Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 மே, 2014

கண்ணாடி

ஒருவர் : மூக்குக் கண்ணாடியை ஏன் தலையில மாட்டுறாங்க?

மற்றவர் : கண் பார்க்காட்டிலும் தலைமுடி பார்க்குமென்று தான்...

பறக்கும் பணம்

ஒருவர் : என்னங்க... பணத் தாள்களைப் பறக்க விடுகிறியளே...

மற்றவர் : தேர்தலுக்காக அல்ல, கறுப்புப் பணம் பிடிபட்டிடும் என்பதற்கல்ல, "காசேதான் கடவுளடா" எனும் படத்திற்காக... எல்லாம் நிழற்படி(photo copy) எடுத்ததே

வெள்ளி, 9 மே, 2014

இலங்கை அழுகிறது...

இலங்கையின் நல்ல எதிர்காலத்தை
தங்களால் தான்
கட்டியெழுப்ப முடியுமென
நாளுக்கொன்றாய்... ஆளுக்கொன்றாய்...
கட்சிகளும் கொடிகளும் பெருகினதே தவிர
அமைதிக்கான தீர்வு எதனையும்
எவரும் முன் வைத்ததில்லையே!
நாடாளுமன்றம் செல்லும் மட்டும்
மக்கள் நலன் பேணுவதாய் நடித்தனர்
நாடாளுமன்றுக்குள் நுழைந்ததும்
நாற்காலிகளின் நலன் பேணப் படித்தனர்
வாக்குக்கேட்ட இப்படிப்பட்டவர்
துன்புற்றுக் கண்ணீர் வடிக்கும்
மக்களைக் கண்டு கொள்ளாததால்
இலங்கை மண் அழுகிறது...!
இலங்கையில் அமைதி தோன்ற
இப்படிப்பட்ட தலைமைகளை
நம்பிப் பயனில்லையே!
நம்பிக்கையை மருந்தாகக் கொண்டு
இட, இன, மத வேறுபாடின்றியே
தேனொழுக அன்பாகப் பழகியே
மக்கள் எல்லோரும் தாமாகவே
ஒன்றிணைவதால் மட்டுமே
இலங்கை மண் அழுவதை நிறுத்தி
அமைதியை ஏற்படுத்த முடியுமே!
நாளைய தலைமுறை
மகிழ்வோடு நலமாக வாழ
நாட்டில் அமைதி தோன்ற வேணுமே!

சனி, 3 மே, 2014

மக்களாயம் (சமூகம்) என் பார்வையில்

தாய் வயிற்றில் நான் பிறந்தேன்
தாய் மண்ணில் வந்து தவழ்ந்தேன்
தாய்¸ தந்தை வளர்ப்பில் நிமிர்ந்தேன்
காலத்தின் கட்டளைக்குப் பள்ளிக்குப் போனேன்
காலம் கரைய நானும் மாறினேன்
நண்பர்கள் பலருடன் பழகி இணைந்தேன்
நண்பர்களால் பலதும் கற்க முனைந்தேன்
வீட்டுக்கு வீடு நுழைவுப் படிதான்
வீட்டுக்கு உள்ளே ஆளுக்கு ஆள்தான்
நடத்தையும் செயலும் வேறு வேறுதான்
நாட்டிலும் ஆளுக்கு ஆள் இப்படித்தான்
கொஞ்ச ஆள்கள் படிப்பில் அக்கறைதான்
கொஞ்ச ஆள்கள் விளையாட்டில் முயற்சிதான்
கொஞ்ச ஆள்கள் இரண்டிலும் முன்னோடிதான்
எஞ்சிய கொஞ்சம் போல்லாத குழப்படிதான்
நல்ல சூழலில் சிக்கிய எல்லோருந்தான்
மெல்லச் சூழலில் சிறந்தவர் ஆயினர்தான்
பிழையான சூழலில் சிக்கிய ஆள்கள்தான்
பிழைக்க உழைப்பு இன்றியே நின்றவர்தான்
இன்றைய சூழலையே மாற்று வழிக்குத்தான்
இன்றுமே இழுத்துச் செல்வதைப் பார்ப்பீர்தான்
புகைத்தல்¸ குடிப்பொருள்¸ விலைப்பெண் இன்னும்தான்
பகைத்தல்¸ பொருட்பறி, அழித்தல் இன்னும்தான்
கொல்லுதல், கெடுத்தல், மணமுறிப்பு இன்னும்தான்
கொல்லையில் கள்ளத்துணை, மறுமணம் இன்னும்தான்
சொல்லில் எடுத்துக்கூற எத்தனையோ இருக்குத்தான்
எல்லாம் எங்கள் மக்களாயத்திலிருந்து ஒழியத்தான்
ஒழுக்கம் உயர்வைத் தரும் என்றுதான்
இழுக்கு இன்றி நாடு உயரத்தான்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றுதான்
ஒன்றிணைந்து எல்லோரும் செயற்பட்டால் முடியுந்தான்
பின்னேறி உள்ளோரை முன்னுக்குக் கொண்டுவரத்தான்
இன்றே பள்ளிகளிலும் படித்தவர்களாலும் தொடர்ந்தால்தான்
நன்றே அரசாலும் பெரியோராலும் முயன்றால்தான்
நாளைய சமூகம் நன்றே மாறுந்தான்
நாளைய விடியலில் மக்களாயம் மேம்படத்தான்
எங்கள் நாடும் சிறந்து விளங்குந்தான்
எங்கள் மக்களாயமென் பார்வையில் இப்படித்தான்
எங்களுக்கு எப்பவும் இருக்கவேணும் என்பேன்!

வியாழன், 1 மே, 2014

புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?


இனிய உறவுகளே!
நான் புதன், சித்திரை 30, 2014 அன்று "கவிதை" என்பது வடமொழியா? எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே "கவிதை" என்பது வடமொழியா? (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, "புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.

"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
புவியும் அதுவெனப் போ!" என்ற
கவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.

உடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் "குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29)." என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.

http://ta.wiktionary.org/s/gy6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.

என் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.

http://ta.wiktionary.org/s/4jt6 என்ற  இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.

இவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே! தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.

எனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா? இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா? அறிஞர்களே! உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.