Translate Tamil to any languages.

புதன், 9 ஆகஸ்ட், 2017

பா/ கவிதை நடையில கிறுக்கிய சில...

1- இந்த நோவு எவருக்கும் வேண்டாம்!
அறிவான கண்கள்
கண் முன்னே நோட்டமிட்டனர்...
பண்பான கண்மணிகள்
பாடியென்னை ஈர்க்க முனைந்தனர்...
அழகான பெண்கள்
என் நிழல் போல அலைந்தனர்...
சூழவுள்ள வீட்டு வாலைகள்
அடிக்கடி எட்டியெட்டிப் பார்த்தனர்...
அப்படியிருந்தும்
ஏன் தான் காதல் உணர்வு
எனக்கு வரவில்லையோ...?
ஐம்பது நூறாயிரம் அன்பளிப்பு
(ஐம்பது இலட்சம் இனாம்)
வெளிநாட்டு மகிழுந்து (BMW Car)
பத்துப் பரப்பு நிலத்தில மாடிவீடு
ஐம்பது பரப்பு நெல்லுக் காணி
நூறு பரப்புப் பனையடைப்பு/ தென்னந்தோப்பு
என்பனவெல்லாம்
கைக்கெட்டுமாயின் நல்வாழ்வு
என்றெண்ணி இருந்தமையால்
என் உள்ளத்திலே காதல் உணர்வு
எட்டிப் பார்க்கவில்லையோ...?
அகவை ஐம்பதாகையில்
கறுப்பி ஒருத்தி கைகுலுக்கினாள்...
அரைச் சதமும் வேண்டாமல்
மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சிட்டு
இல்வாழ்வில் இணைந்தேன் - இன்று வரை
எனக்குப் பிள்ளைகள் இல்லையே!

2- பழகலாம் வாங்க!

வாழ்க்கையில் - நாம்
எல்லோரையும் சந்திப்பதே
எதிர்பாராமல் (விபத்தாகத்) தான்!
ஆதலால்,
எவரையும் எவரும்
உள்ளம் புரிந்து பழக
வாய்ப்பில்லைத் தான்!
பழகிய பின்னே
எவரையும் எவரும்
உள்ளம் புரிந்திட உணர்ந்தே
விலகுவதும் இயல்பு தான்!
வாழ்வும் நிரந்தரமில்லை
வாழ்வில் சந்திப்போரும் நிரந்தரமில்லை
எதிர்பாராமல்
வாழ்வில் எதுவும் நிகழலாம்
எவரும் பழகலாம் பிரியலாம்
ஏற்றுத் தான் ஆகணும்!
எமக்காக
எமது எதிர்பார்ப்புகளைப் புரிந்தவாராக
எதிர்பாராமல் எவரும் சந்திக்கலாம்
அவர்களைப் புரிந்து
அணைத்துக்கொள்வோம் - அதற்காக
அடுத்தவரை வெறுத்துப் பகைப்பதில்
பயனில்லைத் தான்!
குப்பையில் போட்ட குண்டுமணியும்
ஒரு நாள் தேவைப்படுவது போல
ஒரு நாள் எவரையும்
எமக்குத் தேவை என்றெண்ணி
ஓடும் பழமுமாகவேனும் பழகு!

3- இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை!

வீட்டு மரத்தில
காய்த்த பலாப்பழம் கண்டு
நீங்களும் வெறுக்கலாம்
வீட்டு மரத்தில
காய்க்காத பலாப்பழம் கண்டு
நீங்களும் விரும்பலாம்
அது போலத் தான்
உறவோ நட்போ
கண் முன்னே இருக்கையில்
எவரும் பெறுமதி அறியார்...
உறவோ நட்போ
கண் முன்னே இல்லையெனில்
எல்லோரும் பெறுமதி உணருவார்...
எல்லாமே
நான் வாழும் வேளை
என்னைத் தூற்றுவதும் ஆன
நான் சாவடைந்த பின்னே
என்னைப் போற்றுவதும் ஆன
என்னைச் சூழவுள்ள
மக்களின் பார்வையைப் போலவே!

4. பொறுமையாக இருப்போம்!

தாம் தம்முடையதை அடைய
மாற்றாரை நோகடித்துப் பெறுவதோ
தாம் தம்முடைய மகிழ்ச்சிக்காக
மாற்றாரை நோகடித்துப் மகிழ்வதோ
உண்மையில் உளநோய் தான்!
சுருங்கச் சொல்லப் போனால் - அடுத்தவர்
கண்ணீர் வடிப்பதைக் கண்டு - அதில்
மகிழ்ச்சியைக் கொண்டாடுவோருக்கு
உண்மையில் உளநோய் தான்!
அவங்க அப்படித் தான்...
அவங்க செயலால் - நமக்கு
வெறுப்புத் தான் வரும் - அதற்காக
அவர்களைப் பகைக்காமல் - நாம்
பொறுமையாக இருப்போம் - அதனால்
நாம் பேணி வந்த நன்மதிப்பு
இன்னும் அதிகரிக்குமே தவிர - என்றும்
குறைந்து விடப் போவதில்லையே!
என்றபடி - நாம்
நமது உளநலனில் அக்கறை கொள்வோம்! 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!