Translate Tamil to any languages.

புதன், 1 செப்டம்பர், 2021

உலக அமைதிக்கு ஓர் மருந்து


 

ஓரூரில ஒரு நாள் பல மதத்தவரும் தத்தம் வழிபாட்டுத் தலங்களுக்குச்  சென்று வழிபாட்டை முடித்த பின் வெளியேறித் தெரு வழியே வந்தனர்.  அந்தத் தெருவில் வெயிலுக்கு நிழல் தரும் மரங்கள் ஒன்றுமே இல்லை. சற்று நேரத்தில் காற்றோடு மழை வந்து ஆள்களை நனைத்தது.

 

மழைக்கு நனைந்தவர்கள் மேலும் நனையாது தம்மைக் காக்க; ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்ததை மறந்து மழைக்கு ஒதுங்கினால் போதும் என்று ஆளாளுகள் அகப்பட்ட மதங்களுக்கான ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். மழை தானே என்று அந்தந்த ஆலயங்களைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றவில்லை.

 

ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழ்ந்தவர்கள் 'மழை', 'மழை' என்று எவரெவர் மதக் கோவில் என்று பாராமல் நுழைந்து மழைக்கு ஒதுங்கியமை  தான்  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று உணரவைக்கிறது. ஒவ்வொரு இயற்கை மாற்றங்களும் இதனையே உணர்த்துகிறது. 

 

இனியாவது, ஆளுக்கொரு சமயம், ஆளுக்கொரு கோவில், ஆளுக்கொரு கடவுள் என்று பிரிந்து வாழாமல் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழலாமே!  மதங்கள் கடவுளை நெருங்க/ கடவுள் பக்கம் செல்ல மக்களுக்கு வழிகாட்டும். மக்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்லொழுக்கமாக வாழ மதங்கள் வழிகாட்டும். 

 

ஓர் உலகில் ஓர் இயற்கையின்  செயல் ஒரு கடவுளின் செயல் என்றே கூறமுடியும். மலை உச்சியில் மழை பெய்து போட்ட வெள்ளம் பல  ஆறுகளாகப் பிரிந்து ஒரு கடலில் கலப்பது போலத் தான் பல மதங்களும் பல ஆறுகள் போல ஒரு கடவுளை அடையத் தான் வழிகாட்டுகின்றன. 

 

நாடு, மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகளை மறந்து 

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று ஒரு தாய் ஈன்ற பிள்ளைகளாக வாழ்ந்தால் மட்டுமே ஊரில, நாட்டில, உலகத்தில அமைதியை ஏற்படுத்தலாம். எல்லோரும் எள்ளளவேனும் எண்ணிப்பார்த்தால் கூட மனித ஒற்றுமையும் உலக அமைதியும் நிலைநாட்டப் பங்கெடுக்கலாம்.

 

குறிப்பு -  பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி அவர்களின் பேச்சிலிருந்து நான் பொறுக்கிய தகவலை வைத்து எழுதியது. ஆயினும் லியோனி அவர்களோ திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஐ் அவர்களின் தகவலெனத் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும். எமக்குத் தேவை மனித ஒற்றுமையும் உலக அமைதியுமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!