Translate Tamil to any languages.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தீர்வுகளைத் தேடிக் கொள்ளுங்கள்.


சிக்கல்கள் இல்லாத இல்வாழ்வு தேவையெனில்

சிக்கலுக்குத் தீர்வைத்தான் நாடு.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)


சிக்கல்கள் (பிரச்சனைகள்) இல்லாத 

குடும்பம் இருக்க முடியாது!

தீர்வுகள் இல்லாத  சிக்கல்களும்(பிரச்சனைகளும்) இருக்க முடியாது! கணவன் பெரிதா 

மனைவி பெரிதா என்று 

பட்டிமன்றம் நடத்துவது தான் 

குடும்பச் சிக்கல் (பிரச்சினை)! 

கணவன் பணிந்தாலும் 

மனைவி பணிந்தாலும் 

ஒருவர் நிமிரத் தான் வேணும்! 

எவர் நிமிர்ந்தாலும்

எவர் பணிந்தாலும் 

எவருக்கும் தாழ்வு இல்லையென்று

குடும்ப மகிழ்ச்சியே தேவையென வாழ்வதே

குடும்பச் சிக்கலுக்கு (பிரச்சினைக்கு)

தீர்வென்று 

உணர்ந்து கொண்டால் போதுமே!

(கவிதை போல...)


சிக்கல்களை சிக்கல்களாக

பார்த்துப் பயனில்லை

சிக்கல்களுக்குத் தீர்வுகளை

அலசினால் மகிழ்ச்சியே

(தன்முனைக் கவிதை)

திங்கள், 1 டிசம்பர், 2025

பாதிப்பும் வெளியீடும்

 


பகலவன் மூஞ்சியைக் காட்டினால் தான் 

உலகிற்கு வெளிச்சம் பாருங்கோ!

பகலவன் ஒளியை உறிஞ்சித் தான் 

நிலாவும் இரவில் சிரிப்பதைப் பாருங்கோ!

ஆசிரியர்மார் அழகாகக் கற்பித்தால் மட்டுமே 

மாணவர் உள்ளத்தில் அறிவு பெருகுமே!

உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள் 

சுற்றுச் சூழலில் இருந்தால் மட்டுமே 

நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியுமே!

பணிகளைப் பயன்பாட்டைத் தருவோர் 

பக்கத்தில் இருக்காமல் போனால் 

பயன் பெறுவோர் எப்படிப் பயனீட்டுவர்? 

பாதிக்கப்பட்டவரிடம் தான் பதிலும் இருக்கிறதே!

ஞாயிறு, 2 நவம்பர், 2025

ஒரு நாளைக்கு ஒரு தடவை படியுங்கள்

 

நாம் சாவடைந்தால்

நாறும் நம் உடலைக் காவ

நாலு உறவுகள் இல்லாத வேளை

படிப்பு, பணம், நிலம்,

பொன், பொருள், சொத்து 

எல்லாம் இருந்தென்ன பயன் காணும்?

கத்தியால இரண்டாக வெட்டிய

ஒற்றை வாழைப்பழத்தை 

ஒன்றாக்க முடியாதது போலத் தான் 

முறிந்த உறவுகளையும் சேர்க்க முடியாதே!

முரண்படாமல், விரிசல் ஏற்படாமல்,

வெறுப்பை விதைக்காமல் 

அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் என

உறவுகளைப் பிரியாமல் முறியாமல் பேண

அன்பாலே ஒட்டி உறவாடி அணைக்கலாமே!

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

பலரது கேள்விக் கணையும் என் பணிவான பதிலும்

 


மக்கள் முன்னிலையிலும் அச்சு ஊடகங்களிலும் உங்கள் மூஞ்சியை காட்டாமல் வலைப்பூ, வலப்பக்கம், குமுகாய (சமூக)த் தளம் போன்ற மின் ஊடகங்களில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவது ஏன்?


ஈழத்துப் போர்க்காலச் சூழலில் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் நாளேடுகள்(ஞாயிறு இதழ்),  சஞ்சிகைகள் (மாதாந்த, காலாண்டு இதழ்), பொத்தகங்கள் படித்துப் பொழுது போக்கி அறிவை வளர்த்துக் கொண்டிருந்த காலமது. அப்போது "நானும் எழுதிப் பார்க்கலாம் தானே!" என்று முயன்று பார்த்த்தேன். அம்முயற்சியின் வெற்றியாக முதலில் நாடகம் எழுதி இயக்கினேன். அடுத்து 25/09/1990 யாழ் ஈழநாதம் நாளேட்டில் எனது முதற்கவிதை வெளியாகியது. இவ்வாறு தான் இணையவழி இலக்கியப் பயணத்தைத் தொடருகிறேன்.

நான் கணித ஆசிரியராகவும் கணினி விரிவுரையாளராகவும் கனணி நிகழ்நிரலாக்குனராகவும் பணியாற்றினேன். அவ்வேளைகளில் அச்சு ஊடகங்களில் எனது பதிவுகள் வெளிவந்தன. நான் கற்பிக்கும் போது எனது மாணவர்களை வைத்து எனது நாடகங்களை நானே எழுதி இயக்கி அரங்கேற்றி உள்ளேன்.

கணினி நுட்பங்களில் சிறந்து விளங்கியதால் இணைய வழி நற்றமிழைக் கொண்டு செல்லும் பணியைச் செய்ய முயன்றேன். அதனால், இணைய வழி ஊடாக எனது படைப்பாற்றலை வெளிக்கொணர நாட்டம் ஏற்பட்டது. அதுவும் நானே எனது அனைத்து ஆற்றல்களையும் தனித்து உருவாக்கி அரங்கேற்றி விட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

எனது தனிமையான முயற்சியாக மின் ஊடக இலக்கிய வெளியீடுகளை வெளியிட விரும்புகிறேன். அச்சு ஊடகங்களையும் அச்சு ஊடகங்கள் சார்ந்த வெளியிட்டு நிகழ்வுகளை மக்கள் முன்னிலையிலும் நடத்தும் வேளை பங்கெடுப்பேன்.

மென்பொருள் தயாரிக்கிறதுக்கு குழுத் தேவை. அதுபோல் நாடகம் எழுதி, இயக்குவதற்குக் குழுத் தேவை. அதுபோல பாடல், நடனம், இசை நிகழ்வுகளை அரங்கேற்றக் குழுத் தேவை. ஆகவே எழுத்தை மட்டும் அல்லது என்னால் நிகழ்வை இயக்க முடியும் என்பதை மட்டும் தகுதியாக வைத்துக் குழு அமைத்து நான் மக்கள் முன்நிலையில் தலைநிமிர முடியாது. பிறரது பங்களிப்புக்கு எனது சிறு பங்களிப்பை வழங்க முடியும் என்பதை உறுதி செய்கிறேன். ஆனால் எனது எதிர்கால இலக்கு இணைய வழி மின் ஊடக வெளியீட்டு முயற்சியாகவே இருக்கும்.

யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)
மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம்,
வட மாகாணம், இலங்கை. 

திங்கள், 20 அக்டோபர், 2025

நம்முடலே காற்றடைத்த பையடா!



எமது உடலை இயக்கும் சக்தி
கடவுள் என்றாலும் கூட
எமது உள்ளத்தில் எடுக்கும் முடிவே
எமது பயணத்தைத் தீர்மானிக்கும்!
எமது உடலுக்கு உள்ளே
சிறு காற்றுப் (சுவாசப்) பை - அதனுள்ளே
இருக்கக்கூடிய காற்றே (உயிர் / ஆன்மா)
எம்மை இயக்குகின்றதாக - கோவிலில்
சமயப் பேச்சாளர் சொன்ன நினைவு!
நம்முடலே காற்றடைத்த பையடா!
காற்றுப் போனால் (உயிர் பிரிந்தால்)
பெறுமதியில்லாச் சடப்பொருள் தானடா!
என்றெல்லோ
என் பீட்டப்பன் சா வீட்டில்
என்னப்பன் எனக்குரைத்தான்!
ஆடுகின்ற ஆட்டமும் போடுகின்ற கூத்தும்
காற்றுப் (மூச்சுப்) போகும் வரை தான்...
காற்றடைத்த பையாம் - எம்முடல்
காற்றுப் போகும் முன்னரே
உறவுகளை அன்பாகப் பேணுவோம்
ஊருக்கு நல்லது செய்வோம் - எல்லாம்
காற்றுப் போன எம்முடல் நாறும் முன்
சுடுகாட்டுக்கோ இடுகாட்டுக்கோ
கொண்டு போய்ச் சேர்த்து அழிக்கவே!

ஆக்கம்: யாழ்ப்பாவாணன்
(காசி.ஜீவலிங்கம்)
இலங்கை.

          =============================


ஒளி ஏற்றி இருள் விலக்கும்

துளி கூடத் தீயது ஒட்டாமல்

கோடி உடுத்தி கோடிட்டுக் சொல்லு

தீபாவளி நன்மை செய்யச் சொல்லும்

தீபாவளி நாளில் நன்மை செய்வோம்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள் பகிர்வோம்!

இல்லாதோர் எல்லோருக்கும் இயன்றவுதவி செய்வோம்.
இயலாதோர் அன்புடன் மாற்றாரை அழைத்து
தீபாவளி வாழ்த்துகள் பகிர்ந்து
எல்லோருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்
தீபாவளித் திருநாள் ஆகட்டும்!