Translate Tamil to any languages.

சனி, 14 ஜூலை, 2018

'பா' நடையில புனைகிறேன்!



முயன்று பார்!

நான் ஒரு செல்லாக் காசென
நறுக்கிவிட்ட எல்லோரும்
என்னை நாடுவதேன்? - அப்ப
என்னிடம் ஏதோ இருக்கலாம்!
என்னை நறுக்கிவிட முன்னே
குப்பையிலே போட்ட பண்டமும்
ஒருவேளை தேவைப்படலாமென
நினைக்கத் தவறினர் போலும்!
நானோ தனிமைப்படுத்தப்பட்டதால்
எனக்கு வேண்டிய எல்லாம்
நானே ஆக்க முனைந்ததால்
தன்னிறைவு பெற்றவனாக
நானும் உயர்ந்து விட்டேன்!
உறவுகளே! - உங்களை
எவரும் ஒதுக்கி வைக்கலாம்
எவரும் தனிமைப்படுத்தி விடலாம்
எவரும் உதவாமல் ஒதுங்கலாம்
அதற்கு அஞ்ச வேண்டியதில்லையே!
எதற்கும் தன்கையே தனக்குதவியென
நெஞ்சை நிமிர்த்தி நடைபோடுங்கள்!
விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்
துணையாக இருக்கும் வரை
தோல்விகள் தொடரப் போவதில்லையே!
விலகிச் செல்லும் வெற்றிகளைக் கூட
நெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்!
தன்நம்பிக்கையோடு நடைபோடு
உனக்குப் பின்னே கடவுள் கூட வருவாரே!

'பா'  நடையில  புனைகிறேன்!

நான் எழுதுவது எல்லாம்
பா/ கவிதை இல்லை என்பேன்!
பா நடையில தான் - என்
உள்ளத்தை உரசிய / உறுத்திய தகவலை
எழுத முயற்சி எடுப்பதாகச் சொல்வேன்!
நான் பாவலனோ / கவிஞனோ இல்லை!
பாவலனாக எண்ணினாலும் கூட
எழுதிய எதுவும் பா / கவிதை ஆக
புனைவு (கற்பனை) ஊற்றுப் போதாதென
வாசகர் கருத்துக் கணிப்புத் தெரிவிப்பதால்
பா நடையில புனைந்து தான்
நானும் எழுதுவதைத் தொடருகிறேன்!
படித்தவை கொஞ்சம் தான்
பட்டறிந்தவை அதிகம் தான்
அன்பு காட்டியோர் கொஞ்சம் தான்
வெறுப்புக் காட்டியோர் அதிகம் தான்
உதவி செய்தோர் கொஞ்சம் தான்
உதவி செய்யாதோர் அதிகம் தான்
மொத்தத்தில் வாழ்ந்தது கொஞ்சம் தான்
வாழ்ந்ததில் நொந்தது அதிகம் தான்
மகிழ்ச்சியை விடத் துயரம் தான்
நான் சுமப்பதிலே அதிகம் தான்
நான் சுமப்பதைத் தான்
கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கவே
பா நடையில எழுதிப் பார்க்கிறேன்!

நிறுத்தாதே!

எழுதுவதால்
உள்ளம் நிறைவடையும்
எழுதுவதால்
மகிழ்ச்சி அடைகிறோம்
என எம் பக்கம் - ஏதோ
எம்மை எழுதத் தூண்டலாம்!
எவர் என்ன சொன்னால் என்ன
எழுதுவதை நிறுத்தவே கூடாது!
உள்ளத்துக்கும் எழுத்துக்கும்
பால் வேறுபாடு இல்லை!
மணமுடித்த பின்,
மணமுடிக்க முன் என்ற
வேறுபாடு வேண்டாம்
நல்லதை எண்ணுவோம்
உள்ளத்தில் தோன்றியதை
எழுதுவோம்
எதிர்ப்பவர் எதிர்க்கட்டும்
நல்லதை உள்வாங்குவோம்
நல்லதை வெளியிடுவோம்
எதற்கும்
எழுதுவதை நிறுத்தக்கூடாது!


சின்ன வேண்டுகோள்!

எழுது பிள்ளாய் - உன்
எண்ணங்களை எல்லாம் - நான்
படித்துச் சுவைத்து - உன்
உள்ளத்து இருப்பறிந்து - நான்
உளநல மதியுரை வழங்குவேனே!
முகநூலில் (Facebook) எழுதுவோரே
உங்கள் உள்ளத்து இருப்பையே
நீங்கள் வெளிப்படுத்த முனைவீர்
அதை வைத்து - என்னைப் போன்ற
உளவியலாளர்கள் - உங்களுக்கு
விசர்/ பைத்தியம் எனப் பட்டமளிப்பரே!
எழுதுங்கள் - ஆனால்
கமுக்கமாக (இரகசியமாக)ப் பேணவேண்டியதை
எழுதி வெளியிடுவதால் - உங்கள்
மதிப்பினை நீங்களே இழப்பீரே!
கமுக்கங்களை (இரகசியங்களை)ப் பரப்பும்
ஊடகமாகவே முகநூலைக் (Facebook) காண்பீர்...
உளநலக் குறைகளைக் காண
முகநூல் (Facebook) போதுமென்பேன்!
அப்படித்தான் - சிலர்
எழுதிக்கொள்கிறார்கள் - அதை
எடைபோட்டதால் இப்படி எழுதினேன்!
உனக்கு உள (மன) நோயோ இல்லையோ
உளவியலாளருக்கு - உன்
எழுத்துக்கள் உண்மையைச் சொல்லுமே!
அதுபோலத் தான் - உன்
பேச்சிலும் மின்னும் சில
உனக்கு உள (மன) நோயென
அடையாளப்படுத்தவும் கூடும்!
எப்போதும் எழுதுங்கள்
எதனையும் எழுதுங்கள்
ஆனால்,
உங்கள் எழுத்தை வைத்து
உங்கள் பேச்சை வைத்து
உங்களை ஓர் உள (மன) நோயாளரென
காட்டிக்கொள்ளும் வகையில் எழுதாதீர்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!