Translate Tamil to any languages.

செவ்வாய், 8 நவம்பர், 2016

திருமலையில் ரூபன் - யாழ்பாவாணன் சந்திப்பு

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவரும் (ரூபன்) ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றச் செயலாளரும் (யாழ்பாவாணன்) 06/11/2016 ஞாயிறு அன்று முதன் முதலில் நேரில் சந்தித்தனர். ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற எதிர்கால முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். வழமை போன்று ஊற்று புதுப்பொலிவுடன் இயங்கும். மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய ரூபன் தீபாவளித் திருநாளை ஒட்டிய  கவிதைப் போட்டி அறிவிப்பினை விரைவில் வெளியிடவுள்ளார்.

யாழ்பாவாணன், ரூபன் உறவு எப்படி மலர்ந்தது?

ரூபன்-பாண்டியன், ரூபன்-தனபாலன் இணைந்து நாடாத்திய போட்டிகள் போன்று ரூபன்; யாழ்பாவாணனை இணைத்துப் போட்டி நாடாத்தச் சேர்த்தமையால் ரூபன் - யாழ்பாவாணன் உறவு மலர்ந்தது. பின்னர், ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றச் செயலாளராகப் பணியாற்றப் பணித்தார். இத்தனையும் ஒருவரை ஒருவர் நேரில் முகம் பார்த்துப் பழகாது, வலைப் பதிவுகளைப் படித்துப் புரிந்து கொண்டதன் விளைவாக அமைந்தது. இவ்வாறு உலகெங்கும் பல வலை வழி உறவுகள் எனக்குண்டு.

வலை வழியே மலர்ந்த ரூபன் - யாழ்பாவாணன் உறவில், 06/11/2016 ஞாயிறு அன்று திருகோணமலை-ஈச்சிலம்பற்று ரூபன் இல்லத்தில் நேரில் சந்தித்த நிகழ்வு இருவருக்கும் இடையேயான உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல், சமயம் சாராத மக்கள் (சமூக) நலப் பணிகளில் இணைந்து செயற்படுவதாக உறுதி எடுத்துக்கொண்டோம். தாய் நாட்டில் அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றப் பணிகளை மேற்கொள்ள ஆண்டவன் உதவுவாரென நம்புகின்றேன்.


திருகோணமலை-ஈச்சிலம்பற்று ரூபன் இல்லத்தில் எனக்கு மதிய உணவு விருந்து பரிமாறினார்கள். படித்து நல்ல பணிகளில் அவரது தம்பிமார் உள்ளனர். அவரது தங்கையும் படித்துக்கொண்டிருக்கிறார். இவர்களது பெற்றோர் அன்பும் பற்றும் நிறைந்த பெரியோர். அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல என்னையும் விருப்போடு வரவேற்றனர். இலங்கை அரச மருத்துவமனையில் பணியாற்றும் அவரது இல்லாள், படிப்பில புலியாக விளங்கும் அவரது மகள் எல்லோரும் அன்பாக வரவேற்று இருந்தனர். அவ்வேளை ரூபன் அவர்கள் ஒரு வாழ்த்துச் சான்றிதழையும் வழங்கினார்.


உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண, அதற்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள ரூபன் - யாழ்பாவாணன் உறவு தொடரும். அதேபோல் இருவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பார்கள். அதேபோல வலையுலக உறவுகள் எல்லோரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன். போலி உறவுகள் வலை வழியே உலாவுகின்ற வலையுலகில், நம்பிக்கையான உறவுகள் மலரவைத்த ஆண்டவனுக்கும் வலையுலக உறவுகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!