Translate Tamil to any languages.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2



இப்பதிவைப் படிக்குமுன் "சனியன் பிடிச்சுப் போட்டுது! - 1" ஐ http://www.ypvnpubs.com/2018/06/blog-post_29.html படியுங்கள். அதன் பின் தொடருங்கள்.

வழுக்கைத் தலையான வேளை
இளமைக் கால நினைவுகளை
வழமை போல நினைவில் மீட்க
வாழ்க்கைத் துணை வந்தமைந்த
இனிய கதையைச் சுவையாகச் சொல்லி
"சனியன் பிடிச்சுப் போட்டுது!" என எழுதினேன்!

எந்தன் எழுதுகோல் எழுதி முடித்த
அந்தக் கதை எந்தன் கைவண்ணமே! - அது
என் நாவண்ணமா? பாவண்ணமா? - எதுவோ
என் வாசகர்கள் சாற்றும் தீர்ப்பே அது! - அதற்கு
"சனியன் பிடிச்சுப் போட்டுது!" எனப் பெயரிட்டதேன்?
எதற்கும் இக்கேள்விக்கு பதில் தாவென்பீரே!

திருமண நிகழ்விற்குச் சென்றவர்கள் அறிவீர்...
"நல்லதொரு சனியன் உன்னைப் பிடிச்சிருக்கே!" என
மணமகனைப் பார்த்துச் சொல்வோரைக் கண்டிருப்பீர்!
நல்லதொரு இல்லாள் எனக்குக் கிட்டியதை
"சனியன் பிடிச்சுப் போட்டுது!" எனப் பாடியதில்
தவறொன்றும் இல்லையென் வாசக உள்ளங்களே!

இளைய அகவையிலே இனிய அழகியை
காளை உள்ளம் தேடியலைவதைப் போல
வாலை உள்ளம் காளையைத் தேடுமே!
ஆணொருவர் தன்னைத் தேடி அலைந்தால்
பெண்ணுக்குக் கிட்டும் மதிப்போ உயர்வென
எந்த ஆணையும் பெண்கள் ஒதுக்குவரே!

அழகியொருத்தி மாட்டினால் போதுமென்றலையும்
ஆணுக்குத் தாயும் மகளும் ஒரே மாதிரியா?
காலத்தின் கோலத்தால் பெண்களில் மாற்றமா?
ஏமாற விரும்பாத பெண்களின் உள்ளம்
ஆணின் உழைப்பையும் வருவாயையும் கேட்குமா?
துள்ளும் இளமை உள்ளங்கள் இவைதானே!

காளைகளுக்குப் பின்னே வாலைகள் அலைந்தாலும்
வாலைகளுக்குப் பின்னே காளைகள் அலைந்தாலும்
கலியாணப் பைத்தியம் பிடிச்சலையுது என்பார்களே!
பெத்ததுகள் பார்த்துப்பேசிச் செய்துதரச் சுவைக்காதென
தெருத்தெருவாய் அலையும் இளசுகளின் நிலையை
மென்மையாக இளையோட விட்டுப் பாப்புனைந்தேன்!

சனியனைப் போல கறுப்பி ஆனாலும் கூட
வலியவந்த சீதேவியை உதைத்து விடாமல்
வரவேற்று வாழத் துணிந்தவரே ஆணென்றும்
பெண்ணின் விருப்புக்கு இசைந்திட மறுத்தால்
ஆணுக்கு, அவளோ சனியன் மாதிரித் தான்
ஆட்டுவித்தால் ஆடவேண்டி வருமென்பேன்!

"இந்தக் கறுப்பி எனக்கு வேண்டாம்!" என்றிருந்தால்
எந்தப் பெண்பிள்ளைச் சனியனும் வந்துசேராதே!
எந்தப் பெண் பின்னும் அடிக்கடி அலைந்தாலும்
இந்த ஆண்பிள்ளைச் சனியன் வேண்டாமென்பாள்!
இயல்பை மீறி இணைய முயன்றாலும்
இயற்கையும் இணைத்து வைக்க வேண்டுமே!

ஆணுக்குப் பெண் தேடும் பணியும்
பெண்ணுக்கு ஆண் தேடும் பணியும்
இடம்பெறக் காதல் வந்து இணைக்குமோ?
இந்தப் பழம் பொல்லாத புளி என்றோ
இந்தச் சனியன் பிடிச்சாத் தொல்லை என்றோ
இருந்து விட்டால் கடைசிவரை தனிக்கட்டையே!

தலைப்பு: உயர்ந்த மனிதர்கள்

நானோ வழுக்கைத் தலையன்!
தாங்கள் தப்பித்துக்கொள்ள
சிலர்
எனக்கும் மொட்டை அடிக்கிறார்களே!
கெட்டதால என்னை முழுக வார்த்து
(என் மீது வீண் பழிகள் சுமத்தி)
எப்படித் தான்
நற்பெயரெடுத்து தப்பிக்கப் போகிறார்களோ
எனக்கும் தெரியவில்லையே!
தாங்கள் தாங்கள் தப்பித்துக்கொள்ள
மாற்றாரை விசர்/ பைத்தியம் ஆக்குவதா?
மாற்றாரைப் பொருட்படுத்தாமல்
தன் தவறைத் தானே ஏற்று
தப்பித்துக்கொள்ள முடியாத முட்டாள்கள்
எப்ப தான் திருந்துவார்களோ
எனக்கும் தெரியவில்லையே!
தரையில் நடக்குமிந்த நாடகங்களை
வானிலிருந்து காணும் கடவுளுக்கோ விளையாட்டு
பாதிக்கப்படும் எமக்குத் தானே கேடு!
மாற்றாருக்கு மொட்டை அடிக்காமல்
வெட்டை வெளியிலும் கூட
நெஞ்சை நிமிர்த்தி
தன் தவறைத் தானே ஏற்றுக்கொள்ளும்
உயர்ந்த மனிதர்களுக்கு மதிப்பளிப்போம்!

தலைப்பு: பயணங்கள் முடிவதில்லை!

எவர் முடிவு எடுப்பதில்
தவறு செய்கிறாரோ - அவர்
தன் முழு வாழ்வையும்
தொலைத்து விடுகிறார்!
அப்படியா? - அப்ப
நாம் சரியான முடிவெடுப்போம்
நேரிய வழியில் பயணிப்போம்!
எதிர்க்க எவர் நெருங்கிடினும்
எப்பன் விலகியே செல்வோம்
இலக்கை அடைவதே இலக்கெனின்
பயணிப்பதே எமது பணி ஆகட்டும்!

தலைப்பு: அழைப்பு

வெற்றி வரும் வேளை
பணிவு வர வேண்டும்
தோல்வி வரும் வேளை
துணிவு வர வேண்டும்
மொத்தத்தில - எவரும்
தன்னம்பிக்கையை வைத்தே
உலகில் முன்னேற வரவேண்டும்!
தன்நிறைவு பெற்றால் தானே
தலை நிமிர்ந்து வாழ முடியுமென
ஒவ்வொருவருக்கும் உணர்வு வரவேண்டும்!


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!