Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கவிதை என்றால் என்ன?

நான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவிதை எழுதுவோரே அதிகம் என்பேன். அப்படி இருப்பினும் 'கவிதை என்றால் என்ன?' என்பதைத் தெரிந்துகொண்டு எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். என் அறிவிக்கெட்டியவரை, எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை எனது கிறுக்கல் நடையிலே கீழே தருகின்றேன்.

உண்மையில்
'கவிதை என்றால் என்ன?' என்று
எனக்குள்ளே - நான்
கேட்டுப்பார்த்தேன்...
உணர்வு வரிகளால்
தொடுக்கப்பட்ட மாலை என்றே
எனக்குப்பட்டது!
அசை, சீர், அடி, தொடை,
எழுத்து, அணி, நடை,
பா, பாவினம் எனப் பல
யாப்பிலக்கணம் என
இருந்தாலும் கூட
இன்றைய இளசுகள்
மூ.மேத்தாவின் நடையிலே
(நானும் அப்படியே)
உணர்வுகளால் ஆன
அடிகளை அடுக்கி
படிக்கச் சுகமளிக்கும் படி
ஆக்குவது புதுக்கவிதையாம்!
எழுத்தெண்ணி அசை பிரித்து
சீராக்கித் தொடையமைத்து
அடி அமைத்துப் பாவாக்கல்
மரபுக் கவிதை என்றாலும் கூட
படித்தால் தான்
உள்ளத்தில் மாற்றத்தைத் தான்
தந்தால் போதுமென்று தான்
வாசிக்க எழும் ஓசையிலே
இசை எழுப்பும் அடிகளால்
ஆக்குவதும் கவிதையே!
பாலைப் போல வெள்ளை
நுலைப் போல சேலை
தாயைப் பொல வாலை
என்றெல்லோ ஒப்பிட்டு
'உமாவின் உள்ளம்' என
மோனை அமைய
'பெண்ணின் அழகு
கண்ணில் தெரியுமே' என
எதுகை அமைய
புதுக்கவிதையிலும்
இலக்கணம் இறுக்கியே
நல்ல கவிதை ஆக்கலாமே!

என்னங்க... கவிதை எழுதத் தொடங்குவோமா? அது தானுங்க சற்று இலக்கணம் சேர்த்து இறுக்கமான நல்ல கவிதை ஆக்குவோமே! பாபுனைய விரும்பும் உறவுகளே! இப்பதிவு உங்களுக்குப் பெரிதும் உதவுமென நம்புகிறேன்.

சான்றிதழை விடச் செயலாற்றலே பெரிது

எனக்கு
நண்பர்களை விட
எதிரிகள் தான் ஏராளம்
அறிவாளிகள் யாரும்
எனக்கு
எதிரிகள் இல்லைப் பாரும்...
அதனால் தான்
என்னையும்
சிலர் அறிவாளி என்கிறாங்களே!
நான் பெற்ற
கல்விச் சான்றிதழ் கட்டுகளை
சிலர்
அள்ளிக்கொண்டு போனாங்க
நானும்
படித்ததை எல்லாம்
வலைப்பூ, வலைத்தளம் எனப் போட்டுத்தள்ள
என் புலைமை அரங்கேற
முட்டாள் எதிரிகள் தானுங்க
மீளவும் வந்து
என் வீட்டு வாசல் படியிலே
அத்தனையையும்
வீசிப்போட்டு ஓடிட்டாங்களே!
இத்தால்
நானறிந்தது என்னவென்றால்
கல்வி என்பது
சான்றிதழ் (Certificate) அல்ல
செயலாற்றல் (Activity) என்றே!

நல்ல நாடகமெல்லோ...

பெண்ணொருத்தி
என்னோடு கூடி வாழ்ந்துவிட்டதாய்
கதையளக்க - அது
நாடெங்கும் பரவ
திருமணப் பேச்சு நேரம்
இந்த வெடிகுண்டு
என்னைத் தாக்க
அன்பிற்கினிய தோழிகள்
அப்பெண்ணைத் துரத்த
அதெல்லாம்
மூன்றாம் அகவையிலென
அவளும்
அவிட்டுவிட்டிட்டு ஓட
நல்ல நாடகமாயிற்று!
என் காதலி தானென்று
உறவுக்காரப் பெண்
பொய்யுரைக்க
என் மீது
விருப்பம் கொண்ட
பல பெண்கள்
எனக்குத் தெரிவிக்காமலே
ஓடி ஒதுங்க
உறவில்லாத பெண்ணைக் கட்டி
நானும்
குடும்பம் நடாத்த
நல்ல நாடகமாயிற்று!
பெண் தவறு செய்தால்
வரலாறு
ஆண் தவறு செய்தால்
சிறு நிகழ்வென
என் வாழ்வில்
நடந்த நாடகங்கள் செல்ல
தமிழ், தமிழர் பற்றுச் சீமான்
மூன்றாண்டுகள்
தன்னைக் காதலித்துப் போட்டு
மணமுடிக்க மறுக்கிறாரென
பெண்ணொருத்தி
மூக்காலே சினுங்குவது
நல்ல நாடகமெல்லோ...
என்னோடு
படுக்கை விரித்துக் கிடந்தவரென்றோ
என்னைக் காதலித்தவரென்றோ
கூப்பாடு போடும் பெண்களே
நீங்களே
உங்களைக் கெட்டவளெனக் காட்டி
வரலாற்று அடையாளம் குத்தி
நாடகமாடுவதனால்
ஆண்களுக்குக் கேடு
கிட்டாதெனப் படியுங்கள்!

நட்புப் பற்றிச் சில...


கை குலுக்கினால் போல
நட்பு மலராது
நல்ல அன்போடு
பழகினால் மட்டுமே!
பொன், பொருள், பணம்
அன்பளிப்பாகக் கொடுத்தால் போல
நட்பு மலராது
ஆபத்து வேளையில்
உதவினால் மட்டுமே!
நாடு, மொழி, இனம், மதம், பால்
வேறுபாடுகளின்றி மலரும் நட்புக்கு
பிரிவே கிடையாது
பிரிந்தால் - அது
உண்மையான நட்பல்லவே!

கொடுக்கல் வாங்கலின் போது...

கேட்டால் கொடுப்பது
கடன் - அப்ப
வீணாகக் கேட்டு வேண்டாதே!
கேளாமல் கொடுப்பது
உதவி - அது
இரக்கமுள்ளவர் செயலென அறி!
இடக்கை கொடுப்பது
வலக்கைக்குத் தெரியக்கூடாதாம் - ஏனெனில்
கொடுத்தவரையும்
கொடுத்ததன் பெறுமதியையும்
பெற்றவரல்லவா சொல்லவேண்டும்!
உப்பிட்டவரைக் கூட
உள்ளளவும் நினை - அதாவது
கடுகளவு உதவியானாலும்
உதவியோரை மறத்தலாகாதே!

சனி, 18 ஜனவரி, 2014

சாவடைந்தவர்களின் உயிரை மீட்டுத் தருவீர்களா?


முகநூலில்(facebook) இல் பார்த்த அலைவரிசை(channel)-4, 2011இல்  வெளியிட்ட ஓளி, ஒலி (Video) பட இணைப்பை பார்வையிடுவதற்காக - இங்கு
இணைப்புச் செய்து கருத்துப்பகிர்கிறேன்!
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/
(Sri Lanka's Killing Fields)
http://www.youtube.com/watch?v=Rz_eCLcp1Mc&feature=youtu.be
(Sri Lanka's Killing Fields by Channel 4 [Full video])

நாளுக்கு நாள் அறிவியலில்
ஆளுக்கொரு கண்டுபிடிப்பாக
எத்தனையோ கோடிக்கணக்கில
கண்டுபிடித்து இருந்தாலும்
சாவடைந்தவர்களின்
உயிரை மீட்டுத் தரவோ
மனிதன் சாகாமலிருக்கவோ
அறிவியலாளர்கள்
எதனையும் கண்டு பிடிக்கவில்லையே!
ஆன்மீகவாதிகள் கூறும்
கடவுள் கூட
பெண்களை வன்முறையாகக் கெடுக்கின்ற
ஆண்களின் ஆணுறுப்புகளை
புளுப்பிடித்து அழுகச்செய்து
ஒறுப்பை(தண்டனையை) வழங்கியதுமில்லையே!
அறிவியலாளர்களும் கடவுளும்
தமிழினத்தைத் திரும்பிப் பார்க்காத வேளை
அலைவரிசை(channel)-4
இலங்கைக்குள் எப்படியோ ஊடுருவி
போரில் தமிழரின் இழிவுநிலையை
ஓளி, ஒலி நாடாவில் பதிந்து
அறிவியலாளர்களும் கடவுளும்
நம்பும்படி செய்துள்ளமையை
பாராட்டித் தான் ஆகவேண்டும்!
அலைவரிசை(channel)-4 கூறும்
போரில் பாதிப்புற்ற ஒருவரென்பதால்
இலங்கைத் தமிழர் பட்ட
துன்பங்களின் சுருங்கிய தொகுப்பே
அலைவரிசை(channel)-4, 2011 இல் வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவின் கருப்பொருளாகும்!
உங்கள் காலில் விழுந்து
மன்றாடிக் கேட்கின்றேன்
இக்காட்சிகளைப் பார்த்து
எவரும்
தற்கொலை செய்துவிடாதீர்கள்...
இக்காட்சிகளில் வரும்
குற்றவாளிகளுக்கு
ஒறுப்பை(தண்டனையை) வழங்க
உலக நாடுகளை
அணிதிரட்ட முன்வாருங்கள்...
"சாவடைந்தவர்களின் உயிரை
மீட்டுத் தருவீர்களா?" என்று கேட்கின்ற
இலங்கையருக்கு
அலைவரிசை (channel)-4, 2011 இல் வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவை
துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தியே
தமிழர் செய்ய வேண்டிய
கடமை இவையே!

விசாகப்பெருமாள் விளக்குகிறார் - 04

அன்புள்ள உறவுகளே!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரில் பன்னிரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். அடுத்த பகுதி தொடர முன் சிறு மீட்டலை மேற்கொள்ள எண்ணி விசாகப்பெருமாள் எழுதிய "யாப்பிலக்கணம்" நூலில் இருந்து சிறு பகுதியைக் கீழே தருகின்றேன்.

இப்பகுதி செய்யுள் இயலில் வரும் பாவினம், ஆசிரியப்பா இலக்கணம், ஆசிரியப்பா வகை, கலிப்பா இலக்கணம், கலிப்பா வகை எனப் பல பகுதிகளை அலசுகிறது. படித்துப் பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

இப்பகுதி பாபுனைய முனைவோருக்கு நல்ல பயனைத் தருமென நம்புகின்றேன். இந்நூலை எனது மின்நூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கலாம்.

திங்கள், 13 ஜனவரி, 2014

தைப்பொங்கல்


பொங்கலோ பொங்கல் - தைப்
பொங்கலோ பொங்கல்!

வீட்டுக்கு முன்னே பாரப்பா
மாட்டுச் சாணமெடுத்து மெழுகியாச்சு
அம்மா அறுகம் புல்லெடுத்து வா - அடி
எம்மவளே அழகாய் கோலமிடடி
மணி ஆறாக முன்னே
கணீரென்ற அப்பாவின் குரல்!

பகலவன் வரவுக்கு முன்னே
நம்மவள் கோலமிட்டாள்
அம்மாவும் அறுகுவைத்து
பிள்ளையார் பிடித்துவைக்க
அண்ணன் நிறைகுடம் வைக்க
பாட்டி பிடித்த புதடுப்பு வைத்து - அப்பா
புதுப்பானையில தண்ணி விட்டு - அந்த
அடுப்பில நெருப்பை மூட்ட
அப்பு வந்து
பானைக்குள்ளே பாலை விட
எங்கட தம்மி
வெடி கொழுத்திப் போட
எங்கட வீட்டில
பொங்கல் பொங்கத் தொடங்கியாச்சு!

தென்னம் பாளை வைத்து மூட்டிய
பொங்கல் பானை அடுப்பெரிய - அந்த
அடுப்பைச் சுற்றி நம்மாளுகள்
எடுப்பாக எல்லோரும்
பொங்கல் பானை பொங்கி வழிய
பகலவன் வரவைக் காண
கூடிநிற்கக் காண்பதே அழகு!

பகலில் ஒளி தருவதால்
பகல் அவன் பகலவன்
மண்ணிற்கும் நிலவுக்கும்
கதிர் ஒளி பரப்புவதால்
கதிர் அவன் கதிரவன்
அண்டவெளிக்கு முதல்வன் என்பதால்
ஞாயிறு (சூரியன்) என்கிறோம் - அந்தப்
பகலவன் வரவைக் கண்டு - தையில்
பொங்கிப் படைப்பதேன்?

நெல் விதைக்கக் களை பிடுங்க
கதிர் தள்ளி நெல் விளைய
விளைந்த நெல்லை அறுவடை செய்ய
வேளைக்கு வேளை மழை கொட்டிய
நாளுக்கு நாள் நன்மை வழங்கிய
காலைக் கதிரவனுக்கு நன்றி கூறவே!

பொங்கல் பானை பொங்கி வழிய
புது அரிசி போட்டுக் கலக்கி
வெந்து வர வெல்லம் போட்டு
அடுப்புத் தணித்து முடித்து வைக்க
இலை போட்டுப் படையல் வைக்க
கூடி நின்ற எல்லோரும் காண
பொங்கல் இனிக்கப் பகலவன் வந்தானே!

படைத்த பொங்கலை அப்பா உண்ண
பானைப் பொங்கலைப் பங்கிட்டு உண்ண
விடிகாலைப் பொழுதும் பொங்கிக் கழிய
நண்பர்கள் வரவும் போக்கும் தொடங்க
உறவைத் தேடிநாம் போயும் வர
பொங்கல் நாள் இனிதே முடிந்ததே!

பொங்கலோ பொங்கல் - தைப்
பொங்கலோ பொங்கல்!



அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.

பொங்கல் செலவு

புதுப்பானை, விறகு, அடுப்பு என
ஐந்நூறு உரூபா ஆச்சு
அரிசி எண்பது உரூபா ஆச்சு
வெல்லம் நூறு உரூபா ஆச்சு
தேங்காய் அறுபது உரூபா ஆச்சு
கசுக்கொட்டை, ஏலக்காய்,
முந்திரிகை வற்றல், கரும்பு,
பழங்கள், வெற்றிலை, பாக்கு,
சூடம் (கற்பூரம்), ஊதுபத்தி (சாம்பிராணி) என
எல்லாச் சில்லறைக்கும்
முன்னூற்று முப்பது உரூபா ஆச்சு
எனது
வருவாயைக் கணக்குப் பார்த்தால்
எழுநூற்று எழுபது உரூபா ஆச்சு
எஞ்சிய முன்னூறு உரூபா
எவர் தருவார் இங்கே
நாளைக்கு நான்
தைப்பொங்கல் பொங்கவே!

பொங்கலுக்கு முதல் நாள்


தெருவெங்கும் வணிகம் சூடுபிடித்திருக்க
பொங்கலுக்கு வெல்லம், பழம் வேண்ட
நானும் நடைபோட்டேன்!
ஆங்கோர் ஓரமாய்
ஆணும் பெண்ணும்
போகிற வழியிலே விழுந்து கிடந்தாங்க...
குடிதண்ணிக் (மதுபானக்) கடை
பொங்கலுக்குப் பூட்டென்று
முதல்நாளே
மூக்குமுட்டக் குடித்ததன் விளைவாம்!
அங்காடி முன்னே
கையேந்துவோரைக் (பிச்சைக்காரரைக்) காணவில்லை
நாளைக்குப் பொங்கல் என்பதால்
பொங்கின பொங்கலை விட
தண்டின பொங்கல் நிறையுமென்றோ
வீட்டுக்கு வருகை தர
ஓய்வு எடுக்கிறார்கள் போலும்!

கடவுளே வாரும்

பொங்கல் நாள்
புத்தாண்டு நாள்
எல்லாம்
நல்லெண்ண வழிகாட்டலை
முன்வைக்கும் நாளே!
நம்மாளுகளுக்கு
நன்நாள், பெருநாள் எதுவானாலும்
குடிப்பதைப் புகைப்பதை நிறுத்தவோ
கெட்ட செயலை விலக்கவோ
எண்ணுவதில்லையே!
பண்பாட்டை வெளிப்படுத்தும்
பெருநாள் பொழுதுகளில்
பண்பாட்டைச் சீரழிக்கும்
நம்மாளுகளை
வந்தால் கண்டுகொள்வீர்
கடவுளே வாரும்!

சனி, 11 ஜனவரி, 2014

பொங்கல் பாட்டு


இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!
                                                        (இன்றைக்கு)

மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!
                                                        (மழை)
                                                        (இன்றைக்கு)

பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு
பொங்கல் நாளே உழவர் நாளாச்சு
பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு
                                                         (இன்றைக்கு)
                        
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு
ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு
                                                          (இன்றைக்கு)
                        
முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு
கோலம் போடுவது அம்மா ஆச்சு
பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு
ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு
                                                          (இன்றைக்கு)
                        
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு
நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு
உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு
                                                           (இன்றைக்கு)

இசைப் (திரைப்) பாடல் புனைவோமா!

நம்மாளுகள் திரைப் (சினிமாப்) பாடல் எழுதுவதைத் தெரிந்துகொள்ள விரும்பலாம். இன்றைய திரைப் (சினிமாப்) பாடல்கள் எல்லாம் புதுக்கவிதை அமைப்பிலே இருந்தாலும் அன்று மரபுக்கவிதை அமைப்பிலே இசைப் (திரைப்) பாடல்கள் இருந்தனவாம். கவிதைக்கு இசையூட்டினால் பாடல் ஆகாது; இசைக்குக் கவிதை அமைத்தால் பாடல் ஆகாது; இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் தான் பாடல் ஆகுமே!

இன்றைய திரைப் (சினிமாப்) பாடல், அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தி (இசைப் பாடல்) என்று சொன்னாலும் கூட, நம்மவூரு நாட்டார் பாடல் காலத்தில் இருந்தே தோன்றியிருக்கணும். ஆயினும் பண்ணத்தி (இசைப் பாடல்) என்பது பண் என்றால் இசை; அத்துச் சாரிகை; இ - பெயர் விகுதி என்று ஒரு பொத்தகத்தில் படித்தேன். அதாவது, பண்ணத்தி என்றால் இசையை உடைய பாடல் எனலாம்.

பண்ணத்தி (இசைப் பாடல்) ஆனது எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அனுபல்லவி), கண்ணிகள் (சரணங்கள்) ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது. திரைப் (சினிமாப்) பாடல் புனைவதை ஒரு பூமாலை கட்டுவதற்கு ஒப்பிடலாம். அதாவது எடுப்பை அரும்பு என்றும் தொடுப்பை பூ (மலர்) என்றும் கண்ணிகள் (சரணங்கள்) ஆனது மாலையாக்கியது என்றும் சொல்லலாம்.

இது பற்றிய விரிப்பைப் பிறிதொரு பதிவில் விளக்கமாகத் தரவுள்ளேன். ஆயினும் இச்சிறு குறிப்பைப் பாபுனைய விரும்புவோர் கருத்திற்கொண்டு புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் வாருங்கள்.

அண்ணே! அண்ணே! - என்
கண்ணான கண்ணே!
                                               (அண்ணே!)

எடுப்பை மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முடிவில்; எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள்.

பெண்ணைக் கண்டேன்! - நான்
கண்ணாலே கண்டேன்!
                                                (பெண்ணைக்)
                                                (அண்ணே!)

எடுப்பைப் போன்று தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். பின்னர் எடுப்பையும் தொடுப்பையும் மீண்டும் ஒரு தடவைப் படிக்க வேண்டும். அதற்காக அவற்றின் முதற் சீரை அடுத்தடுத்து அடைப்புக்குள் இடுங்கள்.

என் கண்ணாலே கண்ட - அவள்
என் முன்னாலே நின்றாள்!
என் விருப்பைச் சொல்ல - அவள்
உன் காதலி என்றாள்!
                                                   (அண்ணே!)

எளிமையாக இப்படிக் கண்ணி (சரணம்) அமைக்கலாம். கண்ணியைப் படித்த பின் மீண்டும் எடுப்பையும் தொடுப்பையும் படிக்க வேண்டும். அதற்காக எடுப்பின் முதற் சீரை அடைப்புக்குள் இடுங்கள். ஒரு கண்ணி ஒரு பூ மாலை ஆகாதே! அடுத்தடுத்துப் பல கண்ணிகளை (சரணங்களை) அமைக்கலாம்.

அண்ணே! அவளைக் கண்டேன் - அவள்
கண்ணில் உன்னைக் கண்டேன்!
பெண்ணே! அழகுக்கு அவளே - அவள்
மண்ணில் உனக்கே அண்ணே!
                                                    (அண்ணே!)

இப்படி நான்கைந்து கண்ணிகளை (சரணங்களை) அமைத்தால் பூ மாலை ஆகிடுமே! ஆமாம், இப்படிப் புதுப்பாவிலும் (புதுக்கவிதையிலும்) இசைப் (திரைப்) பாடல் புனையலாம் எனச் சொல்ல வந்தேன். முயன்று பாருங்கள்; எதுகை, மோனை எத்துப்பட்டால் இசை அமையுமே! இசையுள்ள கவிதைக்கு இசையூட்டினால் இன்றைய திரைப் (சினிமாப்) பாடலோ, அன்றைய தொல்காப்பியனாரின் பண்ணத்தியோ (இசைப் பாடல்) அமையலாம். எல்லாவற்றுக்கும் முதலில பாபுனைய விரும்புங்கள். பாபுனைகையிலே தூயதமிழைப் பேணித் தாய்த் தமிழை வாழ வையுங்கள்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

பாவலனுக்குத் தேடல் தேவை தான்...


"பாபுனைய எல்லோரும் கிளம்பினால்
பாக்களுக்கு என்னவாகும் - அவை
பாக்களின்றி வெற்றுக் கிறுக்கல் ஆகாதோ!" என
எண்ணிப் பார்த்தேன்.

இலக்கியத்திற்குப் பின் இலக்கணம் தோன்றியது என்பதைக் கூறி, பாபுனைதல் (கவிதை ஆக்கல்) இலக்கியமென இலக்கணம் அறியாமல் எழுதுவதும் அழகல்ல. நானும் புதுப்பா (புதுக்கவிதை) என்ற எண்ணத்தில் கிறுக்கினாலும் யாப்புப் பா (மரபுக் கவிதை) சிறந்தது என்பதையே ஏற்றுக்கொள்பவன். இதுபற்றிய உங்கள் கருத்துக்கணிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி வழங்குக.
நீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)?
http://paapunaya.blogspot.com/2013/11/blog-post_2149.html

எனது புதுப்பா (புதுக்கவிதை) கிறுக்கலால் "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" எனப் பல பாபுனைய உதவும் குறிப்புகளை எழுதினாலும் என்னைவிடப் பெரிய அறிஞர்களின் கருத்துகளைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அந்த வகையில் புதுப்பா (புதுக்கவிதை), யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுத உதவும் மென்பொருள், ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் என நான் படித்த பதிவுகளை உங்களுடன் பகிருகிறேன்.

"புதுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். புதுக்கவிதை புனைவோர் புதுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031223.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031443.htm

இதேபோன்று பிறிதொரு தளத்தில் "கவிதையின் வடிவங்கள் – ஒரு பார்வை" என்ற பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://segarkavithan.blogspot.com/2013/07/blog-post.html

புதுக்கவிதை மீது விருப்பம் கொள்ள வைத்த "கவிஞர் மு.மேத்தா அவர்களுடன் நேர்காணல்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.tamilauthors.com/10/11.html

"மரபுக்கவிதை" பற்றிய தலைப்பில் ஒரு தளத்தில் இரு பதிவுகளைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். மரபுக்கவிதை புனைவோர் மரபுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலக்கணத்தை இப்பதிவில் காணலாம்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031551.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என மேற்காணும் இணைப்புகளை தேடிப் படித்துவிட்டீர்களா? அப்படியாயின் இப்பவே யாப்புப் பா (மரபுக் கவிதை) எழுதக் கிளம்பியாச்சா? கொஞ்சம் நில்லுங்கள்! நீங்கள் எழுதிய யாப்புப் பா (மரபுக் கவிதை) சரியா என்று பார்க்க ஓர் இணையத்தளம் இருக்கே! எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.avalokitam.com/

மேற்காணும் தளத்திற்குச் செல்லாமல் அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கையாளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

மேற்காணும் மென்பொருளைக் கையாள்வது எப்படி? "மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் அவலோகிதம் மென்பொருளை எவ்வாறு கையாள்வது என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_05.html

அப்பாடா! இப்ப நீங்கள் பாவலர் (கவிஞர்) ஆகியிருப்பீர்கள். புதுப்பா (புதுக்கவிதை) அல்லது யாப்புப் பா (மரபுக் கவிதை) எதுவானாலும் உங்களால் துணிவோடு எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி என்றால்  blogger, wordpress தளங்களில் உலகெங்கும் தூய தமிழ் பேண நல்லதோர் வலைப்பூவைத் தொடங்குங்கள். பாவலர் (கவிஞர்) ஆனால் போதாது உங்கள் படைப்புகளை அரங்கேற்ற இவ்வலைப்பூக்கள் உதவுமே!

அதற்கும் கூட ஒருங்குகுறி (Unicode) சிக்கல் உங்களுக்கு வரலாம். அதற்காக "தமிழ் எழுதும் வழிகள்" என்ற தலைப்பில் ஒரு தளத்தில் ஒரு பதிவைப் படித்தேன். அப்பதிவு எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் அதன் இணைப்பைக் கீழே தருகின்றேன். இப்பதிவில் இணையப்பக்கங்களில் ஒருங்குகுறி (Unicode) எழுத்துருவை கையாள உதவும் வழிகள் காணப்படுகிறது.
http://meerantj.blogspot.com/2011/08/blog-post_03.html

"பாவலனுக்குத் தேடல் தேவை தான்..." என்ற தலைப்பில் பல அறிஞர்களின் பதிவுகளை சும்மா நான் உங்களுக்குத் திரட்டித் தரவில்லை. நீங்கள் சிறந்த படைப்பாளியாகவும் உலகெங்கும் தூய தமிழ் பேண உதவுவீர்கள் என்றும் என நினைத்தால் தவறில்லை.

நான் ஒரு நாள் ஐம்பது கவிதைகளுடன் பொத்தகம் அச்சிட விரும்புகிறேன் என அறிஞர் ஒருவரிடம் முன்னே போய் நின்றேன். அவற்றைப் படித்த பின் "பாவலனுக்குத் தேடல் தேவை" என்றார். அதாவது, பா (கவிதை) வடிவம், பா (கவிதை) எழுத்து நடை, பா (கவிதை) அழகு, பா (கவிதை) இலக்கணம் எனப் படிப்பதோடு அடுத்தவர் கையாண்ட அடிகளைக் கையாளாமல் இருக்கவும் உதவும் என்றார். அவரது வழிகாட்டலுக்கு ஏற்ப, எப்படியோ எனது வாசகருக்கும் பயன்படும் என்பதால் இப்படித் தொகுத்தேன்.

அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.

காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!


"காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!" என எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

1.
நீ
என்னை
காதலிக்கத் தொடங்கியதுமே
என்னுள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி
நீ
என்னைப் பிரிந்ததுமே
அதுவும்
என்னை விட்டு
தொலைதூரத்திற்கு ஓடிப் போய்விட்டதே!

2.
கையில காசிருக்கும் வரை
கைகுலுக்கினாயே...
கையறுநிலை வந்ததுமே
கைநழுவி விட்டாயே...
கை கனத்தால் தான்
கைகுலுக்குவாய் என்றால்
நானே
கைகழுவிவிடுகிறேனே!

3.
கண்ணை
இமை காப்பது போல
என்னை
நீ காப்பாய் என்றாய்
நம்மி
உன்னை நானும் அணைத்தேன்
வெம்பி அழுகிறேன்
என் நீண்ட வயிற்றைக் கண்டு
நீயும்
எங்கேயோ ஓடி ஒளிந்ததாலே!

நீதிதேவதையின் கண்ணை ஏன் கட்டினார்கள்?


திரைப்படங்களிலே தான்
நீதிமன்று எப்படியிருக்குமென
நான் பார்த்தேன்!
கறுப்புத்துணியாலே
நீதிதேவதையின் கண்ணை
ஏன் தானோ
கட்டி வைத்திருக்கிறார்களென
எண்ணிப்பார்த்த நினைவிருக்கு!
கையூட்டு (லஞ்சம்) வேண்டும்
சான்று கூறுவோர் (சாட்சிகள்),
காவற்றுறையினர்,
சட்டவாளர்கள் கூறும்
கருத்துகளைப் பார்க்காமல் இருக்கவா
"நீதிதேவதையின்
கண்ணைக் கட்டினார்களோ!" என
திரைப்படக் கதை வசனமொன்று
நினைவிற்கு வருகிறதே!
உண்மையிலேயே
குற்றமிழைத்தவன் தப்பித்துக்கொள்ள
ஏதுமறியாதவனே
ஒறுப்புக்கு (தண்டனைக்கு) உள்ளாவதை
நீதிதேவதை பார்க்கக்கூடாதென
கறுப்புத்துணியால் கண்ணைக் கட்டியோர்
எண்ணிப்பார்த்தனர் போலும்!
சட்டம், நீதி என்பன
கையூட்டுக் (லஞ்சக்) கைகளிலா
சட்டம், நீதி பேணுவோரின் செயலிலா
ஆண்டவா - நீரும்
இங்குள்ளை நிலைமையைப் பார்க்கிறீரா?
எப்போதும் பத்திரிகைகளில்
நீதி கிடைக்கவில்லையெனத் தான்
செய்திகள் வெளிவருகிறதே!

முறித்துப்போடாதே!


தேவைப்பட்டவருக்கு மட்டும் தான்
எம்மை
நல்லவர்களாக அடையாளப்படுத்த முடிகிறது
பயனீட்ட விரும்புவோர் மட்டும் தான்
எமக்கு மதிப்பளிக்கின்றனர்
தன்னைப் போல
நாமும் என்றெண்ணியவர்கள்
இன்னும்
அதிகம் விரும்பலாம்
இவர்களை
ஒருபோதும் முறித்துப்போடாதே
இவர்களால் தான்
உலகமே
உன்னைக் கண்டுகொள்கின்றது!

நல்ல பெயர் வாங்க...

பள்ளியில் படிக்கையில்
வள்ளியின் எழுதுகோலைப் பறிக்க
ஆசிரியர் அடிக்க
எனக்குக் கிடைத்ததோ
கெட்ட பெயர்!
தெருவில விழுந்து கிடந்த
தருணியைத் தூக்கிக் கொண்டு போய்
மருத்துவரிடம் காட்டி
சுகமடைய உதவியதால்
ஊர் கூடி வாழ்த்தியதால்
எனக்குக் கிடைத்ததோ
நல்ல பெயர்!
அன்று
நான் நினைத்தேன்
அப்பா, அம்மா வைத்தது
நல்ல பெயர் என்றே...
ஆனால், நேற்று
நொடிப் பொழுதில் கிடைப்பது
கெட்ட பெயர் என்றும்
நல்ல பெயர் எடுக்க
நெடுநாள் காத்திருக்க வேண்டுமென
நானறிந்தாலும் கூட...
நம் செயலால்
நன்மை பெற்றோர் கூறும்
நன்றியறிதலே
நற்பெயரைத் தருகிறதென

இன்று தான் படித்தேன்!