Translate Tamil to any languages.

சனி, 26 ஆகஸ்ட், 2017

வலைவழியே பதிவர்களிடையே பெரும் மோதல்!

"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.


Image result for bloggers

பதிவர் - 01:

"எழுத்து...
கவிதையோ கதையோ
நையாண்டிப் படைப்புகளோ
எதுவாகினும்
எழுத்து இறைவனின் வரம்." என்பது
அறிஞர் ஒருவரின் எண்ணம்!

"எழுத்தாளரையோ
பாவலரையோ (கவிஞரையோ)
படைப்பாளியையோ
இறைவன் (கடவுள்) ஆக்கவில்லை;
அவர்கள்
தாமாகவே உருவாகிறார்கள்." என்பது
சின்னப்பொடியனாம் எனது எண்ணம்!

எடுத்துக்காட்டாக எண்ணிப்பாரும்
காசில்லாத வேளை
உறவுகள் நெருங்க வாய்ப்பில்லைத் தான்.
நாய் வயிற்றுக்கு
உணவிடக் காசில்லை என்றாலும்
நாய் கூடத் திரும்பிப் பார்க்காது தான்.
இந்தச் சூழலில் தான்...

பணம் இருந்தால்
நிழல் போல உறவுகள்...
பணம் இல்லையென்றால்
நாயும் எட்டிப்பார்க்காதே!
என்றும்

பணமுள்ளவரை உறவுகள்
உணவுள்ளவரை நாய்
வாழ்க்கையில் சந்திக்கலாம்!
என்றும்

இல்லாத உறவும் சொல்லாமல் கூடும்
கையில் பணமிருக்கப் பாரும்!
என்றும்

பணமென்றால் பிணமும் பிழைக்கும் (உயிர்க்கும்/ வாழும்)
என்றும்

எழுத முடிகிறது என்றால் - அது
இறைவன் (கடவுள்) அருள் (வரம்) அல்ல;
இப்படியெல்லாம் எழுத வைத்தது
எழுதியவர் வாழ்ந்த சூழலே!
எவரையும் எழுதத் தூண்டுவது
அவரவர் வாழும் சூழலே தவிர
ஆண்டவன்/ கடவுள்/ கடவுள் அல்ல
உள்ளத்தைத் தொட்ட
உள்ளத்தில் நொந்த
ஒன்றோ பலவோ
(அதாவது, வாழ்விடச் சூழல்)
எழுதத் தூண்டுவதால்
ஒருவர்
எழுத்தாளராகவோ
பாவலராகவோ (கவிஞராகவோ)
படைப்பாளியாகவோ
உருவாகுகின்றார்! - உண்மையில்
கலைஞர் பிறப்பதில்லை
வாழ்விடச் சூழலே
கலைஞரை உருவாக்குகின்றது
என்பதே என் எண்ணம்!

பதிவர் - 02:

நீங்களும் பாவலனாக (கவிஞனாக) வர
எண்ணிப்பார்த்ததுண்டா?
எண்ணிப்பார்த்ததை
பா (கவிதை) நடையிலே எழுதினால் கூட
பாவலனாக (கவிஞனாக) வரமுடியாதா?
பார்த்ததைப் பார்த்தபடி
கேட்டதைக் கேட்டபடி
உணர்ந்ததை உணர்ந்தபடி
எண்ணியதை எண்ணியபடி
இப்படியும் அப்படியுமின்றி
உள்வாங்கியதை உள்ளபடி
நன்மை கருதி நல்லபடி
அச்சமின்றிப் பாவடிகளில்
பறைசாற்றும் பாவலர்கள்
உலகையே உருட்டிவிடக் கூடிய
உண்மையான வீரர்களே! - நம்ம
பாரதி கரித்துண்டால் தெருவில் எழுதி
(சான்று: கவிராஜன் கதை - வைரமுத்து)
வெள்ளையனை வெளியேற்றப் போராடியவரே!
நானும்
இப்படிப் பாவலனாக வர
எண்ணிப்பார்ப்பதுண்டு - ஆனால்
எனக்கோ
நன்றாகப் பாப்புனைய வராமையால்
பா (கவிதை) நடையிலே கிறுக்குகிறேன்
என்றோ ஒரு நாள்
பாவலனாக (கவிஞனாக) வருவேனென...

பதிவர் - 03:

உறவுகளே! எழுதும் வேளை 
தவறுகள் வரத்தான் செய்யும் - அதற்காக
எழுதுவதையே நிறுத்துவது நல்லதல்ல!
எழுதுங்கள்... எழுதியதைப் பகிருங்கள்
வாசிப்பவர்கள் வாசித்த பின் - அவர்கள்
தெரிவித்தால் தான் தெரிகிறதே
நம் எழுத்தில் மின்னும் பிழைகள்! - அவற்றை
திருத்திக்கொண்டு எழுதுங்க உறவுகளே!
இலக்கை இயம்புதல் இலக்கியம் என்றால் - உன்
எண்ணத்தைச் சுவையாகச் சொன்னாலும் இலக்கியமே!
இலக்கியம் தோன்றிய பின் தானே
இலக்கணம் தோன்றியது என்றால்
தவறுகள் களையப்படத் தானே
இலக்கணம் தோன்றியது என்பேன்!
வாசித்தவர் சுட்டும் தவறைத் திருத்தி
எழுதுங்க உறவுகளே! படைப்பாளி ஆகலாம்!!
எழுதுங்கள், எழுதியதைப் பகிருங்கள்
வாசிப்பவர் வாசித்ததும் பிழைகளைச் சுட்ட
சட்டென்று திருத்திக் கொள்ளப் பழகுவோம்
 
திருத்திக்கொள்ளத் தெரிந்து கொள்ளலாம்
இலக்கியத்தோடு ஒன்றிய இலக்கணம் எல்லாம்!
எண்ணங்களை வெளிக்கொணரும் போது
இயல்பாக இறுக்கமாக எழுத முயல்வோம்
இலக்கணம் தானாக வந்து குந்தும்
இலக்கணத்திற்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தலாமோ?
எழுதுங்க உறவுகளே! - என்றென்றும்
உங்கள் எண்ணங்களைப் பகிருங்க உறவுகளே!

பதிவர் - 04:

ஓ! படைப்பாளிகளே!
திறனாய்வு (விமர்சனம்) இல்லாத
படைப்புகளும்
தாக்குரை (கண்டனம்) இல்லாத
படைப்புகளும்
உப்புப் புளி காரமில்லாத
சோறுகறியும்
விரும்பக் கூடியதாக
எவருக்கும் இருக்காதே!
இத்தால் எல்லோருமறிய
திறனாய்வு (விமர்சனம்) செய்வோர்
செய்யட்டும் - அது
அவர் பணி...
தாக்குரை (கண்டனம்) செய்வோர்
செய்யட்டும் - அது
அவர் பணி...
எல்லாவற்றுக்கும் முகம்கொடுக்கும்
எமது பணி என்ன?
திறனாய்வுக்கும் தாக்குரைக்கும்
தாக்குப்பிடிக்கக்கூடியதாக
படைப்புகளை ஆக்குவதே
எமது பணியாக இருக்கட்டுமே!

பதிவர் - 05:

சொல் சிக்கனம் கவிதைக்கு அழகு.
வேண்டாத வரிகளைக் குறைப்பது
கதைகளுக்கு அழகு.
கவிஞனுக்கு வறுமை வரலாம்
எழுத்துக்கு வறுமை வரலாமா? - ஏன்
சொல்களுக்குத் தட்டுப்பாடா ?
வேண்டிய இடத்தில் வரவேண்டிய
சொல்லோ வரிகளோ வராதவேளை
எழுத்தில் செழுமை இல்லையோ!
எழுதுகோல் ஏந்தியோர்
கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்...!
அதற்காக
எழுதாமல் இருந்து விடாதீர்கள்!
"அடடே! இப்பவெல்லாம்
"எழுத்தசை சீர்தளை அடிதொடை" என
இவையாறும் அறியாப் பாவலர் - பலர்
இணையத்தில் உலாவுவதைக் காண்பீர்!" என
என்னையும் நோகடிப்பாங்க...
நானும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!



 28-08-2017 அன்று உங்கள் யாழ்பாவாணன் இந்தியா (சென்னை) வருகிறேன். சென்னையில் 03-09-2017 ஞாயிறு இயன்றளவு பதிவர்களையும் சந்திக்கவுள்ளேன். முகவரி பின்னர் தெரிவிக்கின்றேன். 29-08-2017 தொடக்கம் 05-09-2017 வரை எனது பயணம் சென்னை, வடலூர், கன்னியாகுமரி, சென்னை எனத் திட்டமிட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!