்லையே! இவ்வாறு நீங்களும் ஏமாறாதீர்கள். நானும் நம்பிக்கையான விளம்பரதாரர்களை இணைக்கலாமென http://cashperclicks.tk என்ற தளத்தைத் தொடர்ந்தும் நடாத்துகிறேன். ஏனெனில், பலர் இவ்வழிகளில் பணம் ஈட்டுகிறார்களே!

எதுவாயினும் இவற்றிற்கான விளக்கத்தைத் தங்கள் படைப்பாகத் தயாரித்து தங்கள் வலைப்பூக்களில் பதிவு செய்யுங்கள். பின், அதன் இணைப்பைப் பின்னூட்டமாக இங்கு தெரிவிக்கலாம். இது பற்றிய விளக்கம் அளிக்கும் தளங்கள் இருப்பின், அதன் இணைப்பைத் தெரிவிக்கலாம். எப்படியாயினும் நம்மாளுகள் நன்மை அடையக்கூடிய வழிகாட்டலைத் தங்களிடம் எதிர்பார்க்கின்றேன். இதில் மிகவும் முக்கியமானது, நம்மாளுகள் paypal, credit card, master card, visa card கணக்கு இலக்கத்தை வழங்கிய பின், இணைய நிறுவனங்களால் பணம் பறிக்கத் தொடங்கியதும் கண்ணீர் விடுவதைத் தடுக்கவல்ல வழிகாட்டலாக அமைய வேண்டும்.

இப்பதிவை (சிறு மாற்றங்கள் செய்யுமுன்) இணைய உலகில் என்னை அடையாளப்படுத்திய தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்த வேளை நண்பர் வினோத் - கன்னியாக்குமரி அவர்கள் தெரிவித்த கருத்தைக் கீழே இணைக்கின்றேன். நண்பர் வினோத் அவர்களும் மென்பொருள், வலைத்தள வடிவமைப்பாளர் என்ற வகையில் தனது தொழில்நுட்ப மதியுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

"பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் இருக்கிறது. இணையம் வந்த பின்பு இவ்வழிகளின் எண்ணிக்கை மிக அதிகமாயுள்ளது.
ஏமாற்றுப்பேர்வழிகள் இணையம் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது அவர்கள் கண்டு பிடித்த இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி. பலர் இணையம் மூலம் ஏதாவது பெயர் சொல்லி "Donation" வாங்குகிறார்கள். பலர் சுனாமி வந்த போது தொண்டு நிறுவனங்களுக்கு இணையம் மூலம் வந்த காசுகள் ஏராளம். நியாயமாக சம்பாதிக்க வேண்டுமென்றாலும் இணையம் கைகொடுக்கும்.

சாதாரணமாகக் கடை வைத்திருப்போர்கள் இணையத்தில் கடை விரித்தால் இணையம் மூலம் வாங்குவோர்களையும் கவர முடியும். இதற்கு இணைய வணிகம் (E-Commerce) இணைய வசதிகள் மூலம் செய்யலாம். அல்லது ebay தளம் மூலம் செய்யலாம். ஆனால் நம்மிடம் விற்க ஏதாவது இருக்க வேண்டும்.

வேலை செய்யத்திறமை இருந்தால் இணையத்தில் வேலை செய்துகொடுத்து சம்பளம் வாங்கலாம். உதாணமாக தட்டச்சு போன்ற வேலைகள். ஆனால் இதில் பலர் ஏமாற்றுப்பேர்வழிகளே. வேலை செய்து கொடுத்த பின் காசு வராது. ஏதாவது பிழை சொல்வார்கள்.
ஆனால் அமேசான் தளம் http://www.mturk.com/mturk/welcome பல வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறது.

கணினி மென்பொருள் அல்லது இணைய தள வடிவமைப்பு வேலைகள் என்றால் elance.com, odesk.com, freelancer.com போன்ற தளங்களில் பார்க்கலாம். அடுத்து பங்கு சந்தையில் பணம் போட்டு எடுத்தல். இது பற்றி எனக்கு அவ்வளவாக அறிவு இல்லை. மற்றுமொரு முக்கியமான வழிமுறை விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது.

நம் வலைத் தளத்தில் கூகிள் போன்ற பிரபல விளம்பர கம்பனிகளின் விளம்பர நிரலை இணைத்துவிட்டால் அவை நம் வலையின் பயனாளர்களுக்கு விளம்பரங்களைக்காட்டும். அதை எத்தனை பேர் கிளிக்குகிறார்கள் என்பதைப்பொறுத்து நமக்கு காசு கிடைக்கும். நிறைய பேர் வந்து படிக்கும் வலை தளமாக இருந்தால் தான் இதனால் பலன் கிடைக்கும். மேலும் தகவலுக்கு google.com/adsense. மேலும் பல வழிகள் இருக்கலாம்." என நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்கள் தங்கள் மதியுரையைப் பகிர்ந்தார்.

இணையத்தில் நல்ல வருமானம்

ஒருவர் : இணையத்தில் வருவாய் கிட்டுமென Credit Card கணக்கால பத்து டொலர் வெட்டினால் பரவாயில்லை எனப் பதிவு செய்திட்டேனே...

மற்றவர் : அட முட்டாளே! இப்ப உன்னுடைய பணம் முழுவதும் வெட்டி எடுத்து முடிச்சிடுவாங்களே!

வெள்ளி, 23 மே, 2014

மின்நூல்கள்

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

மேலும் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
மின்நூல்கள் பயன்தருமா?
http://yppubs.blogspot.com/2014/05/blog-post_23.html

மின்நூல்கள் பயன்தருமா?

உறவுகளே! பல இணையத்தளங்களில் (அவர்களது அனுமதியுடன்) இருந்து பதிவிறக்கிய மின்நூல்களை ஒன்றுதிரட்டி சேமிப்பகங்களில் வைத்திருக்கிறேன். பெரும்பாலும் எனது தெரிவாக அமைந்திருந்தாலும் உளவியல், இதழியல், தமிழ் இலக்கணம், பாட்டு இலக்கணம், தமிழ் இலக்கியம், கணினி எனப் பல துறை நூல்களைத் தொகுத்திருக்கிறேன். மேலும், பல நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைத் திரட்டிக் களஞ்சியப்படுத்தவும் எண்ணியுள்ளேன். இம்முயற்சிக்குப் பலர் உதவியும் ஒத்துழைப்பும் தருவதாகக் கூறியுமுள்ளனர்.

"எப்படியோ ஆயிரமாயிரம் மின்நூல்களைத் திரட்டி வைத்திருந்தாலும் இவற்றால் எவருக்குப் பயன்கிட்டும்?" என நீங்கள் கேட்கலாம். நானொரு எழுத்தாளராக, கவிஞராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, நாடக ஆசிரியராக என்றில்லாமல் உளநல மதியுரையராக, உளவியலாளராக, இதழியலாளராக, எனப் பல நிலைக்கு உயர எண்ணியுள்ள எல்லோருக்கும் பயன்தரும் வகையில் இம்மின்நூல் களஞ்சியத்தை ஒழுங்குபடுத்தி உள்ளேன்.

மேலும், "மின்நூல்கள் பயன்தருமா?" என நீங்கள் கேட்கலாம்.

அறிஞர்கள் - தங்கள்
அறிவைப் படைத்திருக்க - அவை
அச்சு நூல்களாகவோ மின்நூல்களாகவோ
எம் கைக்கெட்டலாம் - அவை
எம் அறிவைப் பெருக்க உதவுமே!
அறிவைப் பெருக்கலாம் என்பது
அறிவில் விருப்பம் / நாட்டம் உள்ளோருக்கு மட்டுமே
இலகுவாயிருக்கும் என்பேன்!
பெற்றோர்களிடமோ
நண்பர்களிடமோ
ஆசிரியர்களிடமோ
ஊடகங்களிடமோ இருந்து
நாம்
அறிவைப் பெறுவது போலவே
மின்நூல்களைப் படித்தும்
பயனீட்டலாமே - ஆனால்
கைக்குள் அடங்கி நிற்கும்
அச்சு நூல்களைப் போலல்லாது
கணினி வழியே படிக்க முடிந்தாலும்
அறிவைப் பெருக்கும் வழி ஒன்றே!
பொதுவாக, முடிவாகச் சொல்வதாயின்
அறிஞர்களின் அறிவைத் திரட்ட
நம் அறிவைப் பெருக்க
நல்லதோர் ஊடகம் மின்நூல்களே!

இன்றைய தொழில் நுட்ப உலகில் அச்சு ஊடகங்களை விட மின் ஊடகங்களே முன்னிலையில் இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மேலும் கணினி, மடிக்கணினி, நடைபேசி, இணையப்பக்கங்களில் எனப் பல வழிகளில் மின்நூல்களைப் படிக்க முடியும். நாம் இவ்வாறு ஒரு வழியில் மின்நூல்களைப் படிக்க வசதி கொண்டிருந்தால் போதும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர் தமக்குத் தேவையான மின்நூல்களைப் பெற்றுத் தமிழறிவைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டுவார்கள் என நம்பியே மின்நூல் களஞ்சியம் அமைத்தேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இம்மின்நூல் களஞ்சியம் உதவுமென நம்புகிறேன். தமிழ் தெரியாதோரும் தமிழை மறந்தோரும் தமிழை ஆங்கில மொழி மூலம் படிக்க உதவும் நூல்களும் இம்மின்நூல் களஞ்சியத்தில் இருக்கிறது. மேலும் கணினித் தொழில் நுட்ப நூல்களும் உண்டு. இவற்றை எல்லாம் படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல இந்தத் தளத்தினூடாக ஒவ்வொரு நூல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் அறிமுகம் செய்யவுள்ளேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலே குறிப்பிட்டவாறு மின்நூல்கள் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அடுத்து உங்கள் தளங்கள் ஊடாகவோ நண்பர்கள் ஊடாகவோ உலகெங்கும் வாழும் உறவுகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அதாவது படிக்க விரும்பி நூல்களைத் தேடும் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள். கீழ்வரும் படத்தைச் சொடுக்கி மின்நூல் களஞ்சியப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

செவ்வாய், 20 மே, 2014

பாவலனும் கண்ணாடியும்


திருநீற்றுக் கீறுகள்
சந்தன, குங்குமப் பொட்டுகள்
சிவப்பு, வெள்ளைப் பூசல் மாக்கள்
கரிப்பொட்டு, ஒட்டுப்பொட்டு என்பன
ஒட்டி, அப்பி, பூசி, மெழுகி இருந்தும்
மூக்கை அரிக்கும் மணம் கொண்ட
எண்ணெய், தண்ணி தெளித்து
ஆணும் பெண்ணும்
அழகு பார்க்கும் வேளை
முகம் பார்க்க உதவும் கண்ணாடியே
உனக்குள் என்ன தோன்றும்
எனக்கும் சொல்லித் தந்தால்
என் பாட்டில் வடிப்பேனே!

பச்சைத் தண்ணீர் பட்டால்
உடம்பு தேயும் என்போர்
உடுப்புத் துவைத்தால்
கிழிந்து போகும் என்போர்
குளிப்பு, முழுக்கு இன்றி
நாறும் பொன் மேனிக்கு
செயற்கை அழகு பூசுவோர்
தான் வெறுக்கும் தன் கறுப்பை
மூடி மறைக்க முனைவோர்
உள்ளத்தில் ஊறும் காதல் உணர்வால்
இத்தனை முகங்களையும் கடந்து
எத்தனை, எத்தனை முகங்கள்
தம்மை நோக்கி நாடுமென
அழகு சேர்க்கும் செலவாளிகள்
எல்லோரும் என்னைப் பார்க்கையில்
அவரவர் முகவரிகளை
அச்சொட்டாக அப்படியே கூறும்
என் பணியை - பாவலனே
உன் பாட்டில் வடிக்க
உன்னாலே முடியாதென்றது
முகம் பார்க்க உதவும் கண்ணாடி!

பசித்தாலும் காதல் தான்

ஒருவர் : பசிக்குதடா... சாப்பிட உதவேன்டா?

மற்றவர் : அழகுப் பெண்கள் அல்ல, அசட்டுப் பெண்கள் போகும் வழியில் நின்றால் காதல் செய்வதாய் நடித்துத் தேனீர்க் கடைக்கு இழுத்துச் சென்றால், அவர்களே வேண்டித் தருவாங்களே...

வெள்ளி, 16 மே, 2014

சாட்டுகளுக்கு வேட்டு வையடா!

அடடே!
விடிய விடிய
பள்ளிக்குப் பிந்தினால்...
வேலைக்குப் பிந்தினால்...
எதுவும் சறுக்கினால்...
எண்ணற்ற சாட்டுக்களை
ஆளுக்காள்
அடுக்குவதைப் பார்த்தீர்களா?

"ஆடத் தெரியாதவளுக்கு
அரங்கு(மேடை) சரியில்லையாம்"
என்றாற் போல
"பாடத் தெரியாதவனுக்கு
இருமல், தடிமன், காய்ச்சல்"
என்றாற் போல
எதற்கெடுத்தாலும்
சாட்டுச் சொல்லித் தப்ப நினைப்பது
"காலத்தைக் கோட்டை விட்டது" என்று
பொருள் கொள்ளடா!

அட போடா!
எல்லாம் முடிஞ்சு
தோல்வி கண்ட வேளை தான்
அதை, இதை, உதை
மறந்திட்டேனே என்கிறாய்...
செயலில் இறங்கு முன்
எண்ணிப் பார்த்திருக்கலாம்...
காலம் கடந்து வந்த அறிவு
ஏதுக்கடா உதவும்?

எல்லாம் தோற்ற பின்னே
எனது ஊழே(விதி) என்று
யாருக்கடா
அமைதி பேணு என்கிறாய்...
"ஊழை(விதியை)
அறிவாலே(மதியாலே) வெல்லு" என்பது
"சாட்டுகளுக்கு வேட்டு வையடா" என்று
அடிக்கடி நினைவூட்டத் தானேடா!

என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக


"படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்" என்பது போலச் சிலர் இருப்பர். அப்படித் தான் ஒரு வீட்டில இப்படி நிகழ்ந்து விடுகிறது.

மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?

கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!

மனைவி : அது தாண்டா...
                     அவர் சொன்னது சரி தாண்டா...
                     நீ செய்யிறது தாண்டா பிழை!

கணவன் : நான் பிழை விடேல்லையே...

மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப்  பெண்ணைக் காதலிக்கிறியே!

கணவன் : காதல் கண்ணைத் தான் மறைக்கும் என்பார்கள் - அது
                      கட்டின பெண்டிலையும் மறக்க வைக்குதே!

மனைவி : இனியாவது, உன்ர அறிவுக்கண்ணைத் திறந்து பாரடா...

கணவன் : தாயே! என்னை மன்னிச்சிடு தாயே!

கணக்கில என்ன பிணக்கு?


ஆசிரியர் : என்னடா மோனே கணக்கில குண்டு அடிச்சிட்டியாமே?

மாணவர் : ஒன்றுக்கு நூறு முறை திரும்பத் திரும்ப வாசிச்சுப் போட்டுப் போயும் தேர்வுத் தாளில் ஒரு கணக்கும் வரேல்லையே...

ஆசிரியர் : ஒரே வகையில் ஒன்றுக்கு நூறு கணக்குகளை வாசிச்சுச் செய்து பார்த்திட்டுப் போயிருந்தால், வந்த புதுக் கணக்குகளைச் செய்திருக்கலாமே...

மாணவர் : வாசிக்க முடியுது, செய்ய முடியேல்லையே...

நேரம்

நேரம் பொன்னானது. அதனை முறையாகப் பயன்படுத்தியவனே உலகிலேயே வெற்றி பெறுகின்றான்.

நீங்கள் வலைப்பூக்களில் எழுதுபவரா?

ஊடகங்களும் வெளியீடுகளும் பற்றித் தெரிந்திருப்பதோடு வாசகர் விருப்பு, வெறுப்புகளை அறிந்திருந்தால் எந்த ஊடகத்திலும் நீங்கள் எழுதி வெல்லலாம். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்ற சூழலில்
வலைப்பூக்கள் முக்கிய ஊடகமாகப் பேணப்படுகிறது. ஆயினும், தமிழைப் பேணி எழுதுவோரும் தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோரும் இருக்கிறார்கள். தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோர் தமிழில் எப்ப எழுதுவார்களோ, அப்ப தான் ஊடகங்களிலும் வெளியீடுகளிலும் தமிழைப் பார்க்கலாம். சரி, இனி வலைப்பூவில் எழுதுவோர் கற்கவேண்டிய பகுதியை பகிரலாம் என எண்ணுகிறேன்.

"தாம் எழுதுவதை தாமே பிரசுரம் செய்து கொள்ள முடிகிறது, உடனடியாக பல பேர் படிக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து கூட நமது எழுத்தைப் பற்றி எழுதுகிறார்கள்- இன்னும் எத்தனையோ காரணங்கள். நாமே ராஜா; நாமே மந்திரி." என்ற எண்ணத்துடன் வலைப்பதிவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது. இந்த உண்மையை நிஷப்தம் (http://www.nisaptham.com/)  தளத்தில் 'எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?' என்ற பதிவில் அறிஞர் வா.மணிகண்டன் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவரது பதிவில் "தொடர்ந்து எழுதுவதில் சில சங்கடங்களும் இருக்கின்றன. அந்தச் சங்கடங்களை கொஞ்சம் அடையாளம் கண்டுகொண்டால் போதும்." என வழிகாட்டுவதோடு "விமர்சனங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நிராகரிக்கவும் கூடாது. பொருட்படுத்தத் தக்க விமர்சனங்கள் என்றால் அதைப்பற்றி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு விட்டுவிடலாம். அது மண்டைக்குள் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும் போது subconscious-ல் இருக்கும் அந்த விமர்சனம் நம்மை மீண்டும் அந்தத் தவறை செய்ய அனுமதிக்காது." எனத் திறனாய்வின் சிறப்பையும் பகிருகிறார்.

ஈற்றில் "வலைப்பதிவு ஒரு நல்ல ஊடகம். கவனம் பெறுவதற்கும், நம் எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்குமான களம். எடுத்துக் கொள்கிற விஷயத்தில் சுவாரசியத்தைச் சேர்க்கத் தெரிந்தால் போதும். இங்கு நம் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கலாம். சுவாரசியத்தைச் சேர்ப்பது என்பது பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. எழுத எழுத பழக்கத்தில் வந்துவிடும்." என வலைப்பூப் பதிவர்களுக்கான ஊக்கமருந்து ஒன்றையும் அவிட்டுவிடுகிறார்.

மேற்படி அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் பதிவை உங்களுடன் பகிருவதால் நன்மை உண்டா? உலகெங்கும் தூய தமிழைப் பேண (http://yarlpavanan.wordpress.com/) சிறந்த வலைப்பூப் பதிவர்கள் தேவை என்பதால் அறிஞரது அறிவூட்டலைப் பகிருவதால் எனக்கு நிறைவு கிடைக்கிறது. வலைப்பூ ஊடகம் பற்றிய தெளிவோடு சிறந்த படைப்புகளை ஆக்க அறிஞரது அறிவூட்டல் உங்களுக்கும் உதவுமென நம்புகிறேன்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அறிஞரது அறிவூட்டலைப் படியுங்கள்.

எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?

செவ்வாய், 13 மே, 2014

கடத்தல் கமுக்கம்

தோழி 1: அடிக்கடி பிள்ளைத்தாச்சி ஆகிறாய்... அடிக்கடி பிள்ளை பெற்றுக் கொள்கிறாய்... இரண்டு பிள்ளைக்கு இடையே மூன்று ஆண்டு இடைவெளி வேண்டுமடி...

தோழி 2: அடியே! அடிக்கடி பிள்ளை பெற நான் இன்னும் இடிஅமீனைக் கட்டவே இல்லையடி! நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தங்கம் கடத்தவே பிள்ளைத்தாச்சி ஆகிறேன்.

நிறங்கள்

கறுப்பு
துக்கம், துயர அடையாளமுமல்ல
வெள்ளை
சுத்தம், சுக அடையாளமுமல்ல
நிறங்கள்
பார்வைக்கு அழகாக இருக்கட்டும்
நிறங்களுக்கு
பொருள் கற்பிக்க வேண்டாம்
தன்னம்பிக்கை தான்
எம் வலிகளைப் போக்கிட
நல்ல மருந்து என்பேன்!

மறக்கமுடியவில்லையே!


முதலாமாள்: உங்களால் மறக்க முடியாதது எது?

இரண்டாமாள்: "காசில்லாதவனுக்கு எல்லாம் காதல் வருகுதோ" என்ற கேட்ட பெண்ணை.

முதலாமாள்: உங்கட பாதிப்பின் வெளிப்பாடு! யார் அந்தப் பெண்?

இரண்டாமாள்: வேறு யார்? அப்பன், ஆத்தாள் பேசிச் செய்து வைத்த பெண்; என் இல்லாளே!



ஞாயிறு, 11 மே, 2014

அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!

பாப்புனைய இறங்கு முன் அன்னையர் நாள் பற்றி எண்ணிப் பாருங்கள். அம்மா எல்லோருக்கும் பொதுவான உறவு. எல்லோரும் அம்மா  வயிற்றில் கருவாகி, உருப்பெற்று, அம்மாவின் வயிற்றை உதைத்து தள்ளி, தாய் மண்ணில் தவழ்ந்து, தலை நிமிர்ந்து நடை போட வைத்த அந்த அம்மாவை நினைவூட்டும் நாளாக அன்னையர் நாள் விளங்குகிறதே!

அடுத்து, அம்மாவை நினைவூட்டும் பிறர் பாக்களை/கவிதைகளை, திரைப் பாடல்களை நினைவுபடுத்துங்கள். ஆயினும், அம்மாவைப் பிரிந்திருந்த வேளை உங்கள் உள்ளத்தில் எழுந்த அம்மாவின் அருமையை எண்ணிக்கொள்ளுங்கள். இனி அந்த அம்மாவை நினைவூட்டும் அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய முயலுங்கள்.

ஆயினும், தங்கள் பாவில் பிறர் எழுதிய அடிகள் வராதவாறு பேணவும்.  எப்படியோ, ஓரிரு அடிகள் வந்தே ஆகவேண்டும் என இருப்பின் யாருடைய அடிகளைப் பொறுக்கி எழுதுகிறோம் எனச் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லையேல் எம்மை இலக்கியத் திருடர்கள் என்று தான் அழைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடலடியைத் தங்கள் பாவில் இணைக்க விரும்பினால் பின்வருமாறு கையாளலாம்.

அன்னையர் நாளாம் இன்றென அறிய
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற
மன்னன் படப்பாடலை மீட்டுப்பார்க்கிறேன்!

இனி, உங்கள் சொந்த எண்ணங்களில் விளைந்த பாவண்ணத்தைப் பார்ப்போமா... என்னை ஈன்றவளும் அம்மா, அம்மாவை ஈன்றவளும் அம்மா என நீங்கள் அறிந்தால் கீழ்வரும் அடிகளை ஆக்கலாமே!

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

எம்மைப் பெத்து வளர்த்து ஆளாக்கிய அம்மா பட்ட துன்பம், துயரம் ஏராளம் இருக்கும். அவற்றை அம்மாவைப் பிரிந்திருந்த வேளை எண்ணிப் பார்த்திருப்பியளே! அவற்றை எழுதினால் கூட பா/கவிதை வருமே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

எம்மை ஈன்ற போது தாய் பட்ட துயரையும் தான் நொந்தாலும் எம்மை நோகாமல் வளர்த்த தாய் பற்றி எழுதினோம். இனி, அப்பா அடிக்க வந்தாலும் அம்மா அடிக்க விடமாட்டார். அதைப் படிக்கிற காலத்தில அறிந்திருப்பியள். அதுபற்றி அடுத்துப் பார்ப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேலே எப்படி எண்ணமிட்டு எப்படிப் பாப்புனைய முயன்றிருக்கிறேன் என்பதை விரித்திருக்கிறேன். பாப்புனைந்த வேளை சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கு பற்றி அறிய விரும்பி இருப்பியளே!

அன்னையை, என்னையை எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ன்' வரவும் வெந்து, நொந்து எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'ந்' வரவும் படிக்காத, அடிக்காது எனச் சொல்கள் அமைந்த அல்லது அமைத்த ஒழுங்கில் குறிலடுத்து 'டி' வரவும் எதுகை அமைத்துள்ளேன்.

சீர்கள் / சொல்கள் முதலெழுத்துப் பொருந்தி வர அமைதல் மோனை என்றும் சீர்கள் / சொல்கள் ஈராமெழுத்துப் பொருந்தி வர அமைதல் எதுகை என்றும் அறிவீர்கள். மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவானாலும் எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் தான் இசையோடு படிக்கச் சுகமளிக்கும்.

அன்னையை ஈன்றவளும் அன்னையே
என்னையை ஈன்றவளும் அன்னையே
உன்னையை ஈன்றவளும் அன்னையே
அன்னையே சான்றாவள் என்னையே
பிள்ளையென உலகுக்கு உரைக்கவே!

வெந்து கொண்ட வயிற்று அன்னை
நொந்து கொண்டே பாலூட்டிய அன்னையே
நொந்து பெத்த அன்னை - என்னை
நொந்து கொள்ள விடாத அன்னையே
பிள்ளைகள் நாம் மறப்போமா!

படிக்காத வேளை பார்த்தும் - என்னை
அடிக்காது அன்பு காட்டிய அன்னையே
படிக்க வைக்க முயன்றாள் - என்னை
அடிக்காது அறிவு ஊட்டிய அன்னையே
படித்தவரானோம் எம் அன்னையாலே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே! மேற்படி பாப்புனைந்த பின் என்ன தலைப்பிட்டிருப்பியள்? அன்னையர் நாளில் எண்ணிய எல்லாம் எழுதியமையால் 'அன்னையர் நாளில் எண்ணிய சில...' என்று தலைப்பிட்டுக் கொள்வோமா! ஏனையா, இப்படிப் பாப்புனைய எடுத்துரைத்தேன்? உங்கள் கைவண்ணத்தால் ஆன பாவண்ணத்தால் உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணவே!

உண்மையில்...

அன்பும் காதலும்
இலவசமல்ல...
ஏற்கும் உள்ளத்தின் விருப்பமே!
பண்பும் பற்றும்
நல்லவர்களின் நடத்தை
ஆயினும்
ஏமாற்றுவோரின் மருந்தும் ஆகிறதே!
அன்பும் காதலும்
உறவை ஏற்படுத்த உதவினாலும்
பண்பும் பற்றும் தானே
உறவைப் பலப்படுத்த உதவுகிறதே!
அன்பும் காதலும் பண்பும் பற்றும்
இல்லாத உள்ளங்களால்
மனிதஉறவை
நன்றே பேண முடியுமா?

கண்ணாடி

ஒருவர் : மூக்குக் கண்ணாடியை ஏன் தலையில மாட்டுறாங்க?

மற்றவர் : கண் பார்க்காட்டிலும் தலைமுடி பார்க்குமென்று தான்...

பறக்கும் பணம்

ஒருவர் : என்னங்க... பணத் தாள்களைப் பறக்க விடுகிறியளே...

மற்றவர் : தேர்தலுக்காக அல்ல, கறுப்புப் பணம் பிடிபட்டிடும் என்பதற்கல்ல, "காசேதான் கடவுளடா" எனும் படத்திற்காக... எல்லாம் நிழற்படி(photo copy) எடுத்ததே

வெள்ளி, 9 மே, 2014

இலங்கை அழுகிறது...

இலங்கையின் நல்ல எதிர்காலத்தை
தங்களால் தான்
கட்டியெழுப்ப முடியுமென
நாளுக்கொன்றாய்... ஆளுக்கொன்றாய்...
கட்சிகளும் கொடிகளும் பெருகினதே தவிர
அமைதிக்கான தீர்வு எதனையும்
எவரும் முன் வைத்ததில்லையே!
நாடாளுமன்றம் செல்லும் மட்டும்
மக்கள் நலன் பேணுவதாய் நடித்தனர்
நாடாளுமன்றுக்குள் நுழைந்ததும்
நாற்காலிகளின் நலன் பேணப் படித்தனர்
வாக்குக்கேட்ட இப்படிப்பட்டவர்
துன்புற்றுக் கண்ணீர் வடிக்கும்
மக்களைக் கண்டு கொள்ளாததால்
இலங்கை மண் அழுகிறது...!
இலங்கையில் அமைதி தோன்ற
இப்படிப்பட்ட தலைமைகளை
நம்பிப் பயனில்லையே!
நம்பிக்கையை மருந்தாகக் கொண்டு
இட, இன, மத வேறுபாடின்றியே
தேனொழுக அன்பாகப் பழகியே
மக்கள் எல்லோரும் தாமாகவே
ஒன்றிணைவதால் மட்டுமே
இலங்கை மண் அழுவதை நிறுத்தி
அமைதியை ஏற்படுத்த முடியுமே!
நாளைய தலைமுறை
மகிழ்வோடு நலமாக வாழ
நாட்டில் அமைதி தோன்ற வேணுமே!

சனி, 3 மே, 2014

மக்களாயம் (சமூகம்) என் பார்வையில்

தாய் வயிற்றில் நான் பிறந்தேன்
தாய் மண்ணில் வந்து தவழ்ந்தேன்
தாய்¸ தந்தை வளர்ப்பில் நிமிர்ந்தேன்
காலத்தின் கட்டளைக்குப் பள்ளிக்குப் போனேன்
காலம் கரைய நானும் மாறினேன்
நண்பர்கள் பலருடன் பழகி இணைந்தேன்
நண்பர்களால் பலதும் கற்க முனைந்தேன்
வீட்டுக்கு வீடு நுழைவுப் படிதான்
வீட்டுக்கு உள்ளே ஆளுக்கு ஆள்தான்
நடத்தையும் செயலும் வேறு வேறுதான்
நாட்டிலும் ஆளுக்கு ஆள் இப்படித்தான்
கொஞ்ச ஆள்கள் படிப்பில் அக்கறைதான்
கொஞ்ச ஆள்கள் விளையாட்டில் முயற்சிதான்
கொஞ்ச ஆள்கள் இரண்டிலும் முன்னோடிதான்
எஞ்சிய கொஞ்சம் போல்லாத குழப்படிதான்
நல்ல சூழலில் சிக்கிய எல்லோருந்தான்
மெல்லச் சூழலில் சிறந்தவர் ஆயினர்தான்
பிழையான சூழலில் சிக்கிய ஆள்கள்தான்
பிழைக்க உழைப்பு இன்றியே நின்றவர்தான்
இன்றைய சூழலையே மாற்று வழிக்குத்தான்
இன்றுமே இழுத்துச் செல்வதைப் பார்ப்பீர்தான்
புகைத்தல்¸ குடிப்பொருள்¸ விலைப்பெண் இன்னும்தான்
பகைத்தல்¸ பொருட்பறி, அழித்தல் இன்னும்தான்
கொல்லுதல், கெடுத்தல், மணமுறிப்பு இன்னும்தான்
கொல்லையில் கள்ளத்துணை, மறுமணம் இன்னும்தான்
சொல்லில் எடுத்துக்கூற எத்தனையோ இருக்குத்தான்
எல்லாம் எங்கள் மக்களாயத்திலிருந்து ஒழியத்தான்
ஒழுக்கம் உயர்வைத் தரும் என்றுதான்
இழுக்கு இன்றி நாடு உயரத்தான்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றுதான்
ஒன்றிணைந்து எல்லோரும் செயற்பட்டால் முடியுந்தான்
பின்னேறி உள்ளோரை முன்னுக்குக் கொண்டுவரத்தான்
இன்றே பள்ளிகளிலும் படித்தவர்களாலும் தொடர்ந்தால்தான்
நன்றே அரசாலும் பெரியோராலும் முயன்றால்தான்
நாளைய சமூகம் நன்றே மாறுந்தான்
நாளைய விடியலில் மக்களாயம் மேம்படத்தான்
எங்கள் நாடும் சிறந்து விளங்குந்தான்
எங்கள் மக்களாயமென் பார்வையில் இப்படித்தான்
எங்களுக்கு எப்பவும் இருக்கவேணும் என்பேன்!

வியாழன், 1 மே, 2014

புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?


இனிய உறவுகளே!
நான் புதன், சித்திரை 30, 2014 அன்று "கவிதை" என்பது வடமொழியா? எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே "கவிதை" என்பது வடமொழியா? (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, "புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.

"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
புவியும் அதுவெனப் போ!" என்ற
கவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.

உடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் "குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29)." என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.

http://ta.wiktionary.org/s/gy6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.

என் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.

http://ta.wiktionary.org/s/4jt6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.

இவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே! தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.

எனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா? இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா? அறிஞர்களே! உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.