Translate Tamil to any languages.

சனி, 8 ஜூன், 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-010

பா புனையப் போகுமுன்
அசைக்கு முன் எழுத்தெனப் பார்க்கையில்
எழுத்துகளாலான
சொல்கள் புணருவதைப் பார்க்கையில்
இயல்புப் புணர்ச்சி,
தோன்றல், திரிதல், கெடுதல் என
விகாரப் புணர்ச்சி (பொது)
படித்த பின் பார்ப்பது
செய்யுள் விகாரம் ஆயிற்றே!
செய்யுளுக்கே உரித்தான
செய்யுள் விகாரத்தில்
வலித்தல், மெலித்தல், நீட்டல்,
குறுக்கல், விரித்தல், தொகுத்தல்,
முதற்குறை, இடைக்குறை,
கடைக்குறை என வரும்
ஒன்பது கூறுகள் இருப்பதைப் பாரும்!
ஒரு செய்யுளுக்கு
ஒன்பது விகாரமா என்று
சற்றுத் தளர வேண்டாம்
இவை தான்
பாவலர்க்கு வழிகாட்டும்
யாப்பில் தவறின்றியே
பாபுனைய உதவும் வழிகாட்டிகளே!
பாவலர்க்கு உதவ
யாப்பு இலக்கணமா என்று
கலங்க வேண்டாம் உறவுகளே
மரபுக் கவிதை/ பாப்புப் பா என்றால்
வாசிக்க விளங்காமை
பொருளறிய முடியாமை
போன்ற நிலைகளைப் போக்க
வாசகருக்கும் பக்கத்துணை
நான் கூறும்
செய்யுள் விகாரம் ஒன்பதுமே!
மெல்லினத்தை வல்லினமாக்கும்
வலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கம்பரின் பா வரிகளைப் பாரும்...
"அரக்கரோர் அழிவு செய்து
     கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல
     மனுநெறி கூறிற் றுண்டோ?"
இவ்வீர் அடிகளிலே
முதலடியில் வரும் எதுகைக்கு
('அரக்கர்' என்றமைந்த)
அடுத்தடியில் வரும் எதுகையை
சரி செய்யும் நோக்கிலே
மெல்லின மெய்யை
வல்லின மெய்யாக மாற்றியே
(இயல்பில் 'குரங்கு' என்பதை
எதுகைக்காக 'குரக்கு' என மாற்றியே)
வலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
வலித்தலின் மறுதலையே
மெலித்தலாம் என்க...
வல்லினத்தை மெல்லினமாக்கும்
மெலித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
கீழ்வரும் அடிகளைப் பாரும்...
"தண்டையின் இனக்கிளி கடிவோள்
பண்டையள் அல்லள் மானோக்கினளே!"
இவ்வீர் அடிகளிலே
இரண்டாம் அடி எதுகை
'பண்டையள்' என்னும் சீருக்காக
முதலடியில் வரும் எதுகை
'தட்டையின்' என்னும் சீரை
'தண்டையின்' என மாற்றியே
('ட்', 'ண்' ஆக
வல்லின மெய்யை
மெல்லின மெய்யாக மாற்றியே)
மெலித்தல் விகாரம் அமையவே
பாபுனையப்பட்டு உள்ளதே!
குறிலை நெடிலாக்கும்
நீட்டல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவின் இறுதிச் சீராக
ஓரசைச் சீர் வரலாமே தவிர
இடையில் வரக் கூடாது"
என்பதற்கிணங்கவே
வள்ளுவனார் தன் குறளில்
'நிழல்' என்ற ஓரசைச் சீரை
'நீழல்' என்ற ஓரசைச் சீராக
மாற்றிவிட்டார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
ஒரு சீரின் முதல் எழுத்தாகவுள்ள
குறில் எழுத்தை நெடில் எழுத்தாக
மாற்றி அமைத்துப் பா புனைதலை
நீட்டல் விகாரம் எனலாமே!
நெடிலைக் குறிலாக்கும்
குறுக்கல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"ஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேன் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு" எனும்
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"வெண்பாவிற்கான தளையில்
மா முன் நிரை அமைதல் வேண்டும்"
அதற்கேற்பப் பாரும்
'ஒருநாள்' முன் 'ஏழுநாள்போற்' வரின்
மா முன் நேர் அமையுமென அஞ்சி
'எழுநாள்போற்' எனவாக்கி
நெடில் 'ஏ' ஐக் குறில் 'எ' ஆக்கி
வள்ளுவனார்
யாப்பைச் சரி செய்தார் போலும்...
யாப்பிலக்கணத் தவறு நிகழாமலே
நெடில் எழுத்தைக் குறில் எழுத்தாக்குவதே
குறுக்கல் விகாரம் எனலாமே!
குறும் சொல்லை நீட்டும்
விரித்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு?"
இங்கே
முதலடி மூன்றாம் சீர்
'கொல்' என அமைந்ததால்
வெண்பாவின் ஈற்றுச் சீராக வரவேண்டிய
தனி அசைச் சொல்லை
யாப்பைக் கருத்திற் கொண்டே
'கொல்லோ' என வள்ளவர் மாற்றினாரோ...
'குடும்பத்தைக்' என்ற சீரின் முன்னே
மாச் சீரை வரவழைத்து
மா முன் நிரை அமையுமாறு
'கொல்' ஐ 'கொல்லோ' எனவாக்கி
சொல் ஒன்றை விரித்து எழுதுவதே
விரித்தல் விகாரம் என்போம்!
நெடும் சொல்லைக் குறுக்கும்
தொகுத்தல் விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
வள்ளுவரின் திருக்குறளடியைப் பாரும்...
"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியார் தோள்தோயா தார்."
இங்கே
முதலாம் அடி முதற் சீர்
'நலத்துக்குரியார்' என்றமைய
இருந்திருக்க வேண்டுமே...
அப்படி அமையாமைக்கு
வெண்பாச்சீர் ஆக அமையாது
பூச் சீராக இருந்தமையே...
இலக்கணப் பிழை நிகழாமல்
'நலக்குரியார்' எனக் காய்ச்சீர் அமைய
(நலம்+அத்து+கு+உரியார்)
வள்ளுவனார் முதற் சீரமைத்து
'காய் முன் நேர்' என்றமைய
பா புனைந்திருக்கும் ஒழுங்கே
(நீண்ட சொல்லைச் சுருக்கித் தொகுத்தல்)
தொகுத்தல் விகாரம் என்போம்!
சொல்லின் முதலெழுத்தைக் குறைக்கும்
முதற் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி" எனும்
செய்யுளடியைப் பாரும்...
இலக்கணத் தவறு நிகழாமலே
முதற் சீராக வர வேண்டிய
"தாமரையிதழ்" இலே
முதலெழுத்தை நீக்கியமையே
சொல்லின் முதல் எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
முதற்குறை விகாரம் என்போமே!
சொல்லின் இடையெழுத்தைக் குறைக்கும்
இடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"என்னனைக் கிலங்கு மார்பம்" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"என்னன்னைக்கு" இலே
இடையிலே 'ன்' ஐ நீக்கியமையே
சொல்லின் இடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
இடைக்குறை விகாரம் என்போமே!
சொல்லின் கடையெழுத்தைக் குறைக்கும்
கடைக் குறை விகாரத்திற்கு
எடுத்துக்காட்டாக
"கள்ளுக்கில் காமத்திற் குண்டு" எனும்
செய்யுளடியைப் பாரும்...
முதற் சீராக வர வேண்டிய
"கள்ளுக்கில்லை" இலே
கடைசியிலே 'லை' ஐ நீக்கியமையே
சொல்லின் கடை எழுத்தை
குறைத்து அமைத்துக் கொள்ளும்
கடைக்குறை விகாரம் என்போமே!
யாப்பிலக்கணத்தின் முதற் பகுதியான
எழுத்தைப் பார்த்தோம்...
எழுத்தோடு தொடர்புடைய
இலக்கணத்தைச் சற்றுப் பார்த்தோம்...
சொல்களைப் பார்த்தோம்...
சொல்கள் புணருவதைப் பார்த்தோம்...
இலக்கண(மரபு)ப் பா புனைய
துணைக்கு வந்து நிற்கும்
செய்யுள் விகாரத்துடன்
எழுத்தை முடித்துக் கொண்டு
யாப்பில் அடுத்து வரும்
"அசை" என்ற பகுதியை
அடுத்த பகுதியில் பார்ப்போம்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/05/009.html

6 கருத்துகள் :

  1. நல்ல பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.எனக்கு உபயோகமாய் இருந்தது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். தொடர்ந்தும் நல்ல பல தகவலைத் தரவுள்ளேன்.

      நீக்கு
  2. தங்களின் நுணுக்கம் வியக்க வைக்கிறது ஐயா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்நுட்பங்களை பல அறிஞர்களிடம் கற்றிருந்தாலும் இத்தொடரை எழுத நான் பாவிக்கும் நூல்களை 'உங்கள் யாழ்பாவாணன்' என்ற பட்டியைச் சொடுக்கி 'எம்மோடு தொடர்புகொள்ள...' என்ற தலைப்பின் மேலே பார்க்கலாம். அந்நூல்களை நீங்களும் வேண்டிப் படித்து அறிவைப் பெருக்க விரும்புகிறேன்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!