Translate Tamil to any languages.

திங்கள், 30 ஜூன், 2014

சாவின் பின்னும் சாகமாட்டாய்


மரம் இருந்தால்
நிழல் தரும் பயனுண்டு
மனிதனாக இருக்கும்
நம்மாளுகளால் - ஏதும்
உலகுக்குப் பயனுண்டோ?
மரம் தரும் நிழல் போல
மனிதரும்
சூழ உள்ளோருக்கு நல்லது செய்ய
முன் வந்திருந்தால்
"வள்ளுவர், பாரதி போன்றோர்
தமிழுக்கு ஆற்றிய பணி போல..." என்று
உங்கள் பெயரையும் நினைவூட்ட
நாளைய தலைமுறை காத்திருக்கிறதே!
பிறந்தோம்
வாழ்ந்தோம் என்பதை விட
சாவின் பின்னும் வாழும்
வள்ளுவர், பாரதி போன்றோரைப் போல
சாவதற்கு முன்
நம்மைச் சூழவுள்ளோருக்கு
நல்லது செய்து கொண்டே சா...
சாவின் பின்னும் சாகமாட்டாய்
வாழ்ந்து கொண்டே இருப்பாய்!

இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள்


வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை சிகரம் பாரதி ஏற்பதாகத் தெரிய வந்ததும் அவரது தளத்தைப் பார்க்க முடிந்தது.
"எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல" என்ற ஆய்வுக் கட்டுரையையும் அல்லவா படித்தேன்.
எனது நாட்டைச் சேர்ந்தவர் என்றதும் பாதி மகிழ்ச்சி, சிறந்த படைப்பாளி என்பதில் பாதி மகிழ்ச்சி, மொத்தத்தில் இப்பதிவு தந்த நிறைவில் முழு மகிழ்ச்சி!
பாபுனைய விரும்புவோருக்கு இப்பதிவு சிறந்த வழிகாட்டலாக இருக்கும் என்பதில் தங்களுடன் இதனைப் பகிர விரும்புகிறேன்.

"புதுக் கவிதையயன்று பார்க்கும்போது அதன் முன்னோடியாகத் தமிழில் மஹாகவி பாரதியையே குறிப்பிடுகிறோம்." என்றும் "கவிதை என்பது மன உணர்வுகளின் ஒரு வெளிப்பாடே. சில புனைவுகளைச் சேர்த்துச் சொல்வதால் அதற்கென ஒரு தனி நடையும் சிறப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. புனைவுகளின்றி ஒரு நயமின்றிச் சொல்லப்பட்டால் அது ஒருபோதும் சிறந்த கவிதையாக மாட்டாது." என்றும் அவர் கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

“இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள் மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்.” என
மஹாகவி கூறியிருப்பது பாடுபொருளின் உள்ளடக்க அமைவை வெளிப்படுத்தி நிற்கிறது. இது சிகரம் பாரதி எடுத்துக்காட்டிய பாடுபொருள் பற்றிய சான்று.

பாபுனைய விரும்புவோர் இவரது இப்பதிவைப் படிப்பதால் பாபுனையும் போது கருத்திற்கொள்ள வேண்டிய வழிகாட்டலைப் பெறலாம்.
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.
http://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html#.U7CrWfmSzbN

ஞாயிறு, 29 ஜூன், 2014

மிருகச் சாதி என்போமே!

சாதி உண்டென்று கூறு - அதை
உயிரெனப் போற்றிப் பாடு!
முதலில் என்னோடு பாயாமல்
வீட்டைக் கொஞ்சம் பாரு - அங்கே
ஆண் சாதி, பெண் சாதி ஆக
அப்பாவும் அம்மாவும் இருக்கிறாங்க!
நாம் எல்லோரும்
எல்லாத் தொழிலும் செய்வோம் என்றால்
நாங்களும் மனிதச் சாதியே!
மனிதச் சாதி, ஆண் சாதி, பெண் சாதி ஆக மூன்றும்
எந்நாளும் இருக்கத் தானே செய்யும்!
மூன்று சாதியை விடக் கூட இருப்பதாய்
சான்று கூறிக் காட்டிக்கொண்டு
நம்மாளுகளுக்குள்ளே
நம்மாளுகளை ஒதுக்கிவைப்போரை
மிருகச் சாதி என்போமே!

வியாழன், 26 ஜூன், 2014

புதுக்கவிதை எழுத முன்...

கவிதை என்பது
எண்ணங்களைக் கொட்டிவிட்டால் ஆகாது...
வரிக் (வசன) கவிதைக்கு
பாரதியின் 'குயில் பாட்டு' படியுங்கள்...
புதுக்கவிதைக்கு
மூ.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' படியுங்கள்...
மரபுக் கவிதைக்கு
கண்ணதாசன் பாடல்களைப் படியுங்களென
எடுத்துச் சொல்ல ஏது உண்மை?
பாக்கள் (கவிதைகள்), பாடல்கள் எல்லாம்
இலக்கண உடை உடுத்தால் தான்
உயிர் ஊட்டப்பட்டிருக்குமே!
அரும்புகள் மலரட்டும் தளத்தில்
"புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு" என்ற
பதிவைப் படித்த பின்
பாப்புனைய விரும்புவோருக்கு
நல்ல பாடமாக இருக்குமென்றே எண்ணி
என் உள்ளம் நிறைவோடு
உங்களுடன் பகிர விரும்புகிறேன்!
கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டு
ஆக்குவது புதுக்கவிதை அல்ல...
புதுக்கவிதைக்கும்
படிமங்கள், வடிவங்கள் எனப் பலவுண்டு...
புதுக்கவிதை எழுத முன்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!

http://pandianpandi.blogspot.com/2013/08/blog-post_25.html

எப்ப மாறும் இந்த நிலை



பிச்சைக்காரர்கள் திரட்டும் பணத்தை
வங்கியில் இடுவதும்
தானியங்கி (ATM) இயந்திரத்தில் எடுப்பதும்
வழக்கம் ஆயிட்டுது என்கிறீங்க...
ஒரு பிள்ளை மருத்துவர்
மறு பிள்ளை பொறியியலாளர்
மொத்தமாக எட்டுப் பிள்ளைகளும்
கல்வியிற் பெரியவர்களாயினும்
பெற்றவர்கள்
பிச்சையெடுப்பதை நிறுத்தாயினமாம்...
அட! கடவுளே!
பிள்ளைகள் மாறினாலும்
பெற்றவர்கள் மாறுவதாயில்லையே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!
பிச்சை எடுத்துக் குடித்து வெறித்து
அலைபவர்களை விட
பிச்சை எடுத்துப் பிள்ளைகளைப் படிப்பித்து
ஆளாக்குபவர்களை
நாம் போற்ற வேண்டுமே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!

வாழும் வழி

வாழ்க்கை
காலத்தோடு அள்ளுண்டு போய்விடும்
கைக்கெட்டிய வேளையிலேயே
வாழும் வழியறி!
காலம் கரைந்த பின்னர்
வாழும் வழி பறிபோய்விடுமே!

வெயில் வேளை

உச்சந் தலை வெடிக்கிறதே...
வியர்வையால் குளிக்கிறேனே...
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?"

நாட்டிற்காய் உயிரை ஈகம் செய்தவர்கள்

மண்ணிற்காய் மடிந்தவர்கள்
சாவடைந்ததாக வரலாறு இல்லை...
மண்ணில் வாழும் - ஒவ்வொரு
உயிரின் நினைவுகளில் வாழ்பவர்களே!

புதன், 25 ஜூன், 2014

பாப்புனையப் பயிற்சி தேவை

பாப்புனைய விரும்புவோருக்கு
சிறந்த வழிகாட்டலாக இருக்கும்
இன்றைய கவிதைகள் மீதான
கண்ணோட்டத்தைத் தந்திருக்கும்
அறிஞர் வா.மணிகண்டன் அவர்கள் எழுதிய
"யார் கண்டுகொள்கிறார்கள்?" என்ற பதிவை
தங்களுடன் பகிர விரும்புகிறேன்!
"கலை என்பது பயிற்சி.
எழுத்தும் அதில் அடக்கம்.
தொடர்ந்து பயிற்சி செய்வோம்." என்ற
அறிஞரின் வழிகாட்டலைப் பின்பற்றுங்கள்!
மேலும்
அறிஞரின் கணிப்புப் படி
"எந்தவிதமான அனுபவமும், ரசனையுமற்ற
தட்டையான கவிதைகள் குவிக்கப்படுகின்றன." என்ற
நிலைமை வருவதேன் என்பதை
படிக்க மறந்து விடாதீர்கள்!

இதோ
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
அவரது பதிவைப் படியுங்கள்!
http://www.nisaptham.com/2014/06/blog-post_20.html

புதிய புதிய சொல்கள் ஆள
புதிய புதிய நுட்பங்கள் நுழைய
எழுத எழுத வரும் பட்டறிவு பெருக
சிறந்த பாக்களைப் புனையலாம் என்பதை
அறிஞரின் பதிவு சொல்லாமல் சொல்கிறதே!
பாப்புனைய விரும்புங்கள்
பாப்புனைய முயலுங்கள்
மீள மீளப் படையுங்கள்
ஆழமாக எண்ணுங்கள்
சிறந்த பாக்களை வெளிப்படுத்த
பட்டறிவு துணை நிற்குமே!

செவ்வாய், 24 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

அறிஞர் சொக்கன் சுப்பிரமணியன் பிடியில் சிக்கிய அறிஞர் கில்லர்ஜி "பத்து கேள்விகள் கேட்டுப் பத்துக்கும் பதிலளிக்க" என்று என்னையும் தன் பிடிக்குள் சிக்க வைத்துவிட்டார். கில்லர்ஜி அவர்களிடம் உச்ச முடியுமா? முத்துக்கு முத்தாகப் பத்துக்குப் பத்தாகக் கேள்வி - பதில் போட்டிட்டு "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்று கேட்கலாமோ? கேட்டிட்டாங்களே! ஆகையால் என் பதிலையும் கிழே பதிவு செய்கிறேன். 

1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நூறு அகவை வரை வாழ்வேனா என்பது ஐயம் தான்...
நூறாம் அகவைப் பிறந்த நாள் வரை வாழ முடிந்தால் நூற்றுக் கணக்கான சிறார்களுக்கு எழுதுகோல் வழங்கிப் பாபுனையக் கற்றுக்கொடுப்பேன். நம்மவூரு சித்தி விநாயகர் கோவில் முன் நூற்றுக் கணக்கானோருக்கு மதிய உணவு வழங்குவேன். வசதிகளைப் பொறுத்து மேலும் நல்லன செய்வேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

காலத்துக்குக் காலம் விருப்பங்கள் வேறுபடலாம். ஆயினும், விருப்பம் / நாட்டம் உள்ள எல்லாம் கற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் / விரும்புவேன். அப்படி இருப்பினும் முதன்மையாகத் தமிழ், அடுத்துக் கணினி நுட்பம். 

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

கடைசியாகச் சிரித்த நாள், திகதி நினைவில் இல்லை. ஆனால், சிரித்தேன். நம்ம ஜோக்காளி தளத்துத் தமிழ்மணம் நிலை (Rank) இரண்டாக இருந்தும் "என்னை நிலை (Rank) நான்கிற்கு உயர்த்திய வலை உறவுகளுக்கு நன்றி" என்றிருந்ததைப் பார்த்துத் தான்...

4. 24மணி நேரம் மின்தடை (பவர்கட்) ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகலாயின் அம்மன் கோவில் தெற்கு வாசலில் இருந்து காற்று வாங்கப் போவேன். பால்நிலாவாயின் வீட்டு முற்றத்தில் பொழுது போகும். முன்னிரவாயின் அந்தி சாயுமுன் உண்டு உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லையாயின் 
"வேளாவேளைக்குப் பணம் செலுத்தியும்
நாள் முழுக்க மின்னொளி இல்லையே!" என்று கவிதை எழுதக் கற்பனை பண்ணுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

கணவன்-மனைவி ஒற்றுமை வேண்டும். ஒட்டி உறவாடப் பண வருவாய் வேண்டும். கட்டிப்புட்டால் பிறக்கும் பிள்ளைகளை நன்றாகப் படிப்பிக்க வேண்டும். இதற்கு மேலே சொல்லலாம். ஆனால், அவங்க காது கொடுத்துக் கேட்கமாட்டாங்களே!

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகெங்கும் நம்பிக்கை இல்லாமையே அடிப்படைச் சிக்கல் (பிரச்சனை). உறவுகளிடையே நம்பிக்கை இல்லாமையே மகிழ்ச்சி இன்மைக்குக் காரணம். எனவே, நம்பிக்கையை ஏற்படுத்த உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவேன். நம்பிக்கை இல்லாமையைப் போக்கினால் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டலாம்.

7. நீங்கள் யாரிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பீர்கள்?

நன்கு அறிந்தவர்களிடம் மதியுரை (அட்வைஸ்) கேட்பேன். ஆனால், தனியொருவரிடம் கேட்கமாட்டேன். நான்கைந்து ஆள்களிடம் கேட்பேன். பின் எல்லோரும் சொன்னதில் பொதுவானதைப் பின்பற்றுவேன்.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

என்னை ஆய்வு செய்ய வருவோருக்குக் குறித்த தகவல் பொய்யானது என விளக்குவேன் அல்லது உண்மை நிலையை விளக்குவேன். ஆனால், தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராகப் போராட மாட்டேன். ஏனெனில், அவர்கள் தானே என்னை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள் (பிரபலமாக்குகிறார்கள்).

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அவர் சொல்வதைக் கேட்டு, அவரது துயரத்தை ஏற்று 
"இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை
ஆயினும்,
இழப்புகளுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும்!" என ஆற்றுப்படுத்த முயற்சிப்பேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

மூலை முடுக்குகளில் கிடக்கும் முழு நூல்களையும் புரட்டிப் படிப்பேன். எழுதுகோலையும் எழுதுதாளையும் எடுத்து ஏதாவது எழுதுவேன். கணினியை இயக்கி வலைப்பூக்களில் நண்பர்களின் பதிவுகளைப் படிப்பேன். 

கீழ்வரும் வலைப்பூக்களின் அறிஞர்கள் போட்ட பிடியில் நீங்கள் சிக்கவில்லையாயின் உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கின்றேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன். பொதுவான இந்த அழைப்பைப் பணிவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

உள்ளம் திறந்து தத்தம் உணர்வுகளைப் பகிர்ந்து வலைப்பூ உறவுகளுக்குள் என்னையும் உள்வாங்கி; நெருங்கிய உறவாக்க "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்ற பகிர்வோடு கலந்து கொண்ட எல்லோருக்கும் எனது நன்றிகள். 

பாடமடி/பாடமடா


முன்மாதிரிகளைப் பார்த்து
நாம் வாழத்தானே
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் தானே
பாடமடி/பாடமடா!
முன்னே போய்
வீழ்ந்தவனைப் பார்த்துத்தானே
முன்னேற முடியும்!
எவரெவரோ
எதையெதைச் சொன்னாலும்
நல்லதைக் காதில் போட்டால் தானே
குறிக்கோளை அடைய முடியும்!
குறிக்கோளை அடையும் போதே
உள்ளம் நிறைய
மகிழ்ச்சி பொங்குகிறதே!
சுட்ட பின்னே அறிகிறோம்
சுட்டது நெருப்பென்று
பட்ட பின்னே அறிகிறோம்
கெட்டது நாமென்று
எப்படிப்பட்டாலும்
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் தானே
பாடமடி/பாடமடா!

கைக்குக் கைமாறும் பணமே - 04


பைங்கிளி வாழும் ஊராம்
கடல் சூழவுள்ள ஊராம்
கடற்கரையூரைக் கடந்தாம்
பிள்ளை ஒன்று பெற்றுக்கொள்ள
அருள் தாரும் அம்மாவென
நாகபூசணி அம்மன் காலில் வீழும்
அடியார்கள் செல்லும் தீவாம்
நயினாதீவை அறிவீரா?

முன்தோன்றித் தமிழரெனும் நாகர்கள்
நாகத்தை வழிபட்ட முன்னோர்கள்
போற்றிய நாகநயினார், நாகதம்பிரான்
கோவில் கொண்ட ஊராகையால்
நாகநயினார்தீவு, நயினார்தீவு என்றும்
மின்னிய இந்துக் கோவில்களை
போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் அழித்தனராம்!

முத்துக்குளித்தல் இருந்தாலும் கூட
சங்குகுளித்தல் விஞ்சிய கடலாம்
சூழவுள்ள நயினாதீவின் உள்ளே
தமிழரெனும் நாகர்கள் வழிவந்த
வள்ளுவர் மக்கட்குழாம் வழிபட்ட
நயினாதீவு நாகம்மாள் கோவிலாம்
பின்வந்த ஆங்கிலேயன் பின்னே
தலைநிமிர்ந்த தமிழர் கோவிலாம்!

யாழ்மண்ணின் பண்ணைக் கடலண்டி
தலைகாட்டும் தீவுகள் ஏழில்
புனிதமண்ணாம் நயினாதீவுக்குப் போவோர்
காணும் கடற்கரையூரில் வாழும்
கந்தப்புவுக்கும் செல்லாச்சிக்கும் வாய்த்த
பைங்கிளி மருத்துவராகப் படித்தாலும்
மூத்தவன் பொன்னன் விண்ணன்
கடலும் அங்காடியுமாகச் சுழல
இளையவன் வேலன் வணிகனாம்!
--தொடரும்--

ஞாயிறு, 22 ஜூன், 2014

பிள்ளைகளின் காதிற்கு எட்டுமோ?!

உருளும் உலகில்
நகரும் நகர மணித்துளிகளில்
நம்மூரின் நினைவோடு
வாழும் நண்பர்களின் கருத்துக்கள்
ஊர்க்காரங்களுக்குப் பாடமாயிட்டுதே!
நம்ம ஊருப் பொடி, பெட்டைகளே!
நகருக்குப் படிக்கப் போனாலும் கூட
சுறுக்கா ஊருக்கு வந்திடணும்...
ஊரரிசிப் பழஞ்சோறும்
நம்மூரு எள்ளில ஊற்றிய
நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து
தொட்டுத் தின்ன சிவப்புச் சம்பல்
கடிச்சு நொறுக்க மோர்மிளகாய்ப் பொரியல்
எல்லாம் தயாரென்று
அப்பு, ஆச்சி அழுகிறது கேட்கிறதா?!
என்னத்தைப் படிச்சுக் கிழித்தாலும்
பிள்ளைகளே
ஊருக்க பணி செய்யாட்டி
ஊர்க்காரங்க திட்டுவாங்க...
கடவுளுக்கும்
பொறுக்காது பாருங்கோ...
உங்களைப் பெத்த கடமைக்காவது
ஊருக்க பணி செய்ய
உடனே வந்திடு என்கிறாள்
உங்களைப் பெத்த தாய்மார்!
உலகம் உருள உருள
நகர மணித்துளிகள் நகர நகர
பெத்த தாய்மாருக்கு
தங்கட பொடி, பெட்டைகள்
தங்கப் பவுணாக
ஊருக்குத் திரும்பும் வரை
நிம்மதியில்லை என்பதை
நகரத்தில் சுற்றும்
பிள்ளைகளின் காதிற்கு எட்டுமோ?!

வலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா?

உறவுகளே! ஊடகங்களைப் பொறுத்தவரையில் படைப்பை ஆக்குவோர் படைப்பாளி என்றும் படைப்பை மதிப்பீடு செய்வோர் திறனாய்வாளர் என்றும் படைப்பை படிப்போர் / வாசிப்போர் / கேட்போர் / பார்ப்போர் தான் படைப்பின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாசகர் எனலாம். வலைப்பூ ஊடகத்தில் வலைப்பதிவர், கருத்துப்பதிவர், வாசகர் ஆகிய மூவரையும் காணலாம்.

ஊடகங்களில் திறனாய்வுக்கும் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வுக்கும் இடையில் என்ன உறவு இருக்கும்? படைப்பை வாசகர் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கத் திறனாய்வு உதவுகிறது. படைப்பின் பயன், தரம், சுவை எனச் சுட்டி வாசகர் வாசிக்கத் தூண்டவும் படைப்பாளி சிறந்த படைப்பை ஆக்கத் தூண்டவும் திறனாய்வு உதவணும்.

வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) என்றாலும் இதே நோக்கில் தான் அமைய வேண்டும். ஊடகங்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்? வலைப்பூக்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்?  வாசகர் பார்வைக்கு வாசகரை நாடும் அல்லது வாசகருக்கு அண்மையில் உள்ள ஊடகங்களை நுகரும் வாசகர்களே ஊடகங்களில் காணலாம். ஆனால், வலைப்பூக்களில் ஒரு வலைப்பூப் பதிவருக்கு மற்றைய வலைப்பூப் பதிவரே வாசகராக இருப்பர். மாறாகத் தேடுபொறிகளூடாகத் (Google) தகவல் தேடுவோரும் வாசகராக இருக்கலாம்.

இந்நிலையில் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா? ஆம்! தேவைதான்! கருத்துப்பகிர்வைக் கண்ட பிறரும் குறித்த பதிவைப் படிக்க வாய்ப்பு அதிகம். ஆகையால், பதிவை வாசகர் பார்வையிடவும் குறித்த வலைப்பதிவர் சிறந்த பதிவுகளை ஆக்கவும் கருத்துப்பகிர்வு (Comment) உதவுகிறதே! எவர் தனது வலைப்பூப் பதிவுகளிற்கு அதிக கருத்துப்பகிர்வு (Comment) பெற்றிருக்கிறாரோ அவர் வலைப்பூப் பதிவர்களிடையே முன்னணிப் (பிரபல) பதிவராக மின்னுகிறார் என்று பொருள்கொள்ளலாம்.

வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் தமது தளத்தில் பதிவிடுவதோடு நட்புக்காகப் பிற வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வதும் வழமை. ஆயினும், அறிவுப்பசி உள்ள வலைப்பதிவர்கள் இதற்கப்பாலும் சென்று பல வலைப்பதிவர்களின் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வை மேற்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாகச் சிறந்த பதிவைக் கண்டாலோ கருத்து முரண்பாட்டைக் கொண்ட பதிவைக் கண்டாலோ அதன்பால் விருப்புக் கொண்ட வலைப்பதிவர்கள் கருத்துப்பகிர்வதும் உண்டு.

ஆயினும், சில வலைப்பதிவர்கள் பிறர் தமது வலைப்பூக்களில் கருத்துப் பகிர்ந்தாலும் தாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப்பகிர முன்வருவதில்லை. நாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப் பகிருவதால் என்ன நன்மை? முதலில் நாம் சிறந்த கருத்தைப் பகிருவதால் எம்மை அடையாளப்படுத்துகிறோம். இரண்டாவது குறித்த வலைப்பதிவரை ஊக்கப்படுத்துகிறோம். மூன்றாவதாக பலரது வலைப்பூக்களுக்குச் செல்வதால் எமது வலைப்பக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டுகிறோம்.

எனவே, வலைப்பூக்களை நடாத்தும் நாம் தேடுபொறிகளூடாக (Google) வரும் வாசகர் படித்தால் போதும் என பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிராமல் இருப்பது தவறு என்பேன். நமது வலைப்பூக்களின் முதல் வாசகர் பிற வலைப்பதிவர்களே என்றுணர்ந்து பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிர்தலே நன்று என்பேன்.

கருத்துப்பகிரும் (Comment) போது எமது விளம்பரங்களைப் போட்டுத்தள்ள வேண்டாம். உங்கள் வலைப்பூக்களது பிந்திய பதிவின் இணைப்பை உங்கள் கருத்தின் கீழ் நுழைப்பதில் தவறில்லை. ஆயினும் குறித்த வலைப்பதிவரை நோகடிக்கும்படி கருத்துப் பகிர வேண்டாம்.

உங்களுக்கே தெரியும் முன்னணிப் பதிவர்கள் எல்லோரும் உங்கள் வலைப்பூவில் கருத்துப் பகிரும்போது "நல்ல பதிவுக்கும் பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்" எனத் தனது கருத்தின் கீழ் இடுவார்கள். அதேவேளை "இந்த இடத்தில் இப்படி வர வாய்ப்புண்டா? எனக்கேதோ தவறு போன்று தெரிகிறது. ஆயினும் தங்கள் பக்கத்தில் வேறு விளக்கங்கள் இருக்கலாம், அதுபற்றி எனக்கு விளக்கம் தாருங்கள்!" என்று வலைப்பதிவரைக் குத்திக் குதறாமல் நோகடிக்காமல் பிழை சுட்டுபவர்களும் உள்ளனரே!

எனவே வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) மிகவும் தேவையான ஒன்று தான். தங்களை அடையாளப்படுத்தவோ தங்களது வலைப்பூக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டவோ பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று நடுநிலைமையுடன் (பதிவர் பக்கத்திற்கும் வாசகர் பக்கத்திற்கும் இடையே நின்று) பதிவை மதீப்பீடு செய்யலாம். குறித்த பதிவில் சுட்டப்பட்ட செயல்களை முன்மொழியப்பட்ட கருத்துக்களை மதீப்பீடு செய்யலாம். அதாவது தங்கள் கருத்து  வாசகர்களையும் பதிவரையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.

ஆயினும், ஆகக்குறைந்த சொல்களால் “சிறந்த பகிர்வு, பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள், சுவையான பதிவு” என்றவாறு கூட உங்கள் கருத்தைப் பகிரலாம். "எடே யாழ்பாவாணா" என்பதை "அடேய் யாழ்பாவாணா" என்று திருத்தி உதவுங்கள் எனப் பிழைகளையும் நோகாமல் சுட்டிக்காட்டலாம். எப்படியோ வலைப்பூக்களை முன்னணிக்குக் கொண்டுவரவோ பின்னுக்குத் தள்ளவோ நாம் வழங்கும் கருத்துப் பகிர்விலேயே (Comment) தங்கியிருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

வெள்ளி, 20 ஜூன், 2014

உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?


"சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்
விக்கல் வந்தது.
அம்மா
தண்ணீரைக் குடி என்று நீட்டினாள்.
தங்கை
எங்கையண்ணே களவு எடுத்தியள் என்றாள்.
எனக்கு
எதுவும் சொல்லவோ செய்யவோ
முடியாமல் போயிற்று." என
"என் சமையலறையில்..." என்ற தலைப்பில்
எழுதினாலும் பா/கவிதை அல்ல
கட்டுரை என்றே கூறுவர்!
"அப்படியாயின்
எப்படி ஐயா
இந்தச் சமையலறை நிகழ்வை
பா/கவிதை ஆக்குவது?" என்று
என்னை
நீங்களும் கேட்பியளே!
நான், அம்மா, தங்கை என
மூன்றாள்
சாப்பிட்டது,
அம்மாவின் அன்பு,
கள்ள விக்கல் என
மூன்று செய்தி
ஆக மொத்தம் ஆறு தான்
அதையேன்
கட்டுரையாய் எழுத வேணும்?
"வேலைக்குப் போக நேரமாகுதென
வேளைக்குச் சாப்பிட எண்ணி
சாப்பிட்ட வேளை விக்கல் வர
தண்ணீரைக் குடி விக்கல் போகுமென
கண்ணீர் மல்கிய அம்மா நீட்ட
எங்கையணே களவுக்குப் போனியளென
தங்கைதான் உளவறியக் கேட்க
என்பாடு திண்டாட்டம் ஆச்சு!" என்றெழுதி
"சாப்பிடேக்க விக்கினால் கள்ள விக்கலா?" என
தலைப்பைப் போட்டால் பா/கவிதை ஆச்சே!
ஹைக்கூ யப்பானியச் சொல்
தமிழில் துளிப்பா
ஈரடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
மூன்றடிக் கவிதையே!
லிமரிக் ஆங்கிலச் சொல்
தமிழில் குறும்பா
நான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
ஐந்தடிக் கவிதையே!
மரபுக் கவிதைக்கு மட்டுமல்ல
வரிக்(வசன) கவிதை, புதுக் கவிதை போன்ற
எல்லாக் கவிதைக்கும்
இலக்கணம் இருக்கிறதே!
எண்ணியதெல்லாம் எழுதுங்கள்...
எழுதியதெல்லாம்
ஓர் இலக்கணத்திற்கு உட்பட்டே
இருக்குமென்பதை மறவாதீர்கள்!
என்றாலும் வாசிக்கச் சுவையாக
நன்றாக உலகெலாம் தமிழ் பரவ
இன்றே பாபுனைய விரும்பு!

நீரு

வெங்காயத்தை உரிச்சாக் கண்ணீரு
காதலிக்கக் குதிச்சால் கானல்நீரு
"பட்டறிவின் விளைச்சல்..."


புதன், 18 ஜூன், 2014

எட்டிப் பிடிக்கலாம்

நிலவு
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
வெண்மை தான்
ஆனால், மனிதன்
சோர்வு(நட்டம்) அடைந்தாலும்
தேட்டம்(இலாபம்) அடைந்தாலும்
தன்னை நிலையாகப் பேணுவதில்லையே!
கருமுகில்
மூடிமறைத்தாலும் ஓடிவிலகினாலும்
வானம் எப்பவும் நீலமே
ஆனால், மனிதன்
குறுக்கீடுகள் வந்தாலும் போனாலும்
துயர் அடைவது ஏன்?
இயற்கையில்
எத்தனை மாற்றங்கள் வரினும்
தன் இயல்பை இழப்பதில்லையே
ஆனால், மனிதன்
வாழ்க்கையில்
தன்னைக் குறைத்து மதிப்பிடுவது
நல்லதிற்கு இல்லைப் பாரும்!
வீசும் காற்றைக் கூட
மரங்கள்
எதிர்த்து நின்று நிமிர்ந்து நிற்கிறதே
ஆனால், மனிதன்
வாழ்க்கையில்
எது வந்தாலும் முகம் கொடுத்து
எதிர்த்து நின்று வாழ அஞ்சுவதேன்!
தன்னம்பிக்கை இருந்தால்
எந்த
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாம் வாருங்கள்...
எதிர்த்து நின்றால்
எதிர்க்க வந்தவை - உங்களுக்கு
அஞ்சி ஓடுவதைப் பாருங்கள்...
மனிதா - நீ
துணிந்துவிட்டால்
உலகமே
உனக்கு ஒரு தூசு...
மனிதா - நீ
எதற்கும் பணிந்துவிடாமல்
முயன்று பார்
எட்டிப் பிடிக்கலாம்
உனக்கு முன்னாலே போய்க் கொண்டிருக்கும்
வெற்றிகளைக் கூட...
மனிதா - நீ
வெற்றிகளுக்குக் கிட்ட நெருங்கிவிட்டால்
தோல்விகள்
ஒரு போதும் உன்னை நாடாதே!

கைக்குக் கைமாறும் பணமே - 03

வள்ளியப்பனுக்கும் (வள்ளிக்கும்)
வெள்ளியம்மாவுக்கும் (வெள்ளிக்கும்)
மூத்தவனாய்ப் பிறந்த ஐங்கரனும்
தம்பியாம் சுப்பனையும்
தங்கையாம் சுந்தரியையும்
படிக்க வைச்சான் தானும் படிக்கையிலே!

ஆற்றங்கரை ஊராக்களைப் போல
என்ன தான் படித்தாலும்
வேளான்மை செய்யும் குடும்பமானாலும்
ஊர்ப்பள்ளியில் ஐங்கரன்
கணினி ஆசிரியராக இருக்க
விடிகாலையிலும் பொழுதுசாய்கையிலும்
தன் தோட்டத்துப் பயிர்களையே கொஞ்சுவான்!

சுப்பனோ கச்சேரி எழுதுநராயும்
சுந்தரியோ தொடக்கப்பள்ளி ஆசிரியையாயும்
தேப்பனோட தோட்டமும் கையுமாயிருந்த
பள்ளிக்குப் போயறியா வள்ளியப்பனும்
வெள்ளியும் பத்துவரை படித்தாலும் கூட
வள்ளிக்குத் துணையாய் வந்ததும்
அடுப்பூதியும் அவிச்சுப் போட்டுமிருக்க
அறுவடை நாளன்று எல்லோருமாய்
தோட்டத்தில் வந்துகூடி வேலையும் செய்வரே!

அண்டையாள் அன்னக்கிளியும்
அயலாள் அப்புச்சாமியும்
எண்ணிப்பார்த்தால்
ஐங்கரன் வீட்டுச் சுற்றத்தார்
எல்லோருமே தோட்டத்திற்கு வர
வேளாண்மையும் அறுவடையும் நகர
ஆற்றங்கரையூர் ஒற்றுமையாய் வாழ
தொண்டைமானாறு கைகுலுக்குமே!

தொண்டைமானாற்றின் அயலூர்களான
கரணவாய், செம்மணி, வெள்ளைப்பரவை போன்ற
இடங்களில் தானே விளையும் உப்பை
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசருக்கும்
இந்தியாவை ஆண்ட தமிழரசருக்கும்
ஒற்றுமையும் நல்லுறவும் இருந்தமையால்
மரக்கலங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு
ஏற்றுமதி செய்த வரலாறுமிருக்கே!

சிற்றரசன் கருணாகரத் தொண்டைமான் என்பாராம்
தமிழ்நாட்டில் இருந்து வந்திங்கே
யாழ்ப்பாண அரசரின் அனுமதியோட தான்
உப்பு வணிகம் இலகுவாய்த் தொடரவே
பாக்கு நீரிணையோடு ஆறு இணையும்
முகத்துவாரத்தினூடே இருந்த
வல்லிநதி என்னும் நன்னீர் ஓடையை
வெட்டிக் கட்டியமைத்த ஆறாகையால்
வல்லைவெளி தாண்டிய வல்லிநதியே
தொண்டைமானாறானதும் வரலாறே!
(தொடரும்)

பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா?

                                     தமிழ்த் திரைப்பாக்கூடம்
                                      திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு

2014 – 2015 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது..

பாடல் எழுதுவது என்பது பலரின் கனவு. அதற்கு ஒர் அரிய வாய்ப்பு இது. உலக அளவில் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள.. அடிப்படைத் தமிழறிவும் கவியறிவும் கொண்டவர்கள், சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com

வகுப்பு   -       சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்
குறைந்தபட்சக் கல்வித்தகுதி    -        பத்தாம் வகுப்பு

மேலும் தொடர்புக்கு :    

தமிழ்த் திரைப்பாக்கூடம்   -  9566196747 ,  8056161139

திங்கள், 16 ஜூன், 2014

நாங்களும் இருக்கிறோம் எல்லோ...

தெருவழியே நாங்களும் இருக்கிறோம்
வயிற்றுப் பிழைப்புக்கு
உழைக்க முடியாத ஊனங்களாக...
இளகிய நெஞ்சுக்காரர்
பழகிய முகமே இல்லாமல்
"நீங்கள் உண்டு, களித்தால் தான்
நாங்கள் மகிழ்வோம்" என்று
உதவுபவர்கள் இருக்கிறதால தான்
தெருவழியே நாங்களும் பிழைக்கிறோம்...
"தைப்பொங்கல்,
சித்திரைப் புத்தாண்டு,
தீபாவளித் திருநாள் போன்ற
நன்னாளிலாவது
எஞ்சியோர் உதவக்கூடாதா?" என்று
நாங்களும் தெருவழியே
இருக்கிறோம் எல்லோ என்று
உழைக்க முடியாத ஊனங்கள் கேட்பது
எவர் காதிலாவது விழுகிறதா?

நேர்காணல் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு!


இலக்கியத்தில் கவிதை, கதை எனத் தனித்து எழுதுவோரும் பல துறைகளில் எழுதுவோரும் உள்ளனர். ஊடகங்களில் அவர்களை நேர்காணல் பகுதிக்கு அழைத்து கேள்வி மேல் கேள்வியால் துளைத்து அறிவைப் பிடுங்கிப் பரப்புவார்கள். இதனால் படைப்பாளி கூறும் நுட்பங்களை நாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. நம்மாளுகள் இவ்வுண்மையை அறியாமல் நேர்காணல் பகுதியைப் படிக்க நாடுவதில்லை. அப்படியானவர்கள் "அவரவர் தன் (சுய) அறிமுகமாக இருக்குமெனப் படிப்பதில்லை." என்பர்.

நேர்காணல் பகுதியில் "தங்களைப் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?" என்ற கேள்வியைத் தான் எல்லோரும் கேட்பர். அதில் தவறில்லையே. அடுத்து "எவ்வாறு எழுத்துத்துறையில் காலடி வைத்தீர்கள்?" என்று கேட்பார்கள். அதிலும் தவறில்லையே. இதற்காகவே ஒரு படைப்பாளி தன் (சுய) அறிமுகத்தைத் தருகின்றார். நேர்காணலை மேற்கொள்பவர் வாசகர் படைப்பாளியை அடையாளம் காணவே இவ்வாறு கேட்க முனைகின்றார்.

படைப்பாளிகளில் இருபாலரும் உள்ளனர். ஆண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். பெண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். சிலர் இருபாலார் சார்பாகவும் எழுதுவர். வாசகர் விருப்பறிந்து எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றி பெற்ற படைப்பாளி ஒருவருடனான நேர்காணல் ஒன்றை 4பெண்கள் தளத்தில் படிக்க முடிந்தது. "இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்" என்ற தலைப்பில் வெளியான பதிவை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.

http://wp.me/p2IA60-1y5

சனி, 14 ஜூன், 2014

சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?

பால் பருக்கிச் சோறு ஊட்டிவிடத்தான்
பெற்றவர்களால் முடியுமென்பதால்
வேளாவேளைக்கு
பள்ளிக்கூடம் அனுப்புவது
அகரம் தொட்டு
கருவி(ஆயுதம்) வரை படிக்கத்தானே!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடம் போனோம் வந்தோம்
படித்தோமோ என்றால் இல்லைப் பாரும்
நீங்கள் அல்ல நான் தான்!
பள்ளிக்கூடக் காலம் முடிஞ்ச பிறகு தான்
வயிற்றுப் பிழைப்புக்கு உழைப்பைத் தேடினால்
வழி நெடுகப் பிச்சை எடுப்பதே
தொழிலானதால்
கண்டதெல்லாம் கண்ணை மூடியே
கற்றுத் தேறியதாலே
நாற்காலித் தொழில் எல்லோ
எனக்குக் கிடைத்தது என்பேன்!
என்னதான் இருந்தாலும் பாருங்கோ...
பள்ளிக்கூடப் படிப்பை
ஒழுங்காகப் படித்து முடித்திருந்தால்
இன்றைக்கு நானோ உலகத்தில் பெரியன்!
கொஞ்சம் நினைத்துத் தான் பாருங்கோ...
பிச்சை எடுக்கையிலே படிக்க முடிந்ததால்
இன்றைக்கு நானோ ஊருக்குள்ளே சிறியன்!
'கல்வி' என்பது
தொடக்க காலத்தில் புளிக்கத்தான் செய்யும்
முற்றிய காலத்தில் இனிக்கத்தான் செய்யும்
பட்டுத் தெளிந்த
என்னைப் போன்றோருக்கு
நன்றாகத் தெரிந்த உண்மை இது!
என் இனிய இளைய நெஞ்சங்களே...
பிஞ்சில படிக்கப் புளிக்குமென
கல்வியை
முளையிலேயே கிள்ள நினைக்காதீர்கள்!
எனது அருமை மாணவிகளே... மாணவர்களே...
என் போன்ற பழுத்த கிழங்கள்
உமக்கு உரைப்பது
தாங்கள் செத்தாலும்
நீங்கள் நல்லாயிருக்கத் தான் பாருங்கோ!
பள்ளிக்கூடம்
படிக்கப் போகும் பிள்ளைகளே...
எட்டாப் பழம் புளிக்குமென
கல்வியை விட்டு எட்ட விலகாதீர்கள்...
என்னைப் போல
நாய்படாப் பாடுபட்டோர்
கதைகள் கேட்டுமா படிப்புக்குப் பின்னடிப்பு!
என்னகாணும் வருங்காலச் செல்வங்களே...
சின்னாள் ஆகிறியா? பெரியாள் ஆகிறியா?
சின்னஞ்சிறு அகவையிலே
முடிவு செய்யுங்கள் - அம்முடிவே
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதை
உங்களுக்கு நினைவூட்டக் காத்திருக்கிறதே!

வெள்ளி, 13 ஜூன், 2014

சிறுவர்களும் பாலியல் படங்களும்

பதினெட்டு அகவைக்கு மேற்பட்டோர் பார்க்கவேண்டிய படத்தில பதினெட்டு அகவைக்குக் கீழ்ப்பட்டோர் நடிக்கிறார்களே!

பார்க்கிற இளசுகள் சிறுவராக இருக்கையில் செய்த சின்னச் செயல்களை மீட்டுப் பார்க்கவா? அல்லது பாலியல் படங்களைச் சிறுவர்கள் களவாகச் சென்று பார்த்துவிடத் துடிக்கும் நிலையைத் தோற்றுவிக்கவா?

எந்தப் பக்கத்தால எண்ணிப் பார்த்தாலும் கெட்ட செயலாகவே எனக்குப் படுகிறது. எந்த அரசும் இது பற்றிக் கவலைப்பட்டதாகத் தகவல் இல்லை. இதனைத் தடுத்தால் அரசுக்கு வருவாயில்லைப் போலும்.

முயன்றவர் வெல்வார்

அச்சம் இருக்கும் வரை
முன்னேற்றத்திற்கு இடமில்லை...
முயற்சி இருக்கும் வரை
பின்னடைவுக்கு இடமில்லை...
தன்னம்பிக்கை இருக்கும் வரை
தோல்விக்கு இடமில்லை...
முயற்சியும் கையுமாக
தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்கள்
வெற்றியை நெருங்கிச் செல்ல
தடைகள் தாமாகவே விலகி
வழிவிடுவதைப் பாருங்களேன்!

செவ்வாய், 10 ஜூன், 2014

பாவலர்களுக்கு ஒளிக்கலாமா?

நிலவைப் பெண்ணாக
உருவகித்தது அந்தக் காலம்
உலவும் பெண்ணை
ஒப்பிடுவது இந்தக் காலம்
பாவலனின் கண்ணில் பட்டதெல்லாம்
உருவகமுமாகலாம் ஒப்பீடுமாகலாம்!

"பாவலர்களின் கண்களில் பட்டுவிடாதே
உன்னை
எப்படியும் ஆக்கி எழுதிவிடுவார்கள்" என்று
சிலர் எச்சரிக்கலாம் - ஆனால்
எண்ணிப் பார்க்க முடியாதளவு
எழுதக்கூடியவர்கள் பாவலர்களே!

எதை, எவனை, எவளை
நாம் எப்படியும் ஒளிக்கலாம்
ஆனால்
அதை, அவனை, அவளை
பாவலன் அப்படியே ஒளிக்காமல்
பாப்புனைந்து வெளிக்காட்ட வல்லான்!

எதையும் உண்டு களிக்காமல்
உண்டு சுவைத்தது போல
பாப்புனைந்து நாவூற வைப்பான்
தன் கண்ணில் படாததையும்
கண்ணில் பட்டதுபோல் எழுதுவான்
தேடலுள்ள பாவலனின் ஆற்றலை
பாப்புனையும் திறனில் பார்ப்பேன்!

தன் கற்பனைப் பார்வையால்
கருங்கல் வேலிக்கப்பால் நடப்பதை
இப்பால் இருந்தே சொல்வான்
எப்பாலும் நடக்கும் என்றாலும்
இக்கணமே எடுத்துச் சொல்வான்
எக்கணமும் அஞ்சாது எழுதும்
பாவலனுக்கு ஒளிப்பதில் பயனேது!

கற்பனை வானில் பறப்பான்
கனிந்த எண்ணங்களைத் தொடுத்து
சொற்சுவை பொருட்சுவை மின்ன
பற்பல பாக்களை ஆக்குவான்
ஆக்கிய பாக்களில் ஒளிந்துள்ள
உண்மையை மெல்லக் கண்டுகளி!


எல்லா வலைப்பூக்களிலும் நானிட்ட புதிய பதிவுகளை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.0hna.com/

ஒரு வரியில எடுப்பு

சிலருக்கு அழகான எடுப்பு (ஆடம்பரம்) முக்கிய தேவையாயிற்று.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். ஆனால், தோல்வியுற்றால் தற்கொலை செய்யக்கூடாது.

கூழுக்கும் விருப்பம்(ஆசை) மீசைக்கும் விருப்பம்(ஆசை)

சவப்பெட்டிக் கடைக்காரர் : கடவுளே! கொஞ்ச நாளாக வணிகம் இடம்பெற மாட்டேங்குது. எங்கட ஆட்களிடையே போரை மூட்டி விடப்பா...

கடவுள் : போரை மூட்டினால் என்னைக் கொல்லுவாங்களே! எனக்கு வேண்டாமப்பா இந்த வேலை...

திங்கள், 9 ஜூன், 2014

வலைப்பூக்களும் வலைப்பதிவர்களும்


நான் 1987 இருந்து எழுத்துலகில் காலடி வைத்ததாலும் 25/09/1990 இலே எனது முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. அதுபோல 1995 இல் கணனியைப் படித்தும் 2010 இலிருந்தே இணைய வழியாக எனது இலக்கியங்களை வெளிக்கொணர முயன்றேன். அப்படியிருந்தும் 2012 இலேதான் வலைப்பூப் பக்கம் தலையைக் காட்டியிருக்கிறேன். இந்த இழி நிலைத் தகுதியோடு மேற்காணும் தலைப்பில் என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிர முனைகின்றேன்.

வலைப்பதிவர்கள் வலைப்பூவை நடாத்தத் தொடங்கியதும் தமது பதிவுகளை இட்டு நிரப்பியதும் முடிந்துவிட்டதாக இருந்துவிட முடியாது. அப்பதிவினை வாசிப்போர் கண்ணுக்குக் காட்டிக்கொள்ள வேணடியிருக்கிறது. அதற்காக லிங்டின், டுவிட்டர், கூகிள், பேஸ்புக் எனப் பல மக்களைய (சமூக) வலைத்தளங்களில் இட்டுப் பரப்புகிறோம். மேலும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்நண்பர்கள், தமிழ்வெளி, இன்ட்லி எனப் பல திரட்டிகளிலும் பதிவிடுகின்றோம். இத்தனையும் செய்த பின்னும் எத்தனை வாசகரைப் பெருக்கினோம் என்றால் மிக மிகக் குறைவே!

வாசகரைப் பெருக்கிக்கொள்ள முடியாமைக்கு வலைப்பதிவர்கள் தான் காரணம் என்பேன். ஏனோ தானோ என்று எப்படியாவது பதிவிட்டால் போதுமென்று இருப்பது, பிற அறிஞர்களின் பதிவை மீள் பதிவு செய்வது, பதிவுகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுதல், பிறரது பதிவுகளிலிருந்து பொறுக்கித் தமது பதிவுகளில் நுழைத்தல் போன்ற குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்.

பொறுப்புள்ள பதிவாரக மிகச் சிறந்த பதிவுகளை ஆக்கிப் பதிவிடலாம். பிறரது பதிவுகளில் இருந்து பொறுக்கிய வரிகளின் பின்னே குறித்த வலைப்பூ முகவரியை இடலாம். பிறரது பதிவை மீள்பதிவு செய்வதைவிட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அறிமுகம் செய்யலாம். எப்படியாயினும் ஏழலில் (வாரத்தில்) ஒரு பதிவு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு பதிவு அல்லது மாதத்திற்கு மூன்று பதிவு என்ற போக்கில் பதிவுகளை இடலாம். இத்தனையும் செய்தால் உங்கள் வலைப்பூ தரமானதாக மேம்படுத்தலாம். ஆனால் வாசகர் எண்ணிக்கை பெருக்கவோ பதில் கருத்துத் (Comments) திரட்டவோ முடியாது என்பேன்.

ஆமாம்! பிறரிடம் எதிர்பாரப்பதை நாமே முதலில் வழங்கினால் முடியும் என்பேன். எடுத்துக்காட்டாக நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற்றவராவார். இதுவரை 891 பதிவர்கள் அவரது தளத்தில் பதிவிட்டுள்ளனர். (சான்று : http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html) அப்படியாயின் அவர் ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நாடித் தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். வலைப்பூ நடத்தும் போது ஏனைய வலைப்பூக்களுக்குச் சென்று அவரவர் சிறப்பைக் கற்றுக்கொண்டு கருத்துப்பகிர வேண்டும். அப்போதுதான் சிறந்த வலைப்பதிவராக முன்னேற வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மணம் திரட்டி ஒன்றே போதும். அதே வேளை கூகிள் பிளக்கர், வேர்ட்பிரஸ் Reading List இல் இணைத்த தளங்களுக்குச் சென்று கருத்துப் பகிர்ந்தால் போதுமென நம்புகிறேன். எப்படியிருப்பினும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப் பகிர வேண்டும். அப்போது தான் எமது வலைப்பூ அறிமுகம் பலருக்குக் கிட்டும். வலைப்பூ பற்றிய நுட்பங்களை அறிய கீழ்வரும் இணைப்பை சொடுக்குக.

வலைத்தள நுட்பம் (திண்டுக்கல் தனபாலன்)

வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். புதிய பதிவர்கள் மூத்த பதிவர்களின் வழிகாட்டலின்படி முன்னேற முயற்சி எடுக்கவும். அப்போதுதான் வலைப்பூக்களூடாக உலகெங்கும் தூய தமிழ் பரப்பலாம்.

சனி, 7 ஜூன், 2014

பொழுதுபோக்குப் பற்றி...


நம்மாளுகள் பயன்மிக்கதாகப் பொழுதுபோக்குவதில்லை. பின் பல தொல்லைகளுக்கு முகம் கொடுப்பர். அப்படி ஒரு நிகழ்வைப் படியுங்க...

கந்தர் : எப்படிப் பொழுது போகுது?

முருகர் : ஒருவர் மாறி ஒருவரைக் காதலிப்பதால்...

கந்தர் : நேரம் வசதியாக அமையுதோ?

முருகர் : ஆளுக்கேற்றால் போல நேரம் ஒதுக்கிறேன்.

கந்தர் : பாதிப்புற்றவர்கள் படையமைத்து உமக்கெதிராகப் போராடினால் ?
முருகர் : எல்லாம் சும்மா என்பேன்...

அந்த வழியால பத்துக் குமரிகள் வந்தார்கள். ஒருத்தி முருகரைக் காட்டி கந்தரிடம் "திருமணமானவரா?" என்று கேட்டாள்.

கந்தர் : அவர் திருமணமாகி ஆண்டுக்கு ஒன்றாக ஆறு பிள்ளைகளைப் பெற்றவராச்சே...

குமரிகள் (முருகரைப் பார்த்து) : "உங்கட மூஞ்சிக்கு எங்களில ஆளுக்கொருவராக ஆறாளைக் காதலிக்க வருகுதோ?" என்று ஆளாளாக தலைதெறிக்கக் கல்லெறிந்தார்கள்.

கந்தர் : அந்த ஆள் பொழுதுபோக்காகக் கதைத்திருப்பார். உதெல்லாம் பெரிதாக எடுக்காதைங்கோ...

குமரிகள் : பொழுதுபோக்கிற்கு நம்மட இளமையே கிடைச்சதெனக் கேட்ட பின் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

கந்தர் (முருகரைப் பார்த்து) : பொழுதுபோக்குப் பற்றி உன்னட்டையெல்லோ படிக்க வேணும்...

முருகர் : தலை வெடித்து ஆறாக ஓடும் செந்நீரை (குருதியை) நிறுத்த வழி பாரடா...

கந்தர் : எல்லாம் சும்மா என்பேன் என்றாய்... இப்ப எப்படித் தோழா?

ஈற்றில் கந்தரும் முருகரும் கணபதி மருந்தகத்திற்கு மருந்து கட்டச் சென்றனர்.

நேற்று, இன்று, நாளை


நேற்று என்பது
முடிந்த கதையல்ல...
வழிகாட்டும் பட்டறிவு
தந்த நாள்!
இன்று என்பது
கரையப் போகும் நாளல்ல...
மகிழ்ந்து வாழக் கிடைத்த நாளே!
நாளை என்பது
வந்த பிறகு
காணவேண்டிய நாளல்ல...
நாளையை நிறைவாக நகர்த்த
நேற்றைய பட்டறிவோடு
இன்றே திட்டமிட்டால் தான்
பொன் நாள்!

கைக்குக் கைமாறும் பணமே - 02

ஈரேழு தீவைக் கொண்டதாலே
'ஈழம்' என்றனர் என்றேன்
பாணன் யாழ் பாடி
பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணம் என்றேன் - அந்த
யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே
எட்டுத் தீவுகள் சொந்தமாமே!

இந்திய-தமிழகமருகே
நடுக்கடலை அண்டியே கச்சதீவாம்
யாழ் கோட்டையைக் கடந்தே
பண்ணைக்கடலும் மண்டதீவுமாம்
தூரத்தே நெடுந்தீவும் நயினாதீவுமாம்
அடுத்து அனலதீவும் எழுவைதீவுமாம்
ஆங்கே பருத்தித்தீவொடு புங்குடுதீவுமாம்
பைங்கிளி என்பாளின்
கடற்கரையூரைச் சுற்றிய தீவுகளாம்!

பைங்கிளியின் வீட்டார்
பிள்ளையாரைக் குப்பிட்டாலும்
இந்துக்கள் ஆனாலும் மீன்பிடித்தே
கடலன்னை போட்ட பிச்சையிலே
வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்ல
பைங்கிளியும் அகவைக்கு வந்தாலும்
மருத்துவராகப் படித்து உயர்ந்தாளே!

பைங்கிளியின் வீட்டுக்குப் பின்னே
ஆங்காங்கே பனைகள் காற்றுக்கு ஆட
அப்பாலே துள்ளிக் குதித்து ஓடி வந்த
அலைகள் வந்து மோதும் கரையாம்
இடத்தாலே கெவி மாதா கோவிலாம்
வலத்தால ஐங்கரன் கோவிலாம்
அண்டையிலே அன்னம்மா வீடும்
அயலுக்க பெருமாள் வீடும்
வீட்டு வாசல் முன்னே
பேரூந்து ஓடும் பெரும் வழியாம்!

கந்தப்புவும் செல்லாச்சியும்
அப்பனும் ஆத்தாளுமாக
பொன்னனும் வேலனும்
பைங்கிளிக்கு அண்ணன்மாராக
பைங்கிளிக்கு வலை போட்ட பொடியள்
அவளின்ர அண்ணன்மாரிட்ட உதைபட
கற்பைப் பேணி மிடுக்காக மின்னும்
பைங்கிளியின் எடுப்புக்கு நிகராக
கடற்கரையூரில் எவளுமில்லையே!
--தொடரும்--


வெள்ளி, 6 ஜூன், 2014

காதலாகும் நேரம்

அவளிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவளுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை ஆண்கள் உலாவுகின்றனர்!
அவனிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவனுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை பெண்கள் உலாவுகின்றனர்!
சொல்ல வரமாட்டேங்குதே என்ற
ஆண்களே... பெண்களே...
உங்கள் உள்ளத்திலே
காதலிக்கத் தோன்றுதே தவிர
காதல் அமையவில்லையே!
நெற்றி முட்ட நேரே
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
ஆணிடமோ பெண்ணிடமோ
சொல்லத் துணிவு வந்த நேரம் தான்
காதல் அமைந்தது (காதலாகியது) என்பேன்!
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சும்மா கேட்டுப் பார்ப்போமென
முன் பின்
அறிமுகம் இல்லாதவரிடம் கேட்டால்
விசர்/பைத்தியம் என்ற பட்டமளிப்புத் தான்
உங்களுக்குக் கிடைக்குமென்பதை
மறந்துவிடாதீர்கள்!

உன் நிலைமை என்ன ஆகும்!

நாளும் நகர
நேரமும் கரைய
நடுவழியில் நம்மாளுகள்...
நிலை தடுமாறினால்
கொஞ்சம் நில்லுங்கோவேன்...
நெஞ்சில் துணிவு வந்தால்
நடையைக் கட்டுங்கோவேன்...
பிழையெனப் பட்டால்
பின்வாங்கலாம் தானே...
சரியெனப் பட்டால்
முன்னேறலாம் தானே...
முடிவே இன்றி
இடைவழியில் நின்றால்
உன் நிலைமை என்ன ஆகும்!

வியாழன், 5 ஜூன், 2014

பணமிருந்தும்...

ஒருவர் : நீங்கள் எப்படி?

மற்றவர் : பில்கேட்ஸ் போல பணக்காரன்!

முதலாமவர் : பில்கேட்ஸ் போல பொதுமக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது செய்கிறீர்களா?

இரண்டாமவர் : இல்லையே...

படிச்சும்...

ஒருவர் : எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?

மற்றவர் : பதினெட்டுப் பட்டங்கள்...

முதலாமவர் : பொதுமக்கள் அதனால் பயன்பெறுகிறார்களா?

இரண்டாமவர் : இல்லையே...

கறுப்புத் தலை

ஒருவர் : என்னண்ணே! மீசை, தாடி நரைச்சும் தலை கறுப்பாய் இருக்கே...

மற்றவர் : முகத்துக்கு மை பூச மறந்திட்டேன்... அதைக்கூடக் காட்டிக் கொடுக்கிறியே...

புதன், 4 ஜூன், 2014

உண்மை

காற்றை எதிர்க்கும்
வலிமை உண்மைக்கே...
ஏனென்றால்
காற்றோடு பறப்பது
பொய்யல்லவா!
கேட்போர் காதருகே
போய்ச் சேரும்
பொய்கள் பெறுமதி இழக்க...
உலகத்தையே
தன் பக்கம் இழுப்பது
உண்மையே!
பொய்கள்
கேட்போரை நாடும்
கேட்போரையே நாட வைப்பது
உண்மையே!
ஈழ மக்கள்
கேட்ட, பரப்பிய பொய்கள்
உலகின் காதுக்கெட்டாமலே
ஈழ மக்களின்
சாவுகள், துயரங்கள் மட்டுமே
உலகின் கண்ணுக்கு
புலப்பட வைத்தது எதுவென்றால்
உண்மையே!
உரக்கச் சொல்லி, உறைக்க எழுதி
பரப்பிய பொய்கள் யாவும்
சாவடைந்து மறைந்து போக
ஊமையாய் உறங்கிக் கிடக்கும்
உண்மை மட்டும்
சாவை அடையாமலே
வாழ்ந்து காட்டும்!

உலகை ஆள

தேர்வு எழுதிய பின்
படித்தது பட்டறிவு!
பட்டறிவு என்பது
வாழ்வுக்கு வழிகாட்டும்
ஆசிரியன்!
படித்துத் தேர்வெழுதித் தேறுவது
படித்தறிவு!
உலகில் முன்னுக்கு வர
பின்னுக்கு நின்று துணைபுரிவது
படித்தறிவே!
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா-  நாம்
உலகை ஆள உதவும்!

செவ்வாய், 3 ஜூன், 2014

பேரூந்து நடத்துனருடன் மோதல்

சிறுவன்:
அண்ணே! அண்ணே!
குண்டுகல்யாணம் இருந்தால்
(இரண்டாள் இருக்கையை
இடம் பிடிக்கும் ஒரு நடிகர்)
ஓர் ஆள் கூலி...
என் அக்காள் இருந்தால்
இரண்டாள் கூலியா...
நடத்துனரே - இது
உமக்கே நல்லாயிருக்கா?

நடத்துனர்:
அட! பிஞ்சுக் குஞ்சு...
உன் அக்காள்
வயிற்றுக்குள்ளேயும்
ஓர் ஆள் இருக்காரடா!

சிறுவன்:
என் அக்காள் வயிற்றில
ஏழு ஆள் நடத்துனரே...
என் அப்பா
ஒளி அலைச் (Scanning) சோதனை
செய்து பார்த்த வேளை
கண்டுபிடிச்சிட்டோமே!

நடத்துனர்:
ஏன் பிஞ்சு!
உன் அப்பா
பெண் பிள்ளை என்றால்
பெத்தவுடனே அழிச்சிடவா?

சிறுவன்:
பெண்ணின் வயிற்றில் இருக்கும்
பிறக்க இருக்கிற குழந்தைக்குக் கூட
உங்களைப் போல நடத்துனர்கள்
கூலி வேண்டாமல் இருக்கவே!

நடத்துனர்:
நீ பிஞ்சு இல்லையடா
பிஞ்சில வெம்பி பழுத்த
பழமடா!

பேரூந்தில் நின்ற பெரியவர்:
நிறுத்தடா...
நடத்தை கெட்ட நடத்துனரே!
தாயாகப் போற பெண்ணுக்கு
நீங்கள் கொடுக்கிற மதிப்பு
இவ்வளவு தானா?
குழந்தைகள் இல்லாமல்
துயரப்படுகிறவங்களுக்குத் தான்
தெரியுமடா
தாயாகப் போறவளுக்கு
கொடுக்க வேண்டிய மதிப்பு!
(யாவும் கற்பனை)

திங்கள், 2 ஜூன், 2014

போட்டியோ போட்டி!

கொதித்துப் பொங்கியெழும்பும்
நெருப்புக் குழம்பான
ஞாயிற்றுக் கதிரை விட
ஞாயிற்றுக் கதிரையே
தான் பெற்றுத் தரும் ஒளி பெரிதென
ஞாயிறு - நிலவு மோதுவதும்
போட்டியோ போட்டி!

இயற்கையின் இயல்பழகு
செயற்கையின் தனியழகு
இரண்டையூம் - பாவலன்
எண்ணிய எண்ணப்படி பாபுனைய
இயற்கையால் அமைந்த
நம்மவூருப் பெண்ணழகுக்கும்    
செயற்கையால் அமைக்கும்
நம்மவூருப் பெண்ணழகுக்கும்
போட்டியோ போட்டி!

இயற்கை உணவோடு
இயற்கை நடைமுறையோடு
வாழும் நம்முறவூகளுக்கும்
செயற்கை உணவோடு
செயற்கை நடைமுறையோடு
வாழும் நம்முறவூகளுக்கும்
நெடுநாள் வாழ்வோர் எவரென
போட்டியோ போட்டி!

படித்துப் பட்டமும் பெற்றோர்
ஒப்புக்குச் சாட்டும் சுட்டி
தம் கருத்தை மெய்ப்பிக்க
பட்டறிவே பெரிதெனப் பெற்றோர்
பட்டதையே சொல்லி வைத்து
தம் கருத்தை மெய்ப்பிக்க
எடுக்கும் முயற்சிகள் எல்லாமே
போட்டியோ போட்டி!

பணப் படைத்தோர் பிள்ளை
முன்னணிப் பள்ளியில் படிக்க
ஏழை வீட்டுப் பிள்ளை
பின்னணிப் பள்ளியில் படிக்க
கையூட்டு வேண்டும் ஆசிரியரிருக்க
ஏழைக்கு எழுத்தறிவித்தவர் இறைவனாவாரென
பாரதி சொன்னபடியுள்ள ஆசிரியரிருக்க
நம்ம நாட்டுப் பிள்ளைகள் படிப்பதும்
போட்டியோ போட்டி!

போட்டிகள் வேண்டும் உறவுகளே...
போட்டியால் வெளிப்படும் பெறுதிகள்
நம்முறவுகளுக்கும் நம்நாட்டுக்கும்
நன்மை அளிக்க வேண்டியே
நாடு, இன, மத, மொழி, இட வேறுபாடின்றி
பங்காளிகள் பங்கேற்கையிலே
நன்மைகள் விதைக்கப்படும் வேளை
போட்டியோ போட்டி!

மறக்கமுடியவில்லை!

பள்ளிக் காலத்தை
மறக்கமுடியவில்லை
பள்ளி ஆசிரியையிடம் அடி வேண்டியதை
மறக்கமுடியவில்லை
பள்ளிக்குப் போகாமல் ஒளித்ததை
மறக்கமுடியவில்லை
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை
மறக்கமுடியவில்லை
அன்பு வைத்த நண்பர்களை
மறக்கமுடியவில்லை
உன்ர மூஞ்சிக்கு ஒரு காதலாவென
நெற்றிக்கு நேரே மறுத்த தோழிகளை
மறக்கமுடியவில்லை
விரும்பிய பொருள்கள் கைநழுவிப் போனதை
மறக்கமுடியவில்லை
விரும்பிய செயல்களை நடாத்த முடியாமையை
மறக்கமுடியவில்லை
விரும்பிய ஆள்கள் பிரிந்தமையை
மறக்கமுடியவில்லை
இல்லாளுடன் சண்டை போட்டதை
மறக்கமுடியவில்லை
கடன் வேண்டிச் சிக்கி அழுததை
மறக்கமுடியவில்லை
தொழில் இன்றி வீட்டில் கிடந்ததை
மறக்கமுடியவில்லை
படிக்காதவனென
பலர் என்னை ஒதுக்கியதை
மறக்கமுடியவில்லை
காசில்லாதவனெனப் பிரிந்த உறவுகளை
மறக்கமுடியவில்லை
இணைந்தால் தொல்லையென
இணையாது இருக்கும் உறவுகளை
மறக்கமுடியவில்லை
இப்படித்தான்
எத்தனையோ நினைவலைகளை
மறக்கமுடியவில்லை
எப்படியிருப்பினும்
எதிர்பார்த்த எல்லாம் கிட்டாது போனால்
எப்போதும் மறக்க முடிவதில்லையே!