Translate Tamil to any languages.
7-ஊடகங்களும் வெளியீடுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7-ஊடகங்களும் வெளியீடுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 மார்ச், 2025

ஊடகங்களில் தவறு செய்தால் சிக்கல் வரும்

 ஊடகங்களில் பணியாற்றுவது என்பது கத்தியின் கூர் விளிம்பில் கால் வைத்து நடப்பது போன்று இருக்கும்.  இது அச்சு ஊடகத்திலும் சரி மின் ஊடகத்திலும் சரி இன்றைய சமூக ஊடகத்திலும் சரி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 


எனவே யூடியூப், டிக்டாக் ஊடாக எந்த காட்சி அமைப்பையும் வெளியிடும் போது மாற்றாரைப் புண்படுத்தும் படி வெளியிடுவதாய் இருக்கக்கூடாது. உலகம் உங்களை ஒரு நாள் ஒதுக்கி வைக்கும். சட்டம் ஒரு நாள் உங்களை சிறையில் அடைக்கும். ஆகவே,  நீதி, தர்மத்தைக் கடைப்பிடித்து ஊடகங்களில் பணியாற்றுவது தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

 

youtuber ஒருவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக இப்பதிவைப் பகிருகின்றேன்.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....

என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே!



இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
எல்லோருக்கும்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மின்நூல் வெளியீட்டுப் பணிகளில் நானிருந்தாலும் மின்நூல் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும்
(http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html) நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்" என்றவாறு வைஷாலி வாசகர் வட்டம் வெளியிட்ட பதிவு எனக்குப் பிடித்திருந்தமையாலும் தங்களுடன் பகிருகிறேன்.

வைஷாலி வாசகர் வட்டம்: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ...: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்":- http://freetamilebooks.com/ நீங்கள் எழுதிய உங்க...

என் உயிரிலும் மேலான வலைஉறவுகளே!
இப்பதிவினைப் படித்த பின் வலைப்பதிவர்கள் எல்லோரும் மின்நூல்
வெளியிட முன்வாருங்கள்!

ஞாயிறு, 21 மே, 2017

ஊடகங்களில் மருந்துப் பெயர்களை வெளியிடலாமா?

அச்சு ஊடகங்களை விட, மின் ஊடகங்களைப் பலர் பாவிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான் கரணியம் (காரணம்) ஆகிறது. எப்படி இருப்பினும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் குறிப்பிடுவதால் நன்மை, தீமை இருக்கலாம். ஆயினும், அதிகம் தீமை இருப்பதாகப் பேசப்படுகிறது. 

இது பற்றிக் கேட்ட போது "தன் (சுய) மருத்துவத்தைத் தூண்டாத வகையில் எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவிக்கலாம்" என்று மருத்துவர் ஒருவர் எனக்கு மதியுரை (ஆலோசனை) தந்துள்ளார். இப்பதிவிலும் எடுத்துக்காட்டாக எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவித்த பதிவுகளைப் பகிர்ந்துமுள்ளேன்.


எடுத்துக்காட்டு - 01
மேற்படி இணைப்பில் "மருத்துவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்..., அது Urinary infection க்கு தலைசிறந்த மருந்து." என்றும் குறித்த மருத்துவரைத் தொடர்பு கொள்வதற்கான முகவரியையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 'சிறுநீரகக் கட்டி' நோய்க்குக் குறித்த மருத்துவரை நாடினால் சுகப்படுத்தலாம் எனக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 02
மேற்படி இணைப்பில் டாக்டர் மு.அருணாச்சலம் அவர்களின் பதிவாக குங்குமம் "டாக்டர்" பகுதியில் 'கர்ப்பத்தடை மருந்துகள்' பற்றி அலசப்பட்டுள்ளது. "மாதவிடாய் தள்ளிப்போகத் தரும் மருந்துகளை அடிக்கடி எடுப்பதனால், அதிக ரத்தப்போக்குக் காரணமாக கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வரலாம். வேண்டாம்!" என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கையுடனான மருத்துவ மதியுரை எனலாம்.

எடுத்துக்காட்டு - 03
மேற்படி இணைப்பில் யாழ்பாவாணன் அவர்கள் மருத்துவருக்குப் பொய்யுரைத்தல், மாதவிலக்கு வருவதைத் தள்ளிப்போடும் மருந்து, ஆண்-பெண் வயாக்ரா, பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ள உதவும் மருந்து ஆகியவற்றைக் கூறி "மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்." என எச்சரிக்கிறார். அதாவது, மருந்து என்றால் மருத்துவரை நாடி மருத்துவரின் மதியுரைப்படியே பாவிக்கலாம் என்கிறார். மேலும், "மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது" என்கிறார்.

எடுத்துக்காட்டு - 04
மேற்படி இணைப்பில் "தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!" என மருத்துவரை நாடாமல் மருந்துக் கடைகளில் மருந்து வேண்டி உண்ணும் சூழலைச் சுட்டிக்காட்டி, கேட்போர் கேட்டதும் மருந்துகளை விற்போரையும் சாடி, "பொருத்தமான, நல்ல மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்பதும், சிகிச்சை பெறுவதும்தான் ஆரோக்கியம் காக்க உதவும்." என வழிகாட்டப்படுகிறது. அதாவது, "நோய்கள் நெருங்கியதும் நல்ல மருத்துவரை நாடிப் போவதே சரி." என்ற செய்தியைக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 05
மேற்படி இணைப்பில் "விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!" என்ற விகடன் பதிவைப் படியுங்கள். "நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!" என எச்சரிக்கை செய்கின்றனர். இப்பதிவு ஓர் சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம் என்பேன்.

மேற்காணும் எடுத்துக்காட்டுகளை வைத்துக்கொண்டு அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாமா? எடுத்துக்காட்டு - 04 உம் எடுத்துக்காட்டு - 05 உம் இதற்கான நல்ல பதிலைத் தந்திருக்கும். அதில் "காய்ச்சல், பீய்ச்சல்" என்றாலே கூகிள் தேடுபொறியில் மருந்துகளைத் தேடிப் பாவிக்கிறார்கள் எனின் "நோயும் அந்நோய்க்கான மருந்தும்" மருத்துவர்கள் அல்லாத நாம் பகிர்ந்தால் அப்படியே குடித்துச் சாகவும் பலர் இருக்கிறார்களே! ஆயினும் மருத்துவர்கள் வெளியிடும் பதிவுகளில் மருந்துப் பெயர்களைத் தந்திருந்தாலும் "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி பாவிக்கலாம்." என்று எழுதியிருப்பார்களே!

எடுத்துக்காட்டுக்கு வயிற்றோட்டம் வந்திட்டுது என்றால் கோப்பி அல்லது 5ml தேன் குடிக்கிறோம். 5ml தேன் குடித்ததும் சிறிது நேரத்திற்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. அல்லது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடிக்கக்கூடாது. அதாவது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடித்தால் வயிற்றோட்டம் அதிகரிக்கும். வயிற்றோட்டத்தை அதிகரிக்கவோ வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தவோ 5ml தேன் பாவிக்கின்ற முறையில் தான் இருக்கு. அதேவேளை குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா எவருக்கு '5ml தேன்' வழங்கலாம் என்பதில் கூடச் சிக்கல் இருக்கே!

அதேபோலத் தான் காய்ச்சல் என்றால் 'பனடோல்' அல்லது 'பரசிற்றமோல்' எனப் பல மருந்துகள் இருக்கலாம். "இம்மருந்துகளை எவருக்கு (குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா) எவ்வளவு வழங்கலாம்; எத்தனை தடவை வழங்கலாம்; எத்தனை பக்க விளைவுகள் இருக்கு." என்பதை அறியாமல் பதிவுகளில் பகிருவது பாதிப்பையே தரும். ஆகையால் மருத்துவராயினும் சரி படைப்பாளியாயினும் சரி பதிவர்களாயினும் சரி "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி மருந்துகளைப் பாவிக்கலாம்" என்று மருந்துப் பெயர்களைப் பகிரலாம்.

நோய் சுட்டி, அதற்குத் தீர்வாக மருந்துப் பெயர்களை முன்வைத்தால் வாசகர் தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டும் என்பதால் மருந்துப் பெயர்களைப் பகிருவதை ஏற்கமுடியாது. நோயாளியின் உடல்நிலை மற்றும் நோயின் அறிகுறியைத் தீர்மானிப்பவர் மருத்துவரே! மருத்துவரின் அறிவுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டும்.

இந்த இந்த நோய்களுக்கு இந்த இந்த மருந்துகளைப் (மருந்துப் பெயர்களைச் சுட்டி) பாவிக்கவேண்டாமென எச்சரிக்கலாம். இது பற்றி மருத்துவரின் அறிவுரையை நாடவும் எனக் குறிப்பிடலாம். எச்சரித்த பின்னும் மருந்துகளை வேண்டிப் பாவிப்போர் தான் குற்றவாளி எனலாம்.

முடிவாக "தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டாமலும் மருத்துவரின் மதியுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டுமென எச்சரித்தும் குறித்த மருந்துகளைப் பாவிப்பதனால் ஏற்படும் கேடுகளை வெளிப்படுத்தியும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாம்." என்பதே என் கருத்து.

திங்கள், 3 ஏப்ரல், 2017

என் பதிவுக்குக் கிட்டிய தாக்குரை (Condemn)


முகநூல் (Facebook) பக்கம் எட்டிப் பார்த்ததால் - என்
வலைப்பூப் (Blog) பக்கம் எட்டிப் பார்த்தவரால் - என்  
பதிவுக்குக் கிட்டியதே தாக்குரை (Condemn)! - அதில்
வேண்டிக் கட்டியது நானென்று அறிவீரோ!

இந்தப் பதிவுக்கு முன் முகநூலில் (Facebook) நடந்ததைச் சொல்கிறேன். வழக்கம் போல முகநூல் (Facebook) பக்கம் எட்டிப் பார்த்த வேளை "வடக்கில் ''ஏறாவூர்'' எங்கு உள்ளது?" என்ற பதிவைக் கண்டேன். உண்மையில் ''ஏறாவூர்'' என்ற ஊர் மட்டக்களப்பு நகரிலிருந்து 10km இற்கு அப்பால் இருப்பதை நானறிவேன். ஆயினும் குறித்த பதிவுக்கு

"இடம் பெயர்ந்த மக்கள்
மீளக் குடியமராத இடங்கள்
எல்லாமே - அவர்களுக்கு
ஏறாவூர் தானே!
இவை
வடக்கிலும் கிழக்கிலும் இருக்கே!"

என்றவாறு பதில் கருத்தும் இட்டிருந்தேன். இந்த நிலை தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை. இதனைச் சுட்டிக் காட்டவே அப்படி எழுதியிருந்தேன். இதனைப் படித்த ஏறாவூர் படைப்பாளிகள் எவரேனும் என்னைத் தாக்கவில்லை.

ஆயினும், இலங்கைத் தமிழர் வாழ்க்கையை இரண்டு வரிகளில் முடக்காமல் கொஞ்சம் நீட்ட முயன்றேன். விளைவாக "ஈழத் தமிழரின் ஏறாவூர்கள்" என்ற தலைப்பில் (http://www.ypvnpubs.com/2017/03/blog-post_28.html) ஒரு பதிவை எனது வலைப்பூவில் (Blog) இட்டிருந்தேன். மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி அதனைப் படியுங்கள்; அத்துடன் என் பதிவுக்குக் கிட்டிய தாக்குரையையும் (Condemn) படியுங்கள். அதற்கான என் பதிலுரையையும் படியுங்கள். பின்னர் இப்பதிவைத் தொடருங்கள்.

திறனாய்வு (Criticism)/ விமர்சனம் என்றால் பதிவின் நல்லன, கெட்டன சுட்டி பயனுள்ளது, பயனற்றது விளக்கி பதிவரை நோகடிக்காமல் வாசகரை நிறைவடைய வைக்கும் கண்ணோட்டமே! இதனால் பதிவரும் பயன்தரும் பதிவை ஆக்குவார்; வாசகரும் சிறந்த பதிவைத் தேடி நாடுவார்.

தாக்குரை (Condemn)/ கண்டனம் என்றால் பதிவை நன்றாக ஊடுருவி உண்மைக்கு முரணானதை, நம்பிக்கை தராதவற்றை, வாசகரை ஏமாற்றுவதைப் பொறுக்கி எடுத்து இவற்றால் குறித்த பதிவு இலக்கியமாகாது, வரலாற்றை மாற்ற இயலாது, வாசகர் உள்ளத்தை மாற்ற முயலாதீர் என எச்சரிப்பதே! இதனால் பதிவர் தான் சொல்ல வருகின்ற செய்தியை நம்ப வைக்க, அதற்கான உண்மைச் சான்றை முன்வைக்க முடியும்; மக்களை முட்டாளாக்க இயலாது.

ஏன் எழுதுகிறோம்? வாசகரை நிறைவடையச் செய்வதோடு, நாமும் உள்ளத்தில் அமைதி பெறவே! அப்படி எழுதுவதால், எழுதியவை இலக்கியத் தரமாக வேண்டும்; மக்களாய/குமுகாய (சமூக) முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும். அதற்குத் திறனாய்வும் (Criticism) தாக்குரையும் (Condemn) நெறிப்படுத்துகிறது எனலாம்.

இந்த எண்ணங்களை, எந்த உள்ளங்களும் கருத்திற்கொண்டு மாற்றார் பதிவுக்குக் கருத்திட்டால், உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாமே! உங்கள் கருத்துகள் நல்ல பதிவர்களை உருவாக்க உதவுவதோடு, வாசகர்கள் நிறைவடையவும் ஊருலகம் முன்னேறி நன்மையடையவும் ஊக்க மருந்தாக இருக்கட்டுமே!

இனி எனது "ஈழத் தமிழரின் ஏறாவூர்கள்" (http://www.ypvnpubs.com/2017/03/blog-post_28.html) என்ற பதிவுக்குக் கிடைத்த கருத்தை எண்ணிப் பாருங்கள். அதனைத் தாக்குரையாக (Condemn) நான் ஏன் கருத வேண்டும்? சற்று நீங்களும் எண்ணித் தான் பாருங்களேன்.

என்னடா புதுக் கதைகள் விடுகிறீர்கள்??.
சீதை, இராவணன், அனுமார் கதை கேள்விப்பட்டதுண்டோ?.
இது எத்தனை ஆண்டுகளுக்கு முன் நடந்தது?.
இந்த "ஏறாவூர்"க்கு
என்ன அர்த்தம் கொண்டு இதைப் பிரசுரித்துள்ளீர்கள்?.
இந்தச் சுத்தத் தமிழ் ஊர் மட்டு மாநகருக்கு வடக்கே
8 மைல் தொலைவில் இன்றும் உள்ளதே!!.
தயை பண்ணி, யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்"
எழுதுபாவையெல்லாம் - கணக்கில்
எடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் தாக்குரையாகக் (Condemn) கருதியதையே மேலே காண்கிறீர்கள்.

இந்துக்கள் வணங்கும் சிவபெருமானின் கணக்கப்பிள்ளை (Accountant) தான் குபேரன். குபேரன் தான் இலங்கையை இராவணனுக்கு அன்பளிப்புச் செய்தவராம். இலங்கை அரசன் இராவணன் ஒரு தமிழன். அயோத்தி அரசன் இராமன் ஓர் ஆரியன். இந்தக் கதை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னயது தான். "முழு இலங்கையும் தமிழருடையதே! சிங்களவர் இலங்கைக்கு வந்தேறு (விஜயன் மற்றும் 600 ஆள்களுடன்) குடிகளே!" என்பதனை வாசகர் மீட்டுப் பார்க்கவே இளையோடி இருந்தேன்.

உண்மையான ஏறாவூரைப் பற்றியறிய விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் வெளியான பதிவின் இணைப்பை https://ta.wikipedia.org/s/ufc வழங்கி இருந்தேன். அதில் ஏறாவூரைப் பற்றிய தகவல் இருக்கிறதே! அதனைப் படித்து வாசகர் எல்லோரும் "ஏறாவூர்"க்கு என்ன அர்த்தம் என்றறிவார்களே!

"1944 இலிருந்து தமிழர் வாழ்விடங்களைச் சிங்களவர் கைப்பற்றியதோடு அவ்விடங்களில் வாழ்ந்த தமிழரை வெட்டிக்கொத்தி வெளியேற்றியுமிருந்தனர். அவ்விடங்களில் இருந்து வெளியேறிய தமிழர், மீளவும் இதுவரை அவ்விடங்களிற்குச் சென்று வாழ முடியவில்லையே! அதனால் அவ்வூர்கள், அங்கு வாழ்ந்த தமிழருக்கு ஏறாவூர்களே! அதாவது, தமிழர் ஏறி இறங்காத ஊர்களை ஏறாவூர்கள் (தமிழர் ஏறாத ஊர்கள்) என விழித்திருந்தேன்." என்பதே "என்னடா புதுக் கதைகள் விடுகிறீர்கள்??." என்பதற்குப் பதில் என்பேன்.

ஈற்றில் "யாழ்ப்பாண 'அரைவேக்காடுகள்' எழுதுபாவையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்" என்றிருப்பதே என்னைத் தாக்கிய வரிகளாகும்.
எனது புனைபெயர் யாழ்பாவாணன் என்பதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரெனக் கருதியிருக்கலாம். 'அரைவேக்காடுகள்' என்றால் அரைகுறையாகப் படித்தவர்கள் எனக் கருதலாம். நான் நுனிப்புல் மேயும் ஆடு, மாடுகளைப் போலக் கொஞ்சம் படித்திருக்கலாம். அப்படியாயின்
"யாழ்பாவாணன் என்ற அரைவேக்காடு
எழுதுபாவையெல்லாம்
கணக்கில் எடுக்கவேண்டாம்"
என்று எழுதியிருந்தால் நான் பணிவோடு ஏற்றிருப்பேன். ஆனால்,
"யாழ்ப்பாண 'அரைவேக்காடுகள்'
எழுதுபாவையெல்லாம்
கணக்கில் எடுக்கவேண்டாம்"
என்று எழுதியிருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது, "யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழுகின்றவர்கள் எல்லோருமே அரைகுறையாகப் படித்தவர்கள்" என்று பொருள்கொள்ளும் படி எழுதியமை தான் என்னைத் தாக்கிய வரிகளாகும்.  உண்மையில் நானொருவன் படிக்காதவன் என்பதற்காக, எனது யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எல்லோருமே படிக்காதவர்கள் என்றாகி விடுமா?

கருத்திடும் போது பதிவு எழுதியவரை (என்னை) எப்படியும் தாக்கலாம். அதற்காக எனது யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எல்லோரையும் தாக்கிவிட முடியாதே! அப்படி 'அரைவேக்காடுகள்' என்று சொல்லுமளவுக்கு நான் என்ன தான் எழுதிவிட்டேன்.
"ஜ.நா. அவையோ (சபையோ)
வெளிநாட்டவரோ (வெள்ளைக்காரரோ)
எப்ப தான்
தமிழர் ஏறாத ஊர்களுக்கு (ஏறாவூர்களுக்கு)
ஏறி இறங்கி வாழ வைப்பார்கள்?" என்று
எழுதியமையால் தான் இந்நிலையோ!

"யாழ்ப்பாண 'அரைவேக்காடுகள்' எழுதுபாவையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்" என எழுதிய அறிஞருக்கு நான் வழங்கிய பதிலைக் கீழே படிக்கலாம்.

யாழ்பாவாணன் எழுதிய வரிகளில்
ஐயாவுக்குக் குழப்பம் வந்திருக்குப் போல...
இலங்கை
தமிழரின் நாடென்பதை உறுதிப்படுத்தவே
இராவணன் ஆட்சி செய்த நாடென்றேன்...
ஈரேழு தீவுகளைக் கொண்டதால்
ஈழம் என்றழைத்தார்கள் என்றேன்...
ஏறாவூரைப் பற்றியறிய
இணைப்பும் கொடுத்திருந்தேன் ஐயா!

நான் சொல்ல வந்த செய்தி
1944 ஆம் ஆண்டிலிருந்து
சிங்களவர் பறித்தெடுத்த
தமிழர் ஊர்களில்
இன்றுவரை எந்தத் தமிழரும்
ஏறி இறங்காத ஊர்களாக
எத்தனையோ இருக்கு ஐயா!
அவை தான்
நான் சுட்டிக் காட்டிய
தமிழ் பேசும் (தமிழர்+முஸ்லீம்கள்) மக்கள்
ஏறி இறங்காத ஊர்கள்
ஏறாதவூர்கள் என்று விழித்திருந்தேன்!

உங்களால் இந்தச் செய்தியை
உள்வாங்க முடியாதா ஐயா!
எனது பா நடையில்
நான் சொன்ன செய்தியை
அறிய முடியாத உங்களால்
எப்படி ஐயா!
"தயை பண்ணி,
யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்"
எழுதுபாவையெல்லாம்
கணக்கில் எடுக்கவேண்டாம்
எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று
அடித்துச்சொல்ல முடிந்தது?

இந்தப் பதிவிலும் சரி
எந்தப் பதிவிலும் சரி
யாழ்பாவாணன் ஆகிய நான்
எந்த ஆளையோ எந்த ஊரையோ
இழிவுபடுத்திப் பதிவெழுதி
புகழ் சேர்க்க வேண்டிய
இழிவானவன் அல்லன்...
என் பேரனைப் (அப்பாவின் அப்பா) போல
தமிழில் பண்டிதராகப் படித்திரா விட்டாலும்
நானறிந்த தமிழில் நல்லன பகிரும்
எளிமையான ஒருவனே!

என் நிலை அறியாது
யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்" என
யாழ்ப்பாண மாவட்ட மக்களை
இழிவுபடுத்துவது அழகல்ல...
என் பெயரறியாத நிலையால்
தாங்கள் குழம்பியிருந்தாலும்
யாழ்பா + வாணன் = யாழ்பாவாணன்
என்றால்
யாழ்பாணத்தில் வாழ்பவன்/வசிப்பவன்
என்றும்
யாழ் + பாவாணன் = யாழ்பாவாணன்
என்றால்
யாழ்பாணத்தில் வாழும் பாவலன்/கவிஞன்
என்றும்
பொருள்படத் தான் பெயரிட்டேன்
அதற்காக
யாழ்ப்பாண "அரைவேக்காடுகள்" என
யாழ்ப்பாண மாவட்ட மக்களை
இழிவுபடுத்துவது அழகல்ல...

புதன், 30 நவம்பர், 2016

மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவையா?

அச்சடித்த (Printed) வெளியீடுகளை அல்லது மின் (Electronic) வெளியீடுகளை அதாவது மின்நூல்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஆவணப்படுத்திப் பகிருவதே இலக்கு என்பீர்கள்! எப்போதாவது வெளிவந்தவற்றைத் தொகுத்து அச்சடித்த (Printed) அல்லது மின் நூல்களாக (eBooks) வெளியிடுவதால் வாசகர் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் படிக்க முடிகிறது. அவ்வாறு படிக்கின்ற போது நூலாசிரியரின் அறிவூட்டலை வாசகர் நிறைவோடு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனடிப்படையில் அறிஞர்கள் தமது அறிவூட்டலை வாசகர் பக்கம் கொண்டு செல்லவே இவ்வாறான வெளியீடுகளைச் செய்கின்றனர்.

கடந்த காலங்களில் அச்சடித்த (Printed) நூல்கள் முதன்மை பெற்றிருந்தாலும் இன்றைய காலங்களில் (1995 இன் பின்) மின் நூல்கள் (eBooks) புழக்கத்திற்கு வந்துவிட்டன. அச்சடித்த (Printed) நூல்களை எங்கும் வைத்திருந்து பேணலாம். ஆயினும் மின் நூல்களை (eBooks) அதற்கான சேமிப்பகங்களிலேயே வைத்துப் பேணமுடிகிறது. எப்படி இருப்பினும் இருவகை நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கான வாசகர்களும் பயன்பெறுவதைக் காணலாம். ஆயினும் இன்றைய ஆள்களிடையே வாசிப்புப் பழக்கம் சற்றுக் குறைந்து கொண்டே செல்கிறது. அதாவது, அச்சு ஊடக வாசிப்புப் பழக்கம் குறைந்தாலும் மின் ஊடக வாசிப்புப் பழக்கமும் இருப்பதை நினைவிற் கொள்வோம்.

மின் நூல்கள் (eBooks) வலை வழியே தான் அதிகம் உலாவுகின்றன. வலை வழியே என்றால் நடைபேசிகள், கணினிகள் (Smart Phone, Tab Phone, Mini Laptop, Laptop, PC) எனப் பல கருவிகளின் துணையுடன் பார்வையிட முடிவதால் வாசகர் நாட்டம் கொள்கின்றனர். வலை வழியே அன்பளிப்பு (இலவச) வெளியீடுகள் அதிகம் என்பதால் வலை வழியே வாசிப்புப் பழக்கம் கூடுகிறது எனலாம். இதனடிப்படையில் மின்நூல் (eBooks) வெளியீடுகள் முதன்மை பெறுகின்றன.

தமிழறிஞர்களே! உங்கள் அறிவூட்டலை மின் நூல்கள் (eBooks) வழியே வாசகர்களுக்கு வழங்க முன்வந்தால், உலகெங்கும் நற்றமிழைப் பேணமுடியும். உங்கள் முயற்சியால் தாங்கள் பெற்ற அறிவை (யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற) உலகெங்கும் பரப்பிப் பேண முடியுமே! எனவே, மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவை என்பதை உணருவோம். ஆகையால் ஒவ்வொரு தமிழறிஞரும் தானாகவே (சுயமாகமே) மின்நூல்களை (eBooks) ஆக்கி வெளியிடக் கற்றுக்கொண்டால் நன்மை அதிகம் என்பேன். இதற்கென இரண்டு படைப்புகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

1. "மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்" என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும். அதன் பின் ஒளிஒலி (Video) இணைப்பைப் பார்க்கையில் மின்நூல் (eBooks) ஆக்கம் பற்றிய தெளிவை அதிகம் பெறலாம்.

2. மேற்காணும் எனது பதிவைப் படித்த பின் கீழுள்ள ஒளிஒலி (Video) இணைப்பினூடாக அறிஞர் சிறிநீவாசன் கற்பிற்பதைப் பொறுமையுடன் பார்த்துக் கேட்டுப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். "மின்னூல் உருவாக்குவது எப்படி?" என்ற தலைப்பில் அறிஞர் வைசாலி செல்வம் அவர்கள் தனது வலைப்பூவில் (http://ksrcasw.blogspot.com/2016/11/blog-post_29.html) பகிர்ந்த ஒளிஒலி (Video) இணைப்பையே நானும் இங்கே பகிருகிறேன்.



தமிழ் மொழிமூல வெளியீடுகள் பல ஊடகங்களிலும் உலாவுகின்றன. அதிலும், வலை வழியே தமிழ் மொழிமூல வெளியீடுகள் அதிகம். இவற்றிலும் பிறமொழிக் கலப்பற்ற நற்றமிழைப் பேணுமாறு உலகெங்கும் பல அறிஞர்கள் முழங்குவதைக் காணலாம். அவர்களது முழக்கங்களை மின்நூலாக்கி வெளியீட யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் உதவும். அதேவேளை நம்மாளுங்க பக்கத்தில் வாசிப்புப் பழக்கம் மேலோங்க முயற்சிகளை மேற்கொள்வோம். இதனடிப்படையில் எமது " மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்" என்ற https://seebooks4u.blogspot.com/ வலைப்பூ ஊடாக இப்பணிகளைத் தொடரவுள்ளோம்.

புதன், 17 ஆகஸ்ட், 2016

வெற்றிகரமாக வலைப்பூ நடாத்தலாம் வாங்க...

இப்பவெல்லாம் வலைப்பூப் பதிவர்கள் முகநூல் பக்கம் ஓட்டம் பிடிக்கையில், வலைப்பூப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிருவதனால் நன்மை கிட்டாது. ஆயினும் முகநூல் பக்கப் பதிவர்கள் வலைப்பூப் பக்கம் ஓட்டம் பிடித்து வரலாம். அவர்களுக்காகவும் புதிய வலைப்பூப் பதிவர்களுக்காகவும் வலைப்பூக்களில் பற்று வைத்துத் தொடர்ந்து வலைப்பூ நடாத்துவோருக்காகவும் சில வழிகாட்டல் குறிப்புகளைத் தரலாம் என விரும்புகிறேன்.

"லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ்!" என்ற தலைப்பில் நண்பர் பகவான்ஜி அவர்கள் தமது ஜோக்காளி தளத்தில் வலைப் பதிவராகத் (ஆங்கில) தொடங்கி முழுநேர எழுத்தாளர் ஆகிய ப்ரீத்தி செனாய் அவர்களின் வலைப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிர்ந்திருந்தார். (முழுமையாகப் படிக்க அவரது இணைப்பு: http://www.jokkaali.in/2016/07/blog-post_17.html, இப்பதிவு இவரது தளத்தில் முன்னரும் வெளிவந்திருக்கிறது.) நண்பர் பகவான்ஜி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்த வண்ணம், அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

"ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்கக் கூடியதாகவும். அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். எழுதச் சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். போலித் தனம் கூடாது. உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப்' கொடுத்து எழுதவே கூடாது. பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும், எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம், எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று! வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அதை நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம், வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும். மற்ற எல்லாமே உங்களைத் தேடி வரும்!" என வலைப் பதிவர் ப்ரீத்தி செனாய் தெரிவித்திருப்பதாக நண்பர் பகவான்ஜி அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்.

நானும் ஏதாச்சும் சொல்ல வேண்டுமே என்பதற்காக, எதையாவது சொல்லி உங்களிடம் சொல்லெறி வேண்டித் தாக்குப்பிடிக்க இயலாமையால் எனது பட்டறிவையே (அனுபவத்தையே) சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றியோ என்னுடையதைப் பற்றியோ நான் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அடுத்தவரைப் பற்றியோ அடுத்தவருடையதைப் பற்றியோ நான் சொல்ல எனக்கு உரிமை இல்லை.

ஆயினும் அடுத்தவரின் அடையாளத்தைச் சுட்டிக்காட்டிப் பகிர இயலுமே! எடுத்துக் காட்டிற்காக மேலே வலைப் பதிவர் ப்ரீத்தி செனாய் தெரிவித்திருப்பதாக நண்பர் பகவான்ஜி அவர்கள் அறிமுகம் செய்திருந்தை; எப்படி அவர்களது அடையாளத்தை மூடி மறைக்காமல் பகிர்ந்தேனோ, அப்படி நீங்களும் அடுத்தவரின் பதிவைப் பகிரலாமே! அப்படி இன்றி அடுத்தவரின் பதிவைப் பகிர்ந்தால் 'இலக்கியக் களவு' செய்ததாக உங்கள் மீது பழி விழும்.

அச்சு ஊடக எழுத்துகளில் எழுத்துடன் இயங்காத/ பேசாத படங்கள் இணைக்கலாம். ஆனால் மின் ஊடக (வலைப்பூ - Blog) எழுத்துகளில் இயங்காத/ பேசாத படங்கள், இயங்கும்/ பேசும் படங்கள், ஒலி இணைப்பு (Audio), ஒளிஒலி இணைப்பு (Video) எனப் பல இணைக்கலாம். எதுவாயினும் பதிவின் கருப்பொருளை விழுங்காது; பதிவின் கருப்பொருளுக்கு உயிரூட்ட உதவும் வகையில் அளவாக, அழகாக இணைக்கலாம்.

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் எதுவும் தமக்கெனத் தனி அடையாளத்தைப் பேணுகின்றன. அவற்றில், உங்கள் பதிவுகள் இடம்பெறுமாயின் அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆனால், வலைப்பூவில்(Blog) அதெல்லாம் கிடையாது. அதற்காக வலைப்பூவில்(Blog) பதிவுகளை இடுகை செய்த பின், அதன் இணைப்பைத் திரட்டிகளிலும் மக்களாய (சமூக) வலைத்தளங்களிலும் பகிருகிறார்கள். அதுவும் எனக்கு நிறைவைத் தரவில்லை.

'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற எனது வலைப்பூவிற்கான(Blog) தனி அடையாளத்தைப் பேண, நான் எவ்வளவோ முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. அதாவது, எனது வலைப்பூவை(Blog) வாசகர் கண்ணில் பட வைக்க வேண்டுமே! அதைவிட வாசகர் கண்ணில் பட்ட எனது வலைப்பூவில்(Blog) வாசகர் உள்ளம் நிறைவடையத்/ களிப்படையத்/ மகிழ்ச்சியடையத் தக்கதாக எனது பதிவுகளும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒவ்வொரு வாசகரையும் சுண்டி இழுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக வலைத் (கூகிள்) தேடுதலில் உங்கள் வலைப்பூ(Blog) புதிய வாசகர் கண்ணில் பட்டுவிடலாம். அவ்வேளை தங்களது பதிவின் தலைப்பு அவர்களை ஈர்த்தால் மட்டுமே உங்கள் வலைப்பூவிற்கு(Blog) அவர்கள் வர வாய்ப்புண்டு. அப்படி வந்த வாசகர் அடிக்கடி மீண்டும் வர வேண்டுமாயின், உங்களது பதிவின் தரம்/ தகுதி/ சிறப்பு அவர்களை ஈர்க்க வேண்டுமே!

உங்கள் வலைப்பூவிற்கான(Blog) தனி அடையாளத்தைப் பேண, நீங்கள் மற்றைய வலைப்பூக்களில்(Blog) உங்கள் அடையாளத்தைக் காட்ட வேண்டும். அதாவது, எனது 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற எனது வலைப்பூவிற்கு(Blog) வரும் அறிஞர்கள் தங்கள் சிறந்த கருத்துகளை (Comments) இட்டு தங்களை அடையாளப்படுத்துவர். அதன் சுவையறிந்து நானும் அவர்களது வலைப்பூவிற்குச்(Blog) சென்று கருத்துகளைப் (Comments) பதிவு செய்வேன். தமிழ்மணம் திரட்டி எனது தளத்தை இணைக்காத போதும் இவ்வழியிலேயே எனது வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்குகின்றேன்.

அடுத்தவர் வலைப்பூவிற்குச்(Blog) சென்று கருத்துகளைப் (Comments) பகிரும் வேளை, உங்களால் இயன்றளவு உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக கருத்துகளைப் (Comments) பகிருங்கள். அப்ப தான் உங்கள் ஆற்றல் ஏனைய புதிய வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்புண்டு. அதனடிப்படையிலேயே உங்கள் வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்க முடியும் என்பேன்.

வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்கும் நோக்கில் கருத்துகளைப் (Comments) பகிரப் போய் சொல்லெறியும் வேண்டியிருக்கிறேன். அதாவது, சிறந்த பகிர்வு அல்லது அருமையான பதிவு எனப் பல நூறு வலைப்பூக்களில்(Blog) கருத்துகளைப் (Comments) பகிர்ந்து வந்திருக்கிறேன். இதனைக் கண்ணுற்ற நண்பர்கள் இருவர் கீழுள்ளவாறு சொல்லெறி விட்டார்கள். அதனைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அண்ணே! என்னண்ணே!
எவர் வலைப்பூவிலும்
ஒரே கருத்தையே
அப்பிப் பூசி மெழுகி வாறியளே!
அவங்க அதைப் படிச்சிட்டு
உங்களை
காறித் துப்பிக் கழிச்சுப் போடுவாங்கண்ணே!

இப்படி ஒருவர் மின்னஞ்சலில், எனக்கு அருமையாக வழிகாட்டினார். அடுத்தவரோ, அருகில் நின்றிருந்தால் கன்னத்தில் அறைந்திருப்பார். அவரது மின்னஞ்சலில் கீழ்வருமாறு இருந்தது.

எனது வலைப்பூவிற்கு(Blog) வாருங்கள்
கருத்து (Comment) என்று சொல்லி.
எனது ஒவ்வொரு பதிவிலும்
'சிறந்த பகிர்வு' எனப் பதிவிடாமல்
ஒவ்வொரு பதிவையும்
பொறுமையாக வாசித்த பின்
பெறுமதியான கருத்து (Comment) இட வருவதாயின்
எனது வலைப்பூவிற்கு(Blog) வாருங்கள்
இல்லையேல்
எனது வலைப்பூவிற்கு(Blog)
வரவேண்டாமென எச்சரித்தும் இருந்தார்!

இதற்குப் பிறகு நான் கொஞ்சம் திருந்தி இருக்கிறேன். இனியும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகத் திருந்தி விடுவேன். வலைப்பூவிற்கான(Blog) வருகையாளர்களைப் பெருக்கும் நோக்கில் பிறரது தளங்களிற்குப் போய் கருத்துகளைப் (Comments) பகிரலாம். ஆனால், அத்தளப் பதிவர்களை நோகடிக்காமல் தங்கள் ஆற்றலைப் பகிர்ந்து வெற்ற பெற எனது வாழ்த்துகள்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?

ஒரு காலத்தில வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) வழியே கலைப் படைப்புகளைப் பகிர்ந்த நம்மாளுங்க; பின்னர் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) கலைப் படைப்புகளைப் பகிர்ந்தனர். ஆனால், இன்றோ குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு ஊடாகக் கலைப் படைப்புகளைப் பகிருகின்றனர்.

1. வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஊடாகக் கலைப் படைப்புகளைப் பேணுவதால் ஒருவரது எல்லாப் பதிவுகளையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) அப்படிக் காண்பிக்க இயலாதே!

2. வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஊடாகக் கலைப் படைப்புகளைப் பேணுவதால் ஒரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் ஒரே நேரத்தில் ஒப்புவிக்கலாம். ஆனால், மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) அப்படி ஒப்புதல் அளிக்க முடியாதே!

இப்படிப் பல ஒப்பீடுகள் உள்ளன. அது பற்றி, எனது கீழ்வரும் பதிவுக்கு அறிஞர்கள் வழங்கிய கருத்துகளை படித்துத் தெளிவு பெறுவீர்கள் என நம்புகின்றேன்.
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா? என்றால்; அதுவும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) பகிருவதை விட கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? அதாவது, கையெழுத்துச் சஞ்சிகை ஆக்கிய பின் தெரிந்த நட்புகளுடன் பகிருவது போல குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) உள்ளவர்களுடன் பகிருவதாக இருக்குமே! கையெழுத்துச் சஞ்சிகை ஆவது ஆவணப்படுத்தலாக இருக்கும்; குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) பகிருவது அப்படி இருக்காதே! எப்படியோ ஒரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிப்படுத்த வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) போன்றன சிறந்தது எனலாம்.

இதன் காரணமாகவா குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) இணைந்தவர்கள்; இணைந்த வேகத்திலேயே குழுவை விட்டு ஓடுகிறார்கள்? இல்லை! கீழுள்ள சூழ்நிலைகளும் பலரைக் குழுவை விட்டு விலக வைக்கலாம்.
1. அடிக்கடி தகவல் வர நடைபேசி விரைவாக மின்னிறக்கம் அடைகிறது.
2. நீண்ட பதிவுகளை நடைபேசி வழியே படிக்கக் கண் வலிக்கும்.
3. ஒளிப்படங்கள் (Photo), ஒளிஒலிக் கோப்புகள் (Video) நடைபேசிச் சேமிப்பகத்தை நிரப்பிவிட; நடைபேசியின் வேகம் குறைகின்றது.
4. எல்லோரும் தெரிந்தவர்கள் தானே என எண்ணி நற்றமிழ் பேணாது, பெறுமதியற்ற சொல்கள், வரிகள் பாவிப்பதும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

கலை ஆற்றலை வெளிப்படுத்த வலை ஊடகங்களை விட்டு, நடைபேசி வழியே குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வைப் பலர் நாடுகின்றனர். ஆங்கே நடப்பதென்ன? "கலையின் பெயரில் வார்த்தை ஆபாசம் பேசும் ஐந்தறிவு மிருகங்கள் (http://palainet.com/?p=2208)" என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வின் ஊடாகத் தேவையற்ற சொல்களைக் கையாள்வது கலையை மதிக்காமை எனலாம். இந்தச் செயலை உங்கள் உள்ளத்தில் நிறுத்தி, எடை போட்டுத் தங்களது உண்மைக் கருத்துகளைப் பகிர முன்வாருங்கள். அவை கருத்து மோதலை ஏற்படுத்தினாலும் சிறந்த முடிவுக்கு வர உதவுமே!


முடிவாகச் சொல்வதாயின் வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஆகியவற்றில் பதிவுகளை இட்ட பின்னர், அதற்கான இணைப்பை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) மற்றும் குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்விலோ வெளிப்படுத்தி வாசகர்களைப் பெருக்கலாம். அதேவேளை ஒவ்வொரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிக்கொணர ஆளுக்கொரு வலைப் பூ (Blog) போதுமென்பேன்.


வலைப்பூ உறவுகளே! சில மாதங்களாகத் தங்கள் தளங்களுக்கு வராது இருந்த போதும் எனது தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டு ஊக்கமளித்த பதிவர்களுக்கு மிக்க நன்றி. தங்கள் தளங்களுக்கு இனி அடிக்கடி வருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது உறவு என்றென்றும் தொடரும்.

திங்கள், 27 ஜூன், 2016

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இருக்கிறார்களாம். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்த்த பின்னர், இணைந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே பல திரட்டிகளுக்கு மூச்சுப் போயிற்று, இருக்கிற சில மூச்சுப் போகும் நிலையில் நொந்து போய் இருக்கின்றன. இந்த வேளை பார்த்துத் தலையைக் காட்டும் ஊற்று - வலைத்திரட்டிக்கு ஐந்தாறு வலைப்பதிவர்களை இணைத்துக்கொடுக்க ஊருக்க உலாவினால், எல்லோரும் முகநூல் பக்கம் பாய்ந்து போயிட்டார்களாம்.

இதனால், சகலரும் ஒரு உண்மையை அறியுமாறு வேண்டிக்கொள்கின்றேன். முகநூல் பக்கம் உலாவும் பதிவர்களை விட வலைப்பூக்களைப் பேணும் பதிவர்கள், தரமான பதிவர்கள் என்பதே அந்த உண்மை! அதாவது வலைப்பூக்களைப் பேணத் தகுதி அதிகம் தேவைப்படுகிறது என்பதும் உண்மையே! சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே வலைப்பூக்களை நாடும் வாசகர் உள்ளனர்.

நீலாவதி (Neelavathi Neela) நீலா என்னும் கூகிள்+ நண்பர் தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்திருக்கிறார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.

தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளையும் பாவித்துத் தமிழை அழகுபடுத்தும் பதிவர்கள் முகநூலை விட வலைப்பூக்களில் தான் அதிகம் உலாவுகின்றனர். ஏனெனில் தரமான படைப்பாளிகளை வலைப்பூக்களில் தான் அதிகம் காணலாம். ஆயினும், கூகிள்+, முகநூல் பக்கங்களிலும் தரமான படைப்பாளிகள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.

எப்படி இருப்பினும் வலைப்பூக்களின் நிறம் தெரியாதோரும் வாசகர் இன்றி வலைப்பூக்களைப் பேண முடியாதோரும் முகநூல் பக்கங்களில் உள்ளனர் என்று சொல்லிவிட முடியாது. அறிந்தவர், தெரிந்தவர், உறவுக்காரர் எல்லோரும் வாசகராகலாம் என முகநூல் பக்கம் தாவுவோர் இருக்கலாம்.
எனவே,
சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே
வலைப்பூக்களை நாடும் வாசகரை நம்பியே
வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே
சிறந்த படைப்பாளிகள்! - ஆயினும்
முகநூலிலும் சிறந்த படைப்பாளிகள்
சிலர் இருக்கலாம் - எல்லோருமல்ல!

நகைச்சுவையாக நண்பர்கள் கூறியது:
முதலாம் நண்பர்: அன்று வலைப்பூக்களில் பதிவைப் பதிவு செய்த பின்னர், முகநூல் வாசகரை ஈர்க்க முகநூலில் இணைப்பைப் பகிர்ந்தோம்.
இரண்டாம் நண்பர்: இன்று முகநூலில் பதிவைப் பதிவு செய்த பின்னர், அதன் இணைப்பை வலைப்பூக்களில் பகிரும் நிலை வந்தாச்சே!

காலம் இப்படி மாறிப்போச்சண்ணே! எப்படிச் சொன்னாலும் வலைப்பூக்களைப் பேண புதிய பதிவர்களை உருவாக்க வேணும் போல கிடக்கு. அதுவரை வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே சிறந்த படைப்பாளிகள்! அது தானே அக்கா உண்மை!

மாற்றுக் கருத்து இருப்பின் முன் வையுங்க பார்ப்போம்!
கருத்து மோதல் வலுக்கட்டும் பார்ப்போம்!

முடிவு வாசகர் உள்ளத்திலே!

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்

முந்தியெல்லாம் யாழ்பாவாணன் எமது வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவார். இப்பவெல்லாம் அத்தி புத்தாற் போல அருமையாக வந்து தலையைக் காட்டுகிறார் என்றெல்லாம் நீங்கள் நினைக்கக்கூடும், விரைவில் தங்கள் வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும், 2016 சித்திரைப் புத்தாண்டிலிருந்து வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியினைத் தொடங்கவுள்ளேன். இனி வரும் காலங்களில் நமது உறவுகள் நெருக்கமடையும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் பணியே மின்பொத்தகங்களை வெளியிட்டு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுவதாகும். இதுவரை எனது இரண்டு மின்பொத்தகங்களையும் நண்பர் 'தனிமரம்' வலைப்பூ அறிஞர் நேசனுக்காக ஒரு மின்பொத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன். அந்த வகையில் ஒரு மின்பொத்தகம் / மின்நூல் உருவாக்கி வெளியிட நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தங்களுடன் பகிரலாமென விரும்புகிறேன்.

மின்பொத்தகம் / மின்நூல் வெளியிடும் வேளை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். அந்த நோக்கம் வாசகரின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறுமாயின் மின்நூலோ அச்சடித்த நூலோ தோல்வியில் தான் முடியும். அதாவது, வாசகர் வாசிக்க விரும்பாத நூல்கள் எவர் கையில் தவழும்? அப்படியாயின் வாசகர் விரும்பும் நூல்கள் எப்படி இருக்கும்? வாசிப்பதால் வாசகர் மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லது வாசகர் தேடல் (வாசகருக்குப் பயன்தரும் தகவல்) உள்வாங்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்விரண்டையும் விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ப மின்நூல் வெளியிட விரும்பும் எல்லோரும் தொடர்ந்து படியுங்கள்.

முதலில் மின்நூலுக்கான தலைப்பைத் தீர்மானிக்கவும். அதாவது, மின்நூலின் உள்ளடக்கத்திற்கான உயிராக அத்தலைப்பு அமையட்டும். அடுத்து மின்நூல் தலைப்பைச் சார்ந்த பதிவுகளைத் தொகுக்கவும். அடுத்துத் தாளின் அளவு, எழுத்தின் அளவு, நிறங்கள், அட்டைப் படங்கள் போன்ற நூலின் அமைப்பைத் தீர்மானிக்கவும். எல்லாம் ஒழுங்காக இருந்தால், கணினியில் தட்டச்சுச் செய்யலாம். அதற்குக் கீழ்வரும் வழிகளைக் கையாளுங்கள்.

அ) முற்பகுதித் தொகுப்பு
    1. முன் அட்டை
    2. உரிமம் (Creative Commons license)
    3. மின்நூல் பற்றிய தகவல்
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

ஆ) உள்ளடக்கத் தொகுப்பு
    4. வெளியீட்டாளர் உரை, நூலாசிரியர் உரை, ஏனைய உரைகள், நூலின் உள்ளடக்கம் (Table of contents) ஆகியவற்றை உரோம எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
    5. மின்நூலில் உள்வாங்கப்பட்ட பதிவுகளைத் தொகுக்கவும். ஒவ்வொரு பதிவும் புதிய பக்கத்தில் தொடங்க வேண்டும். இடைவெளிகள் இருப்பின் இடைச்செருகலாக குட்டித் தகவலை நுழைக்கலாம். இவ்வாறு இந்து அராபிய எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

இ) பிற்பகுதித் தொகுப்பு
    6. உங்கள் விருப்பப் பக்கம் (எடுத்துக்காட்டாக அடுத்த வெளியீடு பற்றிக் குறிப்பிடலாம்)
    7. பின் அட்டை
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.
   
இவ்வாறு தட்டச்சுச் செய்து PDF நுட்பக் கோப்பாகச் சேமித்து வைத்த பின், எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும். இந்தத் தனி PDF நுட்பக் கோப்பைத் தான் மின்பொத்தகம் / மின்நூல் என்கிறோம். இவ்வாறு மின்நூலாக்கத் தேவையான கணினி மென்பொருள்களைக் கீழே தருகின்றேன்.

!. Microsoft Word பாவிப்பவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி Save as to pdf மென்பொருளைப் பதிவிறக்கிக் கணினியில் நிறுவினால் Microsoft Word இலேயே தட்டச்சுச் செய்த பின் PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கலாம்.

2. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி AbleWord மென்பொருளைப் பதிவிறக்கி கணினியில் நிறுவினால் AbleWord இலேயே தட்டச்சுச் செய்த பின் PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கலாம்.

3. எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி விரும்பிய ஒரு மென்பொருளைப் பதிவிறக்கிக் கணினியில் நிறுவினால் போதும்.

4. PDF நுட்பக் கோப்பாகச் சேமித்த மின்நூலைப் பக்கம் பக்கமாக இணைய வழியில் புரட்டிப் படிக்க (பிளாஸ் வியூவரில்) கீழ்வரும் தளம் உதவுகிறது. தளத்தில் இலவசக் கணக்கொன்றைத் திறந்து முயன்று பாருங்கள். (மாதிரிக்கு எனது http://fliphtml5.com/homepage/insb பக்கத்தைப் பார்த்தால் புரியும்)
இத்தளத்தை எப்படிக் கையாள்வது பற்றி ஒளிஒலி (Video) பதிவினூடாகக் கற்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

5. தங்கள் மின்நூலை எவரும் எந்நேரத்திலும் பதிவிறக்க வசதியாக இணையச் சேமிப்பகத்தில் பேணலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி விரும்பிய ஒரு தளத்தில் சேமிக்கலாம்.

6. இனித் தங்கள் வலைப்பூவில் நீங்கள் தயாரித்த மின்நூலை அறிமுகம் செய்யலாம். தங்கள் மின்நூலை வலைப்பூவில் விரித்துப் பார்க்கக் கீழ்வரும் படிகளில் இறங்குக.
எடுத்துக்காட்டாகக் கூகிள் ட்ரைவில்:
1. தங்கள் மின்நூலைப் பதிவேற்றுக
2. Public on the Web எனச் share செய்க
3. பின் pdf கோப்பை preview செய்க
4. வலப்பக்க மேல் பட்டியில் Pop-out ஜச் சொடுக்குக.
5. பின் More actions menu ஜச் சொடுக்கி Embed item ஜச் சொடுக்குக.
6. காண்பிக்கப்படும் நிரலைப் படி எடுக்குக.
7. அதனைத் தங்கள் வலைப்பூவில் பதிவு செய்யும் இடத்தில் Html ஜச் சொடுக்கி நிரல் பகுதியில் ஒட்டினால் போதும்.
இச்செயலைப் படங்களுடன் பார்வையிடக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.

உங்கள் வலைப்பூவில் இவ்வாறு உங்கள் மின்நூலை அறிமுகம் செய்த பின்னர் google+, facebook, twitter, linkedin ஆகிய தளங்களிலும் வலைத்திரட்டிகள் மூலமும் வெளியிட்டுப் பரப்ப இயலும். உங்கள் நண்பர்கள் உங்கள் மின்நூலைத் திறனாய்வு (விமர்சனம்) செய்து தங்கள் வலைப்பூக்களில் அறிமுகம் செய்தால் மேலும் உங்கள் வெளியீடு சிறப்படையும்.

இம்மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றிய மேலதிகத் தகவலை ஆங்கில மொழியில் படிக்க கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.