Translate Tamil to any languages.

செவ்வாய், 21 மே, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-009


சொல்கள் புணரும் வேளை
நின்ற சொல்லுடன் இணைய வரும் வேளை
வந்த சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் மிகுவதும்
நின்ற சொல்லின் ஈற்றெழுத்தில்
வல்லினம் மெய்யெழுத்தாக இருந்தால்
வல்லின ஈற்றெழுத்துத் திரிவதும்
பார்த்து முடித்தாச்சு!
வல்லினம் மிகா இடங்களை
வரும் பகுதியில் காண்போமே!
அஃறிணைப் பன்மை விகுதியாம்
'கள்' என்பது நின்ற சொல்லானால்
குடிக்கின்ற மதுவாகப் பொருள் கொள்ளும்
அப்பதான் தெரியும்
"கள் + கள் = கள்கள்"
என்றமையாது என்பதை!
நானொரு முட்டாளுங்க
நாற்பத்திரண்டு அகவை வரை
"சொல் + கள் = சொற்கள்" என்று
பாவித்த முட்டாள் என்றால்
நினைத்துப் பாருங்களேன்!
"சொல் + கள்" என்ற புணர்வில்
வல்லினம் மிகாது என்பதையே
நினைவூட்ட விரும்புகிறேன்!
(சான்று: பக்கம்-54; யாப்பரங்கம்;
புலவர் வெற்றியழகன்; சீதை பதிப்பகம்;
சென்னை-600004; இந்தியா)
பல சொல் இணைந்த கூட்டம்
"சொற்கள்" அல்ல
"சொல்கள்" என்பதே சரியாம்!
"சொற்கள்" என்பதை
"சொல்லாகிய கள்(மது)" என்றே
பொருள் கொள்ள முடிகிறதாம்!
இப்படித்தான் பாருங்கோ
கல்கள், பல்கள், வில்கள்,
ஆள்கள், நாள்கள், கோள்கள்,
பொருள்கள் ஆகியவற்றிலே
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
சிறிய + காற்றாடி = சிறிய காற்றாடி
நல்ல + பிள்ளை = நல்ல பிள்ளை
தீய + செய்கை = தீய செய்கை
என்பவற்றிலே வரும்
குறிப்புப் பெயரெச்சம் அல்லது
பண்புச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
காளையின் + பேரில் = காளையின் பேரில்
சிங்கத்தின் + பின் = சிங்கத்தின் பின்
ஆலின் + கீழ் = ஆலின் கீழ்
என்பவற்றிலே காண்பீர்
அஃறிணைப் பெயர்ச் சொல்களை
அடுத்து வரும் பின்னொட்டுகளில்
பேரில், பின், கீழ் என்பன வரின்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டுக்களாக
ஆசிரியர் + சார்பாக = ஆசிரியர் சார்பாக
மாணவர் + தொடர்பாக = மாணவர் தொடர்பாக
ஆகியவற்றிலே பாரும்
நின்ற பெயர்ச் சொல்லுடன்
"சார்பாக, தொடர்பாக" என்ற ஒட்டுகள்
வந்ததாலும் வல்லினம் மிகாது...
நொந்து + கொள் = நொந்து கொள்
நடந்து + கொண்டிரு = நடந்து கொண்டிரு
செய்து + பார் = செய்து பார்
கொய்து + காட்டு = கொய்து காட்டு
கொண்டு + போ = கொண்டு போ
ஒழிந்து + தொலை = ஒழிந்து தொலை
ஆகியவற்றிலே பாரும்
'செய்து' என்னும் வினையெச்சச் சொல்லை
அடுத்து வரும் துணை வினைகளான
கொள், கொண்டிரு, பார், காட்டு, போ, தொலை என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
சென்ற + போது = சென்றபோது
செய்த + படி = செய்தபடி
சொன்ன + படியால் = சொன்னபடியால்
ஆகியவற்றிலே பாரும்
பெயரெச்சத் தொடரின் ஒட்டுகளான
போது, படி, படியால் என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
ஊர் + தோறும் = ஊர் தோறும்
என்ற வகையில் பாரும்
பெயர்ச் சொல்லை அடுத்து
'தோறும்' என்னும் ஒட்டு
வந்ததாலும் வல்லினம் மிகாது...
என்றறிந்தால் தவறு நிகழாதே!
எடுத்துக்காட்டின்றியும்
வல்லினம் மிகா இடங்களை
எடுத்துச் சொல்கிறேன் பாரும்...
எழுவாயாக நிற்கும்
பெயர்ச் சொல்களுடன் பாரும்
கூட, பற்றி, பொருட்டு, பால், குறித்து, தவிர ஆகிய
ஒட்டுகள் வரினும் வல்லினம் மிகாதாம்...
விடவும், காட்டிலும் ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
ஆ, ஆவது, ஏ, ஓ, என்று, போன்று ஆகிய
இடைச் சொல்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அடா, அடி ஆகிய சொல்களை
அடுத்து வரும் வல்லினமும் மிகாதாம்...
உள்ள, உரிய, தகுந்த ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அகர உயிர் இறுதியில் உள்ள
அத்தகைய, இத்தகைய, எத்தகைய;
அன்றைய, இன்றைய, என்றைய;
அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட;
அப்போதைய, இப்போதைய, எப்போதைய;
மேற்கத்திய, கிழக்கத்திய, வடக்கத்திய, தெற்கத்திய;
நேற்றைய, இன்றைய, நாளைய என்னும்
பெயரெச்சங்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
வந்து, சென்று, கண்டு, அழுது, வென்று
என்னும் வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
செயின், செய்தால் என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மை, அப்பர், மாமன், மாமி,
அண்ணன், அண்ணி, தந்தை, தம்பி,
தங்கை, அக்காள் என்னும்
முறைப் பெயர்களை அடுத்து
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மா, அப்பா, மாமா, மாமி,
அண்ணா, அண்ணி, தம்பி, தங்காய்,
அக்கா ஆகிய முறை விழிப் பெயர்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
நட, படி, பாடு, ஓடு ஆகிய
முன்னிலை ஏவல் ஒருமை வினைகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
அடேயப்பா, அய்யோ, அம்ம ஆகிய
வியப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
எடுத்துக்காட்டாக
அவள் + பெரியவள் = அவள் பெரியவள்
ஆடு + சிறியது = ஆடு சிறியது
கூழ் + போதாது = கூழ் போதாது
என்றமையும் முதல் வேற்றுமையாகிய
எழுவாய்த் தொடரில் சில இடங்களில்
வல்லினம் மிகாதாம்...
ஒடு, ஓடு என்னும்
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
விரிந்து வரும் பொழுது
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமையாகிய
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமை விரியில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
'உடைய' என்னும்
ஆறாம் வேற்றுமை உருபை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
"நா + காக்க = நா காக்க
(நாவைக் காக்க)" என்றவாறு
இரண்டாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
"கை + தட்டினான் = கை தட்டினான்
(கையால் தட்டினான்) என்றவாறு
மூன்றாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
எழுவாய் உயர்திணையாக இருந்தாலும்
அஃறிணைப் பெயருடன்
வினைச்சொல் வந்தாலும்
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமைத் தொகையில்
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
ஏழாம் வேற்றுமைத் தொகையிலும்
"அரசர் + கண் = அரசர் கண்" என்றவாறு
வல்லினம் மிகாதாம்...
"ஆடு + கோழி = ஆடு + கோழி
(ஆடும் கோழியும்) என்றவாறு
உம் என்னும் சொல் மறைந்து வரும்
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"ஊறு + காய் = ஊறுகாய்" என்றவாறு
(ஊறிய/ ஊறுகின்ற/ ஊறும் காய்)
மூன்று காலங்களையும் உணர்த்தும்
வினைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"கார் + காலம் = கார் காலம்" என்றவாறு
பண்புத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
இப்படியே பார்த்தால்
இவை தான்
வல்லினம் மிகா இடங்கள்!
அடுத்து செய்யுளுக்கே உரிய
செய்யுள் விகாரம் பற்றியே
தொடரும் வரை காத்திரும்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/04/008.html

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!