Translate Tamil to any languages.

சனி, 8 செப்டம்பர், 2018

உலகெங்கும் தமிழ் வாழ வேணும்!


இசையும் காற்றும் போல - அழகான
எழுத்தும் பொருளுள்ள சொல்லும் வேணும்
இசை பாடும் காற்றிலே - நாமும்
எமது எண்ணங்களை வெளியிட வேணும்
தோலும் தசையுமாக - நாமும்
மொழியோடு இணைந்தே வாழ வேணும்
எதுகையும் மோனையும்
முட்டி மோதி விளையாட வேணும்
உவமையும் ஒப்பீடும்
அணி அணியாக விளையாட வேணும்
தாய்மொழியாம் நற்றமிழால்
எண்ணும் எழுத்தும் சொல்ல வேணும்
சுற்றமும் சூழ்ந்தோரும்
நன்றே தமிழைப் படிக்க வேணும்
தமிழைப் படித்த பின்னே
உலகெங்கும் தமிழ் வாழப் பேண வேணும்!
தமிழைப் பரப்பிப் பேண
உலகத்தார் தமிழைப் பயில வேணும்
உலகெங்கும் தமிழ்
எட்டுத் திக்கும் பட்டுத் தெறிக்க வேணும்
தமிழ் வளம் மின்ன எழுத வேணும்
எழுத எழுத இலக்கியம் மலர வேணும்
தமிழ் மணம் வீசப் பேச வேணும்
பேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்
இசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்
பாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க வேணும்
அழுகையும் கண்ணீரும் வர நடிக்க வேணும்
நடிக்க நடிக்க நாடகத்தமிழ் பார்க்க வேணும்
இயல், இசை, நாடகம் இயல்பாய் பரவ வேணும்
உலகெங்கும் தமிழ் வாழப் பேண வேணும்!

பெண்கள் மீதான வன்முறைக்குத் தீர்வேது?



ஆண்களின் போதைப் பொருள் பாவனையா
பெண்களின் ஆடைக்குறைப்பு அணிவகுப்பா
திரைப்படங்களில் வரும் காட்சியமைப்பா
பெண்கள் மீதான வன்முறைக்கு
தூண்டி ஆகிறது என்பதே கேள்வி!
ஒரு சாரார் உரிமையில்
மறுசாரார் தலையிட்டால்
ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் பேசலாம்...
பண்பாட்டுச் சீரழிவுக்கும்
பாதுகாப்பற்ற சூழலுக்கும்
என்ன தான் தீர்வாக அமையும்?
காட்டியதால் தான் பார்த்தனர் - அது
இயல்பு!
காட்டாமலே பார்க்கத் துணிந்தனர் - அது
வன்முறை!
இயல்பு கடந்த நிலை வந்தால்
வன்முறையாகாது - அது
உளநோயாகத் தான் மாறலாம்! - அப்ப
வன்முறை கூட உளநோயின் அறிகுறியோ?
பெண்கள் மீதான வன்முறைக்கு
வெறுமனே
பெண்களின் ஆடைக்குறைப்பென்றோ
ஆண்களின் தகாத செயலன்றோ
பட்டிமன்றம் நடாத்திப் பயனில்லை!
இயல்பு கடந்த நிலைக்கும்
வன்முறை முயற்சிக்கும்
இடையே இருக்கக்கூடிய
உளப்பாங்கினை அலசினால் தான்
பயனேதும் கிடைக்கும் என்பேன்!
மேலைநாட்டு நாட்டங்களைத் தவிர்த்து
தமிழர் பண்பாட்டு ஆடைகளை
பெண்கள் அணிவதோடு
எந்தப் பெண்ணையும் - தன்
தாயைப் போன்று மதிக்காமல்
பழி தீர்க்கும் நோக்கில் கெடுப்பதை
ஆண்கள் நிறுத்துவதோடு
பெண்கள் மீதான வன்முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க இயலாதே!
முற்றுப்புள்ளி வைக்க விரும்பின்
உளப்பாங்கினை அலசினால் போதாது
தமிழ்மொழி, பண்பாடு, ஒழுக்கம் என
எங்கள் சூழலில் பேணப்படுகிறதா என
ஆய்வுக்கு உட்படுத்தினால் தீர்வு கிட்டுமே!
ஒழுக்கமான, அமைதியான சூழலில்
வன்முறையோ
இயல்பு கடந்த நிலையோ
காணக் கிடையாத போதும்
இயல்பு வாழ்க்கை அமைய வேண்டுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!