Translate Tamil to any languages.

உளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே!

உளநோய் நெருங்காமல் பேணுவோம்.
(We care mental Deceases)

அடிப்படையில் உளநோய் எதனால் ஏற்படுகிறது என்றால் தனிமை தான் அடிப்படைக் காரணம் என்பேன். தனிமைக்காண காரணிகளை அகற்றினால், உளநோய் நெருங்க வாய்ப்பிருக்காது.

தனித்து வாழும் போது தூக்கமின்மை, நிறைவான பொழுது போக்கின்மை காரணமாக உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். அவ்வேளை உளத்தளர்வு, சரியான முடிவு எடுக்க முடியாமை, சூழலுக்கு முகம் கொடுத்து முன்னேறத் தயங்குதல் எனப் பாதிப்புகள் வரலாம். இவை உளநோய் தோன்ற இடமளிக்கும்.


தனித்தும் வாழலாம். ஆனால், 24 மணி நேரத்தில் 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். ஓய்வு நேரத்தை ஆக்க வழிகளில் செலவிட வேண்டும். அன்பு உள்ளங்களின் நட்பு, அணைக்கும் உறவுகள், மதிப்பளிக்கும் ஆள்கள், விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஆள்கள், வலுவான தன்னம்பிக்கை ஆகியன உளநோய் நெருங்க இடமளிக்காது.

நாளை என்ற நன்நாளை எப்படிக் களிப்பது என என்றும் முதல் நாளே திட்டமிடுதல் உளநலம் பேண உதவும். உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால் மட்டும் போதாது, உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் வேறாக்கி நமக்குப் பயன்தரும் நல்லதை முடிவு செய்து பயன்படுத்த முடிந்தாலே நலமான உள்ளம் தான்.

செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்க வழிகாணத் தெரிய வேண்டும். பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். சிக்கல் வருகின்ற போதும் சிக்குப்படாமல் நழுவத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு எல்லாவகையிலும் உள்ளத்தால் உறுதியான நலம் தரும் முடிவுகளை எடுக்க முடியும் என்றால் உளநோய் நெருங்காத உள்ளம் என்று கூறலாம்.

அப்படியாயின், உளநோய் பற்றி நான் சொல்லாமலே நீங்களே உங்களால் புரிந்தது கொள்ள முடியுமே! உள்ளத்தால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வழியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரின் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்ற வாய்ப்பு ஏற்படலாம்.

அது எவ்வாறு நிகழுகின்றது. அதனைத் தெரிந்து கொண்டால் உளநோய் ஏற்படா வண்ணம் எம்மைத் தயார்ப்படுத்தலாமே! அதற்கு அடிப்படையில் உள்ளத்தை மூன்று நிலைகளில் ஆய்வு செய்யலாம்.

நமது உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை (கண்டதும் கெட்டதும் கொடியதும் நடைமுறைக்கு ஒவ்வாத) உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்டி நல்லெண்ணங்களை (சூழலிருந்து நன்மதிப்பைப் பெறக்கூடிய) மட்டும் கருத்திற்கொண்டு பேண வேண்டும். அவ்வாறு கருத்திற்கொண்டு பேணப்படுபவை (அடிக்கடி மீட்டும் பார்க்கும் அல்லது எண்ணி(நினைத்து)ப் பார்க்கும் எல்லாம்) துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind / ஆழ் மனம்) சேமிக்கப்படுகிறது. அவை நமது நன்நடத்தைகளாக வெளிப்படுகிறது.


கீழ்த் தரமான நடத்தைகள், முறைகேடான நடத்தைகள், நடைமுறைக்குப் (சூழ்நிலைக்குப்) பொருந்தாத நடத்தைகள் என மற்றையவரிடம் இல்லாத நடத்தைகள் சிலரிடம் காணப்படலாம். இதற்குக் காரணம் உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்ட முடியாமற் போனதே! அதாவது, உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழுந்த எண்ணங்களுக்கு தீர்வு கிட்டாமையால், அவை துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind / ஆழ் மனம்) இருந்து கொண்டு மேற்காணும் நடைத்தைகளாக வெளிக்காட்டுகின்றது. இவற்றை நடத்தைப் பிறழ்வு எனலாம்.

மேலும், உள்ளத்தை மூன்று கூறுகளாக பகுத்து ஆய்வு செய்யலாம். அதாவது, பசி, பாலியல் போன்ற மகிழ்ச்சியைத் தரும் உணர்வுகளைத் தூண்டும் காரணி இட்(Id) ஆகும். நடைமுறைக்குப் பொருந்தாத எதனையும் தூண்டும் சக்தி இதற்குண்டு. இட்(Id) உணர்வுகளைத் தூண்ட, அதனை அடைவதற்கான வழியை அல்லது தீர்வினைக் கூறுவது நான் என்ற முனைப்பு ஈகோ(Ego) தான். (இட்)Id மகிழ்ச்சியை அடையத் தூண்டும் வேளை, ஈகோ(Ego) அதனை இப்படியெல்லாம் அடைந்திடலாம் என வழியை அல்லது தீர்வினைக் கூறும்.

சூழலில் நமது நன்மதிப்பைப் பேணுவது பற்றியெல்லாம் கவலைப்படாது இட்(Id)மகிழ்ச்சி உணர்வைத் தூண்ட, எக்கேடு கெட்டென (நன்மை, தீமை பற்றி எண்ணாமல்) என்னால் முடியுமென அதனை அடைய வழியமைக்கும் ஈகோ(Ego) இரண்டையும் மீறி உயர்நிலை உள்ளக் கூறு சுப்பர் ஈகோ(Super Ego) செயற்படுகிறது. அதாவது சூழலில் நமது நன்மதிப்பைப் பேணும் வகையில் மக்களாயம் (சமூகம்) ஏற்கும் அல்லது ஒழுக்கத்தைப் பேணும் கட்டுப்பாடுகளுக்கமையை (அதாவது சட்டதிட்டங்கள், சமூக விருப்பு, வெறுப்புகள்) ஈகோ(Ego) காட்டும் வழியை அல்லது தீர்வினைக் கட்டுப்படுத்துகிறது.

இந்நிலையில் ஈகோ(Ego) இற்கும் சுப்பர் ஈகோ(Super Ego) இற்கும் இடையே ஒரு போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. இப்போர் சமநிலையில் முடிவுற்றால் மனித ஆளுமை பேணப்படுகிறது எனலாம். நல்ல நிலையில் உள்ளம் நலமாக இருக்கிறது எனலாம். இப்போரில் ஈகோ(Ego) அல்லது சுப்பர் ஈகோ(Super Ego) வெற்றி பெற்றால் மனித ஆளுமையில் தளர்வு ஏற்படும். அதேவேளை உளநலக் குறைவும் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, அழகான இளம் பெண் ஒருவளை ஓர் இளம் ஆண் காண்கிறான் என வைத்துக்கொள்வோம். அவ்வேளை ஆணின் உள்ளத்தில் இட்(Id) அப்பெண்ணின் விருப்பத்தை அறியத் தூண்டும்; உடனடியாகவே நேரடியாகவே கேட்கலாமென ஈகோ(Ego) இறங்க, ஆட்களுக்கு முன்னாலே கேட்டுப் பாதணி (செருப்பு) அடி வேண்டாமல் தகுந்த சூழ்நிலை (சந்தர்ப்பம்) வரும் போது கேட்கலாமென சுப்பர் ஈகோ(Super Ego) தடுத்துக்கொள்ளும்.

இந்நிலையில் ஈகோ(Ego) வெற்றி பெற்றால் பாதணி (செருப்பு) அடியும் கெட்ட பெயரும் உளப்புண்ணும் ஏற்படலாம். அதேவேளை சுப்பர் ஈகோ(Super Ego) வெற்றி பெற்றால் பாதணி (செருப்பு) அடி கிட்டாது எனினும் வேறொருவர் விரும்பினால் எந்நிலை என்னவாகும் என உள்ளம் நோக நேரிடும். சமனிலையில் ஈகோ(Ego), சுப்பர் ஈகோ(Super Ego) போர் முடிவுக்கு வருவதாயின், இட்(Id) இன் தூண்டலை ஏற்றாலும் அமைய வேண்டுமென இருப்பின் அமையும் தானே என அமைதி பேணலாம். இதனால் உளப் பாதிப்பு ஏற்படாது.

அதாவது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடிந்தால் ஆளுமையுள்ள மனிதர் எனலாம். அதேவேளை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலை இருப்பின் ஆளுமைக் குறைவுள்ள ஆள் என்றே கூறலாம். இதனைச் சரி செய்யக்கூடிய உளக்குறைபாடு எனலாம். உளநல மருத்துவரின் மதியுரைப்படி பயிற்சிகளைச் செய்துவர இயல்பு நிலைக்கு மீளலாம். உளநல மதியுரைஞரின் மதியுரையையும் நாடலாம்.


உளநோய் என்றால் 'விசர்', 'பைத்தியம்' என்று கருதக்கூடாது. அவ்வாறு எண்ணி மருத்துவரை நாடாவிட்டால் இலகுவான உளக்குறைபாடு பெரிய பெரிய உளநோய்கள் ஏற்பட வழி அமைத்துவிடும். இயல்பு நிலையில் ஏனையோரைப் போன்று முடிவு எடுத்தலிலும் நடத்தை மாற்றத்திலும் சற்றுத் தளர்வு காணப்படின் உளநல மருத்துவரை(Psychiatrist) நாடிக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறான உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள்:
நாளுக்கு நாள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் ஓட முயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது நேரம் பந்தடியுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் மிதிவண்டியை மிதியுங்கள்.
நாளுக்கு நாள் யோகாசனம், தியானம் செய்யலாம்.

இவ்வாறான பயிற்சிகள் சுயமுயற்சிகளே! இவற்றை விடச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கத் துணிச்சலை வளர்க்க வேண்டும். இல்லையேல் குறித்த சூழலை விட்டுத் தன்னம்பிக்கையுடன் விலகிப் புதிய சூழலை நாடி புதிய உறவுகளுடன் இணைய வேண்டும்.

அன்பான உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இவ்வாறு நிகழாமல் இருக்க:
குடும்பத்தில் சமநிலையில் எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்.
குடும்பத்திலோ பணித்தளத்திலோ விளையாட்டுத் திடலிலோ பிற எந்தச் சூழலிலும் எவரையேனும் ஒதுக்கி வைத்தல் கூடாது.
பிறரது உள்ளம் நோகும் படி எதையாவது செய்துவிடாதீர்கள்.
ஒதுங்கும் உள்ளங்களைக் கூட அன்பாலே கட்டிப்போட்டு சூழலுக்குள் உள்வாங்க வேண்டும்.
சூழலில் நிகளும் எந்த நிகழ்விலும் ஒதுங்கியுள்ள உறவுகளை உள்வாங்கி இயல்பு நிலைக்கு முகம் கொடுக்க வைக்கவேண்டும்.

இதற்கு மேலும் இயல்பு நிலையில் சூழலை விட்டு ஒருவர் ஒதுங்கி இருப்பாராயின் அல்லது எல்லோரிடம் இருந்தும் ஒருவர் வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டிருப்பாராயின்; அவருக்கு உளநோய் இருப்பதாகக் கருதி உளநல மருத்துவரி(Psychiatrist)டம் காட்டுங்கள். எப்படியாயினும் உளநல மதியுரைஞரி(Counsellor)டம் காட்டவேண்டாம். ஏனெனில், குறித்த ஆளுக்கு "உடல் நோயா? உள நோயா?" என்பதை உளநல மருத்துவரே(Psychiatrist) முடிவு செய்வார்மருத்துவர் அனுதித்தால் மட்டுமே மதியுரைஞரை(Counsellor) நாடலாம்.

ஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு. எவரையேனும் 'விசர்', 'பைத்தியம்' என்று ஒதுக்கி வைக்காமல் உளநோய் முற்றவிடாமல் தொடக்கத்திலேயே சரி செய்யக்கூடிய உளக்குறைபாடுகளை மருத்துவரி(Psychiatrist)டம் அல்லது மதியுரைஞரி(Counsellor)டம் காட்டிக் குணப்படுத்த முன்வாருங்கள்.

ஒருவர் செயலிழக்க உடன்பட்டால் நீங்கள் இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கீறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒருவரின் உளநோயைக் குணப்படுத்தி இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்காமல் குறித்த ஆளின் வளத்தை நாட்டுக்கும் உலகுக்கும் பயன்படுத்த நல்வழி செய்யுங்களேன். இதனால் நமது சூழலில் உளநோயாளர்களை இல்லாமல் செய்யலாம். அதேவேளை நாட்டின் வருவாயையும் பெருக்கலாமே!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(Health is Wealth)


நோய்களுக்கு
தொற்றுக் கிருமிகள் தான்
காரணம் என்பீர்!
உள்ளமும் உடலும்
உண்ணும் உணவும்
சுற்றமுமே
நோய்களுக்குக் காரணம் என்பேன்!

குழந்தைகள், சிறுவர்கள் மகிழ்வாக வாழ; பெற்றவர்கள் தான் அவர்களின் விருப்பு, வெறுப்பு அறிந்து செயற்பட வேண்டும். இலகுவில் நோய்த்தொற்று இவர்களில் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெற்றோர் இவர்களது உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

பதின்ம அகவை இருபாலாரும், இக்கால கட்டத்தில் உள நோய் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது. அதாவது, பள்ளிக் காதல் படலை வரை; பருவக் கவர்ச்சி படுபாதாளம் வரை என்பதை உணர்ந்து இளமையைப் பலமாகப் பேணி, நலமாக வாழ்ந்தால் ஏமாற்றங்களும் வராது, உளநோய்களும் நெருங்காது. பொதுவாக இளமை ஊஞ்சலில் ஆடுவோர் சிற்றுண்டி, புகைத்தல், மது அருந்துதல், வேடிக்கை அல்லது களியாட்ட நிகழ்வுகள் எனப் பணம் செலவழித்து நோய்களை வேண்டிச் சேகரித்தல் தான் செய்கின்றனர்.

திருமணம் செய்ய முன் இளசுகளின் பாலின நாட்ட ஈடுபாடு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லையை மீறும் இணையர்களின் செயல் உயிர்கொல்லி (எயிட்ஸ்) நோய்க்கு இடமளிக்கும். மறுமணம், பல திருமணம் செய்தலும் நோய்த் தொற்றுக்கு உதவலாம். பிரிந்தவர்கள் இணைவதாலும் பிரிந்தவரை இணைத்து வைப்பதாலும் மகிழ்வு கிட்டாமல் உள நோய்கள் தோன்ற இடமுண்டு.

சாவு இழப்பு என்பது இயற்கை என்றும் ஏனைய இழப்புகளை உழைத்து மீட்கலாம் என்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால் உள நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வருவது இயல்பு. ஆயினும், அதிக மகிழ்ச்சியும் அதிக துன்பமும் பல நோய்களுக்குக் காரணமாகும். வாழ்க்கை என்பது வெற்றியல்ல, அது ஒரு போராட்டம். எனவே துன்பங்களைக் களைந்து, மகிழ்ச்சியோடு வாழ முயற்சி செய்ய வேண்டும்.

நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதே உண்மையான மகிழ்வான வாழ்வாகும். துன்ப, துயரங்களைத் தூக்கி வீசி மகிழ்வான வாழ்வமைக்க வேண்டிய தீர்வுகளை எம்மால் வழங்க முடியும். பொதுத் தீர்வுகளாகச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் காணும் சூழல், உங்கள் எண்ணத்தில் எட்டாத தீர்வுகள் சிலவற்றைப் படித்துப் பாருங்களேன்.

கல்வியின் தொடக்கம் புளிக்கும்; முழுமையான கல்வி இனிக்கும். இதனடிப்படையில் பட்டறிவு பெற்றவர் பலர் இருக்கலாம். புதியவர்கள் இது பற்றி ஆய்வு செய்தால் படிப்பதற்கான பின்னூட்டி எதுவென்று புரியும். படிக்கின்ற காலத்தில் படிப்பில பிடிப்பில்லாமல் போகவே மாணவர் கெட்ட வழிகளில் நடைபோட முயலுகின்றனர். பின்னைய நாள்களில் மாணவர் நெறி கெட்டுப் போக இதுவே வழியாகின்றது.

அரச, தனியார் நிறுவனப் பணி அல்லது சுயதொழில் முயற்சி ஏதாவது ஒன்றில் தன்னை ஈடுபடுத்தி, வருவாய் ஈட்டவும் தேட்டக் கணக்கில் வைப்பில் வைத்திருக்கவும் தவறுகின்றவர்களே வாழ்க்கையில் பல பின்னடைவுகளைச் சந்திக்கின்றனர். காதல் என்ற போர்வையில் இளையவர் வழி தடுமாறிச் செல்வதால் பின்னைய நாள்களில் பெரும் விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

மணவாழ்வைத் தெரிவு செய்தவர்களில் சிலர் சாவைக் கூட நாடுகின்றனர், இல்லையெனில் துன்ப, துயர வாழ்விலேயே காலம் கடத்துகின்றனர். இதற்கு அன்பில்லாமை, பாலியல் உறவில் நிறைவு அடையாமை, ஒருவரை ஒருவர் அடக்க முனைதல் எனப் பல சாட்டுதல்களைக் கூறலாம். இதன் விளைவாகக் குழந்தையின்மை, குறைந்த ஆயுள், பிள்ளைகள் சீர் கெட்டுப் போதல் எனப் பல ஏற்படலாம். குழந்தை வளர்ப்பில் அன்பு காட்டாமை, அதட்டி வளர்த்தல் போன்றன பின்னைய நாள்களில் பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலகுவதற்கு வழி விடுகின்றன.

நம்மாளுக்கு முதுமை நெருங்க அச்சம் (பயம்) தானாகவே வந்து சேரலாம். அவ்வச்சம் (அப்பயம்) காரணமாகப் பல நோய்கள் முதியோரை நாட, அவர்களது ஆயுள் குறைய வாய்ப்பு ஏற்படுகின்றது.

மனித வாழ்வில் பிறப்புத் தோடக்கம் இறப்பு வரை ஒவ்வொருவரும் விட்ட தவறுகள் ஏதோ ஒரு உளப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இது பல நோய்களுக்கு அடிப்படை ஆகின்றது. பலரது நோய்களை மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமைக்கு இதுவே காரணமாக அமைகின்றது.

எனவே தான் உளநல வழிகாட்டலும் மதியுரையும் உளப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.

பொதுவாக நோயின்றி வாழப் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்.
1) சுத்தமான சுழல்
2) வழமையாக உண்ணும் உணவு
3) நலமாக உள்ள உடல் உறுப்புகள்
4) மகிழ்வான உள்ளம்

வருமுன் காப்பது நலம்”, ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்பன நோயின்றி வாழ மேற்கூறிய காரணிகளை இயல்பாகப் பேணுவதற்கு வழிகாட்டுகின்றன.

உளநல மதியரைஞர்கள் உள நோய்களைக் குணப்படுத்தப் பின்வரும் வழிகளைப் பாவிக்குமாறு கூறுகின்றனர்.
1) வழமையான நடை (நடத்தல்)
2) வேகநடை (நடத்தல்)
3) கைகளை வீசி நடத்தல்
4) மெதுவாக ஓடுதல்
5) துள்ளிக் குதித்தல் அல்லது கயிறடித்தல்
6) ஈருளிகளை மிதித்தல் (சைக்கிள் ஓடுதல்)
7) யோகாசனம் செய்தல்
8) தியானம் செய்தல்
9) மூச்சுப் பயிற்சி செய்தல்
10) சிந்திக்கத் தூண்டும் (மூளைக்கு வேலை தரும்) நகைச்சுவைகளைக் கூறிச் சிரித்தல்
11) உள மகிழ்வைத் தூண்டும் வகையிலான செயல்களைச் செய்தல் (நல்ல நண்பர்களுடன் கதைத்தல், இறைதொண்டு செய்தல், மக்கள் தொண்டு செய்தல் என்பவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்)

அமெரிக்காவில் இருந்து தான் உளநல வழிகாட்டலும் மதியுரையும் பிற நாடுகளுக்குப் பரவியுள்ளதாம். அங்கு தான் உளப் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாம். மதமாற்றமும் கூட அமெரிக்காவில் இருந்து பரவியிருக்கலாம். மதங்கள் உள்ளத்தை (மனத்தை) ஆற்றுப்படுத்தி உடல் நலம் பேண வழிகாட்டுகின்து. எனவே மதம் மாறினால் உள்ளமும் உடலும் நலமாகும் என்பவர்களை நம்ப வேண்டாம். ஏனெனில் எல்லா மதங்களும் ஒரே உண்மையை ஒட்டித் தான் அமைந்துள்ளது.

நம்மூர்ல நம்ம ஓரிரு பழங்கள் (கிழங்கள்) "மனம் ஒன்று சுத்தமானால் மந்திரம் ஓதத் தேவையில்லை" என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதாவது, உள்ளம் சுத்தமாக இருந்தால் இறைவனைப் பாடி வழிபடத் தேவையில்லை எனலாம். உண்மையில் சுத்தமான உள்ளத்தில் (இறைவன் ஒருவனையே நினைக்கின்ற உள்ளம் (மனம்) சுத்தமானது.) தான் இறைவனே குடியிருக்கிறான் என மெய்ஞானம் கூறுகிறது.

பொதுவாக கூறின் அடுத்தவர் பக்கம் தலையை ஓட்டாமல், தன் பக்கத்து நிலையை எண்ணுதல், கருத்திற் கொள்ளல் போன்றன சுத்தமான உள்ளத்தைப் பேண உதவும். மாற்றாருடன் ஒப்பிடுவதை விட சுய மதிபீட்டை மேற்கொள்வது சுத்தமான உள்ளத்திற்கு அழகு.


உளவியல் நோக்கில் நேர் எண்ணம் (Positive Thoughts), நேர்மறை எண்ணம் (Positive Mental Attitude) கொண்ட உள்ளம் சுத்தமானது. தடைகளைக் கடந்து வெற்றி நடைபோட மறை எண்ணம் (Negative Thoughts) உதவலாம். அழுக்கான உள்ளத்திலே எதிர்மறை எண்ணம் (Negative Mental Attitude) தான் மலிந்து இருக்கும்.

சுத்தமான உள்ளம் பேண உளக்கூறுகளான உணர்வுகளைத் தூண்டும் காரணி இட்(Id), நான் என்ற முனைப்பு ஈகோ(Ego), உயர்நிலை உள்ளக் கூறு (Super Ego) ஆகியவற்றின் முகாமைத்துவம் தேவைப்படுகிறது. அதாவது ஈகோ(Ego), சுப்பர் ஈகோ(Super Ego) ஆகியவற்றின் செயற்பாடு சமனிலையில் பேணப்பட வேணும். பொதுவாகக் கூறின் மக்களாய (சமூக) விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப தம்மைத் தயார்படுத்துவதும் அதற்கேற்ப முடிவு எடுத்தலுமாகும்.

நமது உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்டி நல்லெண்ணங்களை மட்டுமே பேணுவதால், அவை துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind ஆழ் மனம்) சேமிக்கப்பட்டு நன்நடத்தைகளாக வெளிப்படுகிறது. இவ்வொழுங்கு மீறப்பட மனித நடத்தையில் மாற்றம் ஏற்படும். அவ்வேளை உள்ளத்தில் அழுக்குத் தான் படியும்.

சுத்தமான உள்ளம் பேண மகிழ்ச்சி தானாகவே வரும். உடலுறுப்புகளுக்கு வேலை கொடுக்க (உடற்பயிற்சி செய்ய) அவை நலமாகச் செயற்படும். வழமைக்கு மாறான உணவுகளை உண்பதால் சமிபாட்டுச் சிக்கல் ஏற்பட, நோய்களை ஏற்படுத்தலாம். அதில் கவனம் வேண்டும். வாழும் சூழல் சுத்தமானதாக இருக்க வேண்டும். அமைதியான (அலறல், இரைச்சல் அற்ற இனிமையான இசையுள்ள), சுத்தமான (குப்பை, கூழங்கள், நீர் தேங்கும் இடங்களற்ற) சூழலில் தான் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்காது. இத்தனையும் ஒழுங்காக இருந்தால் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று சொல்லிக்கொண்டே வாழலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!