Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

தை (2020 ) பிறந்தும் வழி பிறக்கவில்லையே!

"பல்கலைக் கழக மாணவர்கள் (இரு பாலாரும்) இருபதிற்கு மேல் தற்கொலை; கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை முயற்சி, ஒருவர் சாவு; தன்னைக் கெடுக்க வந்த ஆணை, இளம் பெண் வெட்டிக் கொலை செய்தார்; காதலியைக் காதலனும் மனைவியைக் கணவனும் ஆங்காங்கே வெட்டிக் கொலை செய்தனர்." என்றவாறு நாளேடுகளில் செய்தி வந்திருப்பதாக ஆளாளுகள் முச்சந்தி முனியாண்டி தேனீர்க் கடையில் கதைத்தாங்க. "விசரில தாங்களும் செத்து மற்றவையையும் சாகடிக்குதுகள்" என ஓருவர் அடுத்தவருக்குச் சொன்னது எனக்குச் சுட்டது. அதனால், என் உள்ளத்தில் பட்டதை அப்படியே எழுதியிருக்கிறேன்.

நாட்டில
சாவுகள் மலிஞ்சு போனதற்கு
சாட்டுகள்
ஏதாச்சும் கண்டு பிடிச்சிட்டியளே?
உளநலக் கோளாறும்
ஒரு சாட்டாகலாம் தான்...
அதனால் தான் பாருங்கோ
தேவைப்படுவோருக்கு
"வாழ்; வாழ விடு /
Live and Let Live" என்பதை உணர்த்தி
உளநல மதியுரையை வழங்கி
சாவுகளைத் தடுக்கத் தான்
எல்லோரும் முனைந்தால் நன்றே!
தற்கொலையை நாடுவோர்
தற்கொலை செய்ய முன்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
காதலித்தவர் கைவிடாரென நம்பி
தம்மை இழந்த பின்னே சாவோர்
காதலிக்க முன்னரே - எவரும்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
கராட்டி, யூடோ பழகிய
பிஞ்சுப் பெண்களைக் கெடுக்கப் போய்
அந்தப் பெண்களால சாக முனைவோர்
அதற்கு முன்னதாகவே - எவரும்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
காதலியைச் சாகடிக்க முனைவோர்
காதலியை வெட்டிச் சாகடிக்க முன்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
மனைவியைச் சாகடிக்க முனைவோர்
மனைவியை வெட்டிச் சாகடிக்க முன்
என்னை நாடுங்கள்
மதியுரை வழங்க நான் தயார்!
2020 தை பிறந்தும்
நல்வழி கிட்டாத சூழலை எண்ணி
உதவத் தான் முன் வந்தேன்
கூலி ஒன்றும் தர வேண்டாம்
உயிர்களைக் கொல்லாமை வேண்டும்
அப்பதான் பாருங்கோ
எப்பன் நாடே உருப்படும்!
எமது உள்ளத்திலே - எப்பவும்
"நான் சாகவும் கூடாது; பிறரை
நான் சாகடிக்கவும் கூடாது!" என்ற
எண்ணத்தைப் பேணினால் கூட
நாம் நெடுநாள் வாழலாமே!

2 கருத்துகள் :

  1. தற்போது உங்களுக்கு 50 வயது என்று  சொல்கிறீர்கள். அப்படியானால்  உங்கள் இளமைப் பிராயத்தில் 20 முதல் 40 வரை போர் தீவிரமாக இருந்த காலத்தில் ராணுவத்திரடமோ அல்லது புலிகளிடமோ சிக்காமல் எப்படி தப்பித்தீர்கள். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கேள்வி

      எட்டுத் தடவை சிறை சென்று திரும்பியுள்ளேன்.
      (எட்டாவது மனிக்பாம் (வவனியா) சிறை, எஞ்சிய ஏழும் கொழும்பு காவற்றுறைச் சிறை)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!