Translate Tamil to any languages.

சனி, 11 மார்ச், 2017

தமிழை வாழ வைக்கும் வழி

தமிழை வாழ வைக்கும் வழி
என்றொரு பதிவை - அன்றொரு நாள்
எனது வேர்ட்பிரஸ் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
அதிலிருந்து சிறுமாற்றத்துடன்
இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.


ஆங்கிலத்தில் பிறமொழிச் சொல்களை
தம்மொழிச் சொல்கள் ஆக்கினார்களாம்
அதுபோலப் பாரும் - தமிழிலும்
தமிழுக்கு ஏற்றா ற் போல
பிறமொழிச் சொல்களை சேர்த்தால்
தமிழ் வாழுமாம் - எப்படியோ
தமிழைக் கொஞ்சம் மாற்றினால்
தமிழ் வாழுமாம் - எப்படியோ
எழுத்துச் சீர் திருத்தம்
சொல் சீர் திருத்தம்
மேற்கொண்டால் போதுமாம்...
உங்களுக்கும்
மூளை வேலை செய்யவில்லையா?
பெத்த தாயைப் போல
பொய்த் தாயை ஆக்குவதாகக் கூறி
உண்மைத் தமிழின் அடையாளங்களை
அழிப்பதற்காகப் பிற அழகூட்டலா?
பொய்த் தாய்
பெத்த தாய்க்கு ஈடாவாளா?
சொல்வளம் பெருகின்
மொழி வளம் சிறக்கும் - ஆனால்
பிறமொழிச் சொல்வளம் பெருகின்
தமிழ் மொழி வளம் மறையுமென்று அறிவீரா?
உண்மைத் தமிழின் அடையாளங்களை
எள்ளளவேனும் மாற்றம் செய்யாது
உலகில் தமிழை வாழ வைக்க
அறியாத மூடர்களுக்கு அறிவுரையாக
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாக்களை
எனது வலைப்பூவிலும் பகிருகிறேன்.
தமிழை வாழ வைக்கும் வழி
எதுவென்றுரைக்க முன் எதுவென்றறிய...
அதற்கும் அப்பால் அறிவீர்
பெருஞ்சித்திரனார் வழிகாட்டலைப் படி!
தூய தமிழ் பேணும் பணியில் ஈடுபடும்
நம்மாளுங்க எல்லோரும்
பெருஞ்சித்திரனார் அவர்கள் காட்டிய
வழிகாட்டலைப் பின்பற்றுவோம்!



”தமிழ் வாழ்க“ வென்பதிலும் தமிழ்வா ழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்“ - என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை!

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்
வந்தவர் செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்!
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்!
கற்கின்ற சுவடிகளில் செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே!

மூலப் பதிவு: கனிச்சாறு முதல் தொகுதி நூலிலிருந்து...
ஆக்கம்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இப்பாடலைத் தமிழ் விரிவுரையாளர் 
முனைவா் இரா.குணசீலன் அவர்கள்
தனது வலைப்பூவில்
கீழ்வரும் இணைப்புகளில் பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!