Translate Tamil to any languages.

செவ்வாய், 27 ஜூன், 2017

உறவுகளை விலைபேசும் தொலைபேசிகள்!



எனது இல்லாளின் இளைய தங்கையின் இனிய மகள் அம்றிதா சுவிஸில் நிகழ்ந்த எழுச்சிக் குயில் 2017 நிகழ்வில் பாடி 'எழுச்சிக் குயில் 2017 (Title Winner)' என வெற்றி பெற வைத்த பாடலைத் தங்களுடன் பகிருகிறேன்.


தொலைபேசி உறவுகள் வந்தன...
குடும்ப உறவுகள் முறிந்தன...
காதலியைக் கைவிடலாம்
கைபேசியை கைவிடலாமோ?
இல்லாளை விட்டுப் பிரியலாம்
நடைபேசியை விட்டுப் பிரியலாமோ?
பிள்ளையைப் போட்டு உடைக்கலாம்
திறன்பேசியைப் போட்டு உடைக்கலாமோ?
என் இனிய உறவுகளே! - இன்று
எம்மவருக்கு எதில் கவனம் வேண்டும்
நல்லுறவைப் பேண நடைபேசி என்றால்
நல்லுறவைப் பேணாத நடைபேசி எதற்கு?
விடை காண முயன்றீரா? - இல்லையெனின்
கிடைத்த வாழ்வைத் தொலைப்பீரா?
---------------------

இந்தளவு நாளாக அவனைக் காதலிச்ச இவள், இப்ப ஏன் அவனைக் காதலிக்க மாட்டேன் என்கிறாள்?

அன்றொரு நாள் ஏழு மணி இரவில, நடைபேசியைத் தேடி அவன் ஓடி மறைய இவள் துயரப்பட்டாளாம்.

ஏன் துயரப்பட்டவளாம்? ஏதாச்சும் ஆச்சோ?

நடைபேசியைத் தேடி ஓடுறவனைக் காதலிச்சால், தன் நிலை என்னவாகுமென அஞ்சுகிறாள்...
---------------------

இஞ்சாருங்கோ... கொஞ்சம் இஞ்ச வாங்கோவேன்...

என்னது... கொஞ்ச வாவோ...

இல்லையங்கோ... சுந்தரனும் சுந்தரியும் பிரிஞ்சிட்டினமாம்...

என்னவாம் நடந்தது?

விழுந்த கைபேசியை எடுக்கிறேனென்று கையிலிருந்த கைக்குழந்தையை விழுத்திப் போட்டானாம் (சுந்தரன்)
---------------------

என்னங்க அவரு பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டிட்டு குதிக்கால் தலையில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறாரு!

அதுவா! அவரது திறன்பேசியை (Apple Phone S8+) அங்கே கைநழுவ விட்டிட்டாராம். அதையெடுக்க ஓட்டம் பிடிக்கிறாராம்.
---------------------

விரும்பிய எல்லாம் அடையவே
கிடைத்த வாழ்க்கை இருக்கிறது!
நாம் விரும்பியதை அடைய - எமக்கு
கிடைத்த வாழ்வில் வசதியுண்டோ?
எண்ணிப் பாருங்க உறவுகளே!
உறவுகளே உள்ளம் கெட்டு
பட்டு நொந்து வீழ்வதால்
வாழ்வில் முன்னேற இடமுண்டோ?
வீரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள் - அது
வரவுகேற்ப செலவு செய் என்பதற்கே!
நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம்
அடித்துச் சென்றதாக இருக்கக் கூடாதாம் - அது
உண்மையான உறவுகளை விட்டிட்டு
புதிய உறவுகளை நாடாதே என்றணர்த்தவே!
கல்வி, காதல், திருமணம், குடும்பம், வருவாய்,
செலவு உடன் அன்பும் உறவும் ஒழுங்காக
பேணத் தவறினால் வாழ்வு என்னவாகும்?
நடைபேசியால் சீரழியும் குடுப்ப வாழ்வை
எண்ணிப் பார்த்துச் சீராக்கினால் மகிழ்ச்சியே!

செவ்வாய், 20 ஜூன், 2017

நகைச்சுவையாக ஒரு செய்தி!

(இப்பதிவில் வரும் 'நீ', 'நான்' என்ற இருவரும் நானே! எனது பதிவை விளங்க வைக்க அப்படி எழுதியுள்ளேன்.)
நீ:
என்னங்க... அவர் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசினாலும் அழுமூஞ்சியாகவே இருக்கிறார்?

நான்:
நகைச்சுவையாகப் பேசிறவருக்கும் நகைச்சுவையாக எழுதிறவருக்கும் பின்னால் சொல்ல முடியாதளவு துயரங்கள், துன்பங்கள் இருக்குமே!

அந்தத் துயரங்கள், துன்பங்கள் எல்லவற்றையும் மறைக்கத் தானே
இந்த நகைச்சுவைப் பேச்சும் எழுத்தும் என்பேனே! - அப்படி
நான் சொல்ல வில்லை!

நீ:
அப்ப யாரு சொன்னாங்க...

நான்:
முன்னணி நகைச்சுவைப் படைப்பாளியோ நகைச்சுவை நடிகரோ சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த ஆள் எவரென்று சொல்ல முடியல...

நீ:
அப்ப எதைத் தான் சொல்ல வாறிங்கள்...

நான்:
நான் பணமின்றி இருந்த வேளை
என்னை விரும்ப எவரும் நெருங்க வில்லை...
நான் பிச்சைக்காரனாக இருந்த வேளை
என் வீட்டு நாயும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை...
நான் வேலையின்றி இருந்த வேளை
என்னை மணமுடிக்க மறுத்துப் பலர் ஓடி மறைந்தனர்...
நான் பணக்காரனாக இருந்த வேளை
என்னைக் காதலிக்கப் பலர் பின் தொடர்ந்தனர்...
ஆனால்,
நான் பிச்சைக்காரனாக இருந்த வேளை
சத்தியபாமா என்றொருத்தி
என்னைக் கட்டிப் போட்டாள் என்றதும்
(அட, நான் அவளுக்கு
மஞ்சள் கயிறு கட்டியதைச் சொன்னதும்)
உந்தக் கிழவன் எமக்கு வேண்டாமென
எந்தன் பணத்தை விட கற்புப் பெரிதென
(ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
எல்லையை மீறும் ஆண்களுக்கும்
கற்பில்லையே!)
குதிக்கால் தலையிலடிக்க ஓட்டம்பிடித்தனரே...

நீ:
எப்படியோ, உங்கள் கிறுக்கல் பரவாயில்லை. ஆனால், நீங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லவில்லையே!

நான்:
"பணமில்லை என்றால் - உன்னை
உன் வீட்டு நாயும் திரும்பிப் பாராது...
பணமிருக்கு என்றாலும் - உன்னை
காதலிக்க விரும்புறவளும் கூட - உனக்கு
கற்பில்லை என்றால் - உன்னை
காதலிக்க மாட்டாளே! - இந்த
உண்மையைத் தானே - எந்த
ஆண்களும் உணரத்தானே வேணும்!" என்ற
செய்தியைத் தானே சொல்ல வந்தேன்!

நீ:
அப்ப பெண்ணுக்கு மட்டும்
கற்பு உரித்தல்ல - இப்ப
ஆணுக்கும் கற்புத் தேவை!

நான்:
கற்பு என்பது ஒழுக்கம்
அது
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவானதே!
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற
எல்லையை மீறாதவர்கள்
கற்புள்ள
ஆணும் பெண்ணுமே!

நீ:
நகைச்சுவையாக... என்று சொல்லி "கற்பு" என்று கிறுக்கிறியே!

நான்:
கற்புள்ள பெண்ணின் பெற்றோர், அவருக்கு பெண் கொடுக்க மாட்டார்களாமே!

மாப்பிள்ளை முதற் பெண்ணை மணமுறிப்புச் (விவாகரத்துச்) செய்தவராமே!

நீ:
என்னண்ணே! எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே!

நான்:
முதலில விளங்காது, கொஞ்சம் சிந்தித்தால் விளங்கும். அது தான் நகைச்சுவை!

வெள்ளி, 16 ஜூன், 2017

மகிழ்வான மணநாள் வாழ்வு


தொடர்கதை ஒன்றைப் படித்து முடித்தது போல...
திரைப்படம் ஒன்றைப் பார்த்து இருப்போம்!
சிறுகதை ஒன்றைப் படித்து முடித்தது போல...
குறும்திரைப்படம் ஒன்றைப் பார்த்து இருப்போம்!

பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து என
ஒரு குடும்ப வாழ்வையே வெளிப்படுத்தும்
தொடர்கதை, திரைப்படம் போலன்றி
குறுகிய கால வாழ்வினைப் பொறுக்கியே
சிறுகதையும் குறும்திரைப்படமும் வெளிப்படுத்துமே!

மின்வெட்டு நேரத்திற்குள்ளே நடந்து முடிந்ததை
சிறுகதையும் குறும்திரைப்படமும் சொல்லி முடித்தாலும்
கதையில் வரும் கதாபாத்திரம் போல
திரைப்படத்தில் வரும் நடிப்புப் பாத்திரம் இருக்குமே!

என்னடா! நான் இப்படி சொன்னேன்டா
என்றடி போட எப்படியோ முயல்வீரோ
அப்படி "மகிழ்வான மணநாள் வாழ்வு" என்ற
குறும்திரைப்படத்தைப் பார்த்த பின் - எனது
ஒப்பீட்டுக் கருத்தை ஒருக்கால் எண்ணிப்பாரும்!


இந்தக் குறும்திரைப்படத்தைப் பலரும் பார்த்தனராம்
இந்தக் குறும்திரைப்படத்தில இரண்டு மொழிகளாம்
பேச்சு மொழியை விட உடல் மொழியால நகர்ந்த
நடிப்புப் பாத்திரம் நன்றே வெளிக்கொணர்ந்த
வாழ்க்கையில் புரிந்துணர்வு வேண்டுமென்ற உண்மையை
இயல்பாய் வெளிப்படுத்தும் மின்னூடகம் என்றனராம்!

புதன், 14 ஜூன், 2017

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


இனிய வலையுறவுகளே! இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்களேன். இதனை ஆக்கியவர் தமிழ் குடிமகன் என்ற நண்பர். அவரது விரிப்பைக் கீழே தருகின்றேன்.


தமிழ் குடிமகன் சா.சிவபாலன்,
பெரம்பலுர் மாவட்டம்,
பெரம்பலுர், 621212.
opelcitizensiva@gmail.com
00919787485701
அவரது, கூகிள் இணைப்பு:
அவரது, பாடல்களுக்கான இணைப்பு:



"ஐயா கொஞ்சம் நில்லு-அம்மா
நான் சொல்றதைக் கேளு" என்ற பாடல் ஊடாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வருகின்றார். அதாவது, துட்டுக்கு ஓட்டுப் போடுவது சரியா? பிழையா? என அலசுகிறார். இப்படி இருந்தால் தமிழ்நாடு எப்படி இருக்குமெனச் சிந்திக்க வைக்கிறார்.

ஒவ்வொருவரது ஓட்டு (Vote) உம்
ஒரு நாட்டின் எதிர்காலத்தை
நலம் பெறவோ கெட்டுப் போகவோ
மாற்றவல்ல சக்தி (Power) - அதை
சரியாகப் பாவித்துப் பயனீட்டாவிட்டால்
எங்கள் நாளைய தலைமுறை
நடுக்கடலில் வீழ்ந்து சாவதா?
இதுவே
என் (யாழ்பாவாணனின்) கேள்வி!

தாங்களும் அவரது பாடலைக் கேட்டுப் பகிருங்கள். அவரது படைப்புகள் உலகெங்கும் மின்னத் தங்கள் கருத்துகள் ஊக்கம் தருமென நம்புகிறேன்.

ஞாயிறு, 11 ஜூன், 2017

சுவை படப் பட்டெனப் பதில் போடுங்களேன்!

தமிழ் இனிய மொழி என்றால் - தமிழர்
உயர்ந்த பண்பாட்டைப் பேணும் இனமென்று
உலகத்தார் சொல்ல வேண்டும்!
ஒவ்வொரு தமிழரும்
தமிழ்ப் பண்பாட்டைப் பேணும்
நல்லவர்களாக வாழ வேண்டும்!
எமக்கிடையே
தீயவெண்ணங்களோ தீயவுறவுகளோ
வேண்டவே வேண்டாம்!

தங்களைப் பற்றிச் சொல்லிப் போட்டு, மாற்றாரிடம் கேட்கும் பண்பாட்டைப் பேணும் நல்லெண்ணங்களால் நல்லுறவுகளைக் கூட்டலாம். ஆறறிவுள்ள ஒவ்வோர் ஆளும் நல்லுறவுகளைப் பெருக்கி, தீயவுறவுகளைப் பிரித்து, உள்ளத்தில் தோன்றும் தீயவெண்ணங்களைக் கழித்து நல்லாள்களாக வாழவேண்டும் என்பதே எனது வழிகாட்டல்.

முதலில் என்னைப் பற்றிச் சொல்லிப் போட்டு, உங்களிடம் கேட்கும் பண்பாட்டைப் பேணும் என்ணெண்ணத்தை தொடக்கி வைக்கிறேன். நீங்கள் என்னுடன் நல்லுறவுகளை வைத்துக்கொள்வீர்களென நம்பி, உங்கள் நல்லெண்ணங்களைப் பகிருவீர்களென எனது கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றேன்.

எனது பள்ளிக்கூட வாழ்க்கையில்
கூட்டல் - ஒவ்வொரு பள்ளிக்கூடமாகப் ஏறி இறங்கினேன்.
பெருக்கல் - தலைக்குள் அறிவு பெருகி இருக்கலாம்.
கழித்தல் - சில கெட்டதைக் கழிக்க மறந்திட்டேன்.
பிரித்தல் - பல பள்ளி நட்புகள் கெட்டதைக் கழிக்க மறந்தமையால் பிரிந்தனர்.
அதுபோல
தங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது இளமை வாழ்க்கையில்
கூட்டல் - படித்த, பட்ட அறிவை கூட்டினேன்.
பெருக்கல் - நல்ல நட்புகளைப் பெருக்கினேன்
கழித்தல் - கெட்ட நட்புகளைப் கழித்தேன்
பிரித்தல் - படித்தது போதாதெனப் பலர் பிரிந்தனர்
அதுபோல
தங்கள் இளமை வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது தொழில் வாழ்க்கையில்
கூட்டல் - வருவாயைக் கூட்டினேன்.  
பெருக்கல் - நன்மதிப்பைப் பெருக்கினேன்.
கழித்தல் - களவுக்கு நெருங்கியோரைக் கழித்தேன்
பிரித்தல் - வருவாய் போதாதெனக் காதலிகள் பிரிந்தனர்.
அதுபோல
தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது குடும்ப வாழ்க்கையில்
கூட்டல் - இனிய இல்லாளைக் கூட்டினேன்
பெருக்கல் - இருவரும் அன்பைப் பெருக்கினோம்
கழித்தல் - வீண் செலவுகளைக் கழித்தோம்
பிரித்தல் - ஏழை என்பதால் சுரண்டுவோர் பிரிந்தனர்
அதுபோல
தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

எனது இணைய (Internet) வாழ்க்கையில்
கூட்டல் - நல்லன வாசித்தலைக் கூட்டினேன் 
பெருக்கல் - அறிவாளி நண்பர்களைப் பெருக்கினேன்
கழித்தல் - கெட்ட பரப்புரைகளைக் கழித்தேன்
பிரித்தல் - ஏமாற்றுத் தொடர்பாளர்கள் பிரிந்தனர்
அதுபோல
தங்கள் இணைய (Internet) வாழ்க்கையில் ஏற்பட்ட கூட்டல், பெருக்கல், கழித்தல், பிரித்தல் பற்றிக் கூறுவீரா?

நானொரு உளநல மதியுரைஞராக (Counsellor) இருக்கிறேன் என அறிந்து உளநோய், உடல்நோய் வராமலிருக்க வழிகூறு என்றால் நல்ல பண்பாட்டைப் பேணுதலே வழி என்பேன்.
நீங்கள்
பாட்டி மருத்துவம், வீட்டு மருத்துவம், கை மருத்துவம் என எதிலும் இறங்காமல் உடனடியாக மருத்துவரை நாடலாம்.
அளவாக மூன்று வேளை உடனுக்குடன் சமைத்து ஆறவிட்டு உண்ணலாம்.
நாற நாற வியர்வை வெளியேற உடற்பயிற்சி செய்யலாம்.
ஆகிய மூன்றையும் பின்பற்றினாலும் கூட நல்ல பண்பாட்டைப் பேணத் தவறினால் (அதாவது தீயவெண்ணங்களோ தீயவுறவுகளோ உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேண உதவாது.) உளநோய், உடல்நோய் வரலாம்.

எனவே தான், ஒளிவு மறைவின்றி எமது எண்ணங்களை வெளிப்படுத்திய பின் மாற்றாரிடம் எமது எதிர்பார்ப்பைக் கேட்கும் பண்பாட்டை உங்கள் முன் வைக்கின்றேன். (எடுத்துக்காட்டாக மேலே எனது பதிலை முன்வைத்த பின் ஐந்து சூழலில் நான்கு கேள்விகளை உங்களிடம் கேட்டிருக்கிறேன்.) இப்பண்பாட்டை வெளிப்படுத்தும் வேளை எம்மிடம் தீயவெண்ண அல்லது தீயவுறவு உள்நோக்கமில்லை என அறிந்து நல்லெண்ணங்களைப் பகிரவோ நல்லுறவுகளைப் பேணவோ எவரும் முன்வரலாம். இதனால் எமதும் ஏனையோரதும் உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேண முடியும். அப்படியாயின் உளநோய், உடல்நோய் வராமலிருக்கும்.

"மனம் ஒன்று சுத்தமானால் மந்திரம் ஓதத் தேவையில்லை" என்றால் என்ன தெரியமா? "உள்ளத்தைச் (மனத்தைச்) சுத்தமாகப்/ தூய்மையாகப் பேணினால் ஆண்டவனே உங்கள் உள்ளத்தில் (மனத்தில்) இருப்பார். பிறகேன் ஆண்டவனை வழிபட வேண்டும்." என்று பொருள் கொள்ளலாம். அதாவது, "உள்ளம் (மனம்) ஒன்று சுத்தமானால் நோய்கள் வந்து தொற்றுவதில்லை" என்று சொல்லி முடிக்கின்றேன்.

வியாழன், 8 ஜூன், 2017

தமிழே துணை!


நான் எழுத எண்ணிய
பா / கவிதை
எனக்குக் கிட்டாமல் போகவே
என் உள்ளத்தில் ஏதோ ஒண்ணு
பாவாக /கவிதையாக
வந்து நின்ற வேளை - நானும்
எழுதி முடிக்க - அது
நல்ல பாவாகவே /கவிதையாகவே இருந்தது!

காதலைப் பற்றி எழுத
எண்ணிய வேளை தான்...
பா / கவிதை வரவில்லை - ஆனால்
உள்ளத்தில் உருண்டதோ
கொடுப்பனவுகள் (சீதனம், ஆதனம்) தான்!

"காணி, பணம், பொன்நகை என
அதிகமாக நீட்டுவோர் நாடினால்
தம்பி தாலி கட்டுவான்...
பெண்ணின் நிலை
தாலி கட்டிய மறுநாளே
தம்பிக்குத் தெரிய வருமே!

அதை, இதை, உதையென
சீர் வரிசை கொடுத்துப் போட்டு
பெறுமதியில்லா பெண்ணையும் தள்ளிப்போட்டு
பெண்ணைப் பெற்றவர்கள் மறைய
கொடுப்பனவுகளை (சீதனம், ஆதனம்) நம்பிய
தம்பி தான் திண்டாட்டம்!

கொடுப்பனவுகளை (சீதனம், ஆதனம்) நீட்டமுடியாத
எல்லாமும் நிறைந்த புன்நகை சிந்தும்
ஏழைப் பெண் கிட்டாத தம்பிமாரே
உங்களை மகிழ்ச்சிப்படுத்துபவள் இன்றி
தூக்கில தொங்கிச் சாகாதீங்க...
கொடுப்பனவுகள் (சீதனம், ஆதனம்) கேட்டால்
மகிழ்ச்சிப்படுத்துபவள் கிட்டாள் தான்!" என

நல்ல கவிதை வந்தமைந்ததே! - நானும்
உள்ளம் நிறைவோடு எழுதினேனே!
வராத பா / கவிதை ஒன்றிற்காக
வந்த பாவை / கவிதையை இழக்காமல்
எழுதி முடித்ததில் கிடைத்த நிறைவு
என்றும் கிடைக்கத் தமிழே துணை!

"அ" என ஒலிக்கவும் "ஆ" என அலறவும்
உதவும் எழுத்துகளால் எழுதவே சுகம்!
சுகமாக எழுதியதால் வெளியான செய்தி
வாசகன் உள்ளம் நிறைவடைய உதவினால்
என்னெழுத்துத் தருகின்ற மகிழ்ச்சிக்கு நிகரேது?
நானென்றும் எழுதிமகிழத் தமிழே துணை!

திங்கள், 5 ஜூன், 2017

தமிழ் இனி மெல்லச் சாகாது!


‘அ தொட்டு ‘ஔ வரையான உயிர் எழுத்துகளும் ‘க் தொட்டு ‘ன் வரையான மெய் எழுத்துகளும் இருநூற்றிப் பதினாறு உயிர்மெய் எழுத்துகளும் ‘ஃ’ எனும் ஆயுத எழுத்துமாக இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்டது எங்கள் தாய்த் தமிழ் மொழியே!

தம் - உள் = தமிழ் என்றும் தம் - உள் - அமிழ்(து) = தமிழ் என்றும் 'தமிழ்' தோன்றியதாகக் கருதப்படுகிறது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம் என்றவாறு உயிர்-மெய் எழுத்து, மெய்யெழுத்து இணைந்த சொல்லே தமிழ் என்கிறோம். இயல், இசை, நாடகம் இணைந்த மொழியாகியதால் தமிழை "முத்தமிழ்' என்றும் அழைக்கின்றோம்.

யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!” என்று பாவலர் பாரதியாரும்
தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர் என்று பாவலர் பாரதிதாசனும்
தங்கள் நூல்களில் எங்கள் தாய் மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடியுமுள்ளனரே!

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
(தமிழன் பாட்டு: 1-2) எனவும்
தமிழன் என்று ஓர் இனமுண்டு
தனியே அவர்க்கு ஒரு குணமுண்டு
(தமிழன் இதயம் :1-2) எனவும்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் இனத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியுள்ளதாகத் தளமொன்றில்

என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால் என்று கம்ப இராமாயணமும்

இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன் என்று தமிழ் விடுதூதும்
தமிழின் இனிமையை வெளிப்படுத்துகிறது.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

"பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்." என்றவாறு தளமொன்றில் (http://nyanabarati.blogspot.com/2009/03/blog-post_03.html) விளக்கம் தரப்பட்டிருந்தது. 

இப்படி, எண்ணிப் பார்த்தால் தமிழைப் பற்றி எத்தனையோ கோடி வரிகளில் எழுத முடியுமே! “தமிழ் என்பது கரை தேட முடியாத நெடுங்கடல். அதனை நீந்திக் கடந்தவரே தமிழறிஞர்!” என்று எனக்குத் தமிழ் புகட்டிய ஆசிரியர் சொல்லித் தந்தார். ஆமாம், தமிழ் தொன்மையான மொழி, செம்மையான மொழி என்று முழங்குவதை விடத் ‘தமிழ் பற்றிச் சில வரிகள் அதாவது தமிழ் மொழியை ஒட்டிய எத்தனையோ உண்மைகளைப் பகிர முன்வாருங்களேன்.

இப்படிப்பட்ட தமிழின் நிலையும் தமிழரின் வாழ்வும் காலவோட்டத்தில் மாற்றமடைந்ததை ஏற்றுத் தான் ஆகவேண்டும். வணிக நோக்கிலும் தொழில் வாய்ப்பை நாடியும் உள்நாட்டுப் போர் என்றும் உலகெங்கும் தமிழர் பரவி வாழ, ஏனைய மொழிகள் தமிழுக்குள் வந்து குந்திவிட்டன. அதேவேளை தமிழர் பண்பாட்டிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்றைய தமிழும் தமிழர் பண்பாடும் அன்றைய (பழங்கால) நிலையிலிருந்து எவ்வளவோ வேறுபடுகின்றது.

இரண்டு தமிழ் தெரிந்த வெள்ளைக்காரரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது தாய்மொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். இரண்டு ஆங்கிலம் தெரிந்த தமிழரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது பிறமொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். அவ்வாறான தமிழரைக் கேட்டால் “இது நமது எடுப்பு (Style)” என்பர். இதன்படிக்குத் தமிழர் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்கள் எனக் கருத இடமுண்டு.

இப்படிப் பல்வேறு சாட்டுகளைச் சொல்லி தாயகத்துத் தமிழரும் புலம்பெயர் நாட்டுத் தமிழரும் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்களாகி பிறமொழிக் கலப்பு அல்லது பிறமொழி பேசுவோராக மாறிவிட்டனர். இந்நிலையே “மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. ஆயினும் மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை எனத் தமிழை வாழவைக்க முயற்சி எடுக்கும் தமிழ் உறவுகளைப் பாராட்டுவோம்.

முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம் பின் மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம் 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம் 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம் 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்…” என்றொரு தகவலை 2000ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெவ் அமைப்பின் மொழிகளுக்கான பிரிவு வரும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளில் தமிழும் அடங்குவதாகத் தெரிவித்திருப்பதை 2013 காலத்தில் சில இணையத்தளங்களில் படித்தேன். மேலும் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உலகத்து மொழிகள் பற்றிய ஆய்வு இடம்பெற்றதாம். அதில் அடுத்து வரும் நூறு ஆண்டுகளின் பின்னரும் நிலைத்து வாழப்போகின்ற மொழிகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்னர். அதிலும் தமிழ் மொழியைக் காணவில்லையாம்.

உலகெங்கும் புழங்கிய பல மொழிகள் செம்மையாகப் பேசுவோர் எவருமின்றி வலுவிழந்து, புழக்கமின்றி, அழிந்து போய் விட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன. அதனோடு தொடர்புடைய தகவலாக மேலே சொல்லப்பட்டவை இருக்கலாம்.  “இவை எல்லாவற்றையும் ஏன் சொல்ல வேண்டும்?” என நீங்கள் கேட்கலாம். நான் சொல்வது என்னவென்றால், இவற்றின் அடிப்படையில் பார்த்தால் எங்கள் தாய்த் தமிழ் மொழியும் அழிய வாய்ப்பு உண்டென்பதையே!

இப்படி மொழிகள் அழியக் காரணமென்ன? ஒரு மொழி எப்ப தன் அடையாளத்தை இழந்து நிற்கிறதோ, அப்ப அம்மொழி அழிகிறது அல்லது சாகிறது எனலாம். அப்ப மொழியின் அடையாளம் என்றால் என்ன? மொழியின் வரலாற்றுப் பின்னணி (தொன்மை), மொழி கொண்டுள்ள பரப்பு (எல்லை), எழுத்து, சொல் (வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை), இலக்கண, இலக்கியமென ஒரு மொழிக்குப் பல அடையாளங்கள் இருக்கிறது.

மேற்படி பார்த்தால் தமிழ் மொழி தன் அடையாளத்தை இழக்கவுமில்லை; சாகவுமில்லை என நீங்கள் கூறலாம். ஆனால், நான் அப்படிக் கூறமாட்டேன். கணினி நுட்பத் தேவை கருதி எழுத்துச் சீர்திருத்தம் செய்த போது தமிழைச் சாகவைக்கத் தொடங்கியாச்சே! இப்ப என்னவென்றால் பிறமொழிப் பாவனை, மொழிபெயர்ப்புத் தேவை என மீண்டும் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமென முனகுவது தமிழின் சாவுக்கு நாள் குறிக்கும் செயலே.

எழுத்து, பேச்சு இரண்டும் கெட்டால் இலக்கண, இலக்கியங்களைச் சொல்லவும் வேண்டுமா? வேர்ச் சொல் மறந்து பிற சொல் பேசுவதோடு, இலக்கணமற்ற இலக்கியம் படைக்கத் தொடங்கியதும் தமிழின் சாவுக்கான நாள் நெருங்கிவிட்டதே. அதாவது, இலக்கணம் ஓரளவு கையாளப்பட்டால் போதுமென்ற நிலையிலும் பிறமொழிக் கலப்பும் இழையோடி இருக்கையில் படைப்பு ஒன்றில் சொல்ல வந்த செய்தி தான் முக்கியம் என்றால் இனிய தமிழ் எப்படி வாழும்?

இன்றைய ஊடகங்கள் எல்லாமே தமிழென்ற போர்வையில் தமிங்கிலிஸ் தான் வெளிப்படுத்துகிறது. தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஸ் எனக் கணிதச் சமன்பாட்டை இன்றைய ஊடகங்கள் அறிமுகம் செய்கின்றன. இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் விளம்பர வெளியீடுகளில் நாட்டம் கொள்வதால் தான், தமிங்கிலிஷ் பயன்படுத்தித் தமிழைக் கொல்கின்றனர். மக்களாய (சமூக) வலைத் தளங்களிலும் நம்மாளுங்க கையாளுவது தமிங்கிலிஸ் தான்!  



இந்தப் படம் எப்படியிருக்கு? பார்த்தால் சிரிப்பு வருகிறதா? தமிழ் பேச வேண்டிய நாம், கலப்பு மொழி பேசி நாள் தோறும் தமிழைக் கொல்லும் நம்மவர் செயலைச் சுட்டி காட்டுகிறதே! இப்படத்தில் “எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு?” என்றொரு குண்டைப் போட்டுடைத்திருக்கிறார்கள். பார்த்தால் புரியும் பேச்சிலும் ஊடகங்களிலும் இப்படித் தான் பண்ணுகிறார்கள்

காலை வேளை பணிக்குச் செல்வதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்றேன். “மோர்னிங் பிறேக் பாஸ்ட் எடுக்காததால றிங்ஸ் குடிக்கணும் போல இருக்கு. அந்தக் கொட்டலில போய் றிங்க் பண்ணிட்டு வாறேன்.” என்று பிரண்டு ஒருவர் பஸ் ஸ்ரொப்பில என்னை விட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டான். இது பேரூந்து நிலையத்தில் நின்ற நண்பர் ஒருவரின் கூற்று.

நண்பரின் கூற்றில் பத்து ஆங்கிலமும் பதின்மூன்று தமிழும் கலந்து இருக்கிறது. இன்று இருபத்திமூன்றில பத்து ஆங்கிலமாயின் நாளைக்குப் பதினைந்து ஆங்கிலமாகலாம். இப்படிப் போனால் தமிழ் மொழி என்ன மொழியாகும்? இருப்பினும் எல்லாச் சொல்களும் பிறமொழிச் சொல்களாயின் தமிழ் சாவடைந்ததாகத் தான் கருத முடியும்.

ஹலோ!
உங்களைத் தான்
பிளீஸ்!
கொஞ்சம் நில்லுங்களேன்
ஐ லவ் யூ!
மெடம்
நீங்க தான்
என் லைஃப் பாட்னர்!
பிளீஸ்!
எனக்கு நோ சொல்லாதீங்க
நான் சுசயிட் பண்ணிடுவேன்!

இக்கவிதையினை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தால் எழுதியவரை வெள்ளைக்காரி விரும்பியிருக்கலாம். அதேவேளை ஆங்கிலத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.

இக்கவிதையினைத் தமிழில் பதிவு செய்திருந்தால் எழுதியவரைத் தமிழச்சி விரும்பியிருக்கலாம். அதேவேளை தமிழிற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.
இந்தத் தமிங்கிலக் கவிதையைப் பத்திரிகையிலோ இணையப் பக்கத்திலோ படித்தோ தொலைக்காட்சியில் பார்த்தோ வானொலியில் வாசிக்கக் கேட்டோ எவளாச்சும் எழுதியவரை விரும்புவாளா? ஆங்கிலத்திற்கோ தமிழிற்கோ பெருமை சேர்ந்திருக்குமா?

ஹலோ ஃப்ரண்ட்! - நீ
வையிட்டில போட்ட சேட்டில
டெய்லி என் கனவில வந்து
பிளாஷ் பண்ணுறியே!” என்று பெண்ணொருத்தி எழுத

ஹாய் பியூட்டி கேர்ள்
றோஸ் லெக்கின்ஸ் இலும்
பறக்கும் வையிட் ரொப் இலும்
உன்னைக் கண்ட பின்னே
எனக்குத் தூக்கமே வரேல்ல!" என்று ஆணொருவன் எழுத

தமிழை மறந்த நிலையில முகநூல் பக்கத்தில காதல் பற்றிக்கொள்கிறதே! முகநூலில தான் என்றால் வலைப்பக்கங்கள் எல்லாவற்றிலும் இப்படித் தான் தமிங்கிலிஸ் தொற்றிக்கொள்கிறது.

ஊதாக் கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன் என்றும்

எக்ஸ்கியூஸ் மீ மிஸ்ரர் கந்தசாமி என்றும்

இன்றைய திரைப்பாடல் எல்லாமே தமிங்கிலிஸ் பாடல்களாகவே ஊளையிடப்படுகிறது. பணத்திற்காகப் பாடல் வரிகளில் பிறமொழி இடைச் செருகலைச் செய்ய வேண்டி இருப்பதாகப் பாடலாசிரியர் ஒருவர் தெரிவித்த நினைவு இப்படித்தான் இன்றைய தமிழ்த் திரை இசைப் பாடல்களிலும் பல மொழிக் கலப்புத் தான்

இப்படி எல்லாம் சுட்டிக் காட்டினால் எனக்கு ஒரு கோடி பக்கம் தேவை. இன்றைக்கோ நாளைக்கோ எனச் சாகக் கிடக்கிற நான், இவற்றை எல்லாம் எப்படித் தொடர்ந்து எழுதுவது. ஆயினும் இலங்கை-மட்டக்களப்பைச் சேர்ந்த உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன் அவர்கள் எழுத, இந்திய-தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய "தமிழா! நீ பேசுவது தமிழா?" என்ற பாடல் ஒன்றே போதும், அத்தனையும் ஆங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

பாடலுக்கான இணைப்பு:

தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை ‘பேபி என்றழைத்தாய்
என்னடா, தந்தையை ‘டாடி என்றழைத்தாய்
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை ‘லவ் என்றாய் உதவாத சேர்க்கை
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை
இரவை ‘நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் ‘லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ‘பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை ‘பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் ‘சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில ‘வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின் தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

நம்ம தமிழில் இருபத்தைந்து பிற மொழிகள் கலந்திருக்க தமிழகத் தமிழ் ஊடகங்களில் பதினெட்டு மொழிகள் கலந்திருக்க ஈழத்துத் தமிழ் ஊடகங்களில் எட்டிற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருக்க நம்மாளுகளின் கைவண்ணத்தில் தமிழ் + இங்கிலிஷ் = தமிங்கிலிஸ் மட்டும் தானா?

 “பழங்காலம் முதல் ஓலி, எழுத்து வடிவமுடையது நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபு, மலாய் எபிரேயம் பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது.” என அறிஞர் ஒருவர் தன் துயரத்தைத் தெரிவித்தார்.

அந்த ஆசாமிக்கு, ஆயாவைப் பற்றித் தெரியாது. ஏதோ அட்வைஸ் பண்ணியிருக்கிறார். ‘மக்கரான உங்க வண்டியைத் திருத்துங்க என்று ஒதுங்கிவிட்டாள்.” இதில பாருங்கோ:
மக்கர் (அரபி மொழி) = இடக்கு/பழுது(தமிழ்)
அட்வைஸ்(ஆங்கிலம்) = அறிவுரை(தமிழ்)
ஆயா(போர்த்துக்கீசம்) = செவிலி/பணிப்பெண்
ஆசாமி(உருது மொழி) = ஆள்(தமிழ்)
ஆகிய பிறமொழிச் சொல்கள் இருக்கே. இனியாவது இவற்றை நீக்கிய பின் பேசுகிற தமிழே தூய தமிழ் என்போம்.

தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும் இப்படித் தான் என் எண்ணத்தில் தோன்றியது. தமிழை வாழ வைக்க முன்வராவிட்டாலும் தமிழைச் சாகவாவது இடமளிக்காமல் பேண முன்வாருங்கள். இன்றைய நம்மாளுகளே! தமிழிலுள்ள பிறமொழிச் சொல்களை அகற்றி, நற்றமிழைப் பேணத் தவறினால், நாளைய வழித்தோன்றல்கள் எப்படிச் செம்மொழியாம் நம்ம நற்றமிழை நுகர முடியும்?

அப்படியென்றால், பிறமொழிச் சொல்களை நமது தமிழில் இருந்து அகற்றி (கழட்டி) விட்டால் தூய தமிழே! அப்படி ஒன்றும் எளிதாகச் (சுகமாகச்) சொல்லிவிட முடியாது. ஏனெனில், எங்கள் இன்றைய கலப்புத் (கெட்ட) தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் நுழைந்திருப்பதோடு அவற்றை இன்றைய நம்மாளுகளால் அடையாளப்படுத்த (இனங்காண) முடியாதும் உள்ளதே!

இன்று நம்மாளுகள் தமிழென்று பேசும் கூழ்த் தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களை அகற்ற அகரமுதலிகள் (அகராதிகள்) தேவைப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் அகரமுதலிகள்(அகராதிகள்) கீழ்வரும் இணைப்பில் உள்ளது.
அல்லது  https://ta.wikipedia.org/s/4ily

மேற்படி அகரமுதலிகளைப் பாவித்துத் எந்த மொழியையும் தமிழ்ப்படுத்தினாலும் அவை தூய தமிழாக அமையாது. அவற்றிலும் வடமொழி இருக்கலாம். தமிழில் கலந்த வடமொழிச் சொல்களை வடசொல் என்று தமிழில் பயன்படுத்தியதால், காலப் போக்கில் அவற்றைத் தமிழ் என்றே நம்மாளுகள் பாவிக்கின்றனர். எப்படியிருப்பினும் வடமொழிச் சொல்களை அதிகம் தமிழில் சேர்த்தது யாரென்று கூறமுடியாது.

ஆறுமுகநாவலர் தனது தமிழ் இலக்கண நூலில் வடமொழிச் சொல்களை நீக்காமல் அவற்றின் உச்சரிப்புகளை தமிழ்ப்படுத்த முயற்சித்துள்ளார் எனக் கருதமுடிகிறது. அதாவது ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ, ஆறாம் எழுத்து ‘க உம் ‘ஷ உம் இணைந்த தனியெழுத்து போன்ற தமிழில் பயன்படுத்தப்படும் ஆறு வடமொழி எழுத்துக்களை நீக்கி அதற்கு ஈடான தமிழ் எழுத்துக்களைப் பாவித்து தனது முயற்சியைச் செய்துள்ளார்.

எடுத்துக்காட்டாக சந்தோஸம் என்பதை சந்தோசம் எனப் பாவித்திருக்கிறார். ஆனால் சந்தோசம் என்பதைத் தமிழ்ப்படுத்தினால் மகிழ்ச்சி என்றே வருகிறது. எனவே, வடமொழியைக் கழட்டினால் போதாது; பிற மொழி (எ.கா.- வடமொழி) எழுத்துக்களுக்குப் பதிலாகத் தமிழ் எழுத்துக்களைப் பாவித்துப் பேசப்படும் சொல்களையும் அகற்றவும் வேண்டும்.
எ.கா.-
விஷயம் – வடமொழி.
விடயம் – போலித் தமிழ்.
பற்றியது – தூய தமிழ்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று தமிழில் இல்லாத எழுத்துக்களையோ சொல்களையோ பாவிப்போமானால் உலகமெங்கும் தூய தமிழைப் பேண இயலாது போய்விடும். உண்மையில் இல், எள், கல் என்று ஏதாவது ஒரு முதற்(வேர்ச்) சொல்லிலிருந்து தான் தமிழ் சொல் அமைந்திருக்கும். தமிழ் சொல் உச்சரிப்பில் எந்தவொரு வடமொழி எழுத்தோ(வடமொழி எழுத்துப் பாவிக்கும் சொல் வடசொல் ஆகும்) பிறமொழி எழுத்தோ உள்வாங்கப்பட்டிருப்பின் அவை தமிழ் சொல் அல்ல. அவற்றைப் பயன்படுத்தினால் தூய தமிழாக அமையாது.

எழுதும் போது கூட ஒரு பதிவில் பிறமொழி வரவேண்டிய தேவை இருப்பின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம். அதாவது, வணக்கம் (Welcome) அல்லது நன்றி (Thanks) என்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் (Water), கடுமை(சீரியஸ்), நகைச்சுவை (தமாஸ்) என்றவாறு பயன்படுத்தி வெளியிட முன்வாருங்கள். தூயதமிழை இயல்புக்குக் கொண்டு வரும் வரை தூயதமிழ்ச் சொல்லை அடுத்து அடைப்பிட்டு அதற்குள்ளே பிறமொழிச் சொல்லையும் பேணவேண்டியுள்ளது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப் பகைவர்கள் சிலர், ”தனித் தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொல்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.” என அறிஞர் ஒருவர் தனது இணையப் பக்கத்தில் தெரிவிக்கின்றார்.

இச்செய்தி உண்மையாகவும் இருக்கலாம். தனித் தமிழ்ச் சொல்கள் சிலருக்குப் புரியவில்லை என்பதை விட, தெரியவில்லை என்றே கூறலாம். ஆயினும், நாம் முயற்சி செய்தால் தனித் தமிழ்ச் சொல்களை அறிய முடியும். எனவே, தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியைப் படித்தால் தான் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். அதற்கு இலகுவாக ஓர் தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியின் விரிப்பைத் தருகின்றேன்.

நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எஸ்.சுந்தர சீனிவாசன்
பதிப்பாசிரியர் : விகரு.இராமநாதன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளியீடு : சிறி இந்து பப்ளிகேஷன்ஸ்
வெளியீட்டாளர் முகவரி :-
இல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,
(உஸ்மான் ரோடு), த.பெ.எண் : 1040,
தியாகராய நகர் – சென்னை 600 017.

தமிழ்மொழி வாழ வேண்டும் என்றால் தமிழர்களது மக்களாய (சமூக), பண்பாட்டுத் தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பிள்ளைகளுக்கு இடும் பெயர்களில், வணிக நிலையப் பெயர்களில், தெருக்களின் பெயர்களில், கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழ் இல்லை. இந்த நிலைமை நீடித்தால் தமிழ் எப்படி வாழும்? தமிழைப் பேணி வளர்க்க எவ்வளவு காலம் பிடிக்கும்?  

நாம் தமிழை ஒழுங்காக உச்சரிக்கிறோமா? எங்கள் பிள்ளை, குட்டிகள் ஆவது தமிழை ஒழுங்காக உச்சரிக்கின்றனரா? இதனைச் சரி செய்யாத வரை நற்றமிழ் எப்படி நம்முன்னே நலமாக வாழும்? மேலும் நமது பிள்ளை, குட்டிகள் தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடராத வேளை; எந்தக் கடவுள் வந்து உலகெங்கும் தமிழைப் பேணுவார்?

இந்தியாவில் பாரதிக்கு முப்பத்திரண்டு மொழிகளும் ஈழத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு பதினெட்டு மொழிகளும் தெரியுமாம். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகவும் முதன்மை மொழியாகவும் கற்றுக்கொண்ட வேளையிலே மற்றைய மொழிகளைப் படிக்க வில்லையா? இவ்வாறு நமது பிள்ளை, குட்டிகளைத் தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடர வழிவிடலாமே!

எனது உறவுகளே, தமிழ்ப் பெயரை உங்கள் புனைபெயராக்குவதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரையே வையுங்கள். நல்ல தமிழ்ப் பெயர் நூல்கள் வெளிவந்துள்ளன. அதனைப் பெற்று எல்லோரும் தமிழ்ப் பெயர் சூட்ட முன்வாருங்கள். எவரும் பெயரைக் கேட்டால், எங்கள் பெயர் ‘தமிழ்ப் பெயர் என்று அதிரவேண்டுமே!

தமிழர் ஒவ்வொருவரினதும் செயலாக எழுத்திலோ பேச்சிலோ பிறமொழிச் சொல்களை நீக்கிய பின் தூய தமிழைப் பேண முன்வரவேண்டும். தொழில் நோக்கில், தொழில் நேரமான எட்டு மணி நேரம் செயலக (Office) மொழிகளைப் பேசினாலும் எஞ்சிய நேரமாவது தமிழைப் பேணலாமே! கோயில் வழிபாட்டில், திருமண விழாக்களில், பொது நிகழ்வுகளில் தமிழர் பண்பாட்டைப் பேணுவதோடு தமிழ் மொழியில் செயற்படுத்தலாமே! அதாவது தொடர்பாடல் மொழியாகத் தமிழ் மொழி முழங்க முடியுமே!


ஒரு இலட்சம் ஆள்கள் இருந்தால் கூட அவர்கள் பேசும் மொழி அழியாதாம். அப்படியாயின் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் பிறமொழிப் புழக்கத்தை நிறுத்தி விட்டு அல்லது குறைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நம் தமிழைப் பழக்கப்படுத்தினால் தமிழ் இனி மெல்லச் சாகுமா? தமிழராகிய நாம், தமிழை வாழ்வில் தொன்னூற்று ஒன்பது விளுக்காடு புழக்கத்தில் பேணுவோமாயின் தமிழ் இனி மெல்லச் சாகாது! கடனுக்காகவோ கடமைக்காகவோ அன்றி, ஒவ்வொரு தமிழரும் தாமாகவே உணர்ந்து தமிழ் இனி மெல்லச் சாகாது பேண முன்வர வேண்டும்.