Translate Tamil to any languages.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

எழுத்தும் பயனும்

1
எழுத்து, உனக்கு சோறு போடுமா?
எழுத்து, உனக்கு வருவாய் தருமா?
எழுத்து, உனக்கு நற்பெயரைக் கொடுக்குமா?
எழுத்து, உனக்கு நல்வாழ்வைக் கொடுக்குமா?
என்றெல்லோ வீட்டார் கேட்டுத் தொல்லை!
கலைத்தீபம், கவிமுரசு, கவியருவி,
இலக்கியச் செம்மல் என்றெல்லாம்
பட்டம் தந்து பொன்னாடை போர்த்ததும்
என் எழுத்து, எனக்களித்த பரிசென்றுரைக்க
"தாளில் கிறுக்கிக் கொடுப்பதும்
சால்வையைத் தோளில் போடுவதும்
பார்வைக்கு அழகாய் இருக்கும் - அதில்
பெறுமதி இல்லைக் காணும்" என
பெண்டாட்டி என்மீது எரிந்துவிழுவாள்!
"உனக்குப் பிள்ளை, குட்டி கிட்டாததும்
எழுத்து, எழுத்தென மூழ்கிக் கிடந்ததாலே!" என
மாமிக்காரி ஒப்பாரி வைப்பதும் நிகழும்!
"இணையம், வலைப்பக்கம் எனத் தலைகாட்டி
தூக்கத்தை விற்று நோய்களை வேண்டுறியே!" என
மாமன்காரன் அறம் பாடுவதும் நிகழும்!
"என்ர அப்பன் பண்டிதருக்குப் படிச்சவர்
இவர் என்னதான் எழுதிக் கிழிச்சென்ன!" என
என்ர அப்பன் என்னைத் திட்டுவார்!
"என்ர அப்பன் உடையாருக்குப் படிச்சவர்
இவர் எழுதித்தான் என்ன பண்ணுவார்!" என
என்ர அம்மாவும் பொரிந்து தள்ளுவார்!
இப்படிக் கேள்விக்கணைகள் காதைக் குடைந்தாலும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
என் எழுத்தை விரும்பிப் படிப்பவர்
உள்ளம் நிறைவைத் தரும் வண்ணம்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
எழுதுவதால் தான் நானும் நிறைவடைகின்றேன்
வாசகர் உள்ளம் நிறைவடைய - நாளும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
நல்லதை எழுதுங்கள் நல்லதை வாசியுங்கள்
உள்ளம் நிறைவடைய உணர்ந்து செய்யுங்கள்
உள (மன) நோய்கள் கிட்ட நெருங்காது
உண்ணான நெடுநாள் வாழலாம் பாருங்கோ!

2. எழுதப் பழகிய வேளை

சொந்தமாக எழுத முடியாவிட்டாலும்
மாற்றாரின் பதிவுகளைப் போல
எழுத முயன்றல் கூட
சொந்தமாக எழுத வருமே!
நானும் அப்படித் தான்
மூ.மேத்தாவின் பாவரிகளைப் போல
எழுத முயன்ற பின்னே
ஈழத்துப் பத்திரிகைகளில் வெளியான
பாவரிகளைப் பார்த்தும் - அதே போல
எழுத முயன்ற பின்னே
பா/கவிதை நடை போல
சொந்தமாக எழுதப் பழகிக்கொண்டேன்!
எழுதப் பழகியதை வைத்தே
என் எண்ணங்களைப் பகிருகிறேன்!
ஆனால், நான் எழுதுவது
கவிதை அல்லது பா அல்லது பாடல்
எது போலவும் இல்லாவிடினும்
நான் கிறுக்குவது தமிழில் தானே!

3. நீங்களும் எழுதலாம்

எனது திறமைகளை வெளிக்கொணர உதவும்
உடைமைகளைப் பொறுக்கிச் சென்றவருக்கு
தெரியவில்லைப் போலும்
கைக்கெட்டியதைக் கையாளலாம் என்றே!
கரிதுண்டால் பா/கவிதை புனைந்து
பாரதியார் - தன்
உள்ளக்கிடக்கையை வெளியிட்டது போல
நானும் என் கைக்கெட்டியதை வைத்து
எனது திறமைகளை அரங்கேற்றுகிறேன் - நாளும்
எனது திறமைகள் வெளிவருகின்றனவே!
'முடியாது' என்பது
நம்மாளுங்க (மனித) அகரமுதலியில்
இருக்கக்கூடாது என்றாலும்
'முடியும்' என்பதற்கு
பயிற்சியும் முயற்சியும் இருந்தால் போதுமே!
அப்படியாயின் - நீங்களும்
எப்படியாவது உங்கள் திறமைகளை
அரங்கேற்ற முன்வாருங்கள் - உங்கள்
நல்லெண்ணங்களைப் பகிருங்கள்
எழுத்தும் பயனும் என்னவென்று உணருவீர்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!